Thursday, July 16, 2020

வரலாற்றில் ரஞ்சன்குடி கோட்டை ..

பெரம்பலூர் அரியலூர் தொழுதூர் மக்களுக்கு நன்கு தெரிந்திருக்கக் கூடும் .. தென்மாவட்ட மக்கள் பேருந்தில் செல்லும் பொழுது, தூரத்தில் தெரியும் அந்த கம்பீரமான கட்டமைப்பை பார்த்திருக்கக்கூடும் ,
அதுதான் திருச்சிசென்னை சாலையில் பெரம்பலூரை அடுத்து அமைந்துள்ள ரஞ்சன்குடி கோட்டை ஆகும் ..
இது மன்னர்கள்,சமஸ்தானங்கள், ஜமீன்தார்கள்,ஆட்சியாளர்களின் குடியிருப்பு கோட்டை அல்ல.. ஆட்சி நிர்வாக அலுவலகம் அல்ல..இது முழுக்க முழுக்க காவல் கோட்டை. எல்லைப்புற காவல் அரணாக கண்காணிப்பு கோட்டையாக விளங்கியுள்ளது..
அதாவது தொழுதூர் சுங்கச்சாவடியை அடுத்துள்ள வெள்ளாறு, கடலூர்- பெரம்பலூர் மாவட்டங்களை பிரிக்கும் எல்லையாகும்..
அந்நாளில் திருச்சி நாயக்கர்களின் எல்லையாகவும், அது தான் திகழ்ந்தது. ஆதலால் செஞ்சி மற்றும் திருவண்ணாமலை நாயக்கர்கள் சம்புவராயர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் படையெடுப்பை வருவதை கண்காணித்து தடுத்து நிறுத்துவதற்காக கட்டப்பட்ட காவல் கோட்டை இதுவாகும்..
தற்போது உள்ள கோட்டை கிட்டத்தட்ட 55 ஏக்கரில் 4 ஆயிரம் மீட்டர் சுற்றளவில் ஒரு கிலோமீட்டர் சதுர அடி பரப்பில் சுமார் 80 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பரந்துவிரிந்த மதில் சுவருடன் கருங்கல்லால் கட்டப்பட்ட கோட்டையாகும்..கோட்டையை சுற்றி கோனேரி எனும் சிற்றாறு செல்கிறது.. ஆனால் பார்ப்பதற்கு அது ஒரு அகழி போலவே காட்சியளிக்கிறது..கடும் மழை பொழிந்தால் இந்த ஆறு தண்ணீர் நிறைந்து பக்கத்து வயல்களுக்கும் சென்றுள்ளதாக இங்குள்ள கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்..
மன்னர்களின் அரண்மனையாகவோ,
அந்தபுறமாகவோ, அதிகாரத் தலமாகவோ இருந்திருந்தால் நிச்சயம் பல்வேறு படையெடுப்புகள் நடந்த சூழலில் சிதைத்து அழித்திருக்க கூடும்.. படைவீரர்கள் காவல் காத்த கோட்டை என்பதால் கைப்பற்றிய எதிரி மன்னர்களும், தங்களுக்கும் இந்த இடம் காவல் அரணாக இருந்து பாதுகாக்க கூடும் என்பதால் எல்லா காலகட்டத்திலும் அதை அப்படியே பராமரித்து வந்தார்கள் என்பதுதான் நிஜம்..
ரஞ்சன்குடி கோட்டை - வால் கொண்ட கோட்டை புலி கொண்டா கோட்டை துருவத்துகோட்டை என பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனந்தரங்கம் பிள்ளை தன்னுடைய நாட்குறிப்பில் இந்த இடத்தைப் பற்றி குறிப்பிடும்போது ரஞ்சன் கடை, ரஞ்சன கடை என்று குறிப்பிட்டுள்ளார்.. தமிழ் தாத்தா உ வே சாமிநாதையர் என் சரித்திரத்தில் இந்த கோட்டையை பற்றி ரஞ்சன் கடி என்று குறிப்பிடுகிறார்..
இந்தக் கோட்டை காவல் கண்காணிப்பு பணிக்காக எழுப்பப்பட்டது என்பதால் இயல்பாகவே ஒரு மேட்டுப் பகுதியை தேர்ந்தெடுத்து கட்டியுள்ளனர்.. அதனால்தானோ என்னவோ உள்ளூர் மக்கள் இதை துருவத்து கோட்டை, துருவமேடு கோட்டை என்றும் குறிப்பிடுகின்றனர்..
யானை படுத்திருப்பது போன்ற வடிவம் கொண்ட சிறு மலையின் மீது கட்டப்பட்டுள்ள கோட்டையாகும் அதனால் இதற்கு பெயர் தூங்கானை அதாவது படுத்து உறங்கும் யானை என்ற பொருள்படும் தூங்கானை கிராமம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது..
A History of the Military Transactions of the British Nation in Indostan இந்த புத்தகத்தில் இந்த கோட்டையின் அமைப்பு குறித்து ராபர்ட் ஓர்ம் மிக அழகாக விவரித்துள்ளார்
அதாவது இந்த கோட்டை ஒரு மைல் சுற்றளவில் 200 அடி உயரம் கொண்ட பாறை மீது கட்டப்பட்டுள்ளது கருங்கல் சுவர் கொண்டவலிமையான கட்டமைப்பு என்று குறிப்பிட்டுள்ளார்
வாலிகண்டபுரம் போரில் ஆங்கிலேய தளபதியாக போர் நடத்திய கேப்டன் டால்டன் இந்த கோட்டையின் அமைப்பை பற்றி பதிவு செய்திருக்கிறார்..
இந்தக் கோட்டை மூன்று அடுக்குகளாக உள்ளது
உட்கோட்டை, கீழக்கோட்டை ,மேல்கோட்டை..
உட்கோட்டை பகுதிதான் தொன்றுதொட்டு போர்க்களமாகவே விளங்கியுள்ளது.. படையெடுப்பாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் முதல் பகுதி இதுவேயாகும்.. இதை ஒட்டிய பகுதியில் தான் நாணயச் சாலை, கிணறுகள், குதிரை லாயம் இருந்துள்ளது.. போர்வீரர்கள் படைத்தளபதிகள் செல்வதற்கு தனி வழியும், குதிரைகள் வருவதற்கு தனி வழியும் உள்ளது.. தற்போது அங்கு உள்ள பள்ளிவாசலில் இன்றளவும் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது..
கீழ் கோட்டை பகுதிக்கு செல்லும் படிக்கட்டுகள் அகலமாக இன்றளவும் மாறாத கட்டமைப்பாக உள்ளது..அதன் நான்குபுறமும் சுற்றியுள்ள கருங்கல் சுவர்கள் கட்டுமானம் சிறிதும் குறையாமல் வலுவாக நேர்த்தியாக உள்ளது..
கீழக்கோட்டை நுழைவு வாயில் அருகில் சிவலிங்கம் பிள்ளையார் சிலை அனுமார் கோயில் உள்ளன அதை ஒட்டியுள்ள மண்டபம் நாயக்கர் கால பாணியில் நேர்த்தியாக செதுக்கப்பட்ட தூண்களை கொண்டதாக உள்ளது.. இதற்கு நேர் எதிர் பக்கத்தில் வெட்டவெளி பகுதியை அடுத்து மிக அழகாக கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் உள்ளது.. பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும் கோயில் மண்டபமும் பள்ளிவாசலும் ஒன்றாக இருப்பது போல் மிக அழகாக செய்யப்பட்டுள்ள கட்டமைப்பாக உள்ளது..
மதநல்லிணக்க தன்மையின் உச்சம் என்றே இதை சொல்ல வேண்டும்.. படைவீரர்களின் வழிபாட்டுக்காக கட்டமைக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள் ஆகும்..
இதை ஒட்டி உள்ள பகுதியில்தான் தண்டனை கிணறு உள்ளது..
அதாவது முக்கியமான கைதிகளை கொண்டுவந்து, விசாரணைக்குப் பிறகு அவர்களிடம் தகவலை பெற்றுக்கொண்டு, இந்த தண்டனை கிணற்றில் இறக்கிவிட்டு உணவு தண்ணீர் இன்றி தாமாகவே மரணத்தை தழுவும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.. இன்றும் இந்த கிணறு சேதமடைந்த நிலையில் உள்ளது..
கீழக்கோட்டை சுவர்களில் சரியான அளவில் சிறு சிறு துளைகள் போடப்பட்டுள்ளன.. பருவநிலை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படாத வகையிலும், அதே சமயத்தில் கீழே மனிதர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் விதமாகவும் இவை உள்ளது..
மேல்கோட்டை பகுதியில் நான்குபுறமும் பீரங்கி மேடை, கண்காணிப்பு கோபுரம் ,கொடிமரம், வெடிமருந்து கிடங்கு போன்றவை உள்ளன திறந்தவெளி நீர்த்தேக்கம் ஒன்றும் உள்ளது.. இதை ராணி குளம் என்று தொன்றுதொட்டு அழைக்கின்றனர்..ஆனால் இது நீச்சல் குளமாக இருந்திருக்க முடியாது.. இது இந்த இந்த கோட்டை கட்டும் போது தண்ணீர் தேங்கி வைப்பதற்கு பயன்படுத்திய நீர் தேக்கம்,மற்றும் குடிநீர் வசதிக்கு பயன்படுத்திய நீர்த்தேக்கம் என்றுதான் கருத வேண்டும்..
கோட்டையின் மேல் பகுதியில் பாழடைந்த பகுதிகள் மற்றும் சிதிலமடைந்த வழித்தடங்கள் காணப்படுகின்றன.. இவை சுரங்கப்பாதை இருந்ததற்கான தடயங்கள் என்று கூறப்படுகிறது நிச்சயம் சுரங்கப்பாதை இருந்திருக்க வேண்டும்..
1751-52 ராபர்ட் கிளைவின் தலைமையிலான ஆங்கிலப் படை ஆர்டினல் தலைமையிலான பிரெஞ்சுப் படை ஆகியோருக்கு இடையேயான போரில் ஆங்கிலேயர் கோட்டை மீது பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர் ..அதன் பிறகு ஆங்கிலேய நவாப் கூட்டுப் படைகளுக்கும்- ஹைதர் அலி படைக்கும் நடந்த போரின் போதும் இந்த கோட்டை சேதத்தை சந்தித்துள்ளது..
இப்பேர்பட்ட சிறப்புமிக்க கோட்டையை கட்டியது யார்? என்பது குறித்த பதிவு எங்கேயும் இல்லை.. இந்த இடத்தில்தான் தமிழர்கள் ஒரு வரலாற்று புரிதல் இல்லாமல் வரலாற்றைப் பதிவு செய்யும் எண்ணம் இல்லாமல் இருந்திருக்கின்றனர் என்பதை எண்ணி வேதனைப்பட தோன்றுகிறது..
சுந்தர சோழனின் சிற்றரசன் வன்னாட்டு தூங்கானை மறவன் கட்டியதாக வாலிகண்டபுரம் கோயில் கல்வெட்டுகள் சிறு குறிப்பினை தருகிறது..
நாயக்கர்கள், பிஜப்பூர் சுல்தான் சுல்பீர் கான், மராட்டியர்கள், முகலாய ஆர்காடு நவாப் கூட்டு படைகள் ,கோட்டையை ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி உள்ளனர் ..
தூங்கானை மறவன் காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு, நாயக்கர் காலத்தில் கல் மண்டபம் என ஒரு வடிவம் பெற்றிருக்க வேண்டும்..பீஜப்பூர் சுல்தானின் செஞ்சி ஆளுநராக பணிபுரிந்த சுல்பீர் கான் இந்த கோட்டையை வகைப்படுத்தி முறைப்படுத்தப்பட்ட கட்டமைப்பை உருவாக்கியதாக தெரிகிறது.. மசூதிகள் உட்பட வெடிமருந்து கிடங்கு எல்லாம் அந்த காலகட்டத்தில் உருவாகி இருக்கலாம்.. மராட்டியர்கள் தஞ்சையை பிடித்த காலகட்டத்தில் மேலும் கோட்டை வகைப்படுத்தப்பட்டுள்ளது.. பிரிட்டிஷாரின் முழுமையான ஆட்சிக்கு பிறகு கோட்டைக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.. பிரிட்டிஷார் இதை முழுமையான ஒரு கட்டமைப்பாக பயன்படுத்தி இருக்கலாம் ஏனோ தவறிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது..
இன்றளவும் கோட்டை ஒருசில காலத்தினால் ஏற்பட்ட சிராய்ப்பு தவிர மற்றபடி அதன் உள் கட்டமைப்பு என்பது கட்டுக் குலையாமல் தான் உள்ளது பெருமைக்குரிய ஒன்றாகும்..
அவசியம் நீங்கள் பார்க்க வேண்டும்..
2003 சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இந்த கோட்டை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது அவ்வபோது பராமரிப்பு பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் வட இந்திய பல வரலாற்றுத் தலங்களை பார்த்திருக்கிறேன் அதன் பராமரிப்பில் பத்தில் ஒரு பங்குகூட இந்த வரலாற்று சிறப்புமிக்க காவல் அரண் கோட்டை பராமரிக்கப்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய ஒன்றாகும்..
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க காவல் கோட்டை சில அற்ப மனிதர்களால் காதல் கோட்டையாக செயல்படுத்தப்படுவது மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாகும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...