Sunday, December 24, 2017

இசையின் கடவுள் “இளையராஜா“

இசைஞானம் உள்ளவர்கள் மட்டுமே இசையை இரசித்து கொண்டிருந்த நிலையை மாற்றி முதல்முதலாக பாமரனையும் தலையாட்டும் வகையில் இசையை எளிமையாக்கியவர் நமது இசைஞானி இளையராஜா.
அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே மிகப்பெரிய பெருமை. அன்னக்கிளி படத்தில் அறிமுகமாகி இன்று 1000ற்கும் மேற்பட்ட படங்களில் 4500க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கி உலக சாதனை செய்த ஒரு அற்புத கலைஞர். இவருடைய சாதனையை முறியடிக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்பதை கணக்கிட யாராலும் முடியாது.
காதல், நட்பு, பிரிவு சோகம், மகிழ்ச்சி, கொண்டாட்டம், தாய்மையின் பெருமை என எல்லாவித சூழலையும் ஆக்கிரமிப்பது இளையராஜா பாடல்கள் தான். குறிப்பாக அந்த கால காதலர்கள் முதல் இந்த கால காதலர்களுக்கும் தங்களது காதலை வெளிப்படுத்த இருக்கும் ஒரே வாய்ப்பு இசைராஜாவின் பாடல்கள் தான்.
இசைஞானியை இசைக்கடவுள் என்று கூறினாலும் அது மிகையாகாது. இசைத் துறையில் இதற்கு முன்பு வரை யாரும் வகித்திடாத, இனிமேலும் யாரும் வகிக்கமுடியாத உயர்ந்த இடம் எதுவொ, அதில் கண்டிப்பாக இசைஞானிக்கு என்று ஒரு இடம் இருக்கும்.
இந்த நூற்றாண்டு மட்டுமின்றி இனிவரும் எந்த நூற்றாண்டிலும் அவருடையை இசைக்கு அழிவே இருக்காது. எந்த காலத்திலும் அவருடைய இசையை ரசிக்க என்றே ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.
இசைஞானியின் பாடல்கள் கேட்கக் கேட்கச் சலிக்காதவை. ஓரிரண்டு பாடல்கள் என்றால் அதை குறிப்பிட்டு சொல்லலாம், ஓராயிரம் பாடல் என்றால்? மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்... உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி நான் உண்மையில மெழுகு வர்த்தி...கோடை கால காற்றே..... ஆயிரம் மலர்களே மலருங்கள்..... பருவமே புதிய பாடல் பாடு... என் இனிய பொன் நிலாவே.... சின்ன குயில் பாடும் பாடல் கேட்குதோ.... ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில.... நிலா அது வானத்து மேலே என சொல்லிக்கொண்டே போகலாம் இசைஞானியின் இனிய பாடல்களின் வரிசையை....
இளையராஜாவுக்கு முந்தைய இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி,மகாதேவன் ஆகியோர் இசையில் பல சாதனைகள் செய்திருந்தாலும், 40 வருடங்களாக தொடர்ந்து இசையமைப்பாளராக இருப்பது மட்டுமின்றி இன்றும் இளையதலைமுறை இசையமைப்பாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கைநிறைய படவாய்ப்புகளை வைத்துள்ள சாதனையை இதுவரை யாரும் செய்ததில்லை, இனிமேலும் செய்யப்போவதில்லை.
இசைஞானியின் இசை, மொழிகளை கடந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் இசைஞானியின் இசை அலங்கரித்துள்ளது. அதுமட்டுமின்றி மேற்கத்திய இசையமைப்பாளர்களையும் ஆச்சரியப்படுத்திய இசை இசைஞானியின் பாடல்கள் ஆகும். இதை உலகம் முழுவதும் சுற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் பல மேடைகளில் கூறியுள்ளார்
5 முறை தேசிய விருதினை வென்ற இளையராஜா, 1976ஆம் ஆண்டு 'அன்னக்கிளி' படத்திற்கு இசையமைக்கும்போது எந்த அளவுக்கு சுறுசுறுப்பாக இருந்தாரோ அதே சுறுசுறுப்பு இந்த 2017 ஆம் ஆண்டிலும் இருக்கின்றார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்தே உண்மை.
இசையில் மட்டுமின்றி ஆன்மீகத்திலும் அதிக நாட்டம் கொண்டவர். திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்லும் பக்தர்களில் ஒருவர் இளையராஜா. மேலும் கதை, கட்டுரை, ஆகியவற்றை தனது பொழுதுபோக்காகவும் கொண்டவர் இசைஞானி இளையராஜா.
இளையராஜாவின் இசைப்பயணத்தை நிறுத்தும் சக்தி யாருக்கும் கிடையாது. அவருடைய இசையால் இன்னும் பல ஆயிரக்கணக்கான பாடல்கள் தோன்றி இசை ரசிகர்களுக்கு தொடச்சியாக சந்தோஷத்தை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம்.
அதற்கு அவர் பல்லாண்டு காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ, வாழ்த்துக்கள்......!
இவை அனைத்தும் அனைவருக்குமே தெரிந்த விஷயங்கள் தான். புதியதல்ல.
ஆயினும் இன்று இதனை பகிர வேண்டுமென என் மனதில் ஏதோ ஓரு உந்துதல்...இவரின் பாடல்களை கடந்த 35 வருடங்களாக கேட்டுக் கொண்டே தானே இருக்கிறோம்...நான் 35 என்று கூறுவது என் போன்ற 40களில் உள்ளவர்களை....
அன்று இசை என்றால் என்ன என்று தெரியாத வயதில் கேட்ட 'பருவமே புதிய பாடல் பாடு ' என்ற
பாடலை இன்று நான் கேட்டுக் கொண்டிருக்கை யில் அன்று என் உள்ளிலே தோன்றிய அதே சிலிர்பு அதே பரவசம் இன்றும் மாறாமல் என் மனம் முழுவதுமாக ஆக்கிரமிக்க மெய் மறந்து தான் போனேன்.. அன்று என்னுள் தோன்றிய அதே கேள்விகள்..எப்படி ஓரு சாதாரண மனிதனால் அதிகாலை விடியலின் அழகை இவ்வளவு தத்ரூபமாக இசையில் உருவாக்க முடியும் என்பது தான்.
அதிகாலையின் பூபாளம்
கதிரவனின் எழுச்சி; பூக்களின் ஆலாபனை , குயில்களின் பரிபாஷை அப்பப்பா... .
என்ன அழகான இனிமையான இந்த பாடல் கேட்கையிலே இதனை பகிர வேண்டுமென என்னுள்ளே ராஜா என்ற இசை கலைஞன் கடந்த 35 வருடங்களாக
என்னை தன் மிகையான இசையினால் ஆண்டுக் கொண்டு தானே இருக்கிறார்...!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...