Monday, November 20, 2023

மக்கள் மறதியை பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள் அதை பயன்படுத்தி வாய்க்கு வந்ததை யெல்லாம் பேசுகிறார்கள்.

 *ஈ வெ ரா சிலை பீடத்தில் உள்ள வாசகங்களை அகற்ற வேண்டும்* என்பது குறித்து அண்ணாமலை பேசியதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுவதாகவும், "இறைவனைக் காட்டி அடிமையாக வைத்திருக்கிறீர்களே?" என்று தந்தை பெரியார் பகுத்தறிவு சிந்தனையோடு அன்று போர்க்குரல் கொடுத்தார் என்றும், அதைப் பற்றியெல்லாம் அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பில்லை என்றும் அதிமுக-வின் கே.பி.முனுசாமி கூறியிருக்கிறார்.

வரலாறு தெரியாமல் பேசுவது அவர்தான் என்பது அவருக்குத் தெரியவில்லையா? அல்லது வேறு யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறாரா?
வரலாற்றை சற்றே திரும்பி பார்ப்போம்.
*(தமிழக சட்டமன்ற விவாதங்கள்):*
கருணாநிதி:
காஞ்சிபுரத்தில் பெரியார் சிலையை வைப்பதற்காக திராவிடர் கழகம் அதற்கான இடத்தை கேட்டு, அதற்குரிய பணத்தையும் பராமரிப்பு செலவுக்கான பணத்தையும் கட்டி, திமுக ஆட்சியில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இப்போது இந்த ஆட்சியில் அங்கே சிலை வைக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
முதலமைச்சர் எம்ஜிஆர்:
அவர்கள் கேட்டிருந்த இடம் மடம், கோவில் போன்ற மத நம்பிக்கைக்குரிய இடம். கோயில், மடம் போன்றவற்றிற்கு எதிராக அது இருப்பதால்,அவற்றிற்கு இடைஞ்சலாக இருக்கிற இடத்தைக் கேட்கிற காரணத்தால், முன்பு இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியில்
அது பற்றி பரிசீலிக்கப்பட்டு "அது கூடாது! முடியாது!" என்று மறுக்கப்பட்டது. நான் வந்த பிறகு, அந்தப் புகாரை கவனித்து, யார் என்ன சொல்கிறார்கள் என்று கருத்தையும் கேட்டு, பொதுவாக எனக்கு சொல்லப்பட்ட யோசனைகளை மட்டுமல்ல, ஒருமுறை நான் காஞ்சிபுரம் போன போது அந்த இடத்தைப் பார்த்து விட்டு வந்து உத்தரவு போட்டாகி விட்டது. வேறு இடத்தில் சிலை வைக்க அவர்கள் அனுமதி கேட்பார்களேயானால், உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நான் உத்தரவு போட்டு பல மாதங்களாகி விட்டன.
கருணாநிதி:
சங்கராச்சாரியார் மடத்திற்கு வெளியிலே பெரியாருடைய சிலை ஏன் இருக்கக்கூடாது? என்று எனக்குத் தெரியவில்லை.
எம்.ஜி.ஆர்:
நாட்டில் அமைதி தேவை என்பதால், இந்த அரசு எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கலாம், இல்லா தவர்களாகவும் இருக்கலாம். அனைவருக்கும், மத நம்பிக்கையும்,பாதுகாப்பும் அளிப்பது இந்த அரசின் கடமை. அங்கே சச்சரவுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, யாரோ அந்த சிலையை வைக்க வேண்டாம் என்று சொன்ன உத்தரவை மாற்றி, வேறு இடத்தில், எங்கு கேட்டாலும், வசதியான இடத்தில் மக்களுக்குப் பயன்படுகிற வகையில் ஒரு இடத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று நான் உத்தரவிட்டேன்.
மு.கருணாநிதி:
ஒருவேளை, "போக்குவரத்துக்கு இடைஞ்சலான இடம் என்பதால் அது அனுமதிக்கப் படவில்லை" என்று முதலமைச்சர் சொல்வார் என எதிர்பார்த்தேன். சங்காராச்சாரி யாருக்காகத்தான் அந்த இடம் கொடுக்கப்பட வில்லை என்று சொல்லத்தான்..
எம்.ஜி.ஆர்:
சங்காராச்சாரி யாருக்காகத்தான் அங்கு கொடுக்கப்படவில்லை என்றால் அதை துணிவோடு சொல்கிறவன் நான். ஏனென்றால், நான் அவரை நேரிலே கண்டு, அவர் என்ன சொல்கிறார் என்பதை பேசி, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டவன். அந்த அளவு துறவியாக, (உண்மையிலேயே துறவிக்கு அடையாளமாக) வாழ்கிறார் என்பதை இந்த மாமன்றத்திலே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அவருக்காகவா, அந்த மடத்திற்காகவா அல்லது இட நெருக்கடியாலா என்று பிரித்துப் பார்ப்பதற்கில்லாமல் இட நெருக்கடியும் இருக்கிறது. அதோடு, வேறு அரசியல் நெருக்கடி, மத நெருக்கடி மற்றும் சச்சரவுகள், குழப்பங்கள் வரலாம். அதெல்லாம் வரக்கூடாது என்பதற்காக இந்த நிலையை நான் மேற்கொண்டேன்.
மு.கருணாநிதி:
ஒரு மாதத்திற்குள் குறிப்பிட்ட இடத்தில் (திராவிட கழகத்தார் கேட்டுள்ள இடத்தில்) பெரியாருடைய சிலையை வைக்க அனுமதி மறுக்கப் படுமானால் அந்த தடையை மீறி, நானே தலைமையேற்று அந்த இடத்தில் பெரியார் சிலையை வைக்க முயற்சி எடுப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் என்ற நிலையில் இங்கேயே பதில் சொல்லி விடுகிறேன். எந்த காரணத்தைக் கொண்டும் அங்கே சிலை வைக்க இந்த அரசாங்கம் அனுமதிக்காது.
எப்படியும் அந்த இடத்தில் பெரியார் சிலையை தி மு கழகம் வைத்தே தீரும்.
(முறியடிப்போம், முறியடிப்போம் என்ற குரல்கள்)
துரைமுருகன்: பெரியார் சிலையை உடைப்போம் என்றா சொல்கிறீர்கள்?
கருணாநிதி: பரவாயில்லை, சங்கராச்சாரியாருக்காக ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் (அதிமுக) பெரியார் சிலையை உடைப்போம் என்று சொல்கிறார்கள்.
எம்.ஜி.ஆர்:
சங்கராச்சாரியார் அவர்களுக்காக இந்த அரசு பேசவில்லை. சிலையை உடைப்போம் என்றும் சொல்ல வில்லை.
துரைமுருகன்: சங்கராச்சாரியாருக்காக பெரியார் சிலையை உடைப்போம் என்று சொல்கிறார்களே!
எம்.ஜி.ஆர்:
சொல்லாத வார்த்தையை சொன்னதாக இங்கே மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் சிலையை உடைப்போம் என்று எங்கள் தரப்பிலிருந்து சொல்லவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறிக்கொள்கிறேன். அந்த முயற்சியை முறியடிப்போம் என்று தான் சொன்னார்கள்.
--------------------
மேற்கண்ட விவாதமானது தமிழக சட்ட சபையில் 22 மற்றும் 23.03.1979 அன்று நிதி நிலை அறிக்கையின் போது நடந்தது.
கே.பி.முனுசாமி இப்போது சொல்லட்டும். அன்று எம்.ஜி.ஆர் கூறியதைத்தான் அண்ணாமலை இப்போது கூறியிருக்கிறார். அன்றைக்கு ‘முறியடிப்போம்’ என்ற வார்த்தையை ஊதிப் பெரிதாக்கி ‘உடைப்போம்’ என்று மடை மாற்றியது இன்றைய அமைச்சர் துரைமுருகன். அதைப் போன்றே அண்ணமாலை கூறியதை ஊதிப் பெரிதாக்கி சட்ட ஒழுங்கு சீர்கேட்டை உருவாக்கத் துடிப்பதும் அதே திமுக வினர்தான். எம் ஜி ஆர் சொன்னது தவறா? வழிபாட்டுத்தலங்களின் அருகே ஈ வெ ரா சிலையை அமைக்கக் கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் அவர்களின், (அதிமுக-வின்) உறுதியான நிலைப் பாட்டை ஏற்க மறுக்கிறாரா கே.பி.முனுசாமி?
சங்கராச்சாரியார் குறித்த எம்.ஜி.ஆர் அவர்களின் கருத்தில் கே.பி.முனுசாமிக்கு முரண்பாடு உள்ளதா?
"அண்ணாமலைக்கு வரலாறு தெரிய வில்லை" என்று கூறி வரலாற்றை மாற்றி எழுத முனைகிறாரா கே.பி.முனுசாமி?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...