Friday, February 10, 2023

உங்களுக்கு இன்று நான் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று சொல்கிறேன்.

அப்பாவாலேயே அனாதை என்று கூறி விடுதியில் விடப்பட்டவர், மணமாகி ரூ. 5-க்கு வயல்வேலை செய்தவர் இன்று அமெரிக்க சாஃப்ட்வேர் கம்பெனி முதலாளி!
ஆர்வமும் விடாமுயற்சியும் சிகரத்தைத் தொட்டு விட வேண்டும் என்ற உந்துதலும் இருந்தால் எதையும் சாதித்துவிட முடியும். அதற்கு உதாரணமாக விளங்குபவர்தான் அனிலா ஜோதி ரெட்டி! அனாதை இல்லத்தில் தங்கிப் படித்தவர், ரூ. 5 -க்கு வயல் வேலைக்குச் சென்றவர், இன்று பள்ளிப் பிள்ளைகள் படிக்கும் பாடத்தில் இடம் பிடித்திருக்கும் முக்கிய நபராக மாறியிருப்பதோடு, அனாதைக் குழந்தைகளைத் தேடிப்போய் உதவுபவராக விளங்கும் அதிசய ஆனால் உண்மைக் கதை தான் இது...
1970 ஆம் ஆண்டு அப்போதையஆந்திர மாநிலமாக இருந்த, இப்போதைய தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல்லில் உள்ள ஒரு கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் அனிலா ஜோதி ரெட்டி. தன்னுடன் பிறந்த நான்கு பேரில் ஜோதி இரண்டாவது பெண். வீட்டு வறுமையால் தனது இரண்டு பெண் பிள்ளைகளைத் தாயில்லாப் பிள்ளைகள் என்று பொய் சொல்லி அனாதை இல்லத்தில் சேர்த்தார் ஜோதியின் அப்பா.
ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு முடிக்கும்வரை அனாதை இல்லத்தில் தான் வசித்தார் ஜோதி. அது மிகவும் கடுமையான வாழ்க்கை. நாள் முழுக்க அழுது கொண்டிருந்த அவரது அக்காவால் சமாளித்து இருக்க முடியவில்லை. எனவே ஜோதியின் அப்பா அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்
ஆனால் ஜோதி அங்கேயே இருக்க வேண்டியதாகி விட்டது. அக்காவும் உடன் இல்லாததால் அம்மா மீதான ஏக்கம் அதிகமாகி விட்டது. ஒருவழியாக அனாதை இல்லத்தை அனுசரித்துக் கொண்டார் ஜோதி. விடுமுறை நாட்களில் கூட இல்ல மேற்பார்வையாளரின் வீட்டில் வேலை செய்து, அங்கேயே உண்டு உறங்கியிருக்கிறார் ஜோதி. பத்தாம் வகுப்பு முடித்த உடனேயே வீட்டிற்கு அழைத்துக் கொள்ளப்பட்டு, கையோடு திருமணம் செய்து கொள்ளவும் வற்புறுத்தப்பட்டார்.
வயதுக்கு வந்த ஓராண்டிலேயே பதினாறாம் வயதில், அவரைக் காட்டிலும் பத்து வயது கூடுதலான பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி அடையாத விவசாயி கணவனுக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட்டார் ஜோதி. நாள் முழுதும் வறுத்தெடுக்கும் தெலுங்கானா வெயிலில் ஐந்து ரூபாய் சம்பளத்தில் நெல் வயலில் கூலி வேலை செய்த ஜோதி 18 வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார்.
வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு வயலை நோக்கி ஓடியாக வேண்டும். பொழுது சாய்ந்த பின் வீடு திரும்பியதும் இரவுச் சாப்பாடு சமைக்க விறகடுப்பில் புகைய வேண்டும். ஸ்டவ் கூட வாங்க முடியாத வறுமையானச் சூழல்.
1989 ஆம் வருடம், ஜோதியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நேரு யுவ கேந்திரா சார்பில் கிராம இளைஞர்களுக்காக வகுப்புகள் எடுக்கப்பட்டன. அந்த வகுப்புகளில் பாடம் சொல்லிக் கொடுக்க, படித்தவர்கள் வேறு யாரும் இல்லாததால் ஜோதி அழைக்கப்பட்டார். அந்த சம்பளமும் குடும்பத்தைப் பாதுகாக்கப் போதாததால், இரவு நேரங்களில் தையல் வேலையில் ஈடுப்பட்டார். தட்டச்சும் கற்றுக் கொண்டார். பார்த்துக் கொண்டிருந்த வேலையில் அவர் காட்டிய உத்வேகமும், வித்தியாசமான முயற்சிகளும் அவரை யுவ கேந்திர மண்டல மேற்பார்வையாளராக உயர்த்தியது.
அதன் பிறகு பல வாரங்கள் மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு வேலை நிமித்தமாக அலைந்த போதுதான், கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டார். சிரத்தை எடுத்துத் தானும் மேற்கொண்டு படித்தார். திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் முது நிலை பட்டப் படிப்பு வரை படித்து, அரசு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தன் வீட்டிலிருந்து, வேலைப் பார்த்த பள்ளிக்குச் செல்ல இரண்டு மணி நேரம் ஆகும். அந்த நேரங்களில் கூட அயராமல், தான் தைத்த துணிகளை பயணம் செய்யும் பேருந்துகளில் விற்றார். தனக்குக் கிடைக்கும் கொஞ்ச ஓய்வு நேரத்தில் கூட, இப்படி வாழ்வில் அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேற வாய்ப்பளிக்கும் வேலைகளில் ஈடுபட்டார்.
அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவு ஜோதிக்கு வந்தது. இதற்குக் காரணம், அங்கிருந்து வந்த அவரின் உறவினர் ஒருவர். அங்கு சென்றால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பினார். இதனால் கணினி கற்க ஆரம்பித்தார். கடவுச்சீட்டு, விசாவுக்குப் பணம் சேர்க்கத் துவங்கினார். ஒரு வழியாகப் பணம் சேர்த்த பின், தன் இரு மகள்களையும் விடுதியில் விட்டுவிட்டு அமெரிக்கா சென்றார். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்கிற ஆசையோடு பறந்து சென்ற ஜோதியை, அமெரிக்கா உடனடியாக வரவேற்கவில்லை. அங்கு சென்ற பின் சரியான வேலையும், தங்க ஒரு இடமும் கூட கிடைக்காமல் அலைந்தார்.
ஒரு வழியாக மாதம் 350 டாலர் கட்டணத்தில் பணம் செலுத்தும் விருந்தாளியாகத் தங்குவதற்கு ஒரு குஜராத்திக் குடும்பத்தைக் கண்டுபிடித்தார். அப்போது அவரிடம் செல்பேசி இல்லை. தினமும் வேலையிடத்திற்கு மூன்று மைல்கள் தூரம் நடந்தே சென்று வருவார். மூவி டைம் என்கிற வீடியோ கடையில் ஒரு விற்பனைப் பெண்ணாக முதலில் பணியாற்றினார். பிறகு தெற்கு கலிபோர்னியாவில் அரங்கச் சேவைப் பெண்ணாக, அடுத்து போனிக்ஸ் நிறுவனத்தில் குழந்தைத் தாதியாக, அரிசோனாவில் எரிவாயு நிலையத்தில் உதவியாளராக, இறுதியாக வெர்ஜீனியாவில் மென்பொருள் ஆளெடுப்பாளாராக வேலைக்குச் சேர்ந்தார்.
இறுதியில் விசா பிரச்னையால் அந்த வேலையையும் விட வேண்டி வந்தது. விசா பிரச்னையால், தான் சந்தித்த மன வேதனைகளை வேறு எவரும் அனுபவிக்கக் கூடாது என்று விரும்பினார். அங்கு தோன்றியதுதான் கம்பெனி தொடங்கும் கனவு. அந்தத் துறையில் மேற்கொண்டு அனுபவம் பெற்றார். பல நாட்கள் மிகக் கடினமாக உழைத்தார். இன்று ஜோதி ரெட்டி, அரிசோனாவில் இயங்கி வரும் கீ சாப்ட்வேர் சொல்யூஷன் நிறுவனத்தின் இயக்குனர்!
ஒரே நாளில் நடந்த அற்புதமல்ல இந்த சாதனை. இது, பல வருட இடைவிடாத போராட்டமும், வாழ்க்கையை வாழ்ந்து தான் பார்ப்போமே என்று உத்வேகம் கொடுக்கும் துணிச்சலும் ஈன்ற வெற்றிக் கனி.
பல கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனத்தின் இயக்குனர் ஜோதி, இன்றும் இந்தியா வரும்போதெல்லாம் பல அனாதை இல்லங்களுக்கும், மகளிர் கல்லூரிகளுக்கும் சென்று உரையாற்றுகிறார். கடும் வெயிலில் கூட வெறும் கால்களோடு அன்று நடந்த ஜோதி, இன்று அறை முழுக்க அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காலணிகளில் எதை அணிவது என யோசிக்க பத்து நிமிடம் ஆகும் அளவு உயர்ந்திருக்கிறார்.
ஒரு காலத்தில் ஒரு தட்டு நிறைய உணவைத் தன் கண்களால் பார்க்க மாட்டோமா என்று ஏங்கிய ஜோதி, இன்று பல ஆதரவற்ற மற்றும் அனாதை இல்லங்களின் பசியைத் தீர்க்க உதவுகிறார். பண உதவியை யார் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் தங்கள் நேரத்தை ஒதுக்கி ஆதரவற்ற பிள்ளைகளோடு செலவழிக்க முடிவதே சிறந்த தானம் என்பது இவர் கருத்து. அதனால் அடிக்கடி இந்தியா வந்து தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் இயலாதவர்களுக்குச் செய்து வருகிறார் ஜோதி ரெட்டி.
‘’நான் வறுமையான குடும்பத்தில் பிறந்தேன். வறுமைக்கே வாழ்க்கைப் பட்டேன். ஆனாலும் வறுமையிலேயே இருந்து விட முடியாது என்னால்’’ உறுதியான குரலில் கூறுகிறார் ஜோதி. அன்று தன் வீட்டுப் பிளாஸ்டிக் டப்பாக்கள் நான்கில் அரிசியும், பருப்பும் நிறைத்து வைத்தாலே போதும் என்றிருந்தது அவருக்கு. ‘’என் பிள்ளைகளுக்கு வயிறார உணவளிப்பதற்கும் மேலாக ஏதாவது செய்தாக வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. நான் பட்ட கஷ்டங்களை என் பிள்ளைகள் படக்கூடாது.பதினெட்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயானேன். அவர்களுக்குப் பொம்மை வாங்க, மருந்து வாங்க என்னிடம் போதிய பணம் இருந்ததில்லை’’ பள்ளியில் சேர்க்க வேண்டிய நேரத்தில் தேர்ந்தெடுத்தது தெலுங்கு வழிக் கல்வி. ஏனென்றால் அதில் தான் மாதக் கட்டணம் 25 ரூபாய். அப்போது ஆங்கில வழிக் கல்விக் கட்டணம் ரூபாய் 50. "அந்த ஐம்பது ரூபாயில் எனது இரண்டு பெண் குழந்தைகளும் படித்து விடுவார்கள் என்பதால் தெலுங்கு வழிக் கல்வியைத் தேர்வு செய்தேன்’’.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி கட்டாயமாக இந்தியா வந்து விடுவார் ஜோதி. அன்று அவரது பிறந்த நாள். அந்தநாளை வாரங்கல்லில் உள்ள வெவ்வேறு அனாதை இல்லக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார். மனநலம் பாதிப்புற்ற 220 குழந்தைகளைத் தன் பொறுப்பில் ஏற்று அந்த இல்லத்திற்கு நன்கொடை அளித்து வருவதாக ஆர்வமுடன் குறிப்பிடுகிறார்.
கார் ஓட்டுவதில் ஜோதிக்கு மிகப்பெரிய ஆர்வம். அது அமெரிக்கா போனால்தான் சாத்தியமாகும் என்பது அவரது நம்பிக்கை. ‘’வீட்டில் கடுமையான கட்டுப்பாடுகள். ஆனால் ஒரே ஒரு நல்ல அம்சம் எனது இரண்டு குழந்தைகளோடு வாழ்க்கையுடன் போராடும் பொறுப்பை கணவர் என் வசம் விட்டு விட்டார். என் மகள்கள் என்னைப் போலவே கடுமையான உழைப்பாளிகள். கொஞ்சம் கூட நேரத்தை வீணாக்க மாட்டார்கள்’’ சிரித்தபடியே கூறுகிறார் ஜோதி. அவரது இரண்டு பெண்களும் மென் பொறியாளர்கள். இருவருமே திருமணம் முடித்து அமெரிக்காவில் வாழ்கிறார்கள்.
ஜோதி அமெரிக்காவில் ஆறு வீடுகளும், இந்தியாவில் இரண்டு வீடுகளும் வாங்கியிருக்கிறார். ஆம் அவரது கார் ஓட்டும் கனவும் நிஜமாகி விட்டது. ஸ்போர்ட்ஸ் கருப்புக் கண்ணாடி அணிந்துகொண்டு தலைமுடியைத் தளர்வாக விட்டபடி மெர்சிடீஸ் பென்ஸ் காரை ஓட்டிச் செல்கிறார்.
காகாதியா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு இரண்டாம் நிலை ஆங்கிலப் பாடத்தில் ஜோதியைப் பற்றிய பாடம் இடம் பெறுகிற அளவிற்கு இன்று ஜோதி உயர்ந்துள்ளார்.
‘’நம்ப முடியுமா உங்களால். ஒரு காலத்தில் இதே பல்கலைக் கழகத்தில் எனக்கொரு வேலை கேட்டுக் கெஞ்சினேன். மறுத்து விட்டார்கள். இன்றைக்குக் கிராமத்துப் பிள்ளைகள் நிறையப்பேர் என்னைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாழும் மனுசி யார் என்பதைக் காண விரும்புகிறார்கள்’’
கீழிருந்து மேல் நோக்கிப் போவது முக்கியமில்லை; ஆனால் மேலே போன பின்பும் கீழ்நோக்கிப் பார்வையைச் செலுத்துபவர்களையே, உலகம் சரித்திரமாக்கி, மற்றவர்களுக்குப் பாடம் ஆக்கிப் படிக்க வைக்கும்!
May be an image of 5 people and text
All reacti

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...