Sunday, July 10, 2016

தெய்வமாக ஒரு டிரைவர்!

விழுப்புரம் அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் படுகாயம் அடைந்து ரத்தம் சொட்ட சொட்ட சிறிது தூரம் பேருந்தை ஓட்டி வந்து பாதுகாப்பாக நிறுத்திய சம்பவம் சக பயணிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
தஞ்சாவூரிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள தச்சயான்புலியூரில் இன்று அதிகாலை லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது சரக்கு லாரி, அதிக சுகமைகளை ஏற்றிக்கொண்டு வந்ததால், இரும்பு சட்டங்கள் அந்த லாரிக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்துள்ளது.
பேருந்தின் ஓட்டுநர் அமர்ந்திருக்கும் பகுதியில் லாரி மோதியதில், அதிகாலை தூக்கத்தில் இருந்த சக பயணிகள் மீது பேருந்தின் கண்ணாடி உடைந்து அதன் சிதறல்கள் பாய்ந்துவிழ, ஒட்டுமொத்த பயணிகளும் அய்யோ... அம்மா என்று உயிர் பயத்தில் அலறி ஓலமிட்டனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து பல மீட்டர் தூரம் வரை வேகமாக ஓடிய பேருந்து, சாலையின் ஓரமாக திடீரென்று பிரேக் அடித்து நிற்க... பதற்றத்தோடு பயணிகள் அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினர். அப்போதுதான் பேருந்தின் ஓட்டுநர் அமர்ந்திருந்த இடத்தின் மீது லாரி மோதியிருப்பது அனைவருக்கும் தெரியவந்தது.
பேருந்தின் முன் பக்கம் சிதைந்து சின்னாபின்னமாகியிருக்க... ஓட்டுநரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மண்டைப் பிளந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்து நாங்கள் அனைவரும் அதிர்ந்து போனோம். உடல் முழுக்க ரத்தம் வழிந்தோடிய அந்த நிலையிலும் நம்பிக்கை தளராத ஓட்டுநர், பேருந்தைச் சாமர்த்தியமாக ஓட்டிச் சென்று பாதுகாப்பான இடத்தில் ஒரு ஓரமாக நிறுத்தி எங்களுக்கு சிறுகாயம்கூட ஏற்படாமல் காப்பாற்றிய விதத்தை நினைக்கும்போது, ஒவ்வொரு பயணியும், அவரைத் தெய்வமாகவே பார்க்கத் தொடங்கினோம் என்றார்கள் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...