Monday, July 22, 2019

'நோட்டு!' எந்த ஊரு... என்ன ரேட்டு : இடமாறுதலை நிர்ணயிக்குது, 'நோட்டு!'

தமிழகம் முழுவதும் பதிவுத் துறை அலுவலகங்களில், சங்கிலித்தொடராக, லஞ்ச ஒழிப்புத் துறைநடத்திவரும் திடீர் சோதனையின்பின்னணியை ஆராய்ந்ததில், அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகியுள்ளன.


தமிழக பதிவுத் துறையின் சென்னை, வேலுார், கடலுார், சேலம், திருச்சி, தஞ்சாவூர், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய, ஒன்பது மண்டலங்களில், 50 பதிவு மாவட்டங்கள் செயல்படுகின்றன.அதிகப்பதிவு பணிச்சுமை உள்ள, 13 மாவட்டங்களின் நிலை உயர்த்தப்பட்டு, அவை உதவி பதிவுத் துறைத் தலைவர் தலைமையிலும், எஞ்சிய, 37 பதிவு மாவட்டங்கள், 
மாவட்டப் பதிவாளர்களின் தலைமையிலும் இயங்குகின்றன. தமிழகம் முழுவதும், மொத்தம், 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.

'டிரான்ஸ்பர்' முறைகேடு

தமிழக அரசுத் துறைகளில் லஞ்ச, ஊழல் அதிகம் மலிந்து காணப்படுவது, பதிவுத் துறை தான். இதன் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ச்சியாக நடத்தும் திடீர் சோதனைகளும், கைது நடவடிக்கைகளுமே, இதற்கு சாட்சி.கோடிக்கணக்கில் லஞ்சம் புரளுவது காலங்காலமாக நடப்பது தான் என்றபோதிலும், சமீப காலமாக, ஊழல் முறைகேடுகள் உச்சத்தை தொட்டு நிற்கின்றன.
பதிவுப் பணியில் ஈடுபடும் சார் -- பதிவாளர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட, சில முக்கியத்துவம் வாய்ந்த பணியிடங்கள், 15 லட்சம் முதல், கோடி ரூபாய் வரை, ஏலம் விடாத குறையாக விற்கப்படுகின்றன என்பது தான், தற்போதைய குற்றச்சாட்டு.இரண்டு முதல் மூன்றாண்டுகள் வரை பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் பதவியைப் கைப்பற்ற, இவ்வளவு தொகையை அரசியல்வாதிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும், 'படியளக்கும்' அதிகாரிகளின் ஒரே நம்பிக்கை, எப்படியும், தான் கொடுத்ததைக் காட்டிலும் இரண்டு, மூன்று மடங்கு தொகையை, முறைகேடான வழியில் சம்பாதித்துவிட முடியும் என்பது தான்.

இத்தனை காலமாக, இட மாறுதலில், 'இலைமறை காயாக' இருந்து வந்த பண பேரங்கள், தற்போது வெளிப்படையாக,பட்டவர்த்தனமாக நடப்பதாகவும், 'இந்த இடத்துக்கு இன்ன ரேட்' என, விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும், பதிவுத் துறையிலேயே, பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பணம், அரசியல் செல்வாக்கு படைத்தவர்கள், 'பசை' உள்ள பணியிடங்களைப் பெறுவதும், செல்வாக்கற்ற, நேர்மையான அதிகாரிகள் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கும், மண்டலம் விட்டு மண்டலத்துக்கும் பந்தாடப்படுவதும் தொடர்கிறது.லஞ்ச ஒழிப்புத் துறையின் கைது, சோதனை நடவடிக்கைக்கு உள்ளான அதிகாரிகள் கூட, வேண்டியவர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, விரும்பிய இடத்தை, விதிமுறைகளை மீறி பெறுகின்றனர் என்பது தான், இடமாறுதல் ஊழலின் உச்சகட்டம்.
அப்பட்டமாக மீறப்படும் அரசாணை



வணிக வரி மற்றும் பதிவுத் துறையில் அதிகாரிகள், ஊழியர்கள் இடமாறுதல் செய்யப்படும்போது, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, தமிழக அரசின் அரசாணை எண்: 279, தெளிவுபடுத்துகிறது.
* ஒரு சார் - பதிவாளர், மாவட்ட பதிவாளராக பதவி உயர்வு அளிக்கப்படும்போது, முதலில் நிர்வாகப் பணியிலும், அடுத்து பதிவுப் பணியிலும், கடைசியாக தணிக்கை பணியிலும் பணிபுரிய அமர்த்தப்பட வேண்டும். ஒருவர், ஒன்பது ஆண்டுகள் மாவட்ட பதிவாளராக  பணிபுரிந்த பின்னரும், பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றால் தான், மறுபடியும் நிர்வாகப் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
* ஒரு மண்டலத்தில், ஆறு ஆண்டுகளுக்கு மேல், ஒரு அலுவலர் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது.
* ஓய்வு பெறுவதற்கு முன், ஓராண்டில் எந்த மாவட்ட பதிவாளரும், பதிவு பணியில் நியமிக்கப்படக் கூடாது.
* சொந்த மாவட்டத்தில், எந்த மாவட்ட பதிவாளரும் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது.
* பணிபுரிந்த அதே இடத்தில், மீண்டும் எந்த மாவட்ட பதிவாளரும் நியமிக்கப்படக் கூடாது.
* லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தக்க நடவடிக்கை எடுக்கும்போது, சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளரை, முக்கியத்துவம் அல்லாத பணியில் நியமிக்க வேண்டும்.
* மாவட்ட பதிவாளர் நிலைக்கு மேம்படுத்தப்பட்ட சார் - பதிவாளர் பணியிடங்களில் பணிபுரியும் பதிவாளர்கள், இரு ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றக்
கூடாது.இதுதான், அந்த அரசாணை. ஆனால், மேற்கண்ட விதிமுறைகள், தற்போது அப்பட்டமாகமீறப்பட்டு வருகின்றன.


துணைபோகிறதா லஞ்ச ஒழிப்புத் துறை?

பதிவுத்துறையில், சமீபகாலமாக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தி வரும் சோதனைகள், வரவேற்கத்தக்கவை என்ற போதிலும், சில இடங்களில் நடந்த, 'ரெய்டு'கள், பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியுள்ளன.கோவை, திருப்பூரில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்கள், பணியில் இல்லை;விடுமுறையில் சென்றிருந்தனர். இதே போன்று தான் சென்னையிலும் நடந்துள்ளது.பல நாள் கண்காணித்து சோதனையில் ஈடுபடும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரி பணியில் இருக்கிறாரா, விடுமுறையில் சென்றுவிட்டாரா என்பது கூடவா தெரியாமல் போகும் என, கேள்வி எழுந்துள்ளது. 
லஞ்ச ஒழிப்புத்துறையில் இருக்கும் கறுப்பு ஆடுகள் தகவல் தெரிவித்து, லஞ்சப் பேர்வழிகள் தப்பிக்க வழிவகை செய்கின்றனரா என்ற சந்தேகமும் உள்ளது.
விழிக்க வேண்டும் தமிழக அரசு

தமிழகத்திலுள்ள குளம், குட்டை, ஏரி, புறம்போக்கு நிலங்கள், கோவில் சொத்துக்கள், அரசியல் செல்வாக்காளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட், 'மாபியா'க்களால், கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு, பதிவுத்துறையில் பணியாற்றும் லஞ்ச அதிகாரிகள் சிலரே, துணை போகின்றனர்.இவர்கள், முறைகேட்டுக்கு துணை நின்று, போலி ஆவணங்களின் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்து கொடுத்து உதவுகின்றனர். இப்படித்தான், சென்னையில், வடபழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, ரியல் எஸ்டேட் மாபியாக்கள் அபகரித்துள்ளனர். இதுவரை நடவடிக்கை இல்லை. இவ்வாறு, தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் மற்றும் கோவில் நிலங்கள் என, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், அபகரிப்பாளர்களின் பிடியில் உள்ளன.பதிவுத் துறையின் முக்கிய பொறுப்புகளில், நேர்மையான அதிகாரிகள் இல்லாததும், லஞ்சப் பேர்வழிகள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதுமே, நில அபகரிப்பு மற்றும் அரசு நில ஆக்கிரமிப்பு, கோவில் சொத்து கொள்ளைக்கு முக்கிய காரணம். இனிமேலாவது விழிக்குமா தமிழக அரசு?

யாருக்காக... எங்கு

பதவிக்கால நீட்டிப்பும்... நிரம்பும் பாக்கெட்டும்


பதிவுத் துறையில் பொதுமாறுதல், வழக்கமாக ஏப்., 1 முதல், 31க்குள் மேற்கொள்ளப்படும். ஒரு அதிகாரிதொடர்ந்து, மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுவது, நிர்வாக நலனுக்கு உகந்தது அல்ல;முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், குறிப்பிட்ட கால இடைவெளியில் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். சமீப ஆண்டுகளாக, இந்த விதிமுறையும் மீறப்படுகிறது. ஏப்ரலில் பொதுமாறுதல் செய்வதற்கு பதிலாக, ஆகஸ்ட் வரை, பதவிக்காலத்தை நீட்டித்து வழங்கி, அதற்குப்பின் பேரம் பேசி, இடமாறுதல் வழங்குவதும் நடக்கிறது. இதுபோன்ற பதவிக்கால நீட்டிப்புகள் அதிகாரிகள், ஊழியர்களின், 'பாக்கெட்'டை நிரப்புவதற்கே வழிவகுப்பதாக,ஓய்வு பெற்ற பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கடந்த, 2018, டிச., 13ல் சென்னை, வில்லிவாக்கம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் காட்டப்படாத லஞ்ச பணம், 70 ஆயிரத்து, 60 ரூபாயை பறிமுதல் செய்தனர்.அதன்பின், சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியான, கோபாலகிருஷ்ணன் மீது விசாரணை நடத்த ஏதுவாக, அவரை, தொலைதுாரத்துக்கு மாற்றிடுமாறு, லஞ்ச ஒழிப்புத்துறை, மாநில கண்காணிப்பு ஆணையருக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து, துாத்துக்குடிக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் அங்கு பொறுப்பேற்காமல், பல மாதங்கள் விடுமுறையிலேயே இருந்துவிட்டு, 'பிடிக்க வேண்டியவர்களை பிடித்து' மீண்டும் செங்கல்பட்டு பதிவு அலுவலக நிர்வாகப்பணி பதவியை பெற்று, வந்துவிட்டார். அரசின் இந்த செயலால், லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கை கேலிக்குள்ளாகியிருக்கிறது. அதேபோன்று, மற்றொரு, சர்ச்சைக்குரிய இடமாறுதல், திருப்பூர் சார் - பதிவாளர் ஸ்ரீதர் தொடர்பானது. இவர், 2009ல், தென்சென்னை பதிவு மாவட்டம், குன்றத்துாரில் சார் - பதிவாளராக பணியாற்றியபோது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால், கைது செய்யப்பட்டார்.மேலும் இவர் குன்றத்துார், விருகம்பாக்கம் சார் - பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றிய போது, இவரால் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் மூலம், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானார்.ஆனால், 2014ல், லஞ்ச வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், நீதிமன்றம் இவரை விடுவித்தது. வழக்கமாக, இதுபோன்ற வழக்குகளில், மேல் முறையீடு செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் தீவிரம் காட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை, இந்த வழக்கில் ஏனோ, மேல் முறையீடு செய்யாமல் ஒதுங்கிக் கொண்டது.'குன்றத்துார், விருகம்பாக்கத்தில் பணியாற்றியபோது, பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் வாயிலாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தினார்' என்ற, குற்றச்சாட்டும், அரசால் கைவிடப்பட்டு, மீண்டும் அவர் பணியமர்த்தப்பட்டார்.சென்னை பதிவுத்துறை, ஐ.ஜி., அலுவலகத்தில், பணியாற்றி வந்த, மாவட்ட பதிவாளர், ஸ்ரீதர், திருப்பூர், சார் - பதிவாளராக (மாவட்ட பதிவாளர் அந்தஸ்து), 2017ல் நியமிக்கப்பட்டார். தற்போது, இவர், மீண்டும் லஞ்ச 
வழக்கில் சிக்கியுள்ளார்.

இவர் விடுமுறையில் இருந்தபோது, இவரது அலுவலகத்தில் சோதனை நடத்திய, லஞ்ச ஒழிப்பு போலீசார், புரோக்கரை கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இவர் மீண்டும் சென்னைக்கு இடமாறுதல் பெற முயன்று வந்த வேளையில், இந்த ரெய்டு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.*செங்கல்பட்டில் பணியாற்றி வரும் ஒரு அதிகாரி மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இவரை,பதிவுப் பணி போன்ற பணியிடங்களுக்கு, நியமிக்கக் கூடாது என்ற விதி உள்ள போதிலும், அதையும் மீறி இவருக்கு, பதிவுப் பணிக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.*ஒரு அதிகாரி, நிர்வாகப் பணியில் மூன்றாண்டுகள் பணியாற்றி முடித்ததும், அவர் இரு ஆண்டுகள் பதிவுப் பணிக்கும், அதன்பின், மூன்றாண்டுகள் தணிக்கைப் பணிக்கும் என, சுழற்சி முறையில் மாறி மாறி நியமிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. பதிவுப் பணியிலேயே ஒருவர் தொடர்ந்து பல ஆண்டு பணியாற்றினால், முறைகேடுக்கு வழிவகுக்கும் என்பதாலேயே, இப்படியொரு விதிமுறை வகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சமீபத்திய இடமாறுதல் உத்தரவுகளில் இவ்விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் மூலகாரணம் லஞ்ச ஊழல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...