Friday, August 26, 2022

சொத்து விபரம் தாக்கல் செய்யணும்: நடிகர் விஷாலுக்கு கோர்ட் உத்தரவு.

படத் தயாரிப்பு நிறுவனமான 'லைகா' தொடர்ந்த வழக்கில், நடிகர் விஷாலின் சொத்து விபரங்களை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் விஷாலுக்கு சொந்தமாக, சினிமா தயாரிப்பு நிறுவனம் உள்ளது.


தன் நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக, 'கோபுரம் பிலிம்ஸ்' நிறுவனத்திடம் இருந்து, 21.29 கோடி ரூபாய் பெற்றார். இந்த தொகையை, 'லைகா' நிறுவனம் செலுத்தியது. லைகா நிறுவனமும், விஷாலும் ஒப்பந்தம் மேற்கொண்டனர். அதன்படி, கடன் தொகையை திருப்பி செலுத்தும் வரை, விஷால் நிறுவன படங்களின் உரிமைகளை, லைகாவுக்கு வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.இந்நிலையில், கடன் தொகையை வழங்காமல், வீரமே வாகை சூடும் படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிடவும், 'சாட்டிலைட்' மற்றும் ஓ.டி.டி., உரிமையை விற்கவும் தடை விதிக்கக் கோரி, விஷால் நிறுவனத்துக்கு எதிராக, லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பெயரில், தேசிய வங்கியில் மூன்று வாரங்களில் 'டிபாசிட்' செய்ய, விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு நேற்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன், விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில், நடிகர் விஷால் ஆஜரானார். உத்தரவை அமல்படுத்தாதது குறித்து, நீதிபதி கேள்வி எழுப்பினார்.'லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்ததால், பணத்தை செலுத்தவில்லை; ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.


latest tamil news



ஆறு மாதங்கள் கழிந்தாலும் பணத்தை செலுத்த இயலாது' என, விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, லைகா தரப்பில், நடிகர் விஷால் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதாகவும், கணக்கு விபரங்களை தாக்கல் செய்யட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.'படங்களில் தொடர்ந்து நடிக்கும்போது, கடன் தொகையை திருப்பிச் செலுத்தலாமே...' என நீதிபதி கூறியதற்கு, ஏற்கனவே ஏற்பட்ட இழப்பை சரி செய்யவே தொடர்ந்து படங்களில் நடிப்பதாக, விஷால் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, விஷால் தரப்பில் விளக்கமும், சொத்து விபரங்கள் அடங்கிய மனுவையும் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, செப்டம்பர் 9க்கு தள்ளி வைத்து, அன்று விஷால் ஆஜராகவும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...