Sunday, December 18, 2022

88 மாவட்ட செயலாளர்களுடன் 21-ந்தேதி ஆலோசனை: போட்டி பொதுக்குழுவுக்கு ஓ.பி.எஸ் ஏற்பாடு .

 அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. இதுவும் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பின்னடைவாகவே அமைந்திருந்தது. ஆனால் ஓ.பி.எஸ். தரப்பினரோ பொதுக்குழு கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டி அதற்கு எதிராக சட்ட போராட்டத்தையும் நடத்தி தனி அணியாகவே செயல்பட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆகியோரையும் ஓ.பி.எஸ். நியமித்துள்ளார். 88 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றே ஓ.பி.எஸ். தரப்பில் கோர்ட்டில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இன்னொரு தீர்ப்பும் வெளியானது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. வருகிற 4-ந்தேதி விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்ட சிக்கலை ஏற்படுத்தும் வகையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். தொடர்ந்து ஆலோசனை நடத்தியதுடன் தீவிரமாகவும் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓ.பி.எஸ். கூட்டியுள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் முன்னிலை நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு விசாரணை வருகிற 4-ந்தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஓ.பி.எஸ். கூட்டியுள்ள இந்த திடீர் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆலோசனைகளை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவு மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, 'நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த கூட்டம் இருக்கும். அடுத்தகட்டமாக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன என்று தெரிவித்தார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது தொடர்பாகவும், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று ஓ.பி.எஸ். தரப்பிலும் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக தகவல்களை விரைவில் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போதும் இந்த தகவல்களை ஓ.பி.எஸ். தரப்பினர் தெரிவிக்க உள்ளனர். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் சிக்கலை ஏற்படுத்த முடியும் என்பதே ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கணிப்பாக உள்ளது. இதற்காக அடுத்தடுத்து அதிரடி திட்டங்களை தீட்டி செயல்படவும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு ஓ.பி.எஸ். எதிர்ப்பு தெரிவித்து பதில் கடிதம் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் குஜராத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் ஓ.பி.எஸ். கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பி இருக்கும் நிலையில் தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு ஓ.பி.எஸ். ஏற்பாடு செய்துள்ளார். இதுவும் அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இதனால் 21-ந்தேதி ஓ.பி.எஸ். கூட்டியுள்ள நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...