Friday, May 20, 2022

எப்போது எதற்கு என்பதில் கவனம்.

 சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் பலருக்கு ஓரளவுக்கு வளைந்து கொடுப்பதற்கும், முற்றிலும் முறிந்து போகும் அளவிற்கு வளைந்து கொடுப்பதற்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

சூழலுக்கு ஏற்ப நம்மை பக்குவப்படுத்திக் கொள்வது அவசியம்தான். அதன் எல்லை எதுவரை என்றும் தெரிந்து வைத்துக்கொள்வது அதைவிட முக்கியம்...
நம்மை உடலளவிலும், மன அளவிலும், பொருளாதார அளவிலும் மற்றவர்கள் நெருக்கடிக் கொடுக்கத் தொடங்குவார்கள்...நாம் ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டு, அதில் சிக்காமல் நிதானித்துக் கொள்ள வேண்டும்...
ஏதேனும் ஓரிடத்தில் சற்றே நெகிழ்ந்து இடமளித்து விட்டால், அந்த இடத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு, நம்மை நசுக்க ஆரம்பித்து விடுவார்கள்...
நம் உடலிலும், மனதிலும் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்துவிடுதல் நன்று. சுருங்கச் சொன்னால் தவறான செயல்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.
ஒரு தவளையைப் பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள், தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்...
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்...
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்...
ஆனால்!, எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது...
ஏனென்றால்!, வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும்.
சிறிது நேரத்தில் அந்தத் தவளை இறந்து விடும்.
எது அந்த தவளையைக் கொன்றது....?
பெரும்பான்மையினர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வார்கள்...
ஆனால்!, உண்மை என்னவென்றால்,
எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமைதான் அதை கொன்றது.
நாமும் அப்படித்தான், தேவையில்லாமல் பலரிடம் அனுசரித்துச் செல்கிறோம். அவசியம் இல்லாமல் சூழலுக்குக் கட்டுப்படுகிறோம். பின்பு நாமும் அவற்றுக்கு முற்றிலும் அடிமையாகி அதில் இருந்து மீண்டு வர நினைத்தாலும் முடியாத ஒரு எல்லைக்குச் சென்று சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்.
நாம் எப்போது அனுசரித்துப் போக வேண்டும், எதற்கு அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதையும், எப்போது எதிர் கொள்ள வேண்டும் எதற்கெல்லாம் போராட வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கட்டாயமாக கவனமாக இருக்க வேண்டும்.
கப்பலுக்கு வெளியே இருக்கும் கடல் தண்ணீர், கப்பலை ஒன்றும் செய்து விட முடியாது. அந்தத் தண்ணீர் கப்பலுக்குள் வந்தால்தான் ஆபத்து. அதுபோல தான் ஆபத்துக்களும், சிக்கல்களும் நாம் அனுமதித்தால் ஒழிய அவற்றால் நம்மை அழிக்க முடியாது.
தீய சூழலுக்குள் நாம் தொலைந்து விடாமல் இருக்கும் விந்தை நம் கைகளில் தான் உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...