Saturday, December 30, 2017

ராகதேவன் இளையராஜா ....

தமிழ் சினிமா என்கிற மிகக் குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே அடக்கி விட முடியாத பெயர் - இளையராஜா. ஹாலிவுட் படங்களையும், அதையும் கடந்து, ஆப்ரிக்க, அண்டார்டிக்க படங்களையும் காப்பியடித்து, வேஷம் கட்டி ‘யுனிவர்சல் ஹீரோ’க்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் மத்தியில், நிஜமாகவே இவர் ராஜா. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த அபூர்வ ஞானி. முதல் படம் ‘அன்னக்கிளி’ துவங்கி, ஆயிரமாவது படம் ‘தாரை தப்பட்டை’ வரை, ராகத்துக்குள் தாலாட்டை மறைத்து வைத்து தட்டுப்பாடின்றி விநியோகிக்கிற ராகதேவன்.
இளையராஜா பற்றியோ, அவர் ராகம் இயற்றி உலாவ விட்ட பாடல்களின் பெருமைகள் பற்றியோ எழுதுவதற்கு புதிதாக ஒரு வார்த்தை கூட இல்லை. புகழ்ந்து பேசுவதற்கு புதிதாகத்தான் சொற்களை உருவாக்கவேண்டும். தனக்குத் தானே மகுடம் சூடிக் கொள்கிற (தமிழ்) சினிமா உலகில், புனைவுப் பிம்பங்களின் வெளிச்சங்களை விலக்கி, யதார்த்தத்தின் நிழலில் இயங்கிக் கொண்டிருப்பவர். ‘தாரை தப்பட்டை’ என்கிற படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமானது. 1976ம் ஆண்டு, ‘அன்னக்கிளி’யில் அறிமுகமான இளையராஜாவுக்கு இது ஆயிரமாவது படம். உலகில் எந்த இசையமைப்பாளரும் சாதித்திராத சாதனை, . ஒரு படத்துக்கு ஐந்து என்று வைத்துக் கொண்டாலும் கூட, மனக்கணக்கு போட்டு பெருக்கிப் பார்த்தால்... 5 ஆயிரம் பாடல்கள். அதில், 4 ஆயிரத்துக்கும் அதிகமானவை சூப்பர் ஹிட். ஒவ்வொன்றும், மன அழுத்தம் போக்குகிற மாமருந்து. இப்போது கேட்டாலும், முழுமையாக ஆட்கொள்ளும் ஆற்றல் நிரம்பக் கொண்டவை. பாடல்கள் வசீகரிக்கின்றன; புதிய உலகிற்குக் கை பிடித்து அழைத்துச் செல்கின்றன என்றால், பின்னணி இசையும் மென் ஒத்தடம். அமைதியாக வழிந்தோடுகிற நீரோடையாக, ஆர்ப்பரித்துப் பாய்கிற பேரருவியாக, பசும் பள்ளத்தாக்குகளின் கீழிருந்து பனிப்புகையாக கிளம்பி வந்து உடல் தழுவும் ஜில் காற்றாக, அவரது பின்னணி இசையும் நம்மை வினோத பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
சிந்துபைரவி. ராஜாவின் இசை இந்தப்படத்தின் உயிர். ராஜாவன்றி, இந்தப் படமில்லை. சாஸ்திரிய சங்கீதங்களையும், நாட்டுப்புற மெட்டுகளையும் குழைத்து அவர் உருவாக்கிய ராகங்கள், சங்கீத வித்வான்களையும், விமர்சகர்களையும் மெய் மறந்து சபாஷ் போட வைத்த மாயத்தை மறக்கத்தான் முடியுமா? சொல்லால் அடிக்கிற விமர்சகர் சுப்புடுவை கூட சரண்டர் ஆக வைக்கிற வித்தை, ராஜாவின் ஆர்மோனியப் பெட்டிக்கு மட்டும்தானே தெரிந்திருந்தது? எத்தனை பெருமை இருந்து என்ன பயன்? ஆயிரம் படம் கடந்த அசாதாரண சாதனையை அங்கீகரித்து, பாராட்ட செந்தமிழ் நாட்டில் ஆளில்லையே...?
ராஜாவால் உருவாக்கப்பட்ட பிம்பங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். ராஜாவின் இசைக்கு வாயசைத்து, சினிமாவை ஆட்சி செய்தவர்களின் பட்டியல் மிகப் பெரிது. பாட்டுப் பாடிய படியே பசு மாட்டில் பால் கறந்தவர், ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திரத்தைக் காட்டிலும் அதிக செல்வாக்குடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். கலர், கலராக சட்டை போட்டு, லிப்ஸ்டிக் பூசி அவர் நடித்த படங்கள், உச்ச நட்சத்திரங்கள், உலக நாயகன்களுக்கு கடும் சவாலாக விளங்கின. அந்த வெற்றியின் பின்னணியில் மறைபொருளாக ராஜாவின் இசை இருந்தது. இசை மட்டுமே இருந்தது. இது போல இன்னும் பல படங்களைச் சொல்லலாம். பொம்மலாட்டத்தில் வித்தை காட்டுகிற பொம்மைகள் போல நடிகர்கள் கடந்து செல்ல... பின்னணியில் இருந்து அவர்களை முழுமையாக இயக்கியது ராஜ இசை.
பாரதிராஜா, (காலம் சென்ற) பாலச்சந்தர், மணிரத்னம், பாலா, எஸ்.பி.முத்துராமன், ஆர்.சுந்தரராஜன், பி.வாசு... என முன்னணியில் இருக்கிற / இருந்த இயக்குனர்களின் அடித்தளம், ராஜாவின் இசையால் கட்டமைக்கப்பட்டது. மறுக்கமுடியாது. நடிகர்களுக்காக, நடிகைகளுக்காக, இயக்குனர்களுக்காக படம் ஓடிய காலத்தை கட்டுடைத்து... இசைக்காகவும், பாடல்களுக்காகவும் படம் ஓடிய ஒரு புதிய பாதை ராஜாவில் எழுப்பப்பட்டது.
ராஜாவை கவுரவப்படுத்த வேண்டுமானால், அன்னக்கிளி தொட்டு சிம்பொனி, திருவாசகம்... என பல காரணம் நியாயமாகவே இருக்கிறது. ஆனாலும், ஆயிரம் படங்களை கடக்கிற அசாத்திய சாதனையை கவுரவப்படுத்தவேண்டும் என தமிழ் சினிமா பிரம்மாக்களுக்கு ஏன் தோன்ற வில்லை? எந்த ஹிந்தி பாடல்களின் ஆக்கிரமிப்புக்கு தமிழகத்தில் அழுத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாரோ... அந்த ஹிந்திப்பட உலகம்தான், ராஜாவை முதலில் அழைத்துப் பாராட்டியிருக்கிறது. இந்திய சினிமாவின் நிஜ உச்சநட்சத்திரம் அமிதாப் பச்சன் தனது கைப்படவே அழைப்பிதழ் தயாரித்திருக்கிறார். இந்திய திரையுலகின் பொக்கிஷம் என இளையராஜாவை குறிப்பிட்டு, அவருக்கான பாராட்டுவிழாவில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என ஒவ்வொருவராக தேடிப் பிடித்து அழைப்பிதழ் அனுப்பி வைத்திருக்கிறார்.
வீட்டுக்குள் இருக்கிற ரத்த சொந்தத்தின் விஷேசத்துக்கு, பக்கத்து வீட்டுக்காரர் அழைப்பிதழ் அனுப்பி கூப்பிடுவது போல, ராஜாவின் இசையால் உடல் வளர்த்த, ஊன் வளர்த்த தமிழ் சினிமா சகாப்தங்களுக்கு அழைப்பிதழ் அமிதாப்பிடம் இருந்து வந்து சேர்ந்தது. விழாவை முன்னின்று நடத்தக் கடமைப்பட்டவர்கள், விருந்தாளிகளாக மும்பை போய் இறங்கினார்கள். விழா மேடையில் அமிதாப் பச்சன் ராஜாவின் பெருமைகளை வியந்து போய் பாராட்டிப் பேசினார். உலக நாயகனும், உச்ச நட்சத்திரமும் ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’வில் பேசுவது போல, விமானத்தில் போகிற போதே எழுதித் தயாரித்து, மனப்பாடம் செய்ததை ஒப்பித்தார்கள்.
‘ஆயிரம் படங்கள்... அப்பப்பா! உங்கள் இசைப்பயணம் குறித்துப் பேசுங்களேன்’ என்று ராஜாவிடம் கேள்வி வைக்கப்பட்டது. ‘நான் பயணிக்கவே இல்லையே. அன்னக்கிளியில் எந்த இடத்தில் இருந்தேனோ... அதே இடத்தில்தான் இப்போதும் இருக்கிறேன். எனது இசை தேவைப்படுபவர்கள், பயணித்து வந்து என்னிடம் பெற்றுச் செல்கிறார்கள்....’ என்ற ராஜாவின் பதிலில், நிஜமாகவே உண்மை இருக்கிறது. ...எத்தகைய எளிமையான மனிதர். .இவர் வாழம் இந்த நாளில் நானும் வாழ்கின்றேன் என்ற பெருமை ஒன்றே போதும். ...இது அல்லவா நாம் செய்த பாக்கியம்? ...!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...