திருநள்ளாறிலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில், 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தண்டிகை என்னும் தலம்.தற்போது எஸ்.புதூர் என்று அழைக்கபடுகிறது. இங்கு சௌந்தரநாயகி உடனுறை சனத் குமாரேஸ்வர் அருள்புரிகிறார்.
மூலவர் : சனத் குமாரேஸ்வரர்
அம்மன்/தாயார் : சவுந்தர்ய நாயகி
தீர்த்தம் : சோம தீர்த்தம்
ஊர் : எஸ். புதூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா: பவுர்ணமி, சிவராத்திரி
தல சிறப்பு: குபேரன் வழிபட்டு பேறு பெற்ற தலம்.
ஆலயம் திறந்திருக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
ஆலய முகவரி:
அருள்மிகு சனத் குமாரேஸ்வரர் திருக்கோயில் எஸ். புதூர், கும்பகோணம்.
ஆலய வரலாறு:
ஒருசமயம் வடதிசை அதிபதியான குபேரன் தர்மம் தவறியதால் சாபம் பெற்றான்.
சப்தரிஷிகளின் ஆலோசனைப்படி திருத் தண்டிகை வந்து வழிபட்டு சாப விமோசனமும் இழந்த செல்வங்களையும் பெற்றான்.
குபேரன் செய்த தவறு என்ன?
யாரால் அவனுக்கு சாபம் கிடைத்தது? எப்படி விலகியது? என்பது போன்ற தல வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்வோம்
முன்னொரு காலத்தில் காம்பிலி என்ற நாட்டில் வாழ்ந்த வேள்விதத்தன் என்பவனுக்கு குணநிதி என்ற மகன் இருந்தான்.
இவன் தன் இளமைக் காலத்தை வேதக் கல்வியில் செலவிடாமல், தந்தை சேர்ந்த பொருளைத் தவறான வழிகளில் செலவிடலானான். இதனை அவன் தாய் அறிந்திருந்தாள்.
புத்திரபாசம் கண்களை மறைக்கவே அதைத் தன் கணவனிடம் தெரிவிக்கவில்லை.
குணநிதிக்குத் திருமணமும் நடந்தது.
ஒரு நிலையில் மகனின் தவறான போக்கை தந்தை அறிந்தார். தன் மனைவி மகனுக்கு உடந்தையாக இந்ததையும் அறிந்தார். அவர்களை விட்டு விலகினார்.
தாயும் குணாதியும் தனித்து விடப்பட்டனர். சில நாட்களில் உணவும் இல்லாத நிலையை அடைந்தனர்.
ஒரு சிவராத்திரி நாளில் சிவன் கோயில் ஒன்றிற்கு பக்தரோடு பத்தராகச் சென்றான் குணநிதி.
பரிசாரகர் உறங்கும்போது சில திரவியங்களைக் கவரத் திட்டமிட்டான்.
திருடச் சென்றபோது கோயிலில் வெளிச்சம் இல்லாமல் இருந்ததால் விளக்கைத் தூண்டி ஒளியூட்டினான்.
திருடித் திரும்பும் போது பக்தர்களிடம் வசமாக பிடிபட்டவன் அவர்கள் அடித்ததால் இறந்தான்.
குணநிதியின் உயிரைக் கவர எம தூதர்கள் வந்தனர்.
விளக்கினைத் தூண்டி அவன் செய்த சிவ புண்ணியம் காரணமாக அங்கு வந்த சிவகணங்கள் எமதூதரை விலக்கின.
அவனுக்கு சிவனருள் சித்தித்தது. புண்ணியத்தின் காரணமாக கலிங்க நாட்டில் அரந்தமன் என்பவரின் மகனாகப் பிறந்தான்.
தமன் என்ற பெயருடன் சிவனை நோக்கித் தவம் செய்தான்.
தமனின் அருந்தவம் கண்டு மகிழ்ந்து அவனுக்குக் காட்சி தந்தார் சிவபெருமான்.
என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன் என்றார் சிவன்.
கோடி சூர்ய பிரகாசத்துடன் காட்சியளிக்கும் தங்களைக் காணும் ஆற்றல் என் கண்களுக்கு இல்லை;
எனவே தங்களை தரிசிக்கும் சக்தியை எனக்குத் தர வேண்டும் என்று வித்தியாசமான வேண்டுகோளை முன் வைத்தான்.
இது கேட்டு மகிழ்ந்தார் ஈசன். தன்னைக் காணும் ஆற்றலை அவன் கண்களுக்குத் தந்தார்.
சிவனைக் கண்ட அவன் பார்வை அருகில் இருந்த அழகினைக் கண்டு வியந்தான். விழிகளை விரித்து நோக்கினான்.
சினந்தாள் தேவி அவள் ஒளியால் தமனின் கண்கள் பார்வையற்றுப் போயின.
கண்ணிழந்து வருந்திய தமன் தளரவில்லை. தவமுனிவர்கள் வழிகாட்டிய வண்ணம் மீண்டும்
தவம் மேற்கொண்டான். கடுந்தவம் செய்தான்.
சிவபெருமான் அவனுக்கு மீண்டும் காட்சி அளித்தார், ஒரு கண்ணுக்கு ஒளி தந்தார். இன்னொரு கண் பொற்கண்ணாயிற்று.
தன் தோழன் என்னும் தகுதியையும் கொடுத்தார். குபேர பதவிகொடுத்தார்.
எல்லா செல்வங்களுக்கும் அதிபதி யாக்கினார். வடதிசைக் காவல் பொறுப்பை அளித்தார்.
அவன் தனாதிபதி எனவும் பொற்கண்ணன் எனவும் புகழப்பட்டான் என்கிறது காசி காண்டம்.
பார்வதி தேவியின் சாபத்துக்கு ஆளான தமன் மீண்டும் தவம் செய்து குபேரனானான்.
தமன் இரண்டாம் முறை தவமிருந்த இடமே திருத்தண்டிகை.
திருத் தண்டிகை என்றால், தெய்வச் சிவிகை இறைவன் உலாவரும் பல்லக்கு என்று பொருள்.
அத்தகு பெருமை பெற்ற இவ்வூருக்கு வந்து இக்கோயிலில் உள்ள சோம தீர்த்தத்தில் நீராடி, சாபம் நீங்கி, இழந்த செல்வத்தைப் பெற்றார்.
தான் வரம் பெற்ற நாளில் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கும் இழந்த செல்வத்தை அடையும் வரம் அருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினான்;
இறைவனும் அவ்வாறே அருளினார்.
குபேரன் வரம் பெற்ற நாள் மாசி மாதப் பௌர்ணமியாகும்.
எனவே மாசி மாதப்பௌர்ணமியன்று
இங்கு வந்து சோம தீர்த்தத்தில் நீராடி சனத் குமாரேஸ்வர்ரை
வழிபடுபவர்களுக்கு அவர்கள்
இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க இறைவன் அருள்புரிகின்றார்.
இந்த ஆலயத்தின் புகைப்படங்கள் கீழே!





No comments:
Post a Comment