Tuesday, December 13, 2022

"சூறாவளி"சுந்தரேசன்.

 ஒரு ஊரில் ஒருவன் இருந்தான். நிறைய பணம் சேர்த்தான். அவனுக்கு சம்பாதிக்க தெரியுமே தவிர செலவு பண்ணத் தெரியாது. மகா கஞ்சன். காசை கையில் எடுக்கவே மாட்டான். எடுத்தால் செலவு செய்ய வேண்டி இருக்குமே! அதனால் இப்படியே அவன் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தான். வயதாகிவிட்டது.

அவனுடைய மனைவி ஒரு நாள் இவ்வளவு நாளும் நீங்கள் என்னை எங்கேயுமே அழைத்துக்கொண்டு போனதில்லை. இப்போதாவது அழைத்துக் கொண்டு போக கூடாதா என்றாள்.
எங்கே போக வேண்டும் சொல்லு என்றான்.
காசிக்கு போக வேண்டும் கங்கையில் குளிக்க வேண்டும் என்றாள் அவள்.
அதற்கு ஏன் இவ்வளவு தூரம் செலவு செய்ய வேண்டும். நம்ம ஊரு ஆற்றிலேயே குளிக்கலாம். இதுவும் புண்ணிய நதி தான். இங்கே குளித்தால் அங்கே குளித்த பலன் கிடைத்துவிடும் என்றான். சரி என்று ரெண்டு பேரும் ஆற்றங்கரைக்கு போனார்கள்.
அன்றைக்கு ஏதோ விசேஷம் நிறைய பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள். கரையிலே சில புரோகிதர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். குளிப்பதற்கு முன் அவர்களிடம் உட்கார்ந்து ஏதோ மந்திரம் சொல்லுவார்கள். கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் இவன் ஆற்றங்கரையைவிட்டு கொஞ்ச தூரம் போனான். ஊரைவிட்டுத் தள்ளி வந்து விட்டான். அங்கே யாருமில்லை. அப்பாடா என்று சந்தோஷப்பட்டான்.குளிக்கலாம் என்று புறப்பட்டான்.
இந்த நேரம் கடவுள் பார்த்தார். இந்தக் கஞ்சனுக்கு ஏதாவது புத்தி புகட்டவேண்டும் என்று நினைத்தார். உடனே ஒரு புரோகிதர் மாதிரி உருவத்தை மாற்றிக் கொண்டு அந்த ஆள் முன்னால் வந்து நின்றார். இவனுக்கு அதிர்ச்சி இங்கே யாருமே இருக்க மாட்டார்கள் என்று நினைத்தால் இங்கேயும் ஒரு ஆள் வந்து விட்டான். என்ன செய்வது என்று யோசித்தான்.
புரோகிதர் உருவத்தில் இருந்த கடவுள் சொன்னார் இதோ பார் இன்றைக்கு விஷேட நாள் நீராடுவதற்கு முன்னாடி சங்கல்பம் பண்ண வேண்டும் என்றார்.
என்னிடம் பணம் எதுவும் இல்லை என்றான் அவன்.
பரவாயில்லை பிறகு கொடு வாங்கிக் கொள்கிறேன். ஆனால் ஒன்றும் எவ்வளவு கொடுப்பாய் என்பதை இப்போதே சொல்லிவிடு என்றார்.
இவன் அதிகம் யோசித்து பத்து பைசா தருகிறேன் என்றான். சரி என்று ஒத்துகொண்டு எல்லா கிரியைகளையும் செய்தார். அதன்பிறகு கணவனும் மனைவியும் ஆற்றில் குளித்தார்கள். கடவுள் போய்விட்டார்.
கொஞ்ச நாள் கழித்து அவன் வீட்டுக்கு கடனை வசூல் பண்ணுவதற்கு வந்தார். வாசலில் நின்று கொண்டிருந்த அவன் மனைவி விஷயத்தைச் சொன்னாள். அவன் யோசனை செய்தான். இப்போது வெளியில் போனால் அவனுக்கு பத்து காசு கொடுக்க வேண்டியிருக்கும். அதனால் எனக்கு காய்ச்சல் இன்னொரு சந்தர்ப்பத்தில் வந்து வாங்கிக் கொள்ளச் சொல் என்றான்.
அந்த அம்மா போய் சொன்னாள். இல்லை நான் அவரை உடனே பார்க்கவேண்டும் என்று ஆரம்பித்தார் இவர்.
அவள் மறுபடியும் உள்ளே ஓடி விஷயத்தைச் சொன்னாள். இதோ பாரு எனக்கு காய்ச்சல் வந்து நான் இறந்து விட்டதாகச் சொல் என்றான் அவன்.
புரோகிதர் அப்படி என்றால் ஒரு வழியாக இறுதிச் சடங்குகளை முடித்து விட்டுப் போய் விடுகிறேன் என்றார்.
உள்ளே இருந்தவன் யோசித்தான். அந்த ஆள் என்னை விடமாட்டான். போல் இருக்கின்றது. அதனால் ஒரு சவப்பெட்டியில் என்னை வைத்து தூக்கிக்கொண்டு மயானத்துக்கு போங்கள் பார்க்கலாம் என்றான். புரோகிதரும் விடுவதாக இல்லை. கூடவே நடந்து போனார் அங்கே இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு தீ வைக்கும் நேரம் இவன் அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தான்.
புரோகிதர் உருவத்தில் இருந்த கடவுள் சிரித்தார். தன் சுய உருவத்தை காட்டினார். அதன் பிறகு அவனைக் கூப்பிட்டார். இதோபார் ஏன் இப்படி ஓடுகிறாய் ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேள் தருகிறேன் என்றார்.
அவன் யோசனை செய்தான். யோசனை செய்துவிட்டு ஒரே ஒரு வரம் தான் உங்களிடம் கேட்க வேண்டும் என்றான்.
என்ன வரம் வேண்டும் கேள் என்றார் கடவுள்.
அந்த பத்து பைசா தட்சணையை தள்ளுபடி செய்து விடுங்கள் அது போதும் என்றான். கடவுளும் சரி என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
இது சுவாமி சிவானந்தர் சொன்ன கதை.
பல செல்வந்தர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். தாங்களும் அனுபவிக்க மாட்டார்கள். அடுத்தவர்களுக்கும் கொடுக்க மாட்டார்கள். இது மாதிரியான கஞ்சர்களுக்கு இவ்வுலகமும் இல்லை. எவ்வுலகமும் இல்லை என்கிறார் சுவாமி சிவானந்தர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...