Saturday, July 9, 2022

அ.தி.மு.க., பழனிசாமி தொடர்பான வழக்குகளில் காயா, பழமா?

 அ.தி.மு.க., பழனிசாமி தொடர்பான வழக்குகளில் காயா, பழமா என்பது நாளை தெரியும். பொதுக்குழுவுக்கு தடை கோரி, பழனிசாமிக்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், நாளை காலை தீர்ப்பு வெளியாகிறது. அதேபோல், முதல்வராக பழனிசாமி இருந்தபோது நடந்த நெடுஞ்சாலைத் துறை 'டெண்டர்' முறைகேடு புகாரில், அவரை சி.பி.ஐ., விசாரிக்க விதித்த இடைக்கால தடை நீங்குமா என்பதும், உச்ச நீதிமன்ற விசாரணையில் நாளை தெரியவரும்.

 அ.தி.மு.க., பழனிசாமி   வழக்குகள் ,  காயா, பழமா?

அ.தி.மு.க.,வில் தற்போதுள்ள இரட்டை தலைமையை ரத்து செய்து, ஒற்றைத் தலைமையை அமல்படுத்தி, கட்சியின் பொதுச் செயலர் ஆவதற்காக, முன்னாள் முதல்வர் பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார். அவருக்கு 95 சதவீத நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.


ஏற்பாடு



இதற்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் நாளை பொதுக்குழுவை கூட்டி, தற்காலிக பொதுச் செயலராக பழனிசாமியை தேர்வு செய்ய முடிவு செய்து, பொதுக்குழுக் கூட்டத்திற்கு, அவரது ஆதரவு தரப்பு ஏற்பாடு செய்துள்ளது.இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்து என்பவரும், தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. கடந்த இரு தினங்களாக, இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். இந்த வழக்கில், நாளை காலை 9:00 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்துள்ளார்.நாளை காலை 9:15 மணிக்கு, பொதுக்குழு நடக்கும் என அறிவித்துள்ள நிலையில், பொதுக்குழு நடத்தலாமா, நடத்தக் கூடாதா என, காலை 9:00 மணிக்கு, நீதிபதி தீர்ப்பு கூற உள்ளார். இதனால், பழனிசாமி - பன்னீர்செல்வம் தரப்பினர் பதற்றத்தோடு உள்ளனர்.



மற்றொரு வழக்கு



கடந்த 2018ல், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம், பழனிசாமி மீது புகார் மனு அளித்தார். தமிழகத்தில் 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐந்து நெடுஞ்சாலை திட்டப் பணிகள் தொடர்பான ஒப்பந்தங்களை, நெடுஞ்சாலைத் துறையை தன் வசம் வைத்திருந்த, அப்போதைய முதல்வர் பழனிசாமி, தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அளித்துள்ளார். இந்த திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் முறைகேடு நடந்துள்ளதாக, ஆர்.எஸ்.பாரதி, புகாரில் குறிப்பிட்டிருந்தார்.லஞ்ச ஒழிப்புத் துறையினர், அந்த புகார் மனுவை விசாரித்த நிலையில், அத்துறை அப்போது முதல்வராக இருந்த பழனிசாமி வசம் இருந்ததால், அவர் மீதான புகாரை, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடக் கோரி, 2018ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'தேவைப்பட்டால் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை நடத்தலாம்; வழக்கு பதிவு செய்யலாம்' என தெரிவித்தது. இதை எதிர்த்து, பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


கட்சி தலைமை



அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், பழனிசாமியை சி.பி.ஐ., விசாரிக்க, இடைக்கால தடை விதித்தது; வழக்கு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.இந்த வழக்கு, நாளை மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நாளை பொதுக்குழு நடத்தி, கட்சி தலைமைப் பதவியை ஏற்பதற்கு பழனிசாமி தயாராகி வரும் நிலையில், பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கும், பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை
பாய்வதற்கான வழக்கும் விசாரணைக்கு வர உள்ளன. பழனிசாமி தொடர்பான இவ்விரண்டு வழக்குகளிலும், அவருக்கு காயா, பழமா என்பது நாளை தெரிந்து விடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...