Wednesday, February 8, 2023

நீதிதேவன்_மயங்கவில்லை.

 நீதித்துறை வரலாற்றில் நீதிமன்றங்கள் எத்தனையோ விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கும். சிக்கலான, முடிவெடுக்க இயலாத எத்தனையோ ப்ரச்னைகளை கண்டிருக்கும். ஆனால், இது ஒரு விசித்திரமான வழக்கு..

"சட்டம் ஒரு இருட்டறை..அதில் வழக்கறிஞர்களின் வாதம் தான் ஒளிவிளக்கு.." என்பார்கள்.
ஆனால், சட்டத்தை பாதுகாக்க வேண்டிய வழக்கறிஞர்களும், இருட்டறையில் விளக்கைத் தேடிய வழக்கு இது.
07/02/2023.. செவ்வாய்க்கிழமையன்று உச்ச நீதி மன்றம் ஒரு பரபரப்பான நிலையில் கூடியது.
இது போல் நாட்டின் முக்கிய விஷயங்களுக்காகக் கூட இப்படி கூடியிருக்குமா என்பதைக் கூற முடியாது.
வழக்கு என்னவென்றால்,
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட,
மதிப்பிற்குரிய விக்டோரியா கௌரி என்ற பெண் வழக்கறிஞருக்கு , எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் , 3 பேர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
வழக்கின் காரணம், அவர் , சிறுபான்மையினருக்கு எதிராக கடுமையான கருத்துக்களைக் கூறிய தாகக் குற்றம் சாட்டி, அவரை , உயர்நீதி மன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது,
அவர் சற்றும் தகுதியற்றவர் என்று வழக்கு.
இது திங்களன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டு, செவ்வாய் காலை 09.15 மணிக்கு தீர்ப்பு அளிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், மேற்படி விக்டோரியா கௌரியோடு சேர்த்து மொத்தம் 5 பேர் காலை செவ்வாயன்று காலை 10.35 மணிக்கு பதவியேற்கவிருந்தனர். இது ஜனாதிபதி அறிவிப்பு.
.
காலை 09.15 மணிக்குக் கூடிய உச்ச நீதிமன்றம், 10.30 மணிக்கு வழக்கு இரண்டு நீதிபதிகளால் விசாரிக்கப் படும் என அறிவித்தது.
10.35க்கு பதவிப் பிரமாணம். 10.30க்கு வழக்கு விசாரணை.
இதில் வழக்கு , சரியாக காலை 10.30 க்கு ஆரம்பித்தாலுமே சம்பந்தப்பட்ட வழக்கை முறையிட்டு , அதை நீதிபதிகள் கேட்டு, பிரதிவாதி தரப்பை கேட்க அவகாசம் தேவை.
இது ஏதோ இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பைனலில், கடைசி ஓவரில் , 20 ரன் இந்தியா எடுக்க வேண்டும். அதில் ஒரு பந்து, ரன் இல்லை, என்பது போல் ஒரு விறுவிறுப்பான சூழல்.
தொலைக் காட்சிகளில் இது பற்றிய விவாதங்கள் அனல் பறந்தன.
சரியாக 10.30க்குத் துவங்கிய உச்சநீதிமன்றம், மதிப்பிற்குரிய நீதிபதிகள் சஞ்ஜீவ் கன்னா, BR கவாய் இருவரும் வழக்கை விசாரித்து, "இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது" என்று கூறி தள்ளுபடி செய்தது.
அதுபற்றிய விளக்கங்களைப் பிறகு தருவதாகக் கூறியது. அதையடுத்து சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) அவர்களால் விக்டோரியா கௌரி உட்பட ஐந்து பேருக்கு பதவிப் பிரமாணம் செயுது வைத்தார்.
இந்த நிலையில், சட்ட வல்லுனர்கள், இந்த வழக்கு பற்றி கூறிய கருத்துக்களைப் பார்ப்போம்.
உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை, உச்சநீதிமன்ற கொலீஜியம் என்ற அமைப்புதான் தேர்ந்தெடுத்து, முடிவு செய்து, அரசின் நியமன உத்தரவுக்கு அனுப்பி வைக்கிறது. அதை மத்திய அரசு, ஜனாதிபதிக்கு அனுப்பி, அங்கீகரித்து, அரசிதழில் அறிவிக்கிறது.
ஆக, கொலீஜியம் அமைப்பால் தேர்ந்தெடுத்து , நீதிபதியாக ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டு, சில நாட்களில் பதவியேற்க இருப்பவர்களை இப்படி உயர்நீதிமன்ற
வழக்கறிஞர்களே, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதியலாமா என்பது ஒரு கேள்வி.
அடுத்ததாக, கொலீஜியத்தின் முடிவுகளை மத்திய அரசு கூட மாற்ற முடியாது.
அதை அப்படியே ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து, அனுப்புவது தான் இயலும். அப்படிப்பட்ட அதிகாரம் படைத்த கொலீஜியத்தின் முடிவை,
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளே கேள்வி கேட்கவோ, ரத்து செய்யவோ இயலாது என்பதும் நிதர்சனம்.
.
ஒரு வேளை, நீதிபதிகள், வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதியை நீக்க உத்தரவிட்டாலும், ஒரு முறை, ஜனாதிபதியால் நீதிபதியாக அறிவிக்கப்பட்டவரை, சாதாரணமாக நீக்கிவிட முடியாது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே, பெரும்பான்மையோடு தீர்மானம் நிறைவேற்றி Impeachment, கொண்டு வந்து, அதை ஜனாதிபதிக்கு அனுப்பி தான் நீக்க இயலும் எனக் கூறுகிறார்கள்.
..
ஒரு இடைக்காலத் தீர்ப்பாக, அவரை பதவியேற்க அனுமதித்து விட்டு,
மறு அறிவிப்பு வரும் வரை, சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் , அவருக்கு எந்த வழக்குகளையும் விசாரணைக்கு ஒதுக்கக் கூடாது எனக் கூறலாம். அப்படி ஒரு நிலைப்பாடும் தாற்காலிகமானது தான்.
எப்படியானாலும், மத்திய அரசு எந்த உத்தரவும் இட இயலாது. உச்ச நீதி மன்றம் தான் இந்த விஷயங்களில் சர்வ வல்லமை படைத்த அமைப்பு.
.
இதையெல்லாம் தெரிந்திருந்தும்,
வேண்டுமென்றே, வழக்கறிஞர்களே
இப்படி ஒரு வழக்கை பதிந்தது,
நீதி தேவனின் விழிப்புணர்வை சீண்டிப் பார்ப்பதாகவே தோன்றுகிறது.
நல்லவேளையாக, தீர்ப்புக்கு முன் கருத்திட்ட நீதிபதி திரு கவாய் அவர்கள், "அரசியல் கட்சியைச் சார்ந்து இருப்பவர்கள் நீதிபதி ஆகக் கூடாது என்று எந்தத் தடையும் இல்லை. நானே கூட ஆரம்ப காலத்தில் ஒரு கட்சி சார்ந்தவன் தான்" எனக் கூறியதோடு, சம்பந்தப்பட்ட நீதிபதி நியமனத்திற்கு முன், கொலீஜியத்தால் இவை பற்றி எல்லாம் கேட்டறிந்த பிறகே நியமிக்கிறார்கள், பல நீதிபதிகள் பதவிக்கு வரும் முன்பாக,
கட்சியில் MP யாகக் கூட இருந்ததுண்டு , என்றும் கருத்திட்டனர். மதிப்பிற்குரிய சந்துரு என்ற ஓய்வு பெற்ற நீதிபதி கூட கம்யூனிச, திராவிடசித்தாந்த ஆதரவு , சிறுபான்மையினர் ஆதரவு , நிலைப்பாடு கொண்டிருந்தவர் தான்.
சம்பந்தப்பட்ட விக்டோரியா கௌரி அவர்கள் , பாஜகவின் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்.
இவரது விண்ணப்பத்தில் பாஜகவைச் சேர்ந்த 22 பேருக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், பரிந்துரைத்து கையெழுத்திட்டுள்ளனர் என்பதும் கண்கூடாக தகவல்களில் உள்ளன.
..
ஆக, வழக்கறிஞராக இருக்கும் போது , சிறுபான்மையினருக்கு எதிரான கருத்தைக் கூறினார் என்பதற்காக, அவரை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று கோர முடியாது எனக் கூறி தீர்ப்பு அளித்தனர்.
இதற்கு முன்பும் சில உயர்நீதிமன்ற, நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்ட போது, திரு கர்ணன் என்பவர் தலைமறைவாக இருந்ததும், சில அமைப்புகள் அவர் பிற்படுத்தப்பட்டவர் என்று அவரை காப்பாற்றப் போராடியதுண்டு .
கடைசியில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது .
ஒருவர், நீதிபதியான பின், தவறான தீர்ப்பு கூறினாலும், அதைவிட மேல்நிலை கோர்ட்டில் , முறையிட வாய்ப்புள்ளது. தீர்ப்பு வேண்டுமென்றே ,உள்நோக்கத்துடன் கூறப்பட்டது எனத் தெரிந்தாலும்,
உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிபதி மேல் நடவடிக்கை எடுக்க வழி வகை உள்ளது. இவ்வாறு இருக்கையில், உள்நோக்கத்தோடு,
ஒருவரை நீதிபதியாக அனுமதிக்கக் கூடாது என்று வழக்கு, பதிந்தது தவறான முன்னுதாரணம்.
RS பாரதி கூறிய மாதிரியான நீதிபதிகள், தமிழகத்தில் விசாரித்திருந்தால் தீர்ப்பு வேறு மாதிரி இருந்திருக்கக் கூடும்.
நல்வாய்ப்பாக, கனம் உச்சநீதி மன்ற நீதிபதிகள் இருவரும் சரியான தீர்ப்பு தந்து,
நீதிதேவன் உறங்கவில்லை என்று நிரூபித்துவிட்டனர்.
சத்யமேவ ஜயதே...
.
சட்டமேவ ஜயதே...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...