Friday, February 10, 2023

ஈரோடு கிழக்கு - என் பார்வையில்.

 

ஈரோடு, 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் வசித்த ஊர். ஆகவே, எனக்கு இவ்வூரைப் பற்றி நேரடி அனுபவம் இருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி, பெரும்பாலும் (80%-க்கும் மேல்) நகரப் பகுதி (Urban Area) ஆகும்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 2.26 லட்சம் என்கிறார்கள். அவர்களில், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை சற்றே கூடுதலாக இருக்கிறது.

இத்தொகுதியில், செங்குந்த முதலியார் (நெசவாளர்) சமூகத்தினரும், கவுண்டர் (கொங்கு வேளாளர்) சமூகத்தினரும் அதிகம் வசிக்கிறார்கள். இந்த இருவரில், செங்குந்த முதலியார்கள் சற்றே அதிக அளவில் இருப்பதாக அறிகிறேன். இருவரும் சேர்ந்து, 80% பேர் இருப்பார்கள்.

கவுண்டர்களில் அதிகம் பேர் வேளாண்மையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனாலும், காவிரி, பவானி ஆறுகள் பாயும் வளமான பிரதேசம் என்பதால், அவர்கள் செல்வச் செழிப்பு மிகுந்தவர்கள்.

செங்குந்த முதலியார்களைப் பொறுத்தவரை, அவர்கள் சிறு, குறு தொழிற்சாலைகள் (SSI Units) நடத்துவதிலும், ஜவுளி வர்த்தகத்திலும், முன்னணி வகிக்கிறார்கள். ஓர் உதாரணத்துக்கு, 'சென்னை சில்க்ஸ்'-ஐக் கூறலாம்.

சில பத்திரிகைகள்/ஊடகங்கள் சொல்வது போல, இங்கே வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 45,000 முதல் 50,000 வரை இல்லை. அவர்கள் 12,000-ல் இருந்து, 15,000 வரை தான் இருப்பார்கள். கிறிஸ்துவர்கள் சுமார் 3%-க்குக் குறைவாகவே இருக்கிறார்கள். இந்த இரண்டு மதத்தினரையும் சேர்த்தால், மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில் 5% முதல் 6% வரை இருந்தால் அதிகம்.

அது ஒரு புறம் இருக்க, வாக்காளர் பட்டியலில் இருந்து, சுமார் 45,000 முதல் 50,000 பெயர்கள் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளன என்று அ.தி.மு.க. குற்றம் சாட்டுகிறது. இந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றினாலும், குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருக்கிறது என்று கீழ்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கே காங்கிரசுக்கு என்று தனிப்பட்ட பலமோ, ஆதரவோ இல்லை. இது நாம் மறந்து விடக் கூடாத உண்மை.

இந்தத் தொகுதியை, இதுவரை நடந்த தேர்தல்களில், தி.மு.க, அ.தி.மு.க. இரண்டுமே மாறி, மாறிக் கைப்பற்றி வந்திருக்கின்றன.

கடந்த தேர்தல்களில், வென்றவருக்கும், தோற்றவருக்கும் இடையே இருந்த வித்தியாசம் 6%-ஐத் தாண்டியதில்லை. ஆகவே, இப்பொழுதும் யாரும் 'Landslide Victory' பெறுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.

இன்றைய கள நிலவரத்தை உற்று நோக்குங்கால், தி.மு.கவுக்கு, ஆட்சி, அதிகார பலம், ஆள் பலம், பண பலம் மிகுதியாக இருக்கிறது. போதாக் குறைக்கு, ஏராளமான அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும், தமிழகத்தின் வெவ்வேறு பகுதியில் இருந்து வந்து முகாமிட்டு, மும்முரமாகத் தேர்தல் வேலை செய்கிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமிக்கும், (2021-க்குப் பிந்தைய) அண்ணாமலைக்கும் இங்கே தனிப்பட்ட செல்வாக்கு நன்றாக இருக்கிறது. இருப்பினும், அடிமட்டத் தொண்டர்கள் இடையே, அ.தி.மு.கவுக்கும், பா.ஜ.கவுக்கும் எவ்வளவு தூரம் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் இருக்கும் என்பது கேள்விக் குறியே.

இன்றைய சூழ்நிலையில், 'இரட்டை இலை' சின்னம் குறித்த இழுபறி முடிவுக்கு வந்தாலும், அ.தி.மு.க. தன் பழைய நிலையை எட்டுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பொதுமக்களிடையே, ஆளும் கட்சி மீதான அதிருப்தி கூடி இருக்கிறது. ஆனால், அது பணத்தைக் கையில் கண்டவுடன் பறந்து போக நேரலாம்.

18 வயது முதல் 30 வயது வரை இருக்கும் இளைஞர்களில் அதிகம் பேர், பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி இடையே பிரிந்து கிடக்கிறார்கள். ஆயினும், நாம் தமிழர் கட்சியின் குறியும், செயலும், தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு எதிராகவே இருக்கும் என்பதால், அது தி.மு.கவுக்குப் பின்னடைவை உண்டாக்கலாம். (நாம் தமிழர் கட்சியின் வாக்கு பலம் 10%-ஐ ஒட்டி இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது).

பெண்களின் ஆதரவு இன்னும் அ.தி.மு.கவுக்கே அதிகமாக இருக்கிறது. மேலும், கொங்கு மண்டலம் முழுவதும் அ.தி.மு.கவின் ஆதிக்கம் அதிகம்.

தமிழ்நாட்டில் இருக்கும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மிகுதியாக ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் தான் உள்ளன. ஆகவே, இந்நாள் வரை நிறைவேற்றப்படாத 'நீட்' தேர்வு ரத்து வாக்குறுதி, தி.மு.கவுக்கு எதிராக வேலை செய்யலாம்.

அடுத்த 15 நாள்கள் மிகவும் பரபரப்பானவை. எல்லாத் திசைகளில் இருந்தும், பணம் வெள்ளமெனப் பாயும். அமைச்சர் செந்தில் பாலாஜி, கட்டுக் கட்டான பணத் தாள்களோடு களத்துக்குள் புகுந்தால், என்ன நடக்கும் எனச் சொல்வதற்கில்லை. அவரை அடக்கும் அங்குசம், அண்ணாமலை கையிலே தான் இருக்கிறது.

இறுதியாக -

இன்றைய சூழலில், தேர்தல் களம் தி.மு.கவுக்குச் சாதகமாகவே இருக்கிறது. வரும் நாள்களில், ஆ.ராசா, டி.ஆர்.பாலு, நாசர், கே.என். நேரு, உதயநிதி முதலானோர் அதைக் கெடுத்து, எதிரணிக்கு உதவலாம்.

20 தேதிக்குப் பின், இன்னொரு தடவை சுருக்கமாக அலசுவோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...