Sunday, August 28, 2011

உரத்த சிந்தனை- நீடிக்குமா நிழல் ஆட்சி?

"இனிமேலுமா, மன்மோகன் சிங் பிரதமராக நீடிப்பது?' சரியான கேள்வி... இதில் கோபம் இருக்கிறது; நியாயமும் இருக்கிறது. ஆனால், நேரம் தான் சரியில்லை. இதற்கு முன்பே, இக்கேள்வி கேட்கப்பட்டது; அப்போதும் நேரம் சரியில்லை. "இவரை விட்டால், வேறு கதியில்லை' என, சகித்துக் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர்களும், இப்போது பொறுமை இழந்துவிட்டனர். ஆனால், மன்மோகன் சிங்கிற்கு நேரம் சரியாக இருக்கிறது; மக்களுக்குத்தான் நேரம் சரியில்லை. மெத்தப் படித்தவர்; பொருளாதார நிபுணர்; முன்னாள் நிதி அமைச்சர் என்ற எல்லாவற்றையும் தொலைத்து, சோனியாவின் சன்னிதானத்தில், இவர் வெறும் எடுபிடியாக நிற்கிறார். இது, இவருக்கும் தெரிகிறது; பிறருக்கும் தெரிகிறது. ஆனால், இவரை வீட்டுக்கு அனுப்ப முடியவில்லையே! இவரை அனுப்பினால், வேறு யார் வந்து நாட்டை மேலும் சீரழிப்பரோ என்ற கவலை, மக்களுக்கு இருக்கிறது. இதுபற்றி எந்தவிதக் கவலைகளும் இல்லாமல் இருப்பவர்கள், இருவர் மட்டுமே. சோனியாவும், ராகுலும்! சோனியா ரிமோட்; ராகுல் அந்த ரிமோட்டின் பேட்டரி.
"மன்மோகன் சிங்கை மட்டும் அனுப்பினால் போதாது. சோனியாவையும், ராகுலையும் கட்சியைவிட்டே அனுப்ப வேண்டும்' என, காங்கிரசாரே நினைக்காதபோது, மற்றவர்கள் இதில் என்ன செய்துவிட முடியும். அவர்கள் ஆதியிலிருந்தே, நேரு குடும்பத்தின் கொத்தடிமைகள். கொஞ்சம் மானம், ரோஷம் வந்து, வெளியே போனவர்கள் கூட, வந்து ஒட்டிக் கொண்டனர் அல்லது கூட்டணி கண்டனர். இந்த லட்சணத்தில், மக்கள் என்ன செய்ய முடியும்? சரி... பத்திரிகையாளர்கள் ஏதாவது செய்ய முடியுமா? எல்லாரையும் கிழியோ, கிழியென்று கிழிக்கும் பத்திரிகையாளர்கள், இறக்குமதித் தலைவியைக் கேள்விகள் கேட்டு, சங்கடப்படுத்துவதில்லை. மகாராணியும், யுவராஜாவும் பத்திரிகை உலகின் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். எதிர்க்கட்சிகளும் இவர்களை முழுமையாக விமர்சிப்பதில்லை.
கூட்டணிக் கட்சிகள், தாங்கள் இப்போது பெறும் ஆதாயத்தை, விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. ஆட்சி மாறினாலும், இவர்கள் கூட்டணியில் தொடர்வர்; நஷ்டப்பட மாட்டார்கள். எனவே, இவர்களும் மன்மோகன் சிங்கை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஆக, மத்தியில் ஆட்சி என்பது மக்களின் ஆட்சி அல்ல; மன்மோகன் சிங்கின் ஆட்சியுமல்ல. சோனியா - ராகுலின் ஆட்சி. இதை வெளிப்படையாகப் பேசுவதற்கு, பலர் தயங்கும் அளவுக்கு, நாட்டில் ஒரு அச்சமும், விரக்தி மனப்பான்மையும் இருக்கிறது. மத்தியில் உள்ள ஆட்சி கலைக்கப்பட்டு, தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் போது, நேரு குடும்பம் அல்லாத, நேரு குடும்பத்தின் செல்வாக்குக்கு ஆட்படாத, கட்சித் தலைமை இருக்க வேண்டும். அதுதான் சுத்திகரிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியாக இருக்க முடியும். அப்படியில்லாவிட்டால், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை, வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து, புதிய ஆட்சி அமைத்து, ஊழல் செய்த அனைவர் மீதும், தயவு தாட்சண்யமின்றி, நடவடிக்கை எடுக்க வேண்டும். சோனியாவின் எல்லாத் தொடர்புகளும், விசாரிக்க வேண்டும். நேரு குடும்பத்தை விட்டு வெளியே வந்தால், அது காங்கிரஸ் கட்சி. இல்லாவிட்டால், அது இறக்குமதித் தலைவியின் அடிமைப் பட்டாளம் என்பதை, இனிவரும் தேர்தல் உணர்த்த வேண்டும். தேர்தலையும், விரைவில் நடத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்குவது, பார்லிமென்ட் எதிர்க்கட்சிகளின் கடமை மட்டுமல்ல. காங்கிரஸ் கட்சி ஆளாத மாநிலங்களின் முதல்வர்கள் ஒன்று கூடி, மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகள் என்று, தனியாக எவையும் இல்லை.
எல்லாமே, "தேசிய வளர்ச்சிக்குழு' என்ற அரசியல் சாசன ஒப்புதல் இல்லாத அமைப்பை உருவாக்கி, அதற்குத் தலைமை தாங்கி, எல்லா அமைச்சர்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து, ஒரு மகாராணி போல் நாட்டை ஆளும் சோனியாவின் விருப்பத்திற்கு இணங்கிய செயல்பாடுகளே என்பதை, இந்த முதல்வர்களின் சங்கம், மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லி, உடனடியாக பார்லிமென்ட்டிற்கு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தை உருவாக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான இயக்கம், இப்போது சூடுபிடித்து வருகிறது. ஊழலும், காங்கிரசும் வேறு, வேறு அல்ல; காங்கிரசும்,சோனியாவும் வேறு,வேறு அல்ல என்ற எண்ணம், இப்போது தான் மக்களிடையே பரவத் தொடங்கியிருக்கிறது. அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு, உடனடியான, நேரடியான அரசியல் கட்சிகளின் ஆதரவு வராவிட்டால் பரவாயில்லை. அது, தனி சமூக இயக்கமாகவே தொடரட்டும். ஆனால், உடனடித் தேவை, அரசியல் தீர்வு, அதுவும் தேர்தல் மூலமாக. அதன் பிறகு, அதாவது புதிய அரசு அமைந்த பிறகு, புதிய, "லோக்பால்' சட்டம் பற்றிப் பேசலாம். பத்திரிகை உலகின் ஆதரவு, அன்னா ஹசாரேவுக்கு இருப்பது போல், இனி புதிதாகத் தொடங்கப்படக் கூடிய, காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்களின் சங்கத்திற்கும் இருக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இந்த முதல்வர், இன்று இவ்வளவு ஊழல், அந்த முதல்வர், அன்று இவ்வளவு ஊழல் என்ற விமர்சனங்களை, மக்களும், பத்திரிகைகளும் கொஞ்ச காலத்திற்கு ஒத்தி வைக்கட்டும். புதிய அரசு, புதிய லோக்பால் என்று வரும்போது, இவர்களும் மாறி விடுவர். அதுவரை, மாநில முதல்வர்களின் சங்கம், மத்திய அரசை எதிர்த்துப் போராட, பல சமூக இயக்கங்களும், ஊடக உலகமும் ஒத்துழைக்க வேண்டும். நடுக்கூடத்தில் நுழைந்த நல்ல பாம்பு, அங்கேயே சட்டையை உரித்துப் போட்டு, தோட்டத்தில் பதுங்கியிருக்கிறது. அதை அடித்து விரட்ட வேண்டும். கையில் கிடைக்கும் விறகுக் கட்டையையோ, துருப்பிடித்த இரும்புக் குழாயையோ எடுத்துக் கொள்ள வேண்டியது தான். பூண்போட்ட, மஞ்சள், குங்குமம் தடவிய, வழுவழுப்பான உலக்கையைத் தேடிக் கொண்டிருக்க முடியாது. பாம்பை அடித்தவுடன், தடியை வீசி எறிந்து விடப் போகிறோம். தடியின் தகுதிகள் பற்றி, இப்போது ஆராய்ந்து பார்க்க வேண்டாம். பாம்பை அடிக்க யார் வந்தாலும், வரவேற்போம். தமக்குள் உள்ள பிணக்குகளை மறந்து, காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்கள் இதைச் செய்ய முன் வந்தால், இதுதான் தேசபக்தி. வேறு எதுவும் அல்ல.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...