Monday, March 25, 2019

கார்த்தி, ஜெயகுமாருக்கு காங்கிரசில் கடும் எதிர்ப்பு; அழகிரி சமரச முயற்சி.

தமிழக காங்கிரஸ் கட்சியில், சிவகங்கை, திருவள்ளூர் தொகுதி வேட்பாளர்கள் மீதான எதிர்ப்பை சரிக்கட்டும் வகையில், அதிருப்தியாளர்களை அழைத்து, சமரசம் செய்யும் முயற்சியில், தமிழக காங்கிரஸ் தலைமை ஈடுபட்டுள்ளது.

நீண்ட இழுபறிக்கு பின், நள்ளிரவில் வெளியிடப்பட்ட, காங்கிரஸ் பட்டியலில், சிவகங்கை தொகுதி மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த தொகுதியில், 'சீட்' கேட்டிருந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன், கார்த்தி மீது, சி.பி.ஐ., வழக்கு இருப்பதால், அவருக்கு வழங்கக் கூடாது என, முன்னாள் மத்திய அமைச்சர், சுதர்சன நாச்சியப்பன் வலியுறுத்தினார். இதையடுத்து, சிவகங்கை தொகுதியை தவிர, மற்ற எட்டு தொகுதிகளுக்கும், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

தன் மகனுக்கு, 'சீட்' வாங்க வேண்டும் என்பதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, மன்மோகன் சிங் ஆகியோரின் ஆதரவை, சிதம்பரம் நாடினார். அவர்களின் கோரிக்கையை ஏற்று, சிவகங்கை தொகுதியின் வேட்பாளராக கார்த்தி, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். கார்த்திக்கு, 'சீட்' கிடைத்ததை, சுதர்சன நாச்சியப்பனால் ஜீரணிக்க முடிவில்லை. அவர் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இது குறித்து, சுதர்சன நாச்சியப்பன், நிருபர்களிடம் கூறுகையில், ''சிதம்பரம் குடும்பத்தை, மக்கள் வெறுக்கின்றனர். பல நாடுகளில், சிதம்பரம் குடும்பம் சொத்துகளை சேர்த்துள்ளது. ''கார்த்தி, ஒரு குற்றவாளியாக உள்ளதால், நீதிமன்றத்தில், என்ன நடக்க போகிறது என, தெரியவில்லை. நீதிமன்றத்திற்கு போக வேண்டியவர், வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட போகிறது,'' என்றார்.

சுதர்சன நாச்சியப்பனின் எதிர்ப்பு, தமிழக காங்கிரஸ் கட்சியில், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனே, அவரை சமரசம் செய்யும் முயற்சியில், மாநில தலைவர், கே.எஸ்.அழகிரி ஈடுபட்டுள்ளார்.

சென்னை, சத்தியமூர்த்தி பவனில், நேற்று அழகிரி அளித்த பேட்டி: சிவகங்கை தொகுதியில், கார்த்தி போட்டியிட வேண்டும் என, எட்டு பேர் விருப்ப மனு அளித்தனர். சுதர்சன நாச்சியப்பன் போட்டியிட, ஒருவர் மட்டுமே விருப்ப மனு அளித்தார். கார்த்தியை நிறுத்தும் முடிவை, ராகுல் எடுத்துள்ளார்; அதற்கு தலைவணங்க வேண்டும். டில்லி மேலிடத்திற்கு, எந்த தலைவரும் நிர்ப்பந்தம் அளிக்கவில்லை. சுதர்சன நாச்சியப்பன், மத்திய அமைச்சராகவும், ராஜ்யசபா எம்.பி., யாகவும் இருந்துள்ளார். கட்சியின் முடிவை, அவர் ஏற்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிப்பது, ராகுல் முடிவை, எதிர்ப்பது போலாகிவிடும்.



திருவள்ளூர் தொகுதியின் வேட்பாளராக, ஜெயகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், வடகிழக்கு மாநிலங்களில், காங்., பொறுப்பாளராக பணியாற்றியவர். திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட, செல்வப்பெருந்தகையும், 'சீட்' கேட்டிருந்தார்; அவரும் தகுதியான வேட்பாளர் தான். என்னை சந்தித்து பேசிய பின், அவர் சமாதானமாகி விட்டார். இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையில், கே.எஸ்.அழகிரியை, நேற்று காலை, தமிழக காங்கிரஸ், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். அப்போது, ''திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும், ஜெயகுமாருக்கு வயது அதிகமாகி விட்டது. எனவே, அவருக்கு, இந்த முறை வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ''வரும் சட்டசபை தேர்தலில், உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்,'' என, அழகிரி தரப்பில், சமரசம் செய்யப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...