Monday, July 25, 2011

கட்சியின் அடுத்த தலைவர் யாரென்பது உட்பட நிருபர்களின் கேள்விக்கு கருணாநிதி அளித்த காரசாரமான பதில்கள்

கோவையில் நேற்று 2 நாட்களாக நடந்த செயற்குழு- பொதுக்குழு கூட்டம் நேற்று இரவு முடிந்தது. கூட்டம் முடிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்ட மேடையிலேயே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இன்றைய பொதுக்குழுவில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?

பதில்:- பொதுக்குழு உறுப்பினர்கள் மொத்தம் 1485 பேர். அவர்களில் வருகை தந்தோர் 1320 பேர். அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மொத்தம் 408 பேருக்கு வருகை தந்தோர் 400 பேர். சிறப்பு அழைப்பாளர்கள் 348 பேருக்கு வருகை தந்தோர் 330 பேர். மொத்தம் 2241 பேர்களில் வருகை தந்தோர் 2050 பேர்.

கேள்வி:- பொதுக்குழுவில் எடுத்த முக்கிய முடிவுகள் என்ன?

பதில்:- பொதுக்குழுவில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, உங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அவைகள் தான் முக்கியமான முடிவுகள்.

கேள்வி:- தேர்தலுக்கு பிறகு நடைபெறுகிற முதல் பொதுக்குழு இது, காங்கிரஸ் கட்சியோடு உங்கள் கூட்டணி தொடருமா? என்பது பற்றியும், மத்தியில் 2 மந்திரிகளை தி.மு.க. அனுப்புவது பற்றி தி.மு.க. முடிவு செய்யும் என்றும் சொல்லி இருந்தீர்கள்? அதுபற்றி முடிவு எடுக்கப்பட்டதா?

பதில்:- மத்திய அமைச்சரவையில் 2 பேர் சேருவது பற்றி மூத்த மத்திய அமைச்சர்கள் என்னிடம் பேசினார்கள், அது பற்றி நானும், பேராசிரியரும், மற்றும் கழகத்தின் நிர்வாகிகளும், பாராளுமன்ற கழக குழு நிர்வாகிகளும், கலந்து பேசி எடுத்த முடிவைத்தான் இன்றைக்கு பொதுக்குழு இறுதியில் நான் அறிவித்து இருக்கிறேன்.

அதாவது "ஸ்டேட்டஸ் கோ வில் கன்ட்டினிï'' என்று சொல்லி இருக்கிறேன். அதாவது இரண்டு மந்திரி பதவிகள் தி.மு.க.விடம் இருந்து போனது போனது தான். அவர்களுக்கு பதிலாக யாரை? நியமனம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. ஏற்கனவே ராஜா இல்லை. தற்போது தயாநிதிமாறனும் விலகி விட்டார். அந்த 2 இடங்களும் தி.மு.க.வை பொறுத்தவரை வெற்றிடங்களாக இருக்கும்.

அவற்றை நிரப்ப தி.மு.க. முனையாது. ஆனாலும் அந்த இரண்டு இடங்களும் தி.மு.க. சார்பில் நிரப்பப்படாவிட்டாலும் கூட தி.மு.க. தொடர்ந்து காங்கிரஸ் அணியில் இருக்கும். அதைத் தான் ஆங்கிலத்தில் இங்கே "ஸ்டேட்டஸ் கோ வில் மெயின்டெய்ன்''என்று சொன்னேன்.

கேள்வி:- காங்கிரஸ் கட்சியின் மீது உங்களுக்குள்ள அதிருப்தியின் வெளிப்பாடு என்று சொல்லலாமா?

பதில்:- கட்சியின் மீது எங்களுக்கு அதிருப்தி இல்லை. ஆனால் இங்கே சில பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் மீது இருக்கிற அதிருப்தியை நாங்கள் எண்ணிப் பார்க்கிறோம். அதாவது சில காங்கிரஸ்காரர்கள் இங்கே கூட்டங்களில் பேசுகிறார்கள். அவர்கள் வெளிப்படுத்துகிற அதிருப்தியைதான் பொதுக்குழுவிலே உறுப்பினர்கள் எல்லாம் எடுத்து சொன்னார்கள்.

அதன் காரணமாகத்தான் எந்த மாற்றத்தையும், இப்போது நாங்கள் செய்யாமல், மத்திய அமைச்சர் பதவியை ஏற்காமல், புதிய அமைச்சர்களாக யாரையும் நியமிக்காமல், ஏற்கனவே இருக்கிற அமைச்சர்கள் அப்படியே நீடிப்பார்கள் என்பதைத்தான் நான் சொன்னேன்.

கேள்வி:- பிரதமர் மன்மோகன்சிங் 2 இடங்கள் பற்றி தி.மு.க. அறிவிக்கும் என்று சொல்லி இருந்தாரே?

பதில்:- தி.மு.கழகத்தின் முடிவைத்தான் இப்போது அறிவித்து இருக்கிறேன்.

கேள்வி:- மத்திய புலனாய்வுத்துறை- சி.பி.ஐ. ஏற்கனவே போபர்ஸ் வழக்கில் உலக அளவில் அது ஒரு சார்பானது என்பதை நிரூபித்திருக்கிறது. தற்போது நீங்கள் சி.பி.ஐ. உள்நோக்கத்தோடு செயல்பட்டிருப்பதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறீர்கள். அதை காரணமாக வைத்து நீங்கள் சி.பி.ஐ. மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்:- நாங்கள் சி.பி.ஐ. என்ற அமைப்பையே குற்றம் சொல்ல வில்லை. அந்த அமைப்பிலே உள்ள சிலர்- அந்த அமைப்பின் பொறுப்பிலே உள்ளவர்கள்- சில பேர் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

கேள்வி:- உங்களுக்கு பிறகு யார் உங்கள் கட்சியின் தலைமைக்கு வருவார்கள் என்று கேட்டதற்கு நீங்கள் பொதுக்குழுதான் அதை முடிவு செய்யும் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த பொதுக்குழுவில் அடுத்த தலைமையைப் பற்றி முடிவு செய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாக இருந்தது. அதைப் பற்றி முடிவெடுக்கப்பட்டதா?

பதில்:- ஒவ்வொரு பொதுக்குழு கூடும் போதும், மீடியாக்கள் செய்கிற கலகத்துக்காக நாங்கள் ஆட்களையோ, தலைவர்களையோ மாற்றிக் கொண்டிருக்க முடியாது. இது சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட கட்சி.

அண்ணா காலத்தில் இருந்து சட்ட திட்டங்கள், விதிமுறைகளை வகுத்துக் கொண்டு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை நடத்துவது- எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர்களைச் சேர்ப்பது- தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்றெல்லாம் திட்டமிட்டு பணி புரிகின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக்கழகம். இந்த கேள்வியைக் கேட்ட சேகர் போன்றவர்களின் இஷ்டத்துக்கு நாங்கள் மாற்றிக் கொண்டு இருக்க முடியாது.

கேள்வி:- இன்றைக்குக்கூட பொதுக்குழுவில் பேசிய மூத்த தலைவர் எதிர்காலத்திற்கு ஒரு மூத்த தலைவரைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்று பேசியிருக்கிறாரே?

பதில்:- சேகர் என்ற செய்தியாளரை தி.மு.கழகத்தின் எதிர்கால தலைவராக (அனைவரும் சிரிப்பு) தேர்ந்தெடுக்கலாம் என்று கூட பேசினார்கள்...

கேள்வி:- உள்கட்சியிலே கீழ்மட்டத்திலிருந்து பொறுப்புகளில் மாற்றம் வருமா?

பதில்:- இல்லை.

கேள்வி:- பொதுக்குழுவின் மாலைக்கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லையே?

பதில்:- பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை என்றால் வந்தே இருக்க மாட்டார். வந்திருந்தார், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதற்குப் பிறகுதான் ஊருக்குச் சென்றிருக்கிறார்.

கேள்வி:- இந்த தேர்தல் தோல்விக்கு தி.மு.க.தான் காரணம் என்று பா.ம.க. சொல்லியிருக்கிறது. கொங்குநாடு முன்னேற்றக்கட்சியும் சொல்லியிருக்கிறதே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- தி.மு.கழகத்தின் இந்த தோல்விக்கு நான்தான் காரணம் என்று பொதுக்குழுவிலே நானே பேசியிருக்கிறேன். அதற்கான விளக்கத்தையும் அளித்திருக்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...