Sunday, July 31, 2011

தமிழகத்தில் 2000 ஆயிரம் கோடி கருப்புபணம்

இன்றைய செய்தி தாளைத் திறந்தவுடனே 2ஜிக்கும் இணையான ஊழல் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை ஒன்றினைப் பார்த்தேன். கருப்புப் பண முதலைகள் யார் என்று அரசுக்குத் தெரிந்து அவர்கள் மீது நடவடிக்கை இல்லை என்பது மக்களை ஏமாற்றும் அரசியல் அல்லவா என்று நினைத்தேன். இதோ அந்தச் செய்தியும் அதன் தொடர்பான சில கருத்துக்களும்.
தமிழத்தில் மொத்தம் 11 மெடிக்கல் காலேஜ்கள் இருக்கின்றன. அதில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சீட் ஒன்றிற்கு 35 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை வசூல் செய்கிறார்கள். ஒவ்வொரு காலேஜ்ஜிலும் 35 லிருந்து 53 சீட்டுக்கள் இருக்கின்றன என்றால் மொத்தம் இந்த 11 கல்லூரிகளும் வசூலிப்பது 210 கோடி கருப்புப் பணம். இது அத்தனையும் அன்னக்கவுண்டட் மணி.
7 டீம்டு பல்கலைகழங்கள் அரசுக்கு எந்த வித சீட்டுகளும் ஒதுக்க வேண்டியதில்லை. ஆக இவர்கள் அடிக்கும் கொள்ளைப் பணம் 280 கோடி. இதுவும் கருப்புப் பணம்.
மெடிக்கல் கல்லூரிகள் வருடம் தோறும் மொத்தமாய் மக்களிடமிருந்து உருவும் பணம் ரூபாய் 500 கோடி என்று வைத்துக் கொண்டால் படிப்புச் சொல்லிக் கொடுக்கிறோம் பேர்வழி என்று கிளம்பியிருக்கும் தனியார் டிரஸ்ட் மொதலாளிகளின் கருப்புப் பணத்தின் அளவினை எண்ணிப் பாருங்கள். இது ஸ்பெக்ட்ரம் பணத்தினை விட அதிகமல்லவா????
அடுத்து, இஞ்னியரிங் கல்லூரிக் கணக்கு.
தமிழகத்தில் அரசு அனுமதி பெற்ற கல்லூரிகள் 494. இக்கல்லூரிகளில் 100 கல்லூரிக்கும் மேலே உயர்ந்த தரம் கொண்டவையாக ஆக்கப்பட்டிருக்கின்றன. அரசு கோட்டா தவிர மீதமுள்ள மேனேஜ்மென்ட் கோட்டாவிற்கு ஆவரேஜாக 10 லட்சம் வைத்தால் மொத்தமாக 1500 – 2000 கோடி ரூபாயை மேற்படிக் கல்லூரிகள் கருப்புப் பணமாக வசூலிக்கின்றன.
இவ்வளவு பணமும் மொத்தமாய் 500 பேருக்கு மட்டுமே பங்கிடப்படுகின்றன என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏழைகளிடம் இருக்கும் பணம் கல்வி என்ற பெயரில் கொள்ளை அடிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் வருடத்திற்கு 2000 கோடி ரூபாய்க்கும் மேல் கல்வி நிறுவனங்கள் கருப்புப் பணமாகப் பெறுகின்றன என்று வைத்துக் கொண்டால், இந்தியாவெங்கும் கணக்கெடுத்தால் தலையைச் சுற்றும் அல்லவா?
கல்லூரிகளில் மட்டும் இத்தனை கருப்புப் பணம் என்றால் ஆரம்ப கல்வி நிலையங்களில் எத்தனை கருப்புப் பணம் சேரும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.  தனியார் கலைக்கல்லூரிக் கணக்குகள் என்பது வேறு. ஆசிரியர் கல்வி, பட்டயப்படிப்புகள் கல்விக் கணக்குகள் வேறு தனியாக இருக்கின்றன.
இவ்வளவு கருப்புப் பணம் விளையாடுவது அமலாக்கத்துறைக்கு தெரியாது என்றா நினைக்கின்றீர்கள்??? இல்லை சிபிஐக்குத்தான் தெரியாதா? இல்லை நீதிமன்றங்களுக்குத்தான் தெரியாதா? அரசுக்கு தெரியாதா? அனைவருக்கும் நன்றாகத் தெரியும் இந்த பிசினசை ஏன் இவர்கள் கண்டுகொள்ளவே இல்லை? காரணம் அரசுகளும், அரசு அமைப்புகளும் மக்களை ஏமாற்றுகின்றன.
அன்னா ஹசாராவிற்கு இது தெரியாதா? ஏன் அன்னா ஹசாரே இந்தியாவிலிருக்கும் தனியார் பள்ளி நிறுவனங்களை அரசுடைமையாக்கப் போராடவில்லை. இங்கிருந்துதானே கருப்புப் பணம் சேர ஆரம்பிக்கின்றது? இந்தியாவில் கருப்புப் பணமுதலைகள் என்போர் தனியார் கல்வி நிறுவன அதிபர்களே. இவர்களிடமிருந்து கல்வி பிடுங்கப்பட்டால் அதுவே கருப்புப் பணத்திற்கான போராட்டத்தின் முதல் ஆரம்பமாய் இருக்கும்.
ஆனால் யார் செய்வார்கள்????
தனியார் பிராந்திக்கடை நடத்திக் கொள்ளை அடிக்கின்றார்கள் என்பதற்காக, அரசே மதுக்கடைகளை நடத்தச் செய்த அம்மா, தனியார் கல்விக் கூடங்களையும் அரசுடமையாக்குவாரா? கேபிள் டிவியை அரசுடைமையாக்கினால், அது போல கல்வித் துறையையும் அரசுடைமையாக்கினால் என்ன?? யாராவது வழக்குப் போடுவார்களா? யார் செய்வார்கள் இந்த நற்காரியத்தை?????
மக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது ! கருப்புப் பண ஒழிப்புப் போராட்டம், ஊழல் ஒழிப்பு போராட்டத்துடன், தனியார் கல்வி ஒழிப்புப் போராட்டமும் ஆரம்பிக்கப் பட வேண்டிய சரியான தருணம் இது
இந்திய அரசு மட்டுமல்லாமல் மா நில அரசுகளும் கல்வியில் தனியாரை உடனடியாக நீக்கி, அனைத்துத் தனியார் கல்வி நிலையங்களும் அரசுடமையாக்கப்படல் வேண்டும். அதை விடுத்து, ஊழல், கருப்புப் பணம் என்பதெல்லாம் வெற்றுக் கூச்சலாய் முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...