Wednesday, May 27, 2020

நம்புவது வேறு நம்பிக்கை வேறு.

'உடலும் உயிரும் ஒன்றுக்கொன்று வழங்கப்பட்டிருக்கிற பரிசு' என்பார் ஸ்ரீ அரவிந்தர் அன்னை. உடல் உயிரையும் உயிர் உடலையும் பேண வேண்டும் என்பதாக இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்ற திருமூலரின் வரிகளும் இதனை உணர்த்தும். உடலையும் உயிரையும் தாண்டி இவ்விரண்டையும் காப்பதில் மனம் என்கிற மாபெரும் சக்தி மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உணர்வுகளின் தொடர்பானது மனம்.

மனம் எங்கே


எண்ணற்ற உணர்வுகளின் இருப்பிடமான மனம் மனித உடலில் எங்கிருக்கிறது என்றால் உயிரைப் போலவே இடம் தெரியாமல் எங்கோ எப்படியோ இருக்கிறது. கனவு, கற்பனை, நம்பிக்கை, நிறைவு, சுகம், சோகம் என்று பல்வேறு விதமான உணர்வுகளின் பிறப்பிடமாகவும், பாதுகாப்புப் பெட்டகமாகவும் விளங்குகிறது மனம். இவற்றுள் நம்பிக்கை என்ற ஒன்று நடுவே இருக்கிறது. இதில் நம்புவது வேறு நம்பிக்கை வேறு என்று எத்தனை பேருக்குத் தெரியும்?எல்லோருமே பலவற்றை இயல்பாகவே யாரோ, எதுவோ பார்த்துக் கொள்ளும் என்கிற ஒட்டுமொத்த நம்பிக்கையில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதிகமான எதிர்பார்ப்பு, மனஇறுக்கம், படபடப்பு, ஏமாற்றம் எதுவுமில்லாமல் இயல்பாகவே பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.'உறங்குவது போலும் சாக்காடு' என்பார் வள்ளுவர். எனினும் துாங்கப் போகும்போது நாளை
நிச்சயம் விழிப்போம் என்கிற நம்பிக்கையோ, சந்தேகமோ நமக்கு வருவதில்லை.

பெரிய இலக்குகள்


வாழ்க்கையில் உயரவேண்டும், செல்வந்தனாக வேண்டும். செல்வாக்கு மிகுந்த பதவியில் உட்காரவேண்டும், சாதனையொன்றை நிகழ்த்த வேண்டும் போன்ற கனவோடும், இலக்கோடும் எல்லா நம்பிக்கைகளையும் தொடர்புபடுத்திக் கொள்ள முடியாது. வாழ்க்கை ஆயிரம் வாலா பட்டாசு போல பெரிய விஷயமாகவும் இருக்கலாம்; சின்னச் சின்ன சந்தோஷங்கள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் என்கிற காராபூந்தி துாவப்பட்டிருக்கிற சுவையான தயிர்வடையாகவும் இருக்கலாம். இரண்டுமே ஏற்கத் தக்கவைதான்.
ஓடி முதலில் வரவேண்டும், உழைத்து முன்னேற வேண்டும் என்று பெரிய இலக்குகளோடு கூடிய நம்பிக்கைகளைக் கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு சின்னச் சின்ன நம்பிக்கைகளுக்குள் போவோம்சின்ன நம்பிக்கைகள் நிபந்தனையற்றவை, காரணமற்றவை, விவாதத்திற்கு அப்பாற்பட்டவை. அதில் நமக்கு சந்தேகம் வந்துவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும். கணவன் மனைவியை நம்ப வேண்டும். மனைவி கணவனை நம்ப வேண்டும். கணவன் மனைவியை நம்புவது இயல்பாக இருக்கவேண்டிய நம்பிக்கையே தவிர, வாழ்க்கையில் பெரிதாக வரவேண்டும், வெற்றிபெற வேண்டும் என்பன போன்ற பெரிய நம்பிக்கை அல்ல.

மண வாழ்க்கை


மண வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது நம்பிக்கையில்தான் இருக்கிறது. சந்தேகம் என்கிற ஒரு கோடு கிழிக்கப்பட்டுவிட்டால் வாழ்க்கையில் ஒரு கேடு நிகழப் போகிறது என்று பொருள். சந்தேகம் உள்ளே வந்துவிட்டால் சந்தோஷம் வெளியேறிவிடும். கணவன் மனைவியருக்குள் பரஸ்பரமான நம்பிக்கை அற்றுப்போய்விட்டால் அது வாழ்க்கையல்ல நரகம். பிள்ளைகளைப் பெற்றோர்கள் நம்பவேண்டும். படிப்பு வேண்டும் என்றாலும் படிப்பு மட்டுமே வாழ்வதற்குப் போதாது. பிள்ளைகளுக்கான பட்டங்களை நாம் வாங்கிக் கொடுக்கலாம். ஆனால் வாழ்க்கைக்கான திட்டங்களை அவர்கள்தான் வகுத்துக் கொள்கிறார்கள்.பிள்ளைகளெல்லாம் நம்மை நம்பியிருக்கிறார்கள் என்பதோடு நம்மை நம்பவும் செய்கிறார்கள். நாம்தான் அவர்களை நம்புவதில்லை. நாம் சரியாக இருக்கிறோம். கவனமாக இருக்கிறோம். ஆனால் அவர்கள் அப்படி இல்லை என்று நம்மில் சிலர் நினைப்பதுண்டு.
யாராவது நம்பிள்ளைகளைப் பற்றிக் குறைகூறினாலோ தவறாகச் சொன்னாலோ, “என்பிள்ளை நீங்கள் சொல்வது போல அப்படியெல்லாம் நடந்து கொள்ள மாட்டான்” என்று எத்தனை பேர் நம்புகிறோம்?

பிள்ளைகளை நம்பினால்


பிள்ளைகளை நம்பத் தொடங்கினால் அவர்கள் நம்மை நம்புவார்கள். 'தாய் தந்தையர் நம்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் அந்த நம்பிக்கைக்குப் புறம்பாக நாம் நடந்து கொள்ளலாமா' என்று ஒரு நேரம் இல்லாவிட்டாலும் ஒரு நேரம் நிச்சயம் நினைப்பார்கள். பெண் குழந்தை வளர்ப்பில்கூட கவனம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு நம்பிக்கையும் இன்றியமையாதது.எல்லோரையும் நம்புவதைப்போல நண்பர்களையும் நம்ப வேண்டும். பணியாளர்களை நம்ப வேண்டும். கவனமாக இருப்பதில் தவறில்லை. ஏனெனில் திறந்து கிடக்கிற கதவுதான் திருடத் துாண்டுகிறது. சந்தேகப்படத் தொடங்கினால் எல்லோருமே சந்தேகத்துக்குரியவர்கள் ஆவதுபோல நாமும் அவர்களின் சந்தேகத்துக்கு உரியவராவோம்.

மனதிற்கு ஆறுதல்


இறைவன் இருக்கிறான் என்பது நம்பிக்கை என்றால் இல்லை என்பதும் நம்பிக்கைதான். இறைவன் குறித்த நம்பிக்கை 'எந்த தெய்வம் ஆனால் என்ன தெய்வம் தெய்வம்தான்' என்ற கண்ணதாசன் வரிகளை மனதிற் கொண்டால் மனதிற்கு ஒரு ஆறுதல் தருகிறது. தெய்வம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற பயம் வருகிறது. எல்லோரும் இறைவனை நம்புகிறோம்; ஆனால் இறைவனை மட்டுமே நம்பியிருக்கவில்லை.
கடவுள் மீதான நம்பிக்கை நம் கவலைகளைத் தீர்க்கிறது. யாரிடமும் சொல்ல முடியாத துயரங்களைக் கடவுளிடம் சொல்ல முடிகிறது. யாரிடமும் கேட்க முடியாத நிம்மதியைக் கடவுளிடம் கேட்க முடிகிறது என்பதுதான் கடவுள் நம்பிக்கையின் பயன்.பெரும்பாலான நமது நம்பிக்கைகள் வெறும் எண்ணமாக இருக்கிறதே தவிர நிகழும் என்கிற திண்ணமாக இருப்பதில்லை. அது மட்டுமல்ல இறையருள், இறைவன் செயல் என்றெல்லாம் நடக்கிற நிகழ்ச்சிகளுக்கு நம் வசதிக்கேற்ப கற்பனை செய்து கொள்கிறோம். “விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிக்க இருந்தேன். இறையருளால் வழியில் போக்குவரத்து நெரிசல். விமான நிலையம் போய்ச்சேரத் தாமதமாகி விமானத்தைத் தவறவிட்டதில் தப்பித்துக்கொண்டேன்” என்று நம்மில் எத்தனைப்பேர் ஆறுதல் அடைந்திருப்பார்கள்!
விபத்தில் இறந்து போனவர்கள் மட்டுமென்ன இறைவனுக்கு வேண்டாதவர்களா? இல்லை தப்பித்தவர்கள் மட்டுமென்ன இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களா?கடவுளைப்பற்றி இப்படி ஆயிரமாயிரம் கற்பனைகள், கற்பிதங்கள் இருக்க கடவுளே இல்லை என்றும் பலர் இருக்கிறார்கள். அவரவர்க்கான நம்பிக்கைகள் அவரவர்க்கான கற்பனையோடு வாழ்ந்து கொண்டும் வளர்ந்து கொண்டும்தான் இருக்கின்றன.
எதையும் நம்புவது

நம்பிக்கையால்


எப்படிப் பயன் நடக்குமென்று தெரியாது. ஆனால் எப்படியும் நடக்குமென்று நம்பலாம்.எதையும் இலகுவாக நம்புவது சிலரது இயல்பு. “நீ அழகாக இருக்கிறாய்” என்று சொன்னால் அதை நம்புகிறோமோ இல்லையோ சொல்கிறவன் மீது நமக்கொரு நம்பிக்கை வந்துவிடுகிறது. நம்பகமான கடை, நம்பகமான நிறுவனம், நம்பகமான மனிதர் என்று தம்மைப் பிறர் நம்பச்செய்யும் முயற்சிகளில்தான் இந்த வையம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
நம்புவதென்பது ஒரு எண்ணமாக இருக்கிறதே தவிர நம்பிக்கையாக இல்லை. இரண்டில் எதுவாயினும் அது பூரணமாகவும், முழுமையாகவும் இருக்க வேண்டும். அதுதான் நமது நிம்மதிக்கு உதவும். இவற்றோடு சந்தேகமும் சேர்ந்து பயணிக்கக்கூடாது.நம்புவது நம்மைச் சார்ந்தவர்கள் மீதான நமது எண்ணம். இந்த எண்ணம் வளர்ந்து திடநம்பிக்கையாகத் திகழவேண்டும். நம்புவதும், நம்பிக்கையும் மானுட மேன்மையின் அடையாளங்கள். நம்பத் தொடங்கி நம்பிக்கையை வளர்க்க நமக்கு நல்ல மனமும் வேண்டும், நல்ல குணமும் வேண்டும்.
நம்பிக்கை விதைகளை நாளும் நம் நெஞ்சங்களில் விதைப்போம். நாளை அது வளர்ந்து விரிந்த நிழலில் இளைப்பாறுவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...