Friday, April 1, 2011

ஜப்பான் பாவப் பலிகடாவா‏

 



ஜப்பான் பாவப் பலிகடாவா..

 நாம் சில சிராய்ப்புகளையே பெரிதென நினைத்து
மருந்து தேடிக்கொண்டிருக்கும் வேளையில்
சில நகரங்களே சிதைந்து சீர்குலைத்து போனது…

 ஓரடி..ஈரடி யென நிலத்தகராரறு..
உனக்கா..எனக்காவென நமக்குள்!
எனக்குத்தான் என்று அங்கே
கடல் எழுந்து வந்து,
நாடு நகரங்களையே அபகரித்து போனது..!

 சுவரைக்கூட விட்டுத்தர மனமில்லை நம்மில்,
சுவடே தெரியாமல் நாற்பது இலட்சத்திற்கும்
மேலான மண்ணின் மைந்தர்களுக்கு அங்கே வீடில்லை..
அலை அடித்த வேகத்தில் அழிந்து போனது…

 விக்கலுக்குத் தண்ணீர் தேடுவது மனித இயல்பு
கப்பலையே தண்ணீர் விழுங்கியதே
ஏன்.. ஏன்..
சீற்றம் கொண்டெழுந்து…
சினங்கொண்டு நடந்தது கடல்…

 வியாபாரத்தில் சிலபேர்..
தொழில் சார்ந்து சிலபேர்..
பயணத்தில் சிலபேர்..
படுக்கையில் சிலபேர்.. என..
 
எறும்பை போன்ற இயல்பினர்கள்
இயங்கிக் கொண்டிருந்த வேளையில்..
இதயமே இல்லாத இயற்கையே ஏன்..
இழுத்துப்.. புரட்டி.. அடித்து..
மூர்க்கத்தனமாய் மூர்ச்சையாக்கினாய்..

 உன் மேலேயே நடந்து
உன் முதுகையே குத்திக் கிழித்து
வதை செய்வதனால் சினங்கொண்டாயோ..

 இயற்கையே தயவு செய்து மனிதர்களை மன்னித்து விடு..
உன் பெருஞ்சக்திக்கு முன் மனிதர்கள் கேவலமானவர்களே..
உன் அதிர்வும் ஆதிக்கமும் தயவு செய்து இனி வேண்டாம்..
உன்மேல் நடக்கும் செல்லப் பிள்ளைகள் தானே நாங்கள்..

உன்னிடமிருந்தே அற்பவாழ்வை 
வரமாகப் பெற்றவர்கள் தானே நாங்கள்..

 பேராற்றலே..
உன் சீற்றத்திற்கும்.. சினத்திற்கும்..
ஆக்ரோசத்திற்கும்.. ஆதிக்கத்திற்கும் முன்னால்..
எத்தனை ஆயுதங்கள் எங்களிடம் இருந்தாலும்
நாங்கள் நிராயுத பாணிகளே..
நாங்கள் இயலாதவர்களே..!

 எல்லாவற்றுக்குமான எஜமானே..!
இயற்கையாகவும் அதன் பேராற்றலாகவும் 
இருக்கும் பெருஞ் சக்தியே..!
உனக்கு மனதால் அழுது விண்ணப்பம் விடுக்கிறேன்

 இனி இது போன்ற துயர் தராதே..
நாதியற்ற நெஞ்சங்களுக்கு
இனியேனும் இதம் தா..
எந்தவித மருந்துகளும் ஆற்றாத அந்த ரணங்களை
உன் கருணை இறகால் தடவி.. தேற்று..
அன்பு காட்டு.. அணைத்துக்கொள்..

பாதிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு உன்
பரிவு கொண்டு துணையருள்..!
இயலாமையும்.. பரிதவிப்பும் நிறைந்த
அந்த சூழலை நினைத்து மனம்
கசியவே மட்டும் தெரிந்த..
சிற்றுயிர் மானுடப் பிராணி

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...