Friday, July 22, 2022

மன்னனும் மா முடியும் ஒரு நாள் மண்ணிலே விழுந்தே தீரும் இதுதான் இயற்கையின் நியதி.

 கோடிபேர் அனுதினமும் பிறந்து சாகும் உலகில் எத்தனையோ பலகோடி மானிடர்கள் வந்து சென்ற உலகில் ஒருசிலரே வரலாறு படைக்கின்றார்கள், ஒரு சிலரே வரலாறு ஆகின்றார்கள்

அந்த அதிசய வரலாற்றில் முக்கியமானவன் கிரேக்க அலெக்ஸாண்டர், உலகையே வென்று அதை கிரேக்க ஞானபடுத்துவேன், கிரேக்க ஞானம் தர்மமுமே அதி சிறந்தது என 16 வயதிலே படைதிரட்டினான்
20 வயதுக்குள் மேற்காசியாவினை அலற வைத்தான் 25 வயதில் பெரும் அரசனான் , 30 வயதில் வீழ்த்தமுடியா பாரசீக அரசனை வீழ்த்தி மாபெரும் ராஜ்ஜியத்தை அமைத்து கிரேக்கம் முதல் எகிப்துவரை அப்படியே இன்றைய ஆப்கன் வரை பெரும் கிரேக்க தர்ம சாம்ராஜ்யத்தை அமைத்தான்
இந்தியா எனும் கனவு பூமி அவனுக்கு பொம்மைவைத்து விளையாடிய காலத்திலே உண்டு, செல்வம் மிகுந்த அந்த பொற்கால இந்தியாவினை கைபற்றி மாபெரும் செல்வம் சேர்க்க்க வேண்டும் என்பதே அவன் பெரும் கனவு
அந்த கனவிலே இந்திய எல்லையில் கால்வைத்தான், தான் ஒரு கிரேக்க மதத்தவன் என்பதும், கிரேக்க தர்மமே உலகில் சிறந்தது என்பதும் அவனின் அசைக்கமுடியா நம்பிக்கையாய் இருந்தது
இந்தியாவினை கிரேக்கமயமாக்குவேன் என கங்கணம் கட்டி வந்திருந்த அவன், ஆங்காங்கே சாம்பல் பூசி ருத்திராட்டம் அணிந்து அரையாடை உடுத்திய ஆண்டிகளை பரிகாசமாய் பார்த்தான்
எனினும் கூரிய மதியுள்ள்ள அவனுக்கு இந்திய தர்மத்தை வாதத்திலே வெல்லலாம் என தோன்றிற்று, தண்டமுனி எனும் ஞானியிடம் வாதிட வந்தான்.
தண்ட முனியும் அலெக்ஸாண்டரும் பேச தொடங்கினார்கள், ஞானமான மறைபொருள் கொண்ட வார்த்தைகள் இவை, தெளிவான‌ ஞான மனங்களுக்கு அற்புதமாய் பொருள் விளங்கும்.
மாமன்னன் கேட்க மாபெரும் ஞானி தண்டமில்ஸ் பதில் சொன்னார்
" உயிருள்ளவையா? இறந்தவைவா? உலகில் எது அதிகம்?
நிச்சயம் உயிருள்ளவை, ஏனெனில் இறந்தவை என்பது இல்லவே இல்லை
பெரிய மிருகம் பூமியில் உண்டா? கடலில் உண்டா?
நிச்சயம் பூமியில் ஏனெனில் கடல் பூமியின் ஒரு பாகமே
பகலா இரவா எது முதலானது?
பகல்தான், ஏனென்றால் ஒளிதான் முதன்மையானது
மனிதன் எந்த மிருகத்தை கண்டு அஞ்சுவான்
இதுவரை காணாத மிருகத்தை
ஒரு மனிதன் எப்பொழுது தெய்வம் ஆகின்றான்?
மற்ற மனிதனால் செய்ய முடியா காரியத்தை செய்யும் பொழுது
ஒரு மனிதன் தன்னை எல்லோரும் நேசிக்க என்ன செய்ய வேண்டும்?
ஒரு மனிதன் பெரும் சக்திவாய்ந்தவனாக இருந்தாலும் பிறர் தன்னை கண்டு பயப்படாமல் இருக்க செய்கின்றானோ அவனை எல்லோரும் நேசிப்பர்
வாழ்வா சாவா எது கொடுமையானது?
வாழ்வுதான், செத்தபின் ஏது கொடுமை?"
அதன் பின் அலெக்ஸாண்டர் பேசவில்லை, அவன் மனம் ஏதோ செயதது முதல் முறையாக கிரேக்க ஆன்மீக ஞானம் அவன் மனகண்முன்னால் சரிந்து விழுந்தது, இந்திய ஞானம் விஸ்வரூபமெடுத்து நின்றது
ஆம், அந்த உரையாடல் வரிகள் சாதாரணமாக தோன்றலாம் அதன் அர்த்தம் அழுத்தமானது
இறந்தவைகளை பற்றி நினையாதே, நடக்கும் காட்சிகளை மட்டும் பார் கவலை அறுபடும் என்கின்றது முதல் வாதம்
மிருகம் என்பது உன் உள்ளே உள்ளது என்கின்றது இரண்டாம் வாதம்
கடவுளே முதன்மையானவர் என்பது மூன்றாம் வாதம்
மனிதனுக்கு ஆசை கூடிகொண்டே போகும், எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவான் என்பது நான்காம் வாதம்
மக்களை வாழ வைப்பதே தெய்வத்தின் பணி என்பது ஐந்தாம் வாதம்
நீ பிறரை பயமுறுத்தி நேசிக்க வைக்காதே அது நிலைக்காது, உண்மையான மதிப்பு உன் வாள்முனையில் உதிக்காது என அவன் செவிட்டில் சொல்கின்றது ஆறாம் வாதம்
வாழ்வு போராட்டம் மிக்கது கடினமானது அந்த வாழ்வில் ஞானத்தை தேடி அடை, வீணாக ஒன்றும் அறியாமல் செத்துவிடாதே என்கின்றது 7ம் வாதம்
கிரேக்க தத்துவமும், பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் கொடுக்கா பதிலை தண்டமில்ஸ் கொடுத்ததில் அப்படியே அமர்ந்துவிட்டான் அலெக்ஸாண்டர்
பொன்னும் வெள்ளியும் தேடி இந்தியா வந்த அலெக்ஸாண்டர் கடைசியில் இந்து ஞானத்தில் ஞானம் அடைந்து அந்த தண்டமில்ஸை தன்னோடு கிரேக்கத்துக்கு வர அழைத்தான் இந்த ஞானம் கிரேக்கத்தில் பரவ வேண்டும் என்றும் கேட்டு கொண்டான்
தண்டமில்ஸ் புன்னகை மட்டும் செய்தார், "நீ வந்த காரியத்தை செய் அதில் உனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கட்டும் அதன் பின் என்னை வந்து பார்" என மெல்ல சிரித்தார்
அலெக்ஸாண்டருக்கு சுருக்கென தைத்தது ஆம் அவன் போரஸுடன் மோதும் முடிவில் இருந்தான், ஞானி ஏதோ சூசகமாக சொல்வது அவனுக்கு புரிந்தது
நிலத்தில் நடந்தவன் ஏற்கனவே நீரில் விழுந்தவன் போல் திகைத்த நிலையில் இப்பொழுது சேற்றில் நடக்கும் யானைபோல் சிக்கினான்
அவனின் 30 ஆண்டுகால நம்பிக்கை, கர்வம், கிரேக்க பெருமிதமெல்லாம் நொறுங்கி கிடந்தது, தண்டமில்ஸை தன் குருவாக எண்ண தொடங்கினான்
இந்தியா ஞானிகளின் நாடு என்பது அவனுக்கு புரியலாயிற்று, ஒருவித ஞான மனம் அவனுக்குள் எட்டிபார்க்க ஆரம்பித்தது
எவ்வளவு பெரிய ஞானி இவர், ஆனால் எவ்வளவு எளிமையாக ஒரு மரத்தடியில் அனாதையாக அமர்ந்திருக்கின்றார்? எப்படி இவரால் சாத்தியம்?
அவர் சொல்வதும் சரி, அப்படியே சரி, கிரீஸில் இருந்து ஓடிய நான் இதோ ஓடி கொண்டிருக்கின்றேன், இன்னும் ஓடி கொண்டே இருப்பேன் ஆனால் எதுவரை ஓடுவேன்?
நாடுகளை வென்றேன், அரசர்களை கொன்றேன், கோட்டைகளை பிடித்தேன், கிரேக்க கொடி பறக்க விட்டேன் இதோ இந்தியாவுக்கும் வந்துவிட்டேன்
ஆனால் இதெல்லாம் எவ்வளவு காலம்? எதுவரை?
இப்பொழுதே இந்த ராஜ்ஜியத்தை நடத்த மகா சிரமம் என் காலத்துக்கு பின் இது கலையும், அப்படியானால் எல்லாம் பொய்யா?
ஒரு பொய்க்கு பின்னால்தான் இவ்வளவு காலம் இவ்வளவு மக்களோடு ரத்த சக்தியில் நீந்தி கொண்டிருக்கின்றேன் நான்?
ஏன் கிரேக்க ஞானம் எனக்கு இதையெல்லாம் சொல்லவில்லை, சொல்லியிருந்தால் நான் அன்றே ஞானம் பெற்றிருப்பேனே?
எல்லாம் மாயை என தெரிந்து உணர்ந்து அந்த மரத்தடியில் இருக்கும் அவர் எவ்வளவு உயர்வானர், சொன்னாரே ஒரு வார்த்தை உன்னை வெல்வதே முதல் வெற்றி என்று
என்னை என்றால் யாரை? நான் உடலா ஆத்மாவா மனமா?
என் மனதை நான் அடக்காதவரை நான் யாரை அடக்கி என்னாக போகின்றது, என் மனதை அடக்கினால் அல்லவா வெற்றி?
இனி அதை செய்ய வேண்டும், இவ்வளவு பெரும் ஆர்ப்பாட்டம் போர் செய்தும் கிடைக்கா நிம்மதி அந்த ஞானியில் 4 நிமிட பேச்சில் கிடைத்ததென்றால் அவனல்லவா ஞானி
இந்தியாவின் நுழைவாயிலே இப்படி ஒரு ஞானியென்றால் தேசமெல்லாம் எவ்வளவு பேர், இன்னும் என்னெல்லாம் போதிப்ப்பார்களோ?
அவன் அகந்தையிலும் அகங்காரத்திலும் பாதி அழிந்தது அப்பொழுதே அழிந்தது, அந்த தண்டமுனி விஸ்வரூபமெடுத்து சிரிப்பதும் அவர்முன் அவன் அடங்குவதும் அவன் மனகண்ணிலே தெரிந்தது
ஆனாலும் அவன் அடங்கவில்லை அவன் ஞானத்தை விழுங்கி அகங்கார பூதம் எழும்பி போரசுடன் மோத சொல்லிற்று
போரஸ் அவனை எளிதாக அடக்கினான், அதுவரை தோல்விகாணாத அலெக்ஸாண்டர் முதல் தோல்வியிலே கலங்கினான், அந்த தோல்வி பெரிதாய் எதிரொலித்தது
கோபுரத்தில் இருந்த அவன் கீழே விழவும் என்னென்ன குரலெல்லாமோ எழுந்தது, உலகை மெல்ல புரிந்துகொள்ள ஆரம்பித்தான் அலெக்ஸாண்டர்
போரசுடனான தோல்வியும் இந்தியாவில் எழும்பிகொண்டிருந்த சாணக்கியனின் மகத அரசும் அவன் கனவுகளை தகர்த்தன‌
எனினும் அடுத்த முயற்சிக்காக காத்திருந்த அவன் நிம்மதிக்காய் தண்டமுனியினை மறுபடி தேடி சென்றான்
முன்பு அவரை சந்தித்தபொழுது "நீ வந்த காரியம் முடிந்ததும் என்னை சந்திப்பாய்" எனும் அந்த முனிவரின் வரிகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன‌
அவரை காண ஓடினான், விரைந்தோடினான். தன் குழப்பத்துக்கெல்லாம் அவர் பதில் தருவார் என நம்பி ஓடினான்
சிந்து நதியின் வெண்மணலில் அமர்ந்திருந்தான் தண்டமுனி, அவரை வணங்கினான்
"நீ வந்த வேலை நல்லபடியாக முடிந்ததல்லவா?" என அவர் கேட்ட கேள்வியில் ஆடிபோய் நின்றான் அலெக்ஸாண்டர்
அது அவமான கேள்வியாக வெளியில் தெரிந்தாலும் தன் மனதில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துக்கு காரணமே அந்த போரின் தோல்விதான், அது நல்லதுக்குத்தான் நடந்தது என்ற தெளிவுடன் முனிவரை ஏறிட்டு பார்த்தான் அலெக்ஸாண்டர்
முனிவர் புன்னனகையுடன் சொன்னார், "உன் கடைசி போரிலும் வெற்றி உனக்கே"
"முனிவரே இனி போரிடும் திட்டமில்லை, கிரேக்கம் திரும்பும் வழியில் ஏதும் அந்த அவசியம் வருவதாகவும் தெரியவில்லை" என்றான்
சத்தம்போட்டு சிரித்த முனி , "அப்பனே நான் சொல்வது உன் மனதோடு நீ தொடங்கியிருக்கும் போர்" என அலட்சியமாய் சொன்னார்
அவர் காலடியில் அமர்ந்தான் அலெக்ஸாண்டர், அவன் மனம் முனிவர் தன் மனம் தெளிய வைப்பார் என நம்பிற்று .
மாபெரும் மன்னன் , உலகின் பெரும் செல்வமும் படையும் வைத்திருந்த மன்னன் ஒரு இந்திய முனிவனின் காலில் நிம்மதி வேண்டி வீழ்ந்திருந்தான்.
12
தனக்கு முன் அமர்ந்திருந்த அலெக்ஸாண்டரை புன்னகை பூக்க நோக்கினார் தண்டமுனி
தன் அகங்காரமும் மிகபெரிய கனவும் நொறுங்கிய நிலையில் இருந்த அலெக்ஸாண்டர் அவரின் தீர்க்கமான பார்வையினை தன் நீல கண்களால் எதிர்கொண்டான்
அவன் கண்களை ஊடுருவி பார்த்த தண்டமுனி அவனின் மனவோட்டத்தை எளிதாக படித்தவராய் கேட்டார், அவர்களுக்குள் ஞான உரையாடல் தொடங்கிற்று
"அலக்ஸாந்தா உனக்கு விதிக்கபட்டதை விட ஏன் அதிகமாக விரும்பி குழம்புகின்றாய்?, விதித்தது கிடைத்தாயிற்று அத்தோடு மனதை அமைதியாக்கு
சுவாமி என்னால் முடியவில்லை, அப்படியானால் நான் நம்பியதும், இதுவரை சாதித்ததெல்லாம், நடந்ததெல்லாம் பொய்யா?
என்ன நம்பினாய் அலெக்ஸாந்தா?
நான் பலமானவன், யாராலும் வெல்ல முடியாதவன், மாபெரும் ஞானி அரிஸ்டாட்டிலால் உருவாக்கபட்ட நான் இந்த உலகை வெல்ல பிறந்தவன், மன்னாதி மன்னர்களை வென்று பலமிக்க கோட்டைகளையெல்லாம் பிடித்தநான் இங்கே எப்படி தடுமாறினேன், எப்படி தோற்றேன்?
அலெக்ஸாந்தா இந்த நான், நான் என சொல்கின்றாயே அது யாரை?
முனிவரே அது நான், நான் என்றால் இந்த கிரேக்க மாவீரன் அலெக்ஸாண்டர்
அது இந்த உடலுக்கா, உன் ஆன்மாவுக்கா, உன்னை நடத்தும் விதிக்கா?
விதி என்றால்?
எங்கள் தர்மத்தில் அதை கர்மா என்போம் விரும்பியோ விரும்பாமலோ பூமியில் நீ உனக்கான விஷயங்களை பெற்றே தீரவேண்டும், அறியா மானிடர்கள் அது தங்களுக்கு சாதகம் என்றால் தங்கள் வெற்றி என மகிழ்கின்றார்கள் அவர்களுக்கு பாதகம் என்றால் தோல்வி என அழுகின்றார்கள் நீயும் அதில் சேர்ந்து கொண்டாய்
கர்மா என்றால்?
இந்த உலகில் எதெல்லாம் நீ அனுபவிக்க சந்திக்க வேண்டுமோ, எதையெல்லாம் நீ செய்ய வேண்டுமோ அந்த மொத்த வாழ்வு
அப்படியானால் என் முயற்சி?
உன்னை முயற்சிக்க வைப்பதே அதுதான், அதன்படிதான் உன் புத்தி இயங்கும், காட்சிகள் நடக்கும்
புரியவில்லை சாமி, அப்படியனால் வாழ்வு?
வாழ்வு என்பது கர்மம் கழிக்கும் காலம், அது நிலையற்றது, கனவு போன்றது, உனக்கு முன்பு இருந்தோரும் இனி வருவோரும் இங்கே நிலையாக இருக்க முடியுமா என்ன, அதை நினைத்து ஏன் குழம்புகின்றாய்
என் லட்சியம் பேரரசை உருவாக்கி என் மக்களை பாதுகாப்பாக வாழ செய்வது ஒரு அரசனாக அதை செய்தேன், இது எப்படி தவறாகும்?
ஆம், முயற்சி உன்னுடையது முடிவு அவனுடையது. அவன் முடிவை சொல்லி எல்லையினை இட்டுவிட்டான் அதை மீறாமல் மகிழ்வுடன் ஏற்றுகொள், அலெக்ஸாந்தா கர்மத்தை நினைத்து ஏன் குழம்புகின்றாய்? அதை உன்னால் மாற்ற முடியுமா? இல்லை விதித்ததில் ஒரு அங்குலம் நீ மீறத்தான் முடியுமா?
குழம்பவில்லை முனிவரே, புரிந்து கொள்ள முடியாத நிலை இது
அலெக்சாந்தா, குழப்பமே தெளிவின் தொடக்கம் நன்றாய் குழம்பு, குழம்பி தெளியும் ஞானம் நிலையானது.
சுவாமி நான் ஒரு அரசன் என் குடிகளை காப்பதும் அவர்களுக்காய் யுத்தம் செய்வதும் தவறா?
அது தவறேன்றால் நீ பாரசீகம் தாண்டியிருப்பாயா?, உணர்ந்துகொள் அலெக்சாந்தா உன் வெற்றிக்கெல்லாம் உன் கர்மா துணையிருந்தது, அது மிகபெரிய சிகரத்தில் உன்னை அமர வைத்து இவ்வளவுதான் வாழ்வு என்றது, நீ அந்த கட்டத்தை அடைந்துவிட்டதும் உலகில் ஒன்றுமில்லை என உன்னை இறங்க சொல்கின்றது. எல்லாம் கையில் கிடைக்கும் வரைதான் ஆசை அலெக்ஸாந்தா, கிடைத்துவிட்டால் அதை தக்கவைக்க நடத்தும் போராட்டமேதான் வாழ்வு அதில் நிம்மதி ஏது?
ஆம் சுவாமி எதையும் போராடி பெற்றுவிட்டால் நிம்மதி வருவதல்ல, அதை தக்கவைக்க நடத்தும் போராட்டமே பெரும் பாடுதான், ஆனாலும் நான் அரசன் அல்லவா? குடிகளை காக்க வேண்டும் அல்லவா?
எவ்வளவு நாளுக்கு காப்பாய் அலெக்ஸாந்தா, உனக்கு முன்னும் கிரேக்கம் இருந்தது, உனக்கு பின்னும் இருக்கும். பாரசீகமும் இந்த தட்சசீலமும் முன்பு உன்னுடையதல்ல நாளையும் உன்னுடையதல்ல கொஞ்ச காலம் ஒரு மாயையில் உனக்கானதாய் தெரியும், இதற்கா குழம்புகின்றாய்
கொஞ்சம் தெளிகிறது மனது சுவாமி
உன் குதிரை புக்கிலேஸை காக்க முடியாத நீயா, காலம் காலமாய் உன் மக்களை காப்பாய்? முடியுமா? காற்றை கையில் பிடிக்காதே, இந்த உலகில் எல்லாமே வீண் முயற்சி
ஆம் சுவாமி புரிகின்றது
நீ எதற்கு படைக்கபட்டாயோ அது நடந்து கொண்டிருக்கின்றது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கர்மா நீ உன் கர்மாவின் கடை நிலையில் இருக்கின்றாய்
விளக்கி சொல்லுங்கள் சுவாமி
இந்த உலகில் பிறந்த ஆத்மாவின் முடிவுஎன்ன அலெக்ஸாந்தா?
அது புரியாமல்தானே உங்களிடம் வந்தேன்..
அலெக்ஸாந்தா ஒவ்வொரு ஆத்மாவும் இறைவனை உணர ஒரு காலம் உண்டு, அது உனக்கும் வந்திருக்கின்றது நீ எதை நோக்கி ஓடிகொண்டிருக்கின்றாய்?
வெற்றி, முழு வெற்றி இந்த உலகமே என் கையில் கிடைக்கும் வரை போர் என கிளம்பினேன்
போரஸை நீ வென்றிருந்தால் ஏன் இந்த கண்டம் முழுக்க கைபற்றியிருந்தால் அடுத்து என்ன செய்திருப்பாய்?
நிம்மதியாக ஆள ஆரம்பித்திருப்பேன்
ஆக நிம்மதியினை தேடித்தான் ஓடினாய் அல்லவா?
ஆம்
அது போரில் கிடைக்கவில்லை என உணர்ந்து கொண்டாய் அல்லவா?
தலைகுனிந்த அலெக்ஸாண்டர் சொன்னான், ஆம் கிடைக்கவில்லை
நீ உலக முடிவுவரை வென்றாலும் உனக்கு அந்த நிம்மதி கிட்டாது, ஆசையில் உழல்பவனுக்கு ஏதப்பா நிம்மதி,
ஆசையினை விட்டு உன்னில் உன்னை தேடு நிம்மதி வரும்
என்னுள்ளா எப்படி?
ஒவ்வொரு வாழ்விலும் வெற்றி மேல் வெற்றி என்பது விதிக்கபட்டபடி நடக்கும், எந்த இடத்தில் சூழல் மாறி நிலமை தலைகீழாகின்றதோ அங்கே தன் கர்மாவினை ஒருவன் நினைத்து தெய்வத்தை உணர்தல் வேண்டும், உண்மையினை உணர்தல் வேண்டும், இது உனக்கு உணரவேண்டிய நேரம்.
அப்படியானால் என் வீரம், என் போர், என் படை, என் அதிகாரம், வியூகமெல்லாம் வீணா சுவாமி?
அவை எல்லாம் உன் கர்மாவினை நீ செய்ய உனக்கு அனுமதிக்கபட்ட மாயைகள், அதிலிருந்து மனதை விலக்கி உண்மையினை தேடு, காற்றை கையில் பிடிக்க முயற்சிக்காதே
முயற்சிக்கின்றேன் சாமி
அலெக்ஸாந்தா, காலமே எல்லாம் முடிவு செய்யும். நீ வெல்ல ஒரு காலம் உண்டு, முடிசூட ஒரு காலம் உண்டு அதே போல சிகரம் ஏற ஒரு காலம் உண்டென்றால் இறங்கவும் ஒரு காலமுண்டு, அதை மனதில் கொள்
உண்மைதான் சாமி
அலெக்ஸாந்தா உலகெல்லாம் வென்றுவிட்டால் மட்டும் நிம்மதி வருமா? உன் குறிகோளில் நீ வெல்லலாம் ஆனால் நிம்மதி வருமா? வராது, சிக்கல்கள் எழுந்து கொண்டே இருக்கும் உருமாறி உருமாறி வந்து வந்து கொண்டே இருக்கும், நீ நிம்மதியினை வாளில் தேடினால் எப்படி கிடைக்கும்?
எதிரி ஒழிந்தால், எதிர்ப்போரையெல்லாம் அழித்தால்?
இந்த உலகில் வல்லவனுக்கு வல்லவன் எக்காலமும் உண்டு, ஆசையும் வஞ்சமும் இன்னும் பல கொடும் குணங்கள் நிறைந்த உலகில் ஒவ்வொரு சக்தியும் எழும்பி கொண்டே இருக்கும், அவர்களுடன் போராடி கொண்டே இருந்தால் ஏது நிம்மதி
தெரியவில்லை சாமி
நீ உன்னோடு போராடு, அனைத்து எண்ணங்களும் உதிக்கும் உன் மனதோடு போராடு, அதை அடக்கு, அதை சீர் தூக்கி பார், அதை அடக்கு, மனதை அடக்க அடக்க உண்மை தெளியும், அந்த தெளிவில் ஞானம் கிடைக்கும், அந்த ஞானத்தில் எது நிலையானது என்பது புரியும், அதை நோக்கி செல்"
முனிவரின் வார்த்தைகள் அலெக்ஸாண்டரை சிந்திக்க வைத்தன, வாழ்வில் பெரும் இடம் நோக்கி ஏறும் ஒருவனுக்கு எந்த போதனையும் காதில் ஏறாது, ஆனால் மிக பெரும் இடத்தில் மாபெரும் சக்கரவர்த்தியாக எல்லாவற்றிலும் உச்ச சிகரத்தில் இருந்த அலெக்ஸாண்டருக்கு அவரின் போதனை சட்டென‌ புரிந்தது
அவன் தன் கீரிடத்தை எடுத்துவிட்டு தன் செம்மபட்டை முடி கலைய முனிவர் முன் பணிந்தான், கையினை உயர்த்திய முனிவர் விரலை மூடினார், பின் அதனை விரிக்கும் பொழுது விபூதி இருந்தது
ஆச்சரியத்தில் புருவங்களை உயர்த்திய அலெக்ஸாண்டர் வியந்து கேட்டான் "சுவாமி ஒரு சந்தேகம் கேட்கலாமா?"
முனிவர் புன்னகைத்தார்
"சுவாமி உங்கள் நாட்டில் யோகிகளும் மகா அனுமாஷ்ய சக்தி கொண்ட சித்தர்களும் அதிகம், அதை கொண்டே எல்லா பகையினையும் வெல்லலாமே எதற்கு அரசன்? எதற்கு ராணுவம்? ஏன் மக்களின் உழைப்பு
முனிவர் சத்தமாக சிரித்து சொன்னார், "அலெக்சாந்தா, அவனவன் கர்மாவினை அவனவனேதான் சுமக்க வேண்டும், மன்னனும் ராணுவமும் அவர்கள் கர்மாவினை செய்யட்டும், நாங்கள் எங்கள் கர்மாவினை சுமக்கின்றோம், இந்த ஞான மார்க்கமும் கர்மாவினை கழிக்கும் காரியம்தான், கடைசியில் அவர்களும் நானும் மிஞ்சபோவது ஒரு பிடி சாம்பலாகத்தான்"
அந்த வரி அலெக்ஸாண்டர் மனதை உலுக்கிற்று, மிஞ்ச போவது இதுதானா? இதற்கா இவ்வளவு போராட்டம் எனும் சிந்தனை அவனுக்கு உதித்தது, அவன் சிந்திப்பது அவன் முகத்திலே தெரிந்தது
முனிவர் அவனுக்கு தியானம் செய்யும் வழிகளை சொன்னார், அந்தி மாலை அதை செய்யும் கால நேரமும் வழியும் சொன்னார்.
அலெக்ஸாண்டர் தியானத்தில் மூழ்கினான் அதில் மூழ்கி மனதோடு போராடினான், அதை போராடி போராடி அடக்க தொடங்கினான்
குதிரைகளை அடக்கி சவாரி செய்தவன், மன்னர்களை அடக்கி ஆட்சியினை செய்தவன் இப்பொழுது மனதை அடக்கி அதில் ஏறி அமர்ந்தான், அதில் பல விஷயங்கள் தெளிந்தன‌
பொன்னும் வைரமும் தேடி எங்கெங்கோ அலைந்தவன் தனக்குள் இருக்கும் புதையலை கண்டு கொண்டான்
அதுவரை இறுகிய முகத்தோடு அகங்காரத்தோடும் அரச கிரீடத்தோடும் உறுமிய குரலோடும் வலம் வந்தவன் புன்னகை பூக்க, ஒரு ஞான பழமாய் கனிந்த முகமாய் உலாவ தொடங்கினான்
(அடிக்கடி தண்டமுனியினை சந்திக்கவும் அவன் தவறவில்லை.
"அலெக்ஸாந்தா உன் கர்மபடி நீ இந்தியாவில் எதை தேடி வந்தாயோ எது உனக்கு கிடைத்ததோ அதை மேற்கே எடுத்து செல், அதற்குத்தான் நீ உருவானாய், அதற்குத்தான் விதி உனக்கு ஒத்துழைத்தது" என அவனுக்கு சொன்னார் தண்டமுனி
இந்திய செல்வத்துக்காய் வந்தவன் இந்திய ஞானம் பெற்று அகந்தை ஒழிந்து இந்துவாய் , முழுமையான நிம்மதிபெற்ற இந்துவாய் திரும்பி சென்றான்
33 வயதிலே பெரும் மன்னனாகி உலகின் பெரும் பகுதியினை கட்டியாண்டு, இந்தியாவினை கிரேக்கமயமாக்கும் கனவில் வந்து , இந்திய ஞானத்தால் சன்னியாசி கோலம் கொண்டு தன் ராஜ்ஜியத்தை தன் நண்பர்களுக்கே பிரித்து கொடுத்து இனி அடைய நாடுமில்லை ஞானமுமில்லை என முழு நிறைவோடு தனக்கு ஞானம் தந்த இந்தியாவினையும் இந்துமதத்தையும் வணங்கி கொண்டே மறைந்த அலெக்ஸாண்டரின் பிறந்தநாள் இன்று🙏🏼...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...