Wednesday, February 22, 2023

" அப்பா " என்றால் அன்பு மட்டுமல்ல அது தான் வாழ்க்கையின் அடித்தளம் !!

 "இந்தாம்மா என் முதல் மாச சம்பளம். முப்பதாயிரம் ரூபா. அப்பா எப்பவாச்சும் இப்படி முப்பதாயிரம் சம்பாரிச்சிருப்பாரா ... எனக்கு இன்னும் கூட பதவியும் சம்பளமும் கூடிக்கிட்டே போகும் "

இதுவரை மகன் இப்படி பேசி அந்தத் தாய் கேட்டதே இல்லை. வீட்டில் அதிகம் பேசவே மாட்டான். அப்பாவிடம் சுத்தமாக பேசுவதே இல்லை. அப்படிப்பட்டவன் வாயிலிருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள் ... மனம் துணுக்குற்றாள் அம்மா.
"என்னடா வார்த்தைலாம் தடிப்பா வருது... அதுவும் அப்பாவைப் பத்தி ரொம்ப ஏளனமா பேசுறே "
"அவர் மட்டும் என்னை ஏளனமா நடத்தலயா ... காலேஜ் போன புதுசுல ஒரு போன் வாங்கித் தாங்கப்பானு கேட்டதுக்கு , இழுத்தடிச்சு ஒரு வருசம் கழிச்சுதானே வாங்கித் தந்தாரு"
"அப்பாவோட வருமானம் அவ்ளோதானேடா இருந்துச்சு . அதுவுமில்லாமே போன் வாங்கித் தந்தா பிள்ளை படிப்பு கெட்டுருமோனு நினைச்சிருப்பார். அதே மாதிரிதானே நீயும் மூணாவது செமஸ்டர்ல மார்க் குறைவா எடுத்தே "
"மார்க் குறைவா எடுத்தா, பொறுமையா சொல்லலாம்ல ... எதுக்கு போனை பிடுங்கி உன்கைல குடுத்து 'பத்திரமா வச்சிரு. அவன் காலேஜ் முடிச்சப்புறம் குடுத்தாப் போதும்னு சொன்னாராம் "
"அப்பவாச்சும் நீ படிப்புல கவனம் செலுத்துவேனுதான்டா மகனே "
"நான்தான் இனிமே ஒழுங்கா படிக்கிறேன்பானு சொன்னேன்ல ... அப்புறமும் எதுக்கு காலேஜ் வந்து என் கிளாஸ் டீச்சர்ஸ்கிட்ட விசாரிச்சாரு ... எனக்கு எவ்ளோ கேவலமா இருந்துச்சு தெரியுமா "
"எப்பவும் நான் உன்னை கவனிச்சிட்டே இருக்கேன்கிற பயத்தை உனக்கு ஏற்படுத்தறதுக்காகத்தான் அப்பப்போ காலேஜ் வந்துபோறேன்னு அவரே சொல்லிருக்கார் "
"அதெல்லாம் கூட பரவால்லமா ... ஆனா மூணாவது செமஸ்டர்ல பெயில் கூட ஆகல ... பர்சன்டேஜ் குறைஞ்சிருச்சுனு , நீ, தங்கச்சி, உன் அண்ணன் பசங்க எல்லாரும் வீட்ல இருக்கும் போதே , சேர்ல உக்காந்திருந்த என்னை கீழே இழுத்துப் போட்டு நங்நங்னு மிதிச்சாரே ... எனக்கு எவ்ளோ அவமானமா இருந்திருக்கும் ... அன்னைக்கு சபதம் எடுத்தேன். இவர் முன்னால ஒரு கௌரவமான மனுசனா வாழ்ந்து காட்டனும்னு. காலேஜ்ல நடந்த கேம்பஸ் இன்டர்வியூல பாஸ் பண்ணுன ரெண்டே பேர்ல நானும் ஒருத்தனா செலக்ட் ஆகி இதோ முதல் மாச சம்பளமும் வாங்கிட்டு வந்துட்டேன். இந்த பணத்தைக் கொண்டு போய் அவர்ட்ட காட்டி , இனிமேலாவது யாரையும் ஏளனமா நினைக்காதீங்கனு சொல்லு "
"இப்போ நீ பேசும் போது இடையில ஏதோ சொன்னியே ... சபதம் எடுத்தேன்னு ... அந்த வைராக்கியத்தை உனக்குள்ள ஏற்படுத்தனும்னுதான்டா அவர் தன்னோட பாசத்தை எல்லாம் மறைச்சு கண்டிப்பா நடந்துக்கிட்டார். அம்மாக்கள் கூட , பிள்ளைகள் நம்மள நாளைக்கு காப்பாத்தனுமேனு நப்பாசையோடதான் இருப்பாங்க. அப்பாக்கள் அப்படி இல்லடா ... நம்மள விட நம்ம பிள்ளைக நல்லாருந்தா போதும்னு நினைப்பாங்க. அம்மா உன் உடம்பைத்தான் வளர்ப்பா. அப்பாதான் உன் வாழ்க்கைய பத்தி நினைப்பார் "
"நீ சரியான ஜால்ரா ... எப்பப் பாரு அவருக்கே ஒத்து ஊதுவே "
"இந்த வார்த்தைய ஒரு பதினைஞ்சு வருசம் கழிச்சு சொல்றியானு பார்ப்போம் "
"ஏன் ... சொல்வேனே ... உன் வீட்டுக்காரரை நீதான் மெச்சிக்கனும் "
"உன்னால சொல்ல முடியாது ... ஏன்னா அப்போ நீயும் சில பிள்ளைகளுக்கு அப்பா ஆகி இருப்பே. பிள்ளைகள் குறித்தான அப்பாக்களின் எண்ணங்களை புரிஞ்சிருப்பே "
அப்போது அப்பா வீட்டிற்குள் நுழைகிறார்.
"பாரு. அப்பாவே வந்துட்டாரு. இந்தப் பணத்தை அவர்கிட்ட நீயே குடு. என்ன சொல்றாருனு பாரு "
"என்ன சொல்லப் போறாரு ... மாசா மாசம் இதே மாதிரி நயாபைசா குறையாம கொண்டு வந்து குடுக்கனும்னு கட்டளை போடப் போறாரு "
அப்பா அருகில் வந்திருந்தார்.
"அப்பா "
இவனா அழைக்கிறான் என அதிசயமாய் ஏறிட்டுப் பார்த்தார். அவர் கண்களில் சிறு மின்னல் கீற்று. முகத்தில் சில வினாடி பிரகாசம்.
"ம் ... "
"இந்தாங்க முதல் மாச சம்பளம் "
"எவ்ளோ "
"முப்பதாயிரம். டிரெயினிங் பீரியட் ரெண்டு வருசம் முடிஞ்சா லட்சத்துக்கு மேல வரும் "
"நல்லது. அதை நீயே வச்சுக்கோ "
"ஏன்ப்பா அப்படி சொல்றீங்க "
"ஆமா தம்பி. நான் கூட சின்னச் சின்ன அநாவசிய செலவு செய்வேன். நீ ரொம்ப சிக்கனமா இருக்குறத கவனிச்சிருக்கேன். அப்பா உங்களுக்கு எந்த சொத்தும் சேர்த்து வைக்கல. படிக்க வச்சுட்டேன். அதுதான் நான் உனக்கு தர்ற சொத்து. உன் பணத்தை நீயே வச்சுக்கிட்டு , நீ என்னென்ன ஆசைப்பட்டியோ அதுகளுக்கு செலவு பண்ணிக்கோ . என் உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் கஞ்சி ஊத்துவேன். அதுக்கப்புறம் நீ அவங்கள பொறுப்பா பாத்துக்கப்பா "
"நான் பாத்துக்கிறேன். நீங்க கண் கலங்காதீங்கப்பா "
"நான் அதுக்கு கண் கலங்கல. ரொம்ப வருசங்களுக்கு அப்புறம் நீ என்னை அப்பானு கூப்பிட்டு பேசுனியே ... அதாம்பா கண் கலகிருச்சு "
மகன் கண்கள் கலங்க அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டான் . "அப்பா இத்தனை நாளா உங்களை தப்பாவே புரிஞ்சுட்டேனேப்பா "
மகன் பற்றியிருந்த அப்பாவின் கைகளில் வயோதிகத்தின் சிறு நடுக்கம். மகனின் கைகளிலோ குற்றம் இழைத்த பெரு நடுக்கம்.
அப்பாவின் விழிகளில் கசிந்த கண்ணீர் ஆனந்தக் கரையாடிக் கொண்டிருந்தது. மகனின் கண்களில் வழிந்த கண்ணீர் குற்ற உணர்வை கரைத்தோடிக் கொண்டிருந்தது...!!
May be an illustration of 2 people
All re

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...