Wednesday, August 24, 2022

வாழ்க்கை.

 தனது குடும்பம் என்ற ஒரு பத்துப் பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்துப் பேர், தனது தொழிலில் ஒரு பத்துப் பேர், தனது வீதியில் ஒரு பத்துப் பேர், தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்...!!!

இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாகக் காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த சமுதாயம் மனிதர்களுக்குப் போதிக்கிறது.

எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அதை விட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் ; அப்போதுதான் மதிப்பு, என்று போலியான வாழ்க்கை வாழக் கட்டாயப்படுத்துகிறது.

அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு அடைந்ததும் பிறரை ஏளனமாகக், கேவலமாக நினைக்கச் சொல்கிறது.

இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனைப் பாதிக்கின்றன. இதற்காகத் தன்னுடைய அத்தனை ஆசா பாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் ஆனது என்பது தெரிவதில்லை.

என்னுடைய தாத்தாவின் தாத்தா எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது !

எப்படி வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியாது !!

அவர் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது !!!

அவர் பெயர் கூட எங்கள் தெருவில் பலருக்குத் தெரியாது, எங்கள் ஊரில் யாருக்கும் தெரியாது !!!

இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும் !

நான் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் அத்தனையும் கால ஓட்டத்தில் மறையும்!!

ஆக எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரத்தை நான் கண்டுகொள்ள வேண்டும் ???

யார் இவர்கள் ???

என்னுடைய வாழ்க்கையில் யாரெல்லாம் வர வேண்டும், வரக்கூடாது என்பதைத் தீர்மானிக்க இவர்கள் யார் ???

நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை !

அதிக பட்சம் இன்னும் சில ஆண்டுகள் !

அதுவும் வெகு தொலைவில் இல்லை !

சர்வமும் ஒருநாள் அழியும் !

மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது!

கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்று தத்தமது வாழ்க்கையை யாரும் போலியாக வீணடித்து விடாதீர்கள்.

வாழ்க்கை ஒரே ஒரு முறைதான் !

தோற்றால் பரவாயில்லை, ஆனால் பங்கெடுக்காமலேயே அழிந்து விடாதீர்கள்.

நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை. அதேபோல் நம் பேரனின் பேரனை நாம் பார்க்க இருக்கப் போவதில்லை. இது தான் வாழ்க்கை.

"பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டுச் செல்லுங்கள்"

சரிதானே  !!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...