Tuesday, July 23, 2019

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.

ஊழலை ஒழிப்பது, விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிப்பது, சாலை பாதுகாப்பு உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களுடன் கூடிய, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, குரல் ஓட்டெடுப்பின் மூலம், லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.
மோட்டார் வாகனம், சட்ட திருத்த மசோதா

நம் நாட்டில், மோட்டார் வாகன சட்டம், 1938 முதல், அமலில் உள்ளது. கடந்த, 1988ல், இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.இதன்பின், பல்வேறு புதிய அம்சங்களுடன், 2017ல், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ராஜ்யசபாவில், இந்த மசோதா நிறைவேறவில்லை. இந்நிலையில், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, மீண்டும் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

வாகன போக்குவரத்து துறையில் நிலவும் ஊழல்களை ஒழிப்பது, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு, கடுமையான அபராதம் விதிப்பது, சாலை பாதுகாப்பை அதிகரிப்பது, போக்குவரத்து நெரிசலை, நவீன தொழில்நுட்ப உதவியுடன், ஒழுங்கு படுத்துவது உள்ளிட்ட புதிய அம்சங்கள் அடங்கிய இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா தொடர்பாக, நேற்று நீண்ட நேரம் விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த, எம்.பி.,க்கள் சிலர், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசுகையில்,''இந்த சட்ட திருத்த மசோதா, வாகன போக்குவரத்தில், மாநிலங்களுக்கு உள்ள அதிகாரத்தை பறிக்கும் வகையில் உள்ளது. வாகன ஒட்டுனர்களுக்கு கல்வி தகுதி தேவையில்லை என்ற அம்சத்தை, மசோதாவிலிருந்து நீக்க வேண்டும்,'' என்றார். இதையடுத்து, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி பேசியதாவது: மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை. சாலை பாதுகாப்பை அதிகரிப்பது, போக்குவரத்தில், நவீனதொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஆகியவை தான், எங்கள் நோக்கம். 

இந்த விஷயத்தில், மாநிலங்கள் சுதந்திரமாக செயல்படலாம்.பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்தை கையாளுவது ஆகியவற்றுக்காக, தேசிய போக்குவரத்து கொள்கை உருவாக்கப்படும். அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்திய பின்பே, இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.

சாலை போக்குவரத்தை, தனிப்பட்டஇன்ஜினியர்கள் கண்காணிக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நிபுணத்துவம் வாய்ந்த குழு அடங்கிய நிறுவனங்கள், இதை கண்காணிக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்கல் செய்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு, மசோதா, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
முக்கிய அம்சங்கள்

* பொதுவான போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கான அபராதம், 100 ரூபாயிலிருந்து, 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது
* ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவோருக்கான அபராதம், 500 ரூபாயிலிருந்து, 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதுஇன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால், 2,000 ரூபாய் அபராதம்
* கார் ஓட்டும்போது, 'சீட் பெல்ட்' அணியாமல் இருந்தால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
* ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஒட்டுவோருக்கு, 1,000 ரூபாயும், மது குடித்து வாகனம் ஓட்டினால், 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
* அனுமதிக்கப்பட்ட அளவை விட, வேகமாக வாகனம் ஓட்டினால், 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்
* ஆம்புலன்சுக்கு வழி விடாவிட்டால், 10 ஆயிரம் ரூபாயும், 'பெர்மிட்' இல்லாமல் வாகனம் ஓட்டினால், 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்
* சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அவர்களது பாதுகாவலர் அல்லது பெற்றோர் மற்றும் வாகனத்தின் உரிமையாளர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவர்
* விபத்தில் இறக்கும் வாகன உரிமையாளர் அல்லது காப்பீடுதாரருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும்
* வாகன விபத்தில் படுகாயம் அடைவோருக்கு, 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும்
* வானக ஓட்டிகள் அனைவருக்கும் கட்டாய இன்சூரன்ஸ் வசதி பெறும் வகையில், மோட்டார் வாகன விபத்து நிதியம், மத்திய அரசால் ஏற்படுத்தப்படும்
* வாகன தயாரிப்பில் குறை இருந்து, அதனால் சுற்றுச் சூழலுக்கோ, சாலையில் பயணம் செய்பவர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால், அந்த வாகனத்தை, சம்பந்தபட்ட தயாரிப்பு நிறுவனம் திரும்ப பெறுவதுடன், அந்த வாகனம் வாங்கப்பட்ட முழு தொகையையும், வாடிக்கையாளருக்கு திரும்ப செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...