Sunday, September 25, 2022

இந்த கடமையில் தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பிதருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். இந்த கடமையில் தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதம் மாதம் வரும் அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்தவகையில் இன்று மகாளய அமாவாசை ஆகும். இந்த நாளில் யார் அமாவாசை விரதம் இருக்க வேண்டும் என்பதை விரிவாக, எப்படி விரதம் இருக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்?
தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் விரதம் இருக்கும் முறை
திருமணமான ஒரு பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்கக் கூடாது. அவருக்கு கணவர் இருக்கும் நிலையில் அவர் அமாவாசை விரதம் இருக்கக் கூடாது.
பெண்ணிற்கு சகோதர்கள் இருப்பின் அவர்கள் பெண்ணின் பெற்றோருக்கு தர்ப்பணம், விரதம் இருப்பார்கள்.
அப்பா இல்லை என்றால் அம்மா தர்ப்பணம் கொடுப்பார், விரதம் இருப்பார்.
அம்மா இல்லை என்றால் அப்பா தர்ப்பணம் கொடுப்பார், விரதம் இருப்பார்.
அப்படி சகோதர் இல்லை, பெற்றோர் இருவரும் இல்லை என்றால் பெண்கள் கோயிலுக்கு சென்று தானம் கொடுக்கலாம், வீட்டிற்கு வந்து நான்கு பேருக்கு இலையில் சோறு போட்டு உணவளிக்கலாமே தவிர அமாவாசை விரதத்தை பெண் ஒருவர் கடைப்பிக்கக் கூடாது.
ஆண்கள் விரதம் இருக்கும் முறை
ஒரு ஆணுக்கு தாய் இல்லாவிட்டாலோ, தந்தை இல்லாவிட்டாலோ, அல்லது இருவரும் இல்லை என்றாலோ அவர் அமாவாசை விரதத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
அமாவாசை அன்று உபவாசம் இருக்க வேண்டும்.
கண்டிப்பாக எள்ளும், தண்ணீரும் இரைத்து முன்னோர்களை வழிபட வேண்டும்.
அமாவாசை தினத்தில் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
இயன்றவரை யாருக்காவது உணவு தானம் செய்யுங்கள் அல்லது பசுவிற்கு அகத்திக் கீரை கொடுங்கள்.
பலன்கள்
அமாவாசை தினத்தில் முன்னோருக்கு வழிபாடு நடத்துவது அவசியம். தாய், தந்தையர்களை யார் வழிபடுகிறார்களோ, அவர்களின் பிள்ளைகளும் நல் பலனை பெறுவார்கள்.
மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் அளித்து தர்ப்பணம் அளிக்க வேண்டும்.
செப்டம்பர் 25ஆம் தேதி இன்று மகாளய அமாவாசை கடைபிடிக்கப்பட உள்ளது.
இந்த நாளில் நாம் தானம் கொடுப்பதன் மூலம் மறைந்த நம் முன்னோர்களை மகிழ்ச்சியடையச் செய்யலாம். இதன் மூலம் தடையின்றி அவர்களின் ஆசி கிடைக்கும்.
தர்மம் கொடுப்பது என்பது பொதுவாக அனைத்து தரப்பினரும் கொடுப்பது கிடையாது.
வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே தர முடியும் என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாகும்.
ஆனால், தானம் கொடுப்பது என்பது மனிதனாகப் பிறந்த அனைத்து தரப்பினரும், மத நம்பிக்கை கொண்ட குறிப்பாக இந்து சமயத்தின் மீது அதீத பற்று கொண்ட அனைத்து தரப்பு மக்களுமே கொடுக்க முடியும் என்பது பலருக்கும் தெரியாது. இதனால் தான் அதனை தானம் என்று இந்து சமயம் வலியுறுத்தி உள்ளது.
தர்மம் என்பது வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே தருவதுண்டு.
அதாவது ஒருவர் வந்து கேட்டால் மட்டுமே கொடுப்பது தர்மம் என்பதாகும்.
அதாவது தான் இறந்த பின்பு நற்கதியும், தன்னுடை சந்ததியினரும் இவ்வுலகில் நல்ல முறையில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் கொடுப்பது.
மகாபாரதத்தில் தர்மனும், கர்ணனும் செய்தது தர்மம் மட்டுமே.
தனக்கு தேவைப்படுவதை வைத்துக்கொண்டு, மீதியுள்ளவற்றை பிறருக்கு தர்மம் வழங்கி நற்கதி அடைந்தனர். இதைத் தான் தனக்கு மிஞ்சி தான் தர்மம் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர்.
தான தர்மம் பலன்கள்
இந்து சமயத்தில் எந்த நாளில் தானம் கொடுக்கலாம் என்று குறிப்பிட்டு சொல்லாவிடினும், அமாவாசை நாளில் தானம் கொடுப்பது நமக்கும் நம் சந்ததியினருக்கும் நன்மையளிக்கும் என்று சொல்லி இருக்கின்றனர்.
வேதத்தை பகுத்தளித்த வியாசர் கூட, நான்கு வேதங்களில் ஒன்றான யஜூர் வேதத்தில் கூட அமாவாசை நாளில் யாகம், பலி, தானம் கொடுப்பதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இதனாலேயே அமாவாசை நாளில் தானம் கொடுக்க வேண்டும் என்று நம் முன்னோர்களும் வலியுறுத்தியிருக்கின்றனர்.
அமாவாசை நாளில் தானம் கொடுத்தால், அதைப் பார்த்து பித்ரு லோகத்தில் உள்ள நம் முன்னோர்களும் சந்தோஷம் அடைந்து நமக்கு ஆசீர்வாதம் அளிப்பார்கள்.
மகாளய அமாவாசை
வழக்கமாக மற்ற அமாவாசை நாளில் தானம் கொடுக்க முடியாது சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட, பெரிய அமாவாசை எனும் மகாளாய பட்ஷ அமாவாசை நாளில் கண்டிப்பாக தானம் கொடு என்று பெரியோர்களும் கூறுகின்றனர்.
காரணம், இந்த மகாளய பட்ஷ காலத்தில் தான் நம் முன்னோர்கள் நாம் அளிக்கும் சிரார்த்த தர்ப்பணத்தை மிகுந்த மனமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, நம்மை ஆசீர்வதிப்பார்கள். இதைத் தான் 'மறந்தவனுக்கு மகாளாயம்' என்று கூறுகின்றனர்.
மகாளய பட்ச காலம்
அதாவது, ஒருவன் தன்னுடைய முன்னோர்களுக்கு வருடந்தோறும் செய்யும் சிரார்த்தம் என்னும் பித்ரு காரியத்தை செய்ய மறந்தாலும் கூட, மகாளய பட்ஷம் என்னும் பதினான்கு நாட்களில் ஏதாவது ஓரு நாளில் செய்து, ஏழை எளியவர்களுக்கு மனமுவந்து தானம் சின்னஞ்சிறிய எள்ளையாவது தானம் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர். இந்நாளில் தன்னால் முடிந்த ஒரு பொருளை ஏழை எளியவர்களுக்கு தானமாக கொடுத்தால், அதைப் பார்த்து நம் முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். எனவே நாமும் இந்த மகாளய பட்ஷ நாட்களில் நம்மாள் முடிந்ததை ஏழை, எளிய மக்களுக்கு மனமகிழ்ச்சியோடு தானம் அளிக்க வேண்டும். இந்நாட்களில் எந்தெந்த பொருட்களை தானம் கொடுத்தால் என்ன நன்மை உண்டாகும் என்று பார்க்கலாம்.
எள் தானம்
எள் என்பது இந்துக்களின் வாழ்வில் முக்கிய அங்கமாகும். மகாளய பட்ஷ நாட்களில் கருப்பு எள்ளை தானம் கொடுத்தால், நம்மை கட்டியிருந்த அனைத்து தளைகளும் தடைகளும் அகலும். அதோடு, ராசி மற்றும் கிரகக் கோளாறுகளால் ஏற்படும் நெறுக்கடிகளும், தடைகளும் முற்றிலும் அகலும். நம் வாழ்வு வளம் பெறும். சந்ததிகள் விருத்தியடையும்.
உப்பு தானம்
உப்பு என்பது பாரபட்சம் இன்றி அனைத்து தரப்பு மக்களும் கொடுக்கக் கூடிய மிக எளிமையான ஒன்றாகும்.
மகாளய பட்ஷ நாட்களில் உப்பை தானம் அளித்தால், எதிர்மறை சக்திகளில் இருந்து நமக்கு விடுதலையும், நம் முன்னோர்களின் பரிபூரண ஆசியும் கிடைக்கும்.
ஆடை தானம்
மகாளய பட்ஷ காலத்தில், ஏழை, எளியோர்கள் மற்றும் பிராமணர்களுக்கு அன்ன தானம் கொடுப்பதோடு நில்லாமல், நம்மால் முடிந்த மட்டும் வேட்டி, துண்டு, சேலை போன்ற ஆடைகளை தானம் செய்ய வேண்டும். இதனால், நம் ஜாதகத்தில் ஏற்பட்ட தோஷங்களும், நம்முடைய வேலையில் குறுக்கிடும் அனைத்து தடைகளும் நீங்கும். நம் ஆயுளும் விருத்தியடையும்.
நெய் தானம்
மகாளய பட்ஷ காலத்தில், சுத்தமான பசுவின் நெய்யை தானமாக வழங்கினால், நம் குடும்பத்தில் இருந்து வந்த பல்வேறு பிரச்சனைகளும் தீரும் என்பதோடு. நம் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடைக் கற்களும் அகலும். நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
கோ தானம்
கோ தானம் என்னும் பசு தானம் கொடுப்பது என்பது வேதங்களில் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. இதனால் தான் கோ தானம் என்பது இந்துக்களின் தானங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆகவே, இந்த மகாளய பட்ஷ காலத்தில் பசுவை தானம் செய்தால் இப்பிறவி மட்டுமல்லாது, பல பிறவிகளுக்கும் நன்மை ஏற்படும்.
தங்கம், வெள்ளி தானம்
மகாளய பட்ஷ காலத்தில் தங்கத்தை தானம் அளித்தால், குரு தோஷம் நீங்கும். எனவே, இந்நாட்களில் முடிந்தால் குண்டுமணி தங்கமாவது தானம் அளித்தால் குரு பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்கி நம் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். அதோடு, வெள்ளிப் பொருட்களை தானம் செய்வதால், அனைத்துவித நோய்களில் இருந்து விடுபட்டு சுபிட்ஷம் உண்டாகும். நம் குடும்பத்திலும் மகழ்ச்சியும், அமைதியும், முன்னேற்றமும் ஏற்படும் என்பது ஐதீகம்.
அன்னதானம்
தானத்திலேயே மிகச்சிறந்த தானம் அன்னதானம் தான் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். தானியங்களை ஏழை எளியவர்களுக்கு தானமாகக் கொடுத்தால், அதைப் பார்த்து அன்னபூரணியும், செல்வத்தை கொடுக்கும் மகாலட்சுமியும் அகமகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்பததோடு நம் பாவமும் அகலும், நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.
எனவே, நாமும் இந்த மகாளய அமாவாசை நாட்களில், முடிந்த அளவுக்கு மேற்சொன்ன பொருட்களை தானம் அளித்து நம் முன்னோர்களை வழிவடுவோம்...
ஓம் சிவசிவ சிவாயநம ஓம் நமசிவாய
நற்பவி! நற்பவி!! நற்பவி!!!!!
May be an image of 9 people and people sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...