Tuesday, May 17, 2022

நெஞ்சம் மறப்பதில்லை,அது நினைவை இழக்கவில்லை...

 நெஞ்சம் மறப்பதில்லை...அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களூம் மூடவில்லை..

நெஞ்சம் மறப்பதில்லை,அது நினைவை இழக்கவில்லை..
திரைப்பட பின்னனி பாடகி பி.சுசீலா தனது காந்தர்வ குரலால் பாடிய காலத்தால் அழியாத இந்தப் பாடலை மீண்டும் பாடிக்கேட்கும் பாக்கியம் அவரது ரசிகர்களுக்கு கிடைத்தது.
வயது முதிர்வின் காரணமாக பி.சுசீலா சினிமாவிலும் மேடையிலும் பாடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் தபால் துறையானது அவருக்கு சிறப்பு தபால் தலை மற்றும் சிறப்பு போஸ்டல் கவரை வெளியிட்டு கவுரவித்தது
சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற இதற்கான விழாவில் கூடியிருந்த ரசிகர்கள் அம்மா உங்க பாட்டு ஒண்ணு பாடுங்கம்மா என்று வற்புறுத்தினர் அதற்கு பதிலளித்த பி.சுசிலா நான் பாடுவதைவிட்டு பல ஆண்டுகளாகிவிட்டது ஆகவே எந்தப்பாடலும் முழுமையாக பாட வராது இருந்தாலும் உங்கள் அன்பிற்கு பணிந்து பாடுகிறேன் என்றவர் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலை அதே ஹம்மிங்குடன் பாடினார்.
அந்தப் பாட்டைக் கேட்டு கைதட்டி மகிழ்ந்த ரசிகர்கள், அம்மா ‛இன்னோரு பாட்டு இன்னோரு பாட்டு' என்று கேட்டு நிறைய பாட்டை பாடவைத்துவிட்டனர்.,அதன்பிறகு சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே,சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு..,உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்லவேண்டும் என்னை பாடச்சொன்னால் என்ன பாடத்தோன்றும்,உன்னை நான் சந்தித்தேன் என்பது போன்ற பாடல்களை பாடினார்.அடுத்டுத்த வரிகள் மறந்து போனதால் பாடல் தொடர்ச்சியாக வரவில்லையே தவிர குரலில் பெரிதாக தொய்வேதும் இல்லை இந்த வயதில் இவ்வளவு துாரம் பாடியதே பெரிய விஷயம்தான் என்றனர் கேட்டவர்கள்.
நான் நிறைய பாடியிருக்கேன் ஆனால் கொஞ்சமாத்தான் பேசுவேன் ஆனால் இன்னைக்கு நான் நிறைய பேசுகிறேன் காரணம் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்றவர்பல விஷயங்களைப் பற்றி பேசும்போது நிறைய இடத்தில் வாய்விட்டு சிரித்தார்.
இதை சுட்டுக்காட்டிப் பேசிய விழாவிற்கு தலைமை வகித்து வடபழநி ஆண்டவர் கோயில் தக்காரும் கோவை தினமலர் வெளியீட்டாளருமான எல்.ஆதிமூலம்,பி.சுசிலாவின் இளைமைக்கும் ஆரோக்கியத்திற்கும் காரணம் அவரது நகைச்சுவை உணர்வுதான் அதற்கு ஓரு உதாரணம் சொல்கிறேன், நான் தக்கராக இருக்கும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு தரிசனத்திற்கு வாருங்களேன் என்று அழைத்தேன்,‛ கூட்டமா இருக்குமே, நான் கூட்டமான இடங்களுக்கு செல்வதில்லையே' என்றார். நீங்கள் வரும்போது கோயிலில் யாருமே இருக்கமாட்டார்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன், உடனே அவர் ‛கோயிலில் யாருமே இருக்கமாட்டார்களா? முருகன் இருப்பாருல்ல'..என்றார் சிரித்துக் கொண்டே.இப்படி எதைச் சொன்னாலும் உடனே அதை நகைச்சுவையோடு முடிச்சுப் போட்டு பேசி அவரும் வாய்விட்டு சிரிப்பார் நம்மையும் சிரிக்கவைத்துவிடுவார் என்றார்.
அவர் சொன்னதற்கு ஏற்ப அந்த விழா முழுவதும் பி.சுசிலா மலர்ந்த முகத்துடன் சிரித்துக் கொண்டே இருந்தார் தனது சிரிப்பை கூட்டத்திற்கு பரவவிட்டார் விழாவிற்கு வந்திருந்த பலருக்கும் அன்றைய விழா அவ்வளவு சீக்கிரம் நெஞ்சத்தை விட்டு மறக்காது என்றே சொல்லலாம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...