Saturday, March 30, 2019

துரைமுருகன் வீடு, கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை.

வேலூர் மாவட்டம் காட்பாடியில், துரைமுருகன் வீடு, அவரது மகன் கல்லுாரியில் வருமானவரித் துறையினர், பறக்கும் படையினர், தேர்தல் பார்வையாளர்கள் இணைந்த குழுவினர் சோதனை நடத்தினர்.
துரைமுருகன் வீடு, கல்லூரி,  வருமான வரித்துறை, சோதனை
வேலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், அ.தி.மு.க., கூட்டணியில், புதிய நீதிக் கட்சி தலைவர், ஏ.சி. சண்முகம் போட்டியிடுகின்றனர்.
இரவு 10:30 மணி
துரைமுருகன் வீடு, காட்பாடி, காந்தி நகரில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, துரைமுருகனும், கதிர்ஆனந்த்தும் பிரசாரத்துக்கு சென்றிருந்தனர். இரவு, 10:30 மணிக்கு, வருமானவரித் துறை அதிகாரிகள் மூவர், துரைமுருகன் வீட்டுக்கு வந்தனர்.தகவலின்படி, சிறிது நேரத்தில், தி.மு.க., வக்கீல்களுடன் துரைமுருகன் வந்தார். 'வாரன்ட் இருந்தால் தான், அனுமதிக்க முடியும்' என, அவர் கூறவே, வெளியேறிய அதிகாரிகள், அதிகாலை, 3:00 மணிக்கு, 'வாரன்ட்'டுடன் வந்தனர்.கிங்ஸ்டன் கல்லூரி
இதையடுத்து, சோதனைக்கு துரைமுருகன் அனுமதித்தார். அதிகாரிகள், துரைமுருகன் வீடு, மாடி, தோட்டம், கார் ஷெட், கார் ஆகியவற்றில், ஆறு மணி நேரம் சோதனை நடத்தி, காலை, 9:00 மணிக்கு வெளியேறினர்.*கதிர்ஆனந்த்துக்கு சொந்தமான, காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரிக்கு நேற்று காலை, 10:00 மணிக்கு வருமானவரித் துறையினர் சென்று, சோதனை நடத்தினர்.*குடியாத்தம் அடுத்த அனங்காநல்லுாரைச் சேர்ந்த, தி.மு.க., முன்னாள் பொதுக்குழு உறுப்பினர், சக்கரவர்த்தி, 60, ஆலங்காயத்தில், தி.மு.க., கிளை செயலர் தேவராஜ், 64, ஆகியோர் வீடுகளிலும், வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.இது குறித்து, துரைமுருகன் கூறுகையில், ''எங்களை தேர்தல் களத்தில் எதிர்க்க திராணியற்றவர்களின் சூழ்ச்சி இது,'' என்றார்.
ஸ்டாலின் கண்டனம்தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கையில், 'தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளிலும், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி படுதோல்வி அடையும் என, வெளிவரும், 'சர்வே'
முடிவுகளும், மத்திய உளவுத்துறை அறிக்கைகளும், பிரதமர் மோடிக்கு எரிச்சலையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்திஇருக்கிறது.'எனவே, ஆணவத்தின் உச்சகட்டமாக, பிரதமர் மோடியே, நேரடியாகத் தலையிட்டு, துரைமுருகன் வீட்டில், 'ரெய்டு' நடத்த உத்தரவிட்டிருப்பது, காட்டுமிராண்டித்தனமான அதிகார துஷ்யபிரயோகம். இதையெல்லாம் பார்த்து, தி.மு.க., ஒருக்காலும் ஓய்ந்து விடாது' என, தெரிவித்துள்ளார்.
சிக்கிய பணம் எவ்வளவு?


'மகனை எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டும்' என்பதில், துரைமுருகன் உறுதியாக உள்ளார். காட்பாடி, காந்திநகரில் உள்ள அவரது வீடு, தேர்தல் அலுவலகமாக செயல்படுகிறது. இங்கு வைத்து தான், தேர்தல் பணி செய்யும் கட்சி நிர்வாகிகளுக்கு, பணம், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக, வருமானவரி துறைக்கு புகார்கள் சென்றன.
இந்நிலையில், கதிர் ஆனந்தை அறிமுகப்படுத்தும் கூட்டம், சில நாட்களுக்கு முன், வேலுாரில் நடந்தது. இதில், துரைமுருகன் பேசுகையில், வேலுார் லோக்சபா தொகுதியில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில், அதிக ஓட்டுகள் வாங்கும் தொகுதிக்கு தன் சொந்த பணம், 50 லட்சம் ரூபாய் தருவதாக பகிரங்கமாக அறிவித்தார்.
இதையெல்லாம் கூர்ந்து கவனித்த தேர்தல் பறக்கும் படை, செலவின பார்வையாளர்கள், வருமான வரித்துறை இணைந்த குழுக்கள், துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தியுள்ளன. சோதனையில், 19 லட்சம் ரூபாய் சிக்கியுள்ளது. தன்னிடம், 9 லட்சம் ரூபாய் ரொக்கம் கையிருப்பில் உள்ளதாக, அவரது மகன், வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மீதமுள்ள, 10 லட்சம் ரூபாயை அவர் கணக்கில் காட்டாததால், அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றதாக தெரிகிறது. இது தவிர, நான்கு பைகளில், ஆவணங்களையும் அள்ளி சென்றதாககூறப்படுகிறது.
'துாங்க மாட்டார் துரைமுருகன்'
புதிய நீதிக் கட்சி வேட்பாளர், ஏ.சி. சண்முகம் கூறியதாவது:துரைமுருகன்.
வீட்டில் நடந்த வருமானவரி சோதனைக்கு, நானும், பா.ஜ.,வும் தான் காரணம் என, துரைமுருகன் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய். துரைமுருகன் அண்ணன் மீது மதிப்பும், மரியாதையும் அதிகளவு கொண்டன் நான்.அரசியல் நாகரிகம் கருதி, இதுவரை எதுவும் பேசவில்லை. நான் பேச ஆரம்பித்தால், ஒரு மாதம் துரைமுருகன் துாங்க மாட்டார். இவர்களுக்கு எந்த நாட்டில், என்ன உள்ளது என்பதை, நான் சொல்ல வேண்டி இருக்கும். ஒருவர் போனில் பேசுவதை, உளவுத்துறை மூலம் அறிந்து, இதுபோன்ற சோதனை நடக்கிறது. இது கூட தெரியாமல், அடுத்தவர் மீது பழி போடுவது மிகவும் தவறு.இவ்வாறு அவர் கூறினார்.
தே.மு.தி.க.,வினர் வரவேற்பு

துரைமுருகன் மகன் வீட்டில், 'ரெய்டு' நடத்தியதற்கு, சமூக வலைதளங்களில், தே.மு.தி.க.,வினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., - தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., ரகசிய பேச்சு நடத்தியது. பின், அ.தி.மு.க., கூட்டணியில் இணைய முன்வந்தது. குறைவான தொகுதிகள் ஒதுக்க, அ.தி.மு.க., முடிவு செய்ததால், இழுபறி ஏற்பட்டது.இப்பிரச்னை தொடர்பாக, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுடன் பேச்சு நடத்த, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் சென்றார். அதேநேரத்தில், சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்கு, தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் இளங்கோவன், முருகேசன் சென்றனர்.இருவரும், தி.மு.க.,வுடன் கூட்டணி பேசுவதற்கு வந்ததாக, துரைமுருகன் வெளிப்படையாக அறிவித்தார். இதன் வாயிலாக, அ.தி.மு.க., - தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., பேச்சு நடத்துவது அம்பலமானது. இது, தே.மு.தி.க.,வினருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. விஜயகாந்த் மனைவி பிரேமலதா, செய்தியாளர் சந்திப்பு நடத்தி, துரைமுருகனை வறுத்தெடுத்தார்.இந்த நிலையில், வேலுார் தொகுதி வேட்பாளரான துரைமுருகன் மகன், கதிர்ஆனந்த் வீட்டில், வருமான வரி துறையினர், 'ரெய்டு' நடத்தியுள்ளனர். இதற்கு, சமூக வலைதளங்களில், தே.மு.தி.க., நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு தெரிவித்து, பதிவிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...