Friday, May 29, 2020

நாம் சொல்லவந்தது காமராஜர் எனும் அந்த அபூர்வ முதல்வர்.

ஜெயலலிதாவின் வீடு தீபாவுக்கு என்பதையும், ஒரு பகுதி அவர் நினைவகம் என்பதையும் சொல்லிவிட்டு தீர்ப்பை முடித்துவிட்டது நீதிமன்றம்
முன்னாள் முதலமைச்சர் வீடு பேசபடும் பொழுது அதற்கு முந்தைய முதல்வர் ஒருவரின் வீடும் நினைவுக்கு வரும்
அது கோபாலபுரம் வீடு அல்ல, அது வில்லங்கமான அறிவிப்பு, எனக்கு பின் இந்த வீடு மருத்துவமனைக்கு என எழுதி வைத்து கருணாநிதி வாசித்ததெல்லாம் வழக்கமான திராவிட புரட்டு
ஆம், அவருக்கு பின் அந்த வீடு முரசொலி அறக்கட்டளைக்கு செல்வதாகவும் அதில் மருத்துவமனை இயங்கும் என எழுதிவைத்துவிட்டார் கருணாநிதி
கருணாநிதிக்கு பின் அது எங்கே போனது? முரசொலி அறக்கட்டளைக்கு போனது, அதன் நிர்வாகி யார்? உதயநிதி
ஆக தாத்தா பேரனுக்கு எழுதி வைத்த சொத்துதான் அந்த அறிவிப்பு, அதையும் வீட்டையும் தமிழ்நாட்டுக்கு கொடுத்தார் கருணாநிதி என சொல்லி கொள்ளும் உடன்பிறப்புக்கள்
நாம் சொல்லவந்தது காமராஜர் எனும் அந்த அபூர்வ முதல்வர்
அவருக்கு சென்னையில் வீடு கிடையாது, அப்பொழுது கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனும் கிடையாது
அரசியல் நாடோடியான காமராஜர் சென்னையில் அவர் குரு சத்தியமூர்த்தி வசித்த வீட்டில் வசித்திருக்கலாம், அப்படியே நிச்சயம் அபகரித்திருக்கலாம் , ஆனால் அங்கு ஒரு நாள் கூட காமராஜர் தங்கியதில்லை
மாறாக எங்காவது கட்சிக்காரர் வீட்டு திண்ணையில் தங்குவதும், இல்லை "எக்ஸ்பிரஸ்" பத்திரிகை
அலுவலக மாடியில் இருந்த கட்சி அலுவகத்தில் தங்குவதுமாக காலம் கழிந்தது
அவர் என்ன நடித்து சம்பாதித்துவிட்டு, எழுதி சம்பாதித்துவிட்டு இல்லை ரியல் எஸ்டேட் நடத்திவிட்டு அரசியலுக்கு வந்தாரா?
காலமெல்லாம் கட்சி, காந்தி, நாடு, விடுதலைபோராட்டம் , மக்கள் சேவை என வாழ்ந்த ஆண்டியிடம் என்ன இருக்கும்?
1946ல்தான் இப்போதுள்ள வீட்டில் காமரஜர் கட்சிக்காரர்களால் தங்க வைக்கபட்டார், காரணம் அவர் அப்பொழுது காங்கிரஸ் தலைவர், அவருக்கு உதவியாக சமையல்காரன் வைரவனும் அமர்த்தபட்டார்
காமராஜர் வாரத்தில் பல நாட்கள் பரதேசியாக சுற்றுவார் , எப்பொழுதாவதுதான் வருவார். வீட்டு வாடகையினை கட்சி செலுத்தி வந்தது
1954ல் முதல்வரானதும் அரசு சார்பில் வீடு ஒதுக்கபட்டது, அது புறநகரில் இருந்ததாலும் சென்றுவர நேரம் என்பதாலும் மறுத்து இந்த வீட்டிலே இருந்தார் காமராஜர், வாடகையாக 160 ரூபாய் கொடுக்கபட்டது
இந்நேரம் வீட்டு உரிமையாளருக்கு சிக்கல் வந்தது, அந்த பங்களா வீடு பெரும் வாடகைக்கு செல்ல கூடியது, அக்கம் பக்கம் 800 ரூபாய் வாடகை வந்தபோதும் காமராஜருக்காக 250 ரூபாயாக உயர்த்தினார் அவர்
அவருக்கும் 800 ரூபாய் வாங்க ஆசைதான், அரசு சம்பளக்காரன் இவ்வளவுதான் கொடுக்கமுடியும் , வாடகை படி அவ்வளவுதான் என சொல்லி அரசு பணத்திலும் சிக்கனம் பார்த்தார் காமராஜர்
அரசு பணத்தை அள்ளி எறியும் தமிழகத்தில் அன்று அப்படியும் ஒரு அரசியல்வாதி இருந்திருக்கின்றான்.
பின் 1956ல் அந்த வீட்டை அரசுக்கே விற்க முன்வந்தார் கோவிந்த ராஜூ எனும் அதன் உரிமையாளர், விலை 60 ஆயிரம் ரூபாய்
காமராஜர் சொன்ன பதில் என்ன தெரியுமா "இவ்வளவு ரூபாய்க்கு எனக்கு வீடா? இதற்கு பதில் பத்து பள்ளி திறக்கலாம், வீடு வேண்டாம்"
அந்த வீட்டு உரிமையாளர் பாடு திண்டாட்டமாயிற்று, காமராஜரை தவிர யாருக்கும் விற்க மனமில்லை ஆனால் சொந்த சிக்கல்கள் அவரை விற்கும் முடிவுக்கு தள்ளின , முடிவில் அடமானம் வைத்தார்
அதை எடுத்தவர் பாப்பா லால் எனும் மார்வாடி, அவனுக்கோ வீட்டில் காமராஜர் இருப்பது தெரியாது, சென்னையினை அதிகம் அறிந்தவனுமல்ல , சொத்து அடமானம் வந்தது வாங்கினான்
வாடகையினை காமராஜர் கட்டி கொண்டிருந்தார்
அப்பொழுது திமுகவின் பிரச்சாரம் என்ன தெரியுமா?
"மாடி வீட்டு கோமான் காமராஜரின் சொந்த பங்களாவினை பாருங்கள், இவரா எளியவர் கஷ்டம் அறிவார், பார்ப்பண கோடீஸ்வரர்கள் விருந்துண்ணும் அரண்மனை அது"
காமராஜர் கண்ணீர் விட்டார், "இது வாடகை வீடு, யாரும் வந்தால் சாப்பிட கூட சொல்லமுடியா வசதி இல்லா வீடு"
ஆனால் அதை யார் பொருட்படுத்தினார், திமுக கடும் அழிச்சாடியம் செய்தது
1972ல் நாகர்கோவில் இடைதேர்தலில் இந்த வீட்டு படமே வடசேரி நுழைவாயிலில் கருணாநிதியால் வைக்கபட்டு "ஏழைபங்காளனின் வீட்டை பாருங்கள்" என பிரச்சாரம் செய்தது
இவ்வளவு நடந்தும் முக ஸ்டாலின் திருமணத்துக்கு முதல் ஆளாக வந்திருந்தார் காமராஜர்.
1973ம் வருடம் அப்பொழுது காமராஜர் பதவியில் இல்லை, வீடு ஏலத்துக்கு வந்தது, அப்பொழுது வீடு காமராஜருக்கு என அறிந்த அந்த வடநாட்டு மார்வாடி இலவசமாக காமராஜருக்கே விட்டுகொடுக்க முன்வந்தார், ஆனால் மறுத்தார் காமராஜர்
ஆம் வடநாட்டு மார்வாடியே காமராஜருக்கு இலவசமாக வீடு வழங்க முன்வந்தபின்புதான் காங்கிரஸ் சிங்கங்களுக்கு ரோஷம் வந்தது
வீட்டின் விலை 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய், இதை தமிழ்நாட்டில் வசூலித்து கொடுக்க குழு அமைக்கபட்டது
காமராஜர் தெளிவாக சொன்னார், என் பெயரில் வீடுவேண்டாம் அப்படி இருந்தால் என் தங்கை குடும்பம் வாரிசாக வரும், கட்சி பெயரில் இருக்கட்டும் எனக்கு பின் வைரவன் அங்கே உரிமையாக தங்கட்டும், எனக்கு சோறு போட்டவன் அவனே
என் அன்னை கையினை விட அவன் கைகளே அதிக காலம் சோறு போட்டது, அவனை அனாதையாக விட்டுவிடாதீகள்"
காங்கிரஸில் வசூல் நடந்தது 1 லட்சம் திரட்டி கொடுக்கபட்டு, மீதி திரட்டும் முன் காமராஜர் மரித்தார்
ஆம் வாடகை வீட்டில் ஒரு பரதேசி கோலத்தில் செத்துகிடந்தார் காமராஜர்
எந்த வீட்டில் வாடகைக்கு சில வேட்டி சட்டையுடன் மட்டும் வாழ்ந்தபோதும் திமுகவினரால் சொந்தவீட்டில் சொகுசு வாழ்வு என பழிக்கபட்டாரோ? அங்கேயே செத்து கிடந்தார்
அவர் நினைத்தால் அந்த வீட்டை வாங்கியிருக்கலாம், அரசு பணத்தில் அல்ல, தனக்கு நன்கொடையாக கிடைத்த பணத்தில் வாங்கியிருக்கலாம்
ஆனால் தனக்கு எதுவும் அடையாளமாகிவிட கூடாதென நினைந்து அந்த நன்கொடை பணத்திலும் கட்சிக்கு நிலம் வாங்கி போட்டார், அதுதான் இன்றிருக்கும் சத்யமூர்த்தி பவன்
துறவிகள் தங்கள் கையில் எதுவும் வைத்திருக்கமாட்டார்கள், திருவோடு கூட சிலருக்கு இருக்காது
காமராஜர் அவ்வகையில் அரசியல் துறவி, அந்த கர்ம துறவியினை பழித்தே வளர்ந்த திமுகவுக்கு மோடி எம்மாத்திரம்?
அந்த வாடகை வீட்டிலும் தன் அன்னையினையோ உறவுகளையோ தங்க அனுமதிக்கவில்லை அந்த காமரஜர், எங்கே அவர்களால் தங்கள் மனம் மாறிவிடுமோ என அஞ்சினார்
அப்படியும் ஒரு துறவி இருந்திருக்கின்றான்
வாழும்பொழுது சொந்த வீடு அறியா காமராஜருக்கு எமர்ஜென்ஸி காலம் முடிந்து ராமசந்திரன் ஆட்சியில் இந்திரா மேலாதிக்கத்தில் அந்த வீடு வாங்கபட்டு காமராஜர் நினைவாலயம் ஆயிற்று
அவர் வீடு சொந்த வீடு என பொய் பிரச்சாரம் செய்த திமுக , தமிழக அரசு அந்த வீட்டை விலை கொடுத்து வாங்கி அது வாடகை வீடு என நிரூபித்தபொழுது கனத்த மவுனம் காத்தது
மவுனம் அவர்களின் தற்காப்பு ஆயுதம்
பின் காமராஜருக்கு மண்டபம், கல்வி நாள் என அவருக்கு செய்த கடும் துரோகத்துக்கும் வலிக்கும் பரிகாரம் தேடியது கருணாநிதியின் திமுக.
தன் குடும்பத்தின் 7 கிளைகளுக்கும் 7 தலைமுறைகு சேர்த்துவிட்டபின் 2012ல் கருணாநிதி சொன்னார் "காமராஜரை எதிர்த்து அரசியல் செய்ததற்கு நான் வருந்துகின்றேன்"
இந்த ஞானம் 1960லே இருந்திருந்தால் தமிழகம் எப்படி இருந்திருக்கும்?
ரமாவரம் தோட்டம் , கோபாலபுரம் வீடு, போயஸ் கார்டன் என எல்லாவற்றையும் நோக்கிவிட்டு காமராஜர் வாழ்ந்த அந்த வீட்டையும் நோக்குங்கள்
உங்களை அறியாமல் கண்ணீர் வரும்
மிகபெரும் தியாக வரலாற்றை தாங்கி நிற்கின்றது அந்த வீடு, இனிவரும் காலமெல்லாம் அந்த மனிதன் எவ்வளவு உன்னத தூய வாழ்வினை வாழ்ந்தான் என சொல்லிகொண்டே இருக்க போகும் வீடும் அதுதான்
காமராஜர் எனும் தியாக சுடரின் பெருமைகளை எந்நாளும் வீசிகொண்டிருக்கின்றது அந்த விளக்கு.
Image may contain: outdoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...