Sunday, July 24, 2011

கருணாநிதியே நிரந்தர தலைவர் ஸ்டாலின் அழகிரி மோதலுக்கு கோவையில் முற்றுப்புள்ளி

திமுகவை வலுப்படுத்த அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் 7 பேர் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படவுள்ளது. இந்தக் குழு, கட்சியின் புதிய சட்ட திட்டங்களை வகுக்கும் என்று கோவையில் நடந்த அக் கட்சியின் பொதுக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூரில் திமுக செயற் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இன்று பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட-மாநில செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் செயற் குழுவில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. பின்னர் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:

-கடந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த 1 கோடியே 45 லட்சம் பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

-தி.மு.கவை வலுப்படுத்த 7 பேர் கொண்ட முக்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவுக்கு அமைப்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் தலைமை ஏற்பார். இந்தக் குழு, கட்சியின் புதிய சட்ட திட்டங்களை வகுப்பதற்கான பணிகளில் ஈடுபடும். அடுத்த பொதுக் குழுவில் இவர்கள் தங்கள் ஆலோசனைகளை, சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுப்பார்கள்.

-நில அபகரிப்பு என்ற பெயரில் திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஏழைகளின் நிலத்தை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

-அதிமுக அரசு சமச்சீர் கல்வியைக் குழித்தோண்டி புதைக்க முயற்சிப்பது மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றும் காரியமாகும். இது பள்ளி மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி அவர்கள் படிப்பைப் பாழாக்கிடும் செயல் என்று இப்பொதுக்குழு அறிவிப்பதோடு, இருளிலும் ஒரு ஒளியாக சென்னை உயர்நீதிமன்றம், திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்விக்குப் பாதுகாப்பாக அண்மையில் அளித்துள்ள மகத்தான தீர்ப்பு மனக் கவலை போக்கும் மாமருந்தாக அமைகிறது.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு நன்றி தெரிவிப்பதோடு, அதனையேற்க வேண்டு மென்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்கள் பலரும் அதிமுக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், அதனையேற்காமல் உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்தது என்பது யாரையும் எந்தக் கட்சியினரையும் மதிக்காத செயல் என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு- அதற்குத் தகுந்த பாடம் கற்பிக்கத்தக்க வகையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாதென்றும், ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் சமச்சீர் பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டுமென்றும் கூறியிருப்பதை இப்பொதுக்குழு வரவேற்பதோடு- அதனை மதிக்காமல் அந்த உத்தரவை அவமதிக்கின்ற அளவிற்கு அரசு சமச்சீர் பாடப்புத்தகங்களை இதுநாள் வரை மாணவர்களுக்கு வழங்காமலும், அரசு பாடநூல் கழக வெப்சைட்டில் இருந்த சமச்சீர் கல்விப் பாடப்புத்தப் படிவங்களை நீக்கம் செய்தும் இருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றது.

-முல்லைப் பெரியாறில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

-இலங்கையில் சிங்களவர்- தமிழர்கள் என்ற இரு சாராரும் சம உரிமைகளோடு வாழ்வதற்கும் வழிகாணும் என்ற நம்பிக்கையோடு அதற்கான ஆக்க பணிகளுக்கு திராவிட முன்னேற்ற கழகம் அன்று போல் இன்றும்- என்றும் தமிழ் ஈழ மக்களின் தனி உரிமைக்கு துணை நிற்கும் என இந்த பொதுக் குழு உறுதி கூறுகிறது.

-இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் குற்றங்கள் பற்றி ஐக்கிய நாடுகள் அவையின் விசாரணைக் குழு அறிக்கையில் காணப்படும் போர் குற்றங்களுக்கான பன்னாட்டு குற்றவியல் நீதி மன்றத்தில் இந்த கொடுஞ்செயலுக்கு காரணமானவர்களை தண்டிக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு மனித உரிமையை போற்றுகிற இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என்று இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.

ஈழத் தமிழர்களின் உரிமை காத்திட அவர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி ஒர் அரசியல் தீர்வுக்கு வழி காண வேண்டும் என இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

-கச்சத்தீவினை இந்தியாவிற்கே திரும்ப பெறுவதற்கும் உரிய சட்ட நடவடிக்கைகளை மேலும் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

-திராவிட முன்னேற்றக் கழகத்தை கருணாநிதியே தொடர்ந்து தலைமையேற்று வழி நடத்துவார் என்பது உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதே நேரத்தில் காங்கிரசுடனான கூட்டணி தொடர்பாகவோ, மத்திய அமைச்சரவையில் ராசா, தயாநிதி மாறனுக்குப் பதில் பிற திமுக அமைச்சர்களை சேர்ப்பது குறித்தோ எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

கருணாநிதியே தலைமையேற்று வழி நடத்துவார் என்ற தீர்மானத்தின் மூலம் ஸ்டாலின், அழகிரி பதவி மோதலுக்கு திமுக இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...