Tuesday, August 1, 2017

ஏகாதசி விரதம்.

ஹிந்து மதத்தில் சந்த்யாவந்தனத்திற்கு அப்புறம் கட்டாயமாக செய்ய வேண்டியது ஒன்று உண்டெனில் அது ஏகாதசி விரதமே.
ஏகாதசி விரதத்தை மிக தீவிரமாக நமது ஆகமங்கள் வலியுறுத்துகின்றன. பத்ம புராணம் 14 வது அத்தியாயம் ஏகாதசியை பற்றி விளக்குகிறது!
" ந காயத்ர்யா: பரம் மந்த்ரம் ந மாது: பர தைவதம் |
ந காச்யா: பரமம் தீர்த்தம் நைகாதச்யா: ஸமம் வ்ரதம் ||"
"காயத்ரிக்கு மேலே ஒரு மந்திரமில்லை ; தாய்க்கு மேலே ஒரு தெய்வமில்லை . காசிக்கு மேலே ஒரு புண்ணிய தீர்த்தம் இல்லை. ஏகாதசிக்கு சமமாக ஒரு விரதம் இல்லை.
கூர்ந்து கவனித்தோமானால் மற்ற மூன்றுக்கும் மேலே ஓன்று இல்லை என்று சொல்லும் போது, சமமாக ஓன்று இருக்கலாம் என்று படுகிறது. ஆனால் ஏகாதசிக்கு மேலே மட்டுமல்ல சமமாக கூட ஒன்றும் இல்லை எனும் போது அது தலையாய ஒன்று என்பது வலியுறுத்தப்படுகிறது.
" ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜன த்வயம் |
சுத்தோபவாஸ: ப்ரதம: ஸக்கதா ச்ரவணம் தத:"
ஏ ஜனங்களே! ஏகாதசியில் எல்லாராலும் இரண்டு செய்யத் தக்கன. முதல் காரியம் உபவாசம். இரண்டாவது காரியம் பகவத் கதைகளைக் கேட்பது
(ஏகாதசிஅன்று ஒருவன் சாப்பிட்டால் அதில் ஒவ்வொரு பிடியிலும் நாயின் அமேத்யத்துக்கு ஸமமான பாவத்தைச் சாப்பிடுகிறான்
" ப்ரதிக்ராஸம் அஸௌபுங்க்தே கிஷ்பிஷம் ச்வாந விட் ஸமம்"
என்று மிகவும் கடுமையாகவே சொல்லியிருக்கிறது..)
ஏகாதசி என்றால் என்ன?
ஏகம் + தசம் = ஒன்று+ பத்து = பதினொன்று
அதாவது பவுர்ணமிக்குப் பிறகு பதினோராவது நாளும், அமாவாசைக்கு பிறகு பதினோராவது நாளும் ஏகாதசி எனப்படுகிறது இதில் அமாவாசைக்கு பிறகு வருகிற ஏகாதசி சுக்கில பக்ஷம் என்றும், [சுக்கிலம் என்றால் ஒளி,பவுர்ணமி ஒளி அல்லவா], பவுர்ணமிக்கு பிறகு வருகிற ஏகாதசி கிருஷ்ண பக்ஷம் [கிருஷ்ண என்றல்ல கருப்பு நிறம், அமாவாசை கருப்பு] என்றும் அழைக்கப்படும் ஆக வருடத்திற்கு 24ஏகாதசிகள் சரி, இந்த விரதத்தை யார் செய்ய வேண்டும்?
"அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர
ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ: உபயோ: அபி ||"
என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. அதாவது மனிதராகப் பிறந்தவர்களில் எட்டு வயதிற்கு மேல் எண்பது வயதிற்கு உட்பட்ட எல்லோரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருக்க வேண்டும் . ஆணா பெண்ணா, எந்த ஜாதி என்ற வித்தியாசமில்லாமல் , ‘மர்த்ய’, அதாவது மனிதராக ப் பிறந்த எல்லோரும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது சரி, எல்லாவற்றுக்கும் ஒரு விலக்கு உண்டு அல்லவா. அப்படி ஏகாதசி விரதத்தை நான்கு முறைகளில் செய்யலாம்.
1. நிர்ஜல விரதம்-ஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் ரொம்பவும் உத்தமமானது. பச்சை தண்ணி கூட அருந்தாமல் விரதம் இருப்பது
2. சாத்விக ஜல உபவாசம்: தண்ணீர், பசும் பால் மட்டும்
3. வாழைப்பழத்தோடு பால் சாப்பிடுவது
4. ஒருவேளை மட்டும் பத்துப்படாத பூரி, சப்பாத்தி [உப்பில்லாமல்] மாதிரியானவற்றைச் சாப்பிட்டு இன்னொரு வேளை பழம், பால்...
இதற்கும் கீழே போகக் கூடாது . அதாவது ஒரு வேளை கூட அன்னம் சாப்பிடுவதாக இருக்கக்கூடாது. ஏகாதசியில் அன்னத்தைச் சாப்பிட்டால் பிராயச்சித்தமே கிடையாது என்றிருக்கிறது. ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. மறுநாள் துவாதசி அன்று அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இப்படி ஏதாவது அவசியம் இடம்பெற வேண்டும். துவாதசியன்று காலையில் சாப்பிட்ட பிறகு பகலில் உறங்கக்கூடாது. முக்கியமாக ஏகாதசி விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல் நாளே பறித்து விடவேண்டும். சரி ஏன் ஏகாதசி விரதம்? தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடையக் கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, 'முரன்' பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது. விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.ஒரு தடவை யமராஜன் நாராயணனிடம் எல்லோரும் ஏகாதசி விரதம் இருப்பதால் எங்களுக்கு வேலை இல்லை என்று கூறினார். உடனே நாராயணன் பாபபுருஷனை அனுப்பி ஏகாதசி அன்று உண்ணும் உணவிலெல்லாம் நீ இருப்பாயாக என்று வாக்கு கொடுத்தார். எனவே ஏகாதசி அன்று உண்ணும் உணவு பாவ மூட்டையாக கருதப்படுகிறது. இனி வரும் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து இறை அன்பை பெற்றிடுவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...