Thursday, August 25, 2022

காமராஜர் போல் இன்னொருவர் வரமுடியுமா ? அவர் எளிமை என்னை வியக்க வைத்தது.

 தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .

காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மதுரைக்கு சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்குச் சென்றார் காமராஜர் .
வீட்டிற்குள் நுழைந்ததும் படுக்கையில் இருந்த காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் , கண் விழித்துப் பார்த்தார் .
மகனைப் பார்த்ததும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டார் .
அருகில் உட்கார்ந்த காமராஜர் அம்மாவிடமும் , சகோதரியிடமும் விசாரித்து விட்டுக் கிளம்பினார் .
'அப்போ..நான் வர்றேன்.. உடம்பை நல்லாப் பார்த்துக்க '' என்று கிளம்பிய போது , உலர்ந்த குரலில் சிவகாமி அம்மாள் சொன்னார் .
'' ஒரு வாய் சாப்பிட்டுட்டு போ ''
'' வேண்டாம்மா ''
என்று முதலில் மறுத்தவர் '' சரி..சரி. சாப்பாடு எடுத்து வைங்க '' என்று கூறி , அடுக்களைக்குள் சென்று தரையில் அமர்ந்தார் .
அவருடைய சகோதரியின் மகள்கள் உணவு பரிமாறினார்கள் .
அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு , அம்மாவைப் பார்த்து கை கூப்பினார் காமராஜர் .
''அப்போ நான் வரட்டுமா..? ''
சொந்த வீட்டில் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு , தாயாரின் இறுதிக் காலத்தில் காமராஜர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டதாக இது குறித்து எழுதியிருந்தார் எழுத்தாளர் சாவி .
''மரணத்தின் போது இன்னொருவர் பணம் கொடுக்கிறார்.பல்லக்கு கட்டுகிறவர் இலவசமாக கட்டித் தருகிறார் . வந்தவர்களுக்கு ஒரு வேளை சோறு போட இடமும் இல்லை . பணமும் இல்லை.பத்து வருஷம் ராஜாங்கம் நடத்தினான் மகன்..! பெற்ற தாய் வாழ்ந்த கதை இப்படி ! ''
- என்று காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள் மறைந்த போது எழுதினார் கவிஞர் கண்ணதாசன்
விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த அந்த எளிய வீட்டை , இந்திரா காந்தியிலிருந்து லால்பகதூர் சாஸ்திரி வரை , பலரும் வந்திருக்கிற வீட்டை , பிறகு அரசுடமை ஆக்கியிருந்தார்கள் .
குமுதத்தில் எழுதுவதற்காக 1995 ஆம் ஆண்டில் விருதுநகரில் உள்ள காமராஜரின் வீட்டுக்கு போயிருந்தேன் .
அருகில் இன்னொரு வாடகை வீட்டில் , காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகளான கமலாதேவி வசிப்பதாகச் சொன்னதும் , அங்கு போனேன் .
மிகவும் எளிமையான வீடு .
காமராஜர் மறைந்த பிறகு , பாரத ரத்னா கொடுக்கப்பட்ட போது , அதைப் பெற்று கொண்டவர்கள் நாகம்மாள் குடும்பத்தினர் தான் .
63 வயதான ,
காமராஜரின் மருமகளான கமலாதேவி வறுமையில் ஒடுங்கிப் போயிருந்தார் .
கணவர் இறந்து விட, அவருடைய மகன்கள் தீப்பெட்டி ஆபிஸில் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் .
மிகக் குறைந்த வருமானம் , குடும்பத்தைத் தவிக்க வைத்திருந்தது .
''நாங்க ஏழு பேர் இருக்கோம் . சாப்பிடவே கஷ்டமா இருக்குப்பா.
கஷ்டம் தாங்காம கலெக்டர் காலில் கூட விழுந்து அழுது கூட கேட்டுப் பார்த்துட்டேன்.எந்த வேலையும் கிடைக்கலைப்பா.
- எதிரில் இருந்த நாகம்மாளின் குரல் ஏறி இறங்கியது.
பெருமூச்சு விட்டார்.
"இப்போ பக்கத்து வீடுகளில் வேலை செய்றேன். கூட்டுறேன்.இந்தா இருக்கு.பாருப்பா பக்கத்தில் இருக்கும் (காமராஜரின்) எங்க மாமா வீட்டை கூட்டிப் பெருக்கிறதில எனக்கு என்ன அவமானம் இருக்குப்பா.? .'' -
என்று கூறியபடி கசிந்து அழுதார் , ஒரு முதல்வராக இருந்தவரின் மருமகள் .
சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் .
''மாமா இருக்கிற வரை அவருக்கும் சேர்த்துக்கலை. குடும்பத்துக்கும் சேர்த்துக்கலை.
வீட்டை சுட்டிக் காட்டுகிறார் .
எங்க மாமா வீட்டிலே , பெருக்கிற வேலையாவது வாங்கி கொடுக்க சொல்லுப்பா.உனக்கு புண்ணியமா இருக்கும்.
அங்கே கூட்டினாலாவது கையில் ஐம்பதோ,நூறோ கூலியா கிடைக்குமில்லைப்பா.நான் அங்கே போய் பெருக்கினா , அவமானம்னு சொல்றாங்க..
நம்ம நிலைமை இப்படி இருக்கிறப்போ இப்போ பாருப்பா..விதவை பென்ஷனுக்கு மனுப் போடுற நிலைமையிலே இருக்கேன் ''-
- சொல்லும் போது கை கூப்பின காட்சி , முள்ளாய் உறுத்தியது .
அடுத்த வாரம் 1996 , மே மாதத்தில் குமுதத்தில் ,
'' வீட்டு வேலை செய்யும் காமராஜரின் மருமகள் 'என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளி வந்தது .
வெளிவந்த மறுவாரத்தில் ஆச்சரியமான ஒரு மாற்றம் !
அன்றைய முதல்வர் ஜெயலலிதா..
காமராஜரின் குடும்பத்திற்கு வீடும் , வேலை வாய்ப்பும் , வங்கியில் 11 லட்சம் ரூபாய் டெபாசிட்டும் பண்ணுவதாக அறிவிப்பு வெளியானது .
அந்தத் தகவலை சொல்ல , மறுபடியும் விருதுநகரில் உள்ள கமலாதேவி வீட்டுக்குப் போன போது , அந்த அம்மையார் நெருங்கி வந்து கையைப் பிடித்துக் கொண்டார் .
கண்கள் ததும்பின .
கனிந்த பார்வையில் நன்றி சொன்னார் கமலாதேவி அம்மாள் என்று எழுத்தாளர் மணா அவர்கள் எழுதியுள்ளார் .
இப்படியும் ஒரு மனிதர் தமிழகத்தில் முதல்வராக இருந்துள்ளார் என்பது தமிழுக்கு , தமிழகத்துக்குப் பெருமை தான்
இவை எல்லாம் ஏதோ நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த கதை இல்லை . எல்லாம் இதோ நம் கண் முன்னே நடந்தது
நாம் ஒவ்வொருவருமே இப்போது உள்ள அனைத்து ஊழல்வாதிகளையும் அறிந்து தான் வைத்துள்ளோம் .
இருந்தும் நாம் அவர்களைத் தான் தவைர்களாக ஏற்றுக் கொண்டு , மாறி மாறி அவர்கள் பெருமை பேசி , திரும்பத் திரும்ப ஆதரித்து வருகிறோம் . இனியும் ஆதரிக்க வெட்கமில்லாமல் தயாராக இருக்கிறோம் .
இது என்ன மாதிரியான மக்கள் மன நிலை..?
மக்கள் நலனுக்காகவே கடைசி வரை தொலைநோக்கு பார்வையுடன் உழைத்த பெரும் தலைவர்
காமராஜரை தோற்கடித்த இப்படிப்பட்ட விவரம் கெட்ட ஊழல் வாதிகள் கொண்ட கூட்டணியைத் தான் , அரசியலில் இப்போது படித்தவர்களும் சேர்ந்து கொண்டு வந்து , தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம்..!
May be an image of indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...