Wednesday, October 21, 2020

சைனஸ் முதல் ஆஸ்துமா வரை நுரையீரல் பிரச்னைகள் தீர்க்கும் எளிய வீட்டு வைத்தியம்!

 சைனஸ் முதல் ஆஸ்துமா வரை

இதய நோய், மூட்டுவலி எனப் பெரிய பெரிய நலக் குறைபாடுகளுக்குக்கூட மருந்து, மாத்திரை சாப்பிட்டால் வலிக்கு நிவாரணம் கிடைத்துவிடும். ஆனால், இந்த சளியும் ஜலதோஷமும் இருக்கிறதே… அது வந்துவிட்டால், அதற்காக மாத்திரை சாப்பிட்டாலும்கூட ஒரு வாரம் பாடாய்ப் படுத்தி எடுத்துவிட்டுத்தான் நம்மைவிட்டு அகலும்.
சளித் தொந்தரவு வந்துவிட்டால், முழுமையாக வேலையில் கவனம் செலுத்தவோ, நிம்மதியாகத் தூங்கவோகூட முடியாது. ஆகவேதான் சளி என்றாலே பலருக்கும் அழற்சி, அருவருப்பு ஏற்படுவது இயல்பு. சாதாரணமானவர்களுக்கே இப்படியென்றால், சைனஸ், தூசி மற்றும் நுரையீரல் அழற்சி உள்ளவர்களின் நிலையைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. குறிப்பாக சைனஸ், நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு கோடை, குளிர், மழைக்காலம் என எந்தப் பருவகாலமும் விதிவிலக்கு இல்லை.
இது ஒருபக்கம் இருக்க, புகைப்பழக்கம், நகரமயமாக்கலால் காடுகள் அழிப்பு, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை போன்ற காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதனால் நுரையீரல் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் இயல்பாகவே அதிகரித்துவருகின்றன. இதுபோன்ற காரணங்களால் நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற கடுமையான நுரையீரல் பிரச்னைகள் அதிகரித்துவருகின்றன. எனவே, இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க நுரையீரலைச் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
நுரையீரலை அவ்வப்போது சுத்தம்செய்யும் வழிமுறையைப் பின்பற்றிவந்தால், நுரையீரல் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். அதற்கான வழிமுறைகள் குறித்து விளக்குகிறார் அவர்.நுரையீரல் நோய்களுக்கு மிகச் சிறந்த அருமருந்து துளசி. `துளசி வாசத்தை முகர்தல், அப்படியே சாப்பிடுவது அல்லது கஷாயமாக்கிக் குடித்தல் ஆகியவை காசநோய் உண்டாகாமல் தடுப்பதுடன் நுரையீரல் பாதிப்புகளையும் குறைக்கிறது’ என்கிறது ஆயுர்வேதம். இதனால்தான், கிராமங்களில் தொன்றுதொட்டு வீட்டிலேயே துளசி மாடம் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது. ஒவ்வொரு கலாசாரத்தின் பின்னணியில் ஒரு மருத்துவம் இருக்கும் என்பது இதற்குப் பொருந்தும்.
கிராமங்களில் இன்றைக்கும் விறகு அடுப்பில் உணவு சமைக்கும் நடைமுறை உள்ளது. அப்படி, விறகு அடுப்பினால் சமைக்கும்போது வெளிப்படும் புகை, அதை சுவாசிப்பவர்களுக்குக் காசநோயை உண்டாக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்பதால்தான் வீட்டில் துளசி மாடங்கள், துளசிச் செடிகள் வளர்ப்பது தொடர்ந்துவருகிறது.
வாரத்தில் ஒருநாள் அகத்திக்கீரையை உணவில் சேர்த்து வருவதும், அன்றாட உணவில் சுண்டைக்காய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகிய உணவுகளை சேர்த்துக்கொள்வதும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
ஆப்பிள், கேரட், எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவற்றை ஜூஸாக சாப்பிடுவது நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
ஏலக்காய் தண்ணீரில் சிறிதளவு பச்சைக் கற்பூரம் கலந்து சாப்பிடலாம். அன்னாசிப் பூவை தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து குடித்துவந்தால் நுரையீரல் பிரச்னைக்கு தீர்வாக அமையும்.
தினசரி அதிகாலை வேளையில் மூச்சுப்பயிற்சி, தியானம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
வெந்நீரில் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய்விட்டு, சிறிது நேரம் ஆவி பிடிக்க வேண்டும். இதனால் மூச்சுக்குழாயில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
பச்சைக் கற்பூரம், ஓமம், அன்னாசிப் பூ ஆகியவற்றை அரைத்து, அதை கர்ச்சீப்பின் ஒரு முனையில் வைத்து முடிந்துகொள்ள வேண்டும். அதை அடிக்கடி முகர்ந்து பார்த்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும்.
ராஸ்னாதி சூரணத்துடன் (ஆயுர்வேத மருந்துக்கடையில் கிடைக்கும்) நீர் சேர்த்து குழைத்துக்கொள்ளவும். அதை சுத்தமானத் துணியில் (கர்ச்சீப் அளவுள்ள) இருபுறமும் பூசி, நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் அந்தத் துணியை வத்திபோலச் சுருட்டி, அதன் ஒரு முனையில் தீயைப் பற்றவைக்க வேண்டும். அதனை ஒரு கையில் எடுத்துக்கொண்டு மூக்கின் ஒரு துவாரத்தை மூடிக்கொண்டு, மற்றொரு துவாரம் வழியாக அந்தப் புகையை உள்ளிழுக்கவும்.
இதேபோல மற்றொரு துவாரத்திலும் மாற்றிச் செய்யவும். இப்படி ஒவ்வொரு துவாரத்துக்கும் இரண்டு முறை வீதம் வாரத்துக்கு மூன்று முறை செய்ய வேண்டும். ராஸ்னாதி சூரணத்துக்குப் பதிலாக, மஞ்சள் பொடியையும் பயன்படுத்தலாம். இவற்றைத் தொடர்ந்து பின்பற்றிவந்தால், ஆஸ்துமா, சைனஸ், நுரையீரல் அழற்சி, மூச்சுத்திணறல் போன்ற நுரையீரல் பிரச்னைகள் விரைவில் குணமாக உதவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...