Thursday, May 19, 2022

இந்தியாவில் 10 பிரபலமான சனி பகவான் கோயில்கள் 😘

 கரிய நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தவர். ஜோதிட சாஸ்திரத்தில் ஆயுள்காரகன் என்ற அதி முக்கியமான பதவியில் இருப்பவர். சூரிய பகவானின் இரண்டாவது புதல்வர். ஜோதிடத்தின்படி சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கியிருப்பார்.

ஆயிரம்தான் கோயில் கோயிலாக சென்று சனிபகவானை வழிபட்டாலும் உண்மையாகவும் மற்றவர்களுக்கு எந்த தீங்கும் செய்யாமல் வாழ்ந்தால் எந்த தோஷத்தில் இருந்தும் தப்பிக்கலாம் என சொல்வார்கள். நாம் செய்யும் தவறுகளுக்கு தண்டனை தந்து நம்மை நல்வழிப்படுத்துபவர் சனி பகவான். இந்தியாவில் சனி பகவானுக்கு ஏராளமான கோவில்கள் உள்ளன.
தோஷம் இருப்பவர்கள் பலரும் இந்த கோவில்களுக்கு வந்து செல்கிறார்கள். அவற்றில் சில பிரபலமான கோவில்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
1. சனி ஷிங்கனாபூர், மகாராஷ்டிரா
இந்தக் கோயில் மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள நேவாசா தாலுகாவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சுவர்கள் அல்லது கூரை இல்லாததால் மிகவும் தனித்துவமாக இருக்கிறது.
மேலும் ஒரு மேடையில் 5 அடி உயரக் கருப்பு கல் உள்ளது. இது சனி பகவானாக வழிபடப்படுகிறது. சோனாய் என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் மேடை கிராமத்தின் நடுவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.
2. சனி தாம் கோயில், புதுடில்லி
புதுடில்லியில் சத்தர்ப்பூர் சாலையில் அமைந்துள்ள இந்த கோயில் டெல்லியில் மிகவும் பிரபலமான ஒரு சனி பகவான் கோயில். இந்த கோவிலில் உலகின் மிக உயரமான சனிபகவான் சிலை உள்ளது. அசோலாவுக்கு அருகிலுள்ள சத்தர்ப்பூர் சாலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
3. யெர்டனூர்சனி கோயில், தெலுங்கானா
இந்தக் கோயில் தெலுங்கானா மாநிலத்தில் மேடக் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 20 அடி உயர சனிபகவான் சிலை உள்ளது.
4. திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், பாண்டிச்சேரி
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் எனவும் அழைக்கப்படும் இந்த கோயில் பாண்டிச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறில் அமைந்துள்ளது. இங்குள்ள சனீஸ்வரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீரும்.
5. மண்டபள்ளி மாண்டேஸ்வர சுவாமி கோயில், ஆந்திரா
இந்த கோவில் ஆந்திராவின் மடப்பள்ளியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒரு சனிபகவான் சன்னதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
6. ஸ்ரீ சனி கோயில், தித்வாலா
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள தித்வாலாவில் அமைந்துள்ள இந்த சனி கோயில் சனி பகவானின் மற்றொரு புகழ் பெற்ற கோயிலாகும். இது தித்வால கணேஷா கோயில் மற்றும் ஸ்ரீ சுவாமி சமர்த் மாதா அருகே அமைந்துள்ளது.
7. பன்னஞ்சே ஸ்ரீ சனி ஷேத்ரா, கர்நாடகா
இந்த கோவில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள பன்னஞ்சியில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் 23 அடி உயர சனிபகவான் சிலை உள்ளது.
8. சனி மந்திர், இந்தூர்
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் காணப்படும் இந்த கோவில் சனி பகவானால் அவருக்காக கோவில் கட்ட சொன்ன இடம். இந்த கோவிலை 300 ஆண்டுகளுக்கு முன்பு கோபால்தாஸ் திவாரி என்பவர் கட்டியுள்ளார்.
ஒருமுறை சனி பகவான் திவாரி கனவில் தோன்றி சனி பகவானின் சிலையை கண்டுபிடிக்க மலையில் தோண்ட சொன்னாராம். திவாரி பகவானிடம் எனக்கு கண் தெரியாது நான் எப்படித் தோன்ற முடியும் என கேட்டாராம்.
சனி பகவான் திவாரியின் கண்களைத் திறக்க சொன்னாராம். அவருக்கு கண் பார்வை கிடைத்ததாம். இந்த அதிசயத்திற்கு பிறகு திவாரி சனி பகவான் பக்தராகவே மாறியிருக்கிறார். சனி பகவான் சொன்ன படி மலையின் அடியில் சனி பகவான் சிலையையும் கண்டாராம். அன்றிலிருந்து இந்த கோயிலில் இருந்து பிரபலமாகி விட்டது.
9. சனீஸ்வர பகவான் கோயில், குச்சனூர்
தேனியில் உள்ள குச்சனூரில் உள்ள சுயம்புவாக வீற்றிருக்கும் சனி பகவானை தரிசிக்க இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.
10. சனி தேவாலயம், மும்பை
இந்த கோயில் மும்பைக்கு அருகில் உள்ள தியோனார் சிலைக்கு அருகில் அமைந்துள்ளது. இது சனேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சனி பகவானின் 7 அடி உயரம் உள்ள கருப்பு சிலை இங்கு உள்ளது.
ஆரத்தி முடிந்ததும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை கோவிலில் மிகவும் விசித்திரமான சம்பவம் நிகழ்கிறது. இந்த சமயத்தில் சனி பகவான் கோயிலின் பிரதான பூசாரி மீது இறங்குகிறார். பக்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்கிறார்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...