Friday, August 19, 2011

ஜாபர் சேட் கனிமொழிக்குச் செய்த உதவி! சி.பி.ஐ. அடித்த லாங்-ஷாட்!!



ஜாபர் சேட் விவகாரம் அடங்கிப்போனது போல வெளியே காட்டப்பட்டாலும், உள்ளே மிக மும்மரமாக காரியங்கள் நடப்பதாக உளவுத்துறை வட்டாரங்களில் கூறுகிறார்கள். தமிழக உளவுத்துறையின் இந்த முன்னாள் தலைவரின் பழைய செயற்பாடுகள் பற்றிய பல விபரங்களை, சி.பி.ஐ. கைப்பற்றி விட்டதாகவும் தெரியவருகின்றது.

ஜாபர் சேட் விவகாரம் வெளியே வந்ததே, லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடாத்திய ரெய்டு நடவடிக்கை ஒன்றால்தான்.  அதுவே அந்த விவகாரத்துக்கு நிறைய விளம்பரங்களைக் கொடுத்துவிட்டது. சி.பி.ஐ. அதை விரும்பவில்லை.

மாநில அரசு இதில் தலையிட்டு ஜாபர் சேட்டை வளைத்துக் கொண்டது பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் தமது எதிர்ப்பைத் தெரிவித்ததாகவும் ஒரு தகவல் உண்டு.

தாங்கள் இலக்கு வைத்து சிறிது சிறிதாக தகவல் சேகரித்துக் கொண்டிருக்கையில்,  இப்படியான ரெயிடு, சம்மந்தப்பட்ட அனைவரையும் உஷாராக்கிவிடும் என்கிறார்களாம் சி.பி.ஐ. அதிகாரிகள். இதையடுத்து, மாநில அரசின் துறைகளை ஜாபர் விஷயத்தில் சற்று அடக்கி வாசிக்குமாறு கூறப்பட்டுள்ளதாம்.

எமக்குக் கிடைத்த தகவல்களின்படி, ஜாபரின் வெளிநாட்டு டீல்கள் பற்றிய முதற்கட்ட தகவல்கள் சி.பி.ஐ.யிடம் வந்துவிட்டன. இப்போது, அவருடைய தமிழக நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் திரட்டப்படுகின்றன.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாகத் தொடங்கியதும், அந்த விசாரணைக்கு முட்டுக்கட்டைகள் போடுவதற்கு ஜபார் சேட் என்னவெல்லாம் செய்தார்? யாருக்காகச் செய்தார்? என்ற கோணத்தில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அத்துடன் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தமிழகத்தில் சில தடயங்களை அழிப்பதற்கும் ஜாபர் சேட் பிரம்மப் பிரயத்தனம்  செய்துள்ள விஷயமும் தெரியவந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜாபர் சேட்டின் தலையீடுகள்  கடந்த ஆண்டே தொடங்கிவிட்டன. கடந்த டிசம்பரில் காமராஜ் மற்றும், ஜெகத் கஸ்பர்ஆகியோரின் இல்லங்கள் சி.பி.ஐ.யால் ரெய்டு செய்யப்பட்டன. அதுதான், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தமிழகத்தில் விஷயங்களைக் கிளறப் போகின்றது என்பதற்குக் கிடைத்துள்ள சிக்னல்.

இது வேறு யாருக்குப் புரிகிறதோ, இல்லையோ, உளவுத்துறையில் அனுபவம் உடைய ஜாபர் சேட்டுக்கு நன்றாகவே புரிந்திருக்கும். அவர் உடனடியாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தமிழகத்தில் பயன்பெற்றவர்களை அலேர்ட் பண்ணியதாகச் சொல்கிறார்கள்.

அந்த நிமிடத்தில் இருந்தே, ஸ்பெக்ட்ரம் பணம் தமிழகத்துக்குள் பாய்ந்து வந்த தடயங்களை   அழிக்கும் பணி  தொடங்கி விட்டதாகத் தெரிகிறது.

இதை செய்து கொடுத்தவர் ஜாபர் சேட்.

ஜபார் சேட்டால் இதை மிகச் சுலபமாகவே ஹான்டில் பண்ண முடிந்திருக்கிறது. காரணம், முதலாவது உளவுத்துறை நடைமுறைகளில் அவருக்கு இருந்த தெளிவு. இரண்டாவது, தமிழக உளவுத் துறையின் தலைவராக அவர் பதவியில் இருந்தார்.

சி.பி.ஐ.க்கு என்னதான் வசதிகள் இருந்தாலும், மாநில அளவில் காரியங்களைச் செய்யும்போது, மாநில காவல்துறை மற்றும் உளவுத் துறையின் ஒத்துழைப்பு மிக அவசியம். தாங்கள் செய்ய நினைக்கும் சில காரியங்களைச் செய்து முடிக்கவும், சப்போர்ட்டிங் டாக்குமென்ட்களைப் பெறவும் சி.பி.ஐ., மாநில போலீஸ் ஆட்களின் கைகளையே எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.

இந்த சூழ்நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஜாபர், குறிப்பிட்ட சில தடயங்களை சி.பி.ஐ. அணுகுமுன், அவர்கள் செய்யப்போவதை முன்கூட்டியே ஊகித்துக் கொள்ள முடிந்தது என்கிறார்கள்.

சி.பி.ஐ. எங்கெல்லாம் தடயங்கள் இருப்பதாகத் தேடிப் போனதோ, அங்கெல்லாம் குழப்பமான விடைகளே அவர்களுக்குக் கிடைத்தது.

ஒரு கட்டத்தில், தாங்கள் ஏமாற்றப்படுவதை சி.பி.ஐ. புரிந்து கொண்டது. ஆனால், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம், தமிழகத்தில் அப்போது தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஜாபர் சேட் இந்த விவகாரங்களை குழப்பியடித்ததே, தி.மு.க. முதல் குடும்பத்தினரில் நலனுக்காக என்பது சி.பி.ஐ.க்கு நன்றாக தெரிந்திருந்தது.

என்னதான் தடைகளை ஏற்படுத்தினாலும், சில விஷயங்களை ஜாபர் சேட்டால் தடுக்க முடிந்திருக்கவில்லை. அவற்றில் முக்கியமானது, கலைஞர் டி.வி.யில் நள்ளிரவில் நடைபெற்ற சோதனை.

இந்தச் சோதனையை அடுத்து, தயாளு அம்மாளையும், கனிமொழியையும் சி.பி.ஐ. விசாரணை செய்தது.

சி.பி.ஐ.யின் தமிழக ஆபரேஷனில் தவறான தகவல்களைத் தந்து, விசாரணையை தவறான வழியில் போகச் செய்வதற்கு  ஜாபர் சேட் செய்த ஏற்பாடுகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கடும்  எரிச்சலோடு கவனித்து வந்திருக்கிறார்கள். அதற்கு கௌண்டர் அட்டாக் கொடுக்கும் வகையிலேயே, தயாளு அம்மாளையும், கனிமொழியையும் திடீரென விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தார்கள்.

இது, சி.பி.ஐ.யின் ஒரு லாங்-ஷாட்.

எப்படியென்றால், தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரித்து, அதன் பின்னரே கனிமொழி வரை சி.பி.ஐ. வந்திருக்க வேண்டும். வழக்கமாக செய்யப்படும் நடைமுறை அதுதான். ஜாபர் சேட்டும் அதை ஊகித்தே சி.பி.ஐ. போகும் பாதையெல்லாம் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

தமது பாதை குறுக்கிடப்படுகின்றது என்பதை உணர்ந்துகொண்ட சி.பி.ஐ., அந்தப் பாதையிலிருந்து ஒரே ஜம்ப் அடித்து, கனிமொழி வீட்டு வாசலில் போய் நின்றது.  இந்த லாங்-ஷாட்டை  ஜாபர் உட்பட யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்தக் கட்டத்தில்தான்,  எல்லாமே கலகலத்துப் போனது. ஜாபர் போட்ட பல தடைகள் பொலபொலவென சரிந்து வீழ்ந்தன. சில தடயங்கள் சிக்கின. கனிமொழி கைது செய்யப்பட்டார்.

தயாளு அம்மாளைக் காப்பாற்றிக் கொள்ள திடமான அரசியல் சக்திகள் இருந்தன. காரணம், அந்த வழியில் ரூட் பண்ணப்பட்ட பணம், கட்சி விவகாரங்களுக்காக பயன்படுத்தப்பட்ட பணம். அது சிக்கினால், வேறு பல பூதங்கள் எல்லாம் கிளம்பும். தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் செலவுக்கு கொடுத்த பணம்கூட இழுக்கப்படும்.

ஆனால், கனிமொழி மூலம் ரூட் பண்ணப்பட்ட பணம்தான், தனிப்பட்ட பயனாளிகளுக்கு போன படம். கனிமொழி என்றால், நேரடியாக கனிமொழியின் கைகளுக்கு போகவில்லை. கலைஞர் டி.வி.க்கு போய் அதன் வழியாக கிளை பரப்பியது.

கிளைகளில் ஒன்றுதான் சி.ஐ.டி. காலனிக்கு சென்றது.  அப்படியிருந்தும் மொத்தப் பணத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய  பொறுப்பு அவரது தலையில் வீழ்ந்திருக்கிறது. காரணம்,  கலைஞர் டி.வி. என்ற ‘பாட்டில்-நெக்’கில் கனிமொழி சிக்கிக் கொண்டார் ! (இலவச இணைப்பாக சரத்குமாரும்!)

கனிமொழி சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கான அலுவல்களை செய்யும் பொறுப்பே ஜாபர் சேட்டிடம் கொடுக்கப்பட்டிருந்தது. கலைஞர் டி.வி. சோதனை நடைபெற்ற தினம்வரை, ஜாபர் செய்த உதவிகள்தான் கனிமொழியைக் காப்பாற்றியிருந்தது.

ஆனால், வல்லவனுக்கு வல்லவனாக சி.பி.ஐ. அடித்த லாங்-ஷாட், எல்லாவற்றையும் கெடுத்து விட்டது.

இப்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி இல்லை. உளவுத்துறை உயர் பதவியில் ஜாபர் சேட்டும் இல்லை. ஆனால், சி.பி.ஐ. ஆக்டிவ்வாக இருக்கிறது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...