Monday, July 4, 2011

தயாரிப்பாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்:

மோசடி வழக்கில், சன், "டிவி' நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை போலீசார் கைது செய்ததற்கு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சங்கத்தின் முன் நேற்று ஒன்று கூடி பட்டாசு வெடித்து, உறுப்பினர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.சென்னை ஆயிரம் விளக்கில் இயங்கி வரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு, 50க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் நேற்று பகல், 12 மணிக்கு வந்தனர். தயாரிப்பாளரை மோசடி செய்த, ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை கைது செய்த போலீசாருக்கு, தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடிய தயாரிப்பாளர்கள், பத்தாயிரம் வாலா பட்டாசு வெடித்தும், அனைவருக்கும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அதன் பிறகு, தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல், 2006ம் ஆண்டு நடந்தபோது, அப்போதைய அரசின் செல்வாக்கில், அராஜக முறையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்றவர்கள் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டனர்.கடந்த ஐந்து ஆண்டு காலமாக, சன், "டிவி' மற்றும் கலைஞர், "டிவி' சேனல்களின் நலனில் அக்கறை செலுத்தி, சங்கத்தில் பதவி வகித்தவர்கள், பல முறைகேடுகள் செய்து, தயாரிப்பாளர்கள் நலனை காக்கத் தவறி, தமிழ்த் திரைப்படத் துறையை பல கோடி ரூபாய் நஷ்டத்திற்கு தள்ளிவிட்டனர்.
தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மதுரையில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், "நான் ஆட்சிக்கு வந்தால், தீய சக்திகளின் பிடியிலிருந்து தமிழ்த் திரைப்படத் துறையை மீட்டெடுப்பேன்' என்று உறுதியளித்தார். இதை நிறைவேற்றும் வகையில், "கேபிள் "டிவி' அரசுடமையாக்கப்படும். அந்தத் துறை, என் கட்டுப்பாட்டில் இருக்கும்' என்று அறிவித்து, அரசு கேபிள், "டிவி' நிர்வாக இயக்குனராக ஜெயராமன் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.



பல தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிட தியேட்டர் கிடைக்காமலும், வாங்கிய படங்களுக்கு சரியாக பணம் தராமலும், பல சிறிய படங்கள் வெளிவர முடியாத நிலையை உருவாக்கியும், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களையும், வஞ்சித்த சன், "டிவி' தலைமை நிர்வாகி சக்சேனாவை கைது செய்ததன் மூலம், தமிழ்த் திரையுலகம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.



சேலத்தைச் சேர்ந்த டி.எஸ்.செல்வராஜ், "கந்தன் பிலிம்ஸ்' என்ற பெயரில், "தீராத விளையாட்டு பிள்ளை' என்ற படத்தை வினியோகம் செய்தார். இப்படம் வினியோகம் செய்த வகையில், சன், "டிவி' நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, 82 லட்சம் ரூபாயை தராமல் மோசடி செய்துவிட்டார் என்று சென்னை மாநகர போலீசில் செல்வராஜ் புகார் கொடுத்தார். இதன் பேரில், ஹன்ஸ்ராஜ் சக்சேனா போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் தள்ளப்பட்டுள்ளார். போலீசாரின் இந்நடவடிக்கையை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரவேற்றுள்ளனர்.சன், "டிவி'யால் பாதிக்கப்பட்ட சினிமா தயாரிப்பாளர்கள் பலரும், தற்போது அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து விட்டதால், அந்த "டிவி'க்கு எதிராக போலீசில் புகார் கொடுக்க துணிச்சலாக முன்வந்துள்ளனர். இதனால், அடாவடியாக நடந்து கொண்ட, "டிவி' கடும் நடுக்கத்தில் உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...