Sunday, October 27, 2019

நாகரீகம் :

முதலமைச்சராக காமராஜர்! அறிஞர் அண்ணா எதிர்க் கட்சித் தலைவர்!
விலைவாசி உயர்வைப் பற்றி விவாதம்! அண்ணாவுக்கு வழங்கப்பட்டதோ கால் மணி நேரம். அவர் பேசியதோ முக்கால் மணி நேரம். காமராசர் பேச்சை ரசித்துக் கொண்டே எவரையும் குறுக்கிடக் கூடாது என்று கண்ணாலேயே உத்தரவு பிறப்பிக்கிறார்.
அண்ணா தனது பேச்சை நிறைவு செய்யும் போது, “ முதலமைச்சர் காமராசருக்கு , விலைவாசி உயர்வால் குடும்பங்கள் படும் கஷ்டங்கள் புரியாது. காரணம் அவர் பிரம்மச்சாரி. தனிக்கட்டை. குடும்பம் நடத்திப் பார்த்தால்தான் குடும்பங்கள் படும் கஷ்டம் தெரியும் ! “ என்று குறிப்பிட்டார்.
அண்ணாவுடைய பேச்சுக்கு அன்றைய சட்ட மன்ற உறுப்பினர் அனந்தநாயகி அம்மையார் பதில் அளித்தார். காமராஜரைப் பற்றி அண்ணா குறிப்பிட்டது பற்றி அவருக்கு கோபம் கொப்பளித்தது. “அண்ணா இப்படி முதல்வர் காமராசரைப் பற்றிக் கூறுகிறார். இவர் இப்படிப் பேசுவதால்தான் ஆண்டவன் இவருக்கு குழந்தையே இல்லாமல் செய்துவிட்டான்’. என்றார் அனந்த நாயகி.
அவையில் இருந்த காமராஜர் உடனே எழுந்து கோபமாக தனது அறைக்குச் சென்றார். அனந்த நாயகிக்கு காமராஜரிடமிருந்து வந்தது ஒரு அவசர அழைப்பு.
காமராஜர் தனது அறைக்கு வந்த அனந்த நாயகியிடம், “ஏம்மா! அண்ணாத்துரை அப்படி என்ன இல்லாததை சொல்லிவிட்டார். நான் பிரம்மச்சாரி தானே! ஆனால் அதற்காக நீ ஒரு பெண்ணாக இருந்தும் அண்ணாதுரைக்கு குழந்தை இல்லை என்று குத்திக் காட்டுகிறாயே அவர் மனம் எவ்வளவு வருத்தப்படும்?.அவரது மனைவி இதைக் கேள்விப் பட்டால் எவ்வளவு வருத்தப்படுவார்? உடனே போய் அவரிடம் மன்னிப்புக் கேள்!” என்று சொன்னார்.
அனந்தனாயகியும் அவ்வாறே செய்தார்.
ஒரு தலைவரை வாய்க்கு வந்த படி எல்லாம் வசை பாடக் கூடாது என்று பயிற்சியளிக்கும் பாசறையாக, அன்றைய சட்டமன்றம் இருந்தது.
நண்பர்களே,
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
விளக்கம் ;
விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும், அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் அறிவு உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாக நடக்கமாட்டார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...