Monday, July 19, 2021

தமிழகம் செய்த ஒரு மிகப்பெரிய தவறு, அந்நியாயம்.

 ஜெயமோகன் எழுதுகிறார்.....

பதவிப்பித்து பிடித்து ராஜாஜி என்ன செய்தார்? பிள்ளையை பதவியில் அமரச்செய்தாரா? வாரிசுகளை தொழிலதிபர்களாக, கோடீஸ்வரராக ஆக்கினாரா? இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பல அடிப்படைக் கட்டுமானங்களை ராஜாஜிதான் திட்டமிட்டு அமைத்தார். அதன் பலன்களையே இன்றும் தமிழகம் அனுபவிக்கிறது. ஓசூர் தொழிற்பேட்டை அவரது கனவு. சென்னை துறைமுகவிரிவாக்கம் அவரது சாதனை. இன்றுவரை அவரது தனிப்பட்ட நேர்மைமீது எந்த ஒருவரும் ஆதாரபூர்வமான சிறு குறையைக்கூட சுட்டிக்காட்டமுடிந்ததில்லை.
முக்கியமான வரலாற்றுத்திரிபு என்பது சென்னையை மீட்ட சாதனையை முழுக்கமுழுக்க ம.பொ.சிக்கு விட்டுக்கொடுத்து ராஜாஜியை வில்லனாக ஆக்குவது. ராஜாஜி இல்லையேல் சென்னை தமிழ்நாட்டுக்கு இல்லை என்பதே வரலாற்று உண்மை. இங்கே சில ஊர்களில் கோஷமிட்ட ம.பொ.சியைப்பார்த்து பயந்துபோய் ஆந்திரர்கள் சென்னையை விட்டுக்கொடுக்கவில்லை. அப்போது தமிழகத்தின் முதல்வராக ராஜாஜி இருந்தார். பேச்சுவார்த்தைகளில் இம்மிகூட அவர் விட்டுக்கொடுக்கவில்லை. 1953ல் ஆந்திரமாநிலம் உருவானபோது சென்னையையும் திருத்தணியையும் உள்ளிட்ட இன்றைய தமிழக எல்லைகளை அமைக்க காரணமாக அமைந்தவர் அன்றைய முதல்வரான ராஜாஜிதான்.
1952ல் ஆந்திர சுதந்திரப்போராட்ட வீரரான பொட்டி ஸ்ரீராமுலு மதராஸ்மனதே என்ற போராட்டத்தின் உச்சமாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஆந்திராவே கொந்தளித்தது. அதற்கிணையான எந்த அலையும் இங்கே உருவாகவில்லை. மபொசியை காங்கிரஸ் கிளப்பிவிட்டும்கூட பெரிதாக ஒன்றும் நிகழவில்லை, சில கூட்டங்களைத்தவிர. நேரு ஆந்திர காங்கிரஸின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தாகவேண்டிய நிலை. காரணம் ஆந்திராவுக்கு தேசிய அரசியலில் பங்கு மிக அதிகம். அது மாபெரும் மாநிலம்.
ஆனால் ராஜாஜி நேருவை உதாசீனம்செய்தார். பொட்டிஸ்ரீராமுலு உயிர்துறந்த டிசம்பர் 15 ஆம் தேதி நேரு பலமுறை கூப்பிட்டும் ராஜாஜி நேருவின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. அவர் தொலைபேசியை எடுத்திருந்தால் சென்னை கைவிட்டுப்போயிருக்கும் என்று எம்.ஓ.மத்தாய் சொல்லியிருக்கிறார். விளைவாக ஆந்திரா எரிந்தது, ராஜாஜி பிடிவாதமாக இருந்தார். அந்த ஒருசெயலால்ராஜாஜி சென்னையை மீட்டார். அவரது அரசியல் வாழ்க்கையை நிரந்தரமாக அழித்தும் கொண்டார். பின்னர் சீனப்படையெடுப்பின்போது வலியச்சென்று நேருவுக்கு உதவ முன்வந்தார் ராஜாஜி. நேரு அப்போதும் அவரிடம் முகம்கொடுத்துப் பேச தயாராக இருக்கவில்லை.
ராஜாஜியின் கல்விக்கொள்கையை குலக்கல்வி என்று சொல்லிச் சொல்லி வரலாற்று நினைவாக ஆக்கிவிட்டார்கள். ஒரு திட்டத்தை அதன் எதிரிகள் எப்படி வசைபாடினார்களோ அந்த பெயரிலேயே வரலாற்றில் இடம்பெறச்செய்வதுபோல மாபெரும் அரசியல் மோசடி ஒன்றில்லை. ராஜாஜி அதை குலக்கல்வி என்று சொல்லவில்லை. அந்த திட்டத்தில் எங்கும் அப்பெயர் இல்லை. ஆனால் அதை நீங்கள் விக்கிபீடியாவில் தேடினால்கூட Hereditary Education Policy என்ற பேரிலேயே கிடைக்கும். அந்த திட்டத்தை இப்படி திரிக்காமல் இருந்தால் இன்றையதலைமுறைக்கு அதில் எந்த பிழையும் கண்ணுக்குப்படாது. அவதூறுசெய்தால் மட்டுமே அதை எதிர்க்கமுடிகிறதென்பதே அந்த திட்டத்தின் நேர்மைக்குச் சான்றாகும்
இணையத்திலேயே கிடைக்கும் ராஜாஜியின் பகுதிநேரக்கல்வித்திட்டத்தின் முன்வரைவை இன்று வாசிக்கும்போது வருத்தமாக இருக்கிறது. என்ன காரணத்தால் அது தோற்கடிக்கப்பட்டது என்பதே புரியவில்லை. அன்றைய சூழலை நாம் ஓரளவாவது கவனிக்கவேண்டும். இந்தியா மாபெரும் நிதி நெருக்கடியுடன் சுதந்திரம் பெற்றது. தேசப்பிரிவினையால் வட இந்தியா கிட்டத்தச்ச சின்னாபின்னமாகிக் கிடந்தது. அடிப்படைத்திட்டங்களுக்கே பணமில்லாத நிலை நிலவியது. 1951ல் பிகார், மத்தியபிரதேசத்தை மாபெரும் பஞ்சம் ஒன்று தாக்கியது. 1785 முதல் வட இந்தியாவை தாக்கி வந்த பெரும் பஞ்சங்களின் நீட்சி அது.
1873 பஞ்சத்தில் பிகாரில் லட்சக்கணக்கானவர்கள் செத்தார்கள். ஆனால் 1951ல் நேருவின் அரசு உலகமெங்கும் பிச்சை எடுத்து பிகாரில் பட்டினிச்சாவு இல்லாமல் பார்த்துக்கொண்டது. [அதில் அமெரிக்கா அளித்த பங்கு மிக முக்கியமானது, அது சோவியத் ஆதரவு அரசியலால் பின்னர் மறக்கப்பட்டுவிட்டது] இப்பஞ்சத்தில் பிகாரில் மாபெரும் கஞ்சித்தொட்டி இயக்கத்தை ஆரம்பித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் இன்றும் அம்மக்களால் காந்திக்கு நிகராக கொண்டாடப்படுகிறார்.
இச்சூழலில் ராஜாஜி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தார். தமிழகத்தின் நிதிச்சுமையை அவரால் சமாளிக்க இயலவில்லை. கிராமப்பொருளாதாரம் குடிப்பழக்கத்தால் அழிந்துகொண்டிருப்பதை அவர் உணர்ந்தமையால் மதுவிலக்கை கறாராக அமல்படுத்தினார். தமிழக அரசின் முக்கியமான வரவினமே மதுமீதான வரி என்பதனால் அவர் கடுமையான பொருளியல் நடவடிக்கைகளை எடுக்க நேர்ந்தது
ராஜாஜியின் தரப்பு ஒருவகையான ஆழ்ந்த நேர்மை கொண்டது. வட இந்தியா பஞ்சத்தில் சாகும்போது தென்னிந்தியா உதவித்தான் ஆகவேண்டும் என்று அவர் நம்பினார். ஆகவே செலவினங்களை குறைத்தார். அவரது கடுமையான நடவடிக்கைகளை மக்கள் எந்த அளவுக்கு புரிந்துகொள்வார்கள் என அவர் எண்ணவேயில்லை.
அவருக்கு நேர் மாறாக அன்று திராவிட இயக்கம், சி. என் அண்ணாத்துரை தலைமையில் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று பிரச்சாரம் செய்தது. தமிழகத்தில் நிலவிய தானியத்தட்டுப்பாட்டுக்குக் காரணமே வடக்கு தெற்கை சுரண்டி கொழுப்பதுதான் என்றது. ‘தமிழகத்தில் தட்டினால் தங்கம் வெட்டினால் வெள்ளி. அத்தனையும் கொணர்ந்து மக்களின் வாட்டத்தை போக்குவோம்’என்றார்கள். காங்கிரஸ் அரசு அன்று சந்தித்த பொருளியல் சிக்கல்களை அறியாத அன்றைய எளிய மக்கள் அந்த போலியுரைகளை நம்பினார்கள்.
பொருளியல் சிக்கல்களில் இருந்து உருவானதே ராஜாஜியின் கல்விச்சீர்த்திருத்த முறை. பள்ளிகளின் அளவை அதிகரிக்க முடியாத நிலை இருந்தது. ஆசிரியர்களையும் உடனடியாக அதிகரிக்கமுடியாது. அன்றைய கல்வி எப்படி இருந்தது என அவர் ஆராய்ந்தபோது பெரும்பாலான கல்விநிலையங்கள் ஓர் ஆசிரியரை மட்டும் கொண்டவையாக, அத்தனை பிள்ளைகளையும் கூட்டமாக ஒரே இடத்தில் அமரச்செய்பவையாக இருந்தன. தினம் ஒருமணிநேரம்கூட பிள்ளைகள் கற்கவில்லை – இன்றும் தமிழகத்தில் கணிசமான மலைக்கிராமப் பள்ளிகள் அப்படித்தான் உள்ளன
பிள்ளைகளை அதிகளவில் பள்ளியில் சேர்க்க வேண்டும், ஆனால் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் அளவை அதிகரிக்கமுடியாது என்பதனால் ராஜாஜி கல்வியை நேரம் பிரித்த்தார். அதாவது சாதாரணமான ஷிஃப்ட் முறை. அவ்வளவுதான் அவர் செய்த சீர்திருத்தம். அதுவும் நிதிநிலை சரியாகும் வரை. ஒரேபள்ளியில் காலையில் ஒருவகுப்பு. மதியம் ஒருவகுப்பு. ஆரம்பப்பள்ளிகளுக்கு 3 மணி நேரம் மட்டும் கல்வி. ஆனால் ஆசிரியர் முழுநேரமும் கல்வி கற்பிக்கவேண்டும். பாடத்திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை.
மூன்று மணிநேரக் கல்வி தவிர மிச்சநேரம் பிள்ளைகள் என்ன செய்யும் என்ற கேள்விக்கு சாதாரணமான ஒரு பேட்டியில் ‘அவர்கள் பெற்றோருக்கு வேலையில் உதவலாம்’ என்று சொல்லப்பட்டது. மதியத்துக்கு மேலே பிள்ளைகள் இன்ன வேலைதான் செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கல்விகக்ழகத்தால் முன்வைக்கப்படவில்லை. சாதியம் சார்ந்த எந்த குறிப்பும் எங்கும் இல்லை.
பிள்ளைகள் பெற்றோருக்கு உதவலாமே என்ற ஒருவரியை சமத்காரமாக பிடித்துக்கொண்டு குலக்கல்வி என்று சொல்ல ஆரம்பித்தார்கள் திராவிட இயக்கத்தவர். அண்ணாத்துரை அந்த அவதூறை ஆரம்பித்தார். திராவிட இயக்கத்தின் உச்சகட்ட பரப்புரைக்கு பதில்சொல்லும் திராணி காங்கிரஸுக்கு இருக்கவில்லை. இந்த விஷயத்தில் விஷயம் தெரிந்த கம்யூனிஸ்டுகள் மௌனம் சாதித்தார்கள். காமராஜ் ராஜாஜிக்கு எதிரி என்பதனால் அன்றைய காங்கிரசும் அவருக்கு உதவவில்லை. அந்த திட்டத்தைப் பயன்படுத்தி தன் அரசியலெதிரியான ராஜாஜியை வீழ்த்தினார் காமராஜ். அடுத்த முதல்வராக ஆனார்.
ராஜாஜியின் திட்டத்துக்கு அன்று உருவான எதிர்ப்புக்கும் ஆசிரியர்களின் பங்கு மிக அதிகம். இன்று எண்பது வயதான ஆசிரியர் ஒருவரே அதை சொல்லி நான் கேட்டிருக்கிறேன். அந்த திட்டம் ஆசிரியர்களின் பணிநேரத்தையும் சுமையையும் அதிகரித்தது. அவர்கள் ஒருநாளில் 5 மணி நேரத்திற்குப் பதில் 6 மணி நேரம் கற்பிக்க வேண்டியிருந்தது. ஐந்துநாள் வேலை ஆறுநாள் வேலையாக அதிகரிக்கப்பட்டது.
அன்றைய சூழலில் ஆசிரியர்கள் பெரும்பாலும் தொலைதூர கிராமங்களுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. சிறு கிராமங்களில் தங்கும் வசதி இருப்பதில்லை. அதைவிட பிறசாதியினர் நடுவே தங்குவது அன்று எவராலும் விரும்பப்படவில்லை. என்னிடம் பேசியவர் கோயில்பட்டியில் இருந்து இருபத்த்தைந்து கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று ஓர் இடைய கிராமத்தில் எழுபது பிள்ளைகளுக்கு ஒரேயாளாக பாடம் நடத்தினார். அவர் வேளாளர். இடையர் கிராமத்தில் அவர் தண்ணீர்கூட குடிப்பதில்லை.அவர் அங்கே சென்று சேர பத்து மணி ஆகிவிடும். மதியமே திரும்பி விடுவார்.
இந்த நிலையை ராஜாஜியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பெரும்பாலான பள்ளிகளில் ஓராசிரியர்கள் பெருந்திரளான மாணவர்களுக்கு சில மணி நேரம் மட்டுமே கல்வி கற்பிக்கிறார்கள், அதனால் எந்த பயனும் இல்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கல்விக்காகச்செலவிடப்படும் பணம் பெரும்பாலும் வீணாகிறது என்கிறது. ஆகவே அது ஆசிரியர்கள்மேல் சவுக்கை சுழற்றுகிறது. அவர்கள் எட்டு மணிக்கே பள்ளியில் இருந்தாகவேண்டும். மாலை ஐந்துக்கு கிளம்பவேண்டும். ஆசிரியர்கள் கொந்தளித்தது இயல்பே. அந்த கசப்பை ஈவேராவும் அண்ணாத்துரையும் அவர்களின் இயக்கமும் வெற்றிகரமாக பயன்படுத்திக்கொண்டனர்.அது வெறும் அரசியல். உங்கள் அரசியல் அதுவாக இருந்தால் சொல்லிக்கொண்டிருக்கலாம் – வரலாறு அது அல்ல
ராஜாஜியின் இந்த திட்டம் ஏற்கனவே 1949-50 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் காலகட்டத்தில் பல பகுதிகளில் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு விளைவுகளை காட்டிய ஒன்றே. அதை விரிவாக தமிழகம் முழுக்க கொண்டுவர முயன்றதே ராஜாஜியின் திட்டம். அவரது சாதியை இதில் பிணைப்பதற்காகத்தான் தந்திரமாக இது அவரே உருவாக்கிய திட்டம் என்று சொல்கிறார்கள்.
அத்துடன் இந்தத் திட்டமே கூட அன்று உலகில் பல நாடுகளில் நடைமுறையில் இருந்ததை ‘காப்பி’ அடித்து உருவாக்கப்பட்டதுதான். உலகமெங்கும் குடும்பத்தொழிலை பிள்ளைகள் செய்வது நடைமுறையில் இருந்த காலம். பிள்ளைகளை அப்படி சட்டென்று கல்விக்காக வெளியே எடுக்கமுடியாது. ஆகவே அவர்கள் பாதிநாள் கற்றால்போதும் என்னும் நிலை அன்று இருந்தது. மூன்றுமணிநேரம் சரியானபடி கற்பித்தாலே போதும் என ராஜாஜி வாதாடினார். நூற்றுக்கணக்கான மாணவர்களை ஆசிரியர் நாளெல்லாம் கூட்டி வைப்பதற்குப்பதில் பாதிப்பாதியாக மூன்றுமணி நேரம் கற்பிப்பதுதான் அவரது திட்டம்.
ராஜாஜியின் பள்ளித்திட்டத்தில் எங்காவது தகப்பன் தொழிலை மகன் செய்தாகவேண்டும் என்று உள்ளதா என்ன? ஒருவரி? அப்படியானால் கல்வியே தேவை இல்லையே. பள்ளிக்கூடமே திறக்கவேண்டாமே. ஏற்கனவே பிள்ளைகள் அதைத்தானே செய்துகொண்டிருந்தார்கள்? அவர் அடித்தட்டு மக்கள் பிள்ளைகளை கவர்ந்து பள்ளிக்கு கொண்டுவரவே அதைச் சொன்னார். உங்களுக்கு பிள்ளைகள் சம்பாதித்துக்கொடுப்பார்கள், மிச்சநேரத்தில் அவர்கள் பள்ளிக்கு வரட்டும் என்றுத தந்தையரிடம் சொன்னார். அரை நூறாண்டு கழித்து இன்றும் கூட, இத்தனை கல்வி வளர்ச்சிக்குப் பின்னரும்கூட, இது தமிழ்நாட்டுக்கு பொருத்தமான ஒரு உத்தியே.
இன்றும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் வேலைக்கனுப்பாதீர் என்று கோடிக்கணக்கில் செலவிட்டு பிரச்சாரம்செய்கிறது தமிழக அரசு. இன்றும் கூட கால்வாசிப்பிள்ளைகள் படிப்பு நிறுத்தப்பட்டு குலத்தொழிலுக்கு அனுப்பப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் அன்றாட யதார்த்ததில் இருந்து உருவான திட்டம் அது. இங்கே 90 சதவீதம்பேர் குலத்தொழில் செய்பவர்கள் அன்று. அவர்களின் தொழிலில் பிள்ளைகள் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். அவர்களை வேலையைவிட்டு நிறுத்தி பள்ளிக்கனுப்புவது என்பது அக்குடும்பங்களுக்கு பெரும் நிதிச்சுமை. ஆகவேதான் அவர்கள் வேலையைச்செய்துகொண்டே படிக்கலாம் என்றார் ராஜாஜி. அந்தத் திட்டம் நீடித்திருந்தால் தமிழகக் கல்வியில் இன்னும் பெரிய பாய்ச்சல் நிகழ்ந்திருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.
சரி, காமராஜ் எப்படி முழுமையான ஆரம்பக்கல்வியை அளிக்க ஆரம்பித்தார்? 1954ல் அவர் ஆட்சிக்கு வந்தபின்னர் தமிழக அரசின் நிதிநிலை பலபடிகள் முன்னேறியிருந்தது. [ அதற்குக் காரணமும் ராஜாஜிதான். அவரது மறைமுக வரிகள் ] அரசு நிதியை அதிகம் செலவிடாமல் பெரும்பாலும் தனியார்நிதிகளைக்கொண்டே பள்ளிகளை நடத்தும் புதுமையான திட்டம் நெ.து.சுந்தரவடிவேலுவால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இன்று திரிபுகளுக்கு அளவே இல்லை. 6000 பள்ளிகளை மூடும்படி ராஜாஜி உத்தரவிட்டார் என்று தி.க பிரசுரங்களில் பார்த்தேன். நண்பர்கள் மூலம் முறையாக விசாரித்தேன். ’அதெப்படி சுதந்திர இந்தியாவில் அப்படி ஒரு சட்டம்போட முடியும் உங்களுக்கென்ன பைத்தியமா?’ என்றார்கள். இன்றும்கூட அப்படி பள்ளிகள் மூடப்பட்டமைக்கான அரசாணையை எவராவது ஆதாரம் காட்டவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்..
ராஜாஜி முதல்முறை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது, 1937ல், சென்னைமாகாணம் கடுமையான நிதிச்சுமையை சந்தித்தது. இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய கட்டம். பிரிட்டிஷ் அரசு வரிச்சுமையால் இந்தியாவை கசக்கிக்கொண்டிருந்த நிலை. பிரிட்டிஷ் அரசின் மைய நிதி ஆதாரம் குடிவணிகம். ராஜாஜி மதுவிலக்கை கொண்டுவந்தார். பிரிட்ட்ஷாருக்கு கட்டவேண்டிய வரியை ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே பல துறைகளில் அவர் சிக்கன நடவடிக்கையை கொண்டுவந்தார்
அன்று தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் குடிப்பள்ளிக்கூடம் போன்ற கிராமிய அமைப்புகளுக்கு அரசு நிதி அளிக்கும் வழக்கம் இருந்தது. இந்த நிதி பெரும்பாலும் முறைகேடாக, பயனற்று செலவாகிறது என ராஜாஜி கருதினார். அவற்றை முறைப்படுத்த ஆணை பிறப்பித்தார். இந்த ஆணைமூலம் ஆந்திராவில் பல குடிப்பள்ளிகளை மூடவேண்டியிருக்கும் என ஜஸ்டிஸ் கட்சி எதிர்த்தது. அதை பிரதிபலித்து ஈவேரா அவர்கள் தமிழகத்திலும் 6000 பள்ளிகள் மூட நேரலாம் என்று சொன்னார். இந்த வரியைத்தான் இன்று வரை ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். இதை வைத்து ராஜாஜி 1952லும் 6000 பள்ளிகளை மூடினார் என்கிறார்கள்.
அதீதமான காழ்ப்புடன் எதிர்கொள்ளப்பட்ட மனிதர் ராஜாஜி. அவர்மேல் இன்று, இத்தனை காழ்ப்பிருந்தபோதும்கூட இம்மாதிரி பொய்களையும் சில்லறைக்குற்றச்சாட்டுகளையும் மட்டுமே சொல்லமுடிகிறது என்பதே ராஜாஜி யார் என்பதைக் காட்ட போதுமான ஆதாரம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...