Monday, October 10, 2011

தயாநிதி, கலாநிதி சி.பி.ஐ., வலையில் சிக்கியது எப்படி?வீடுகளில் நடந்தது என்ன?

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து, சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்தத் துவங்கியது. "முதலில் வருபவர்களுக்கு முதல் வாய்ப்பு என்ற அடிப்படையில், அனுபவம் இல்லாத கம்பெனிகளுக்கு எல்லாம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு அள்ளி வீசப்பட்டுள்ளது.


எனவே, இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி, 2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை நடந்துள்ள ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் குறித்தும், முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். இதனால், இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்தது.இதைத் தொடர்ந்து, 2003-04ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அருண் ÷ஷாரியிடம், கடந்த பிப்ரவரி 25ம் தேதி சி.பி.ஐ., அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த ஒதுக்கீடுகள் குறித்து விசாரணை நடத்தியது. அடுத்ததாக தயாநிதி பதவிக் காலம் குறித்து விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் உடனடியாக நடக்கவில்லை.


இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பதவியை இழந்தது தி.மு.க., அதன் பின், தொழிலதிபர் சிவசங்கரன், சி.பி.ஐ., முன் திடீரென ஆஜரானார். ஏர்செல் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் இவர்."ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஒதுக்கீடு கிடைக்கவில்லை. அதனால், ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்பதற்கு, தயாநிதி கொடுத்த நெருக்கடியே காரணம்' என்று சி.பி.ஐ.,யிடம் குறிப்பிட்டிருந்தார். அப்போது அவர், நடந்த உண்மை நிலவரத்தை கூறியிருந்தார்.


அவர் கூறியிருந்ததாவது:காங்., தலைமையிலான, ஐ.மு.கூட்டணி அரசில், 2004-07ம் ஆண்டு, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். கடந்த 2006ம் ஆண்டு நான் நடத்தி வந்த ஏர்செல் கம்பெனிக்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்திருந்தேன். லைசென்ஸ் கோரி தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 14 மனுக்கள், 2006ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி நிலவரப்படி நிலுவையில் இருந்தன. பலமுறை முயன்றும் லைசென்ஸ் கிடைக்கவில்லை.இதற்கிடையில், தொலைத்தொடர்புத் துறையில் அன்னிய நிறுவனங்கள், 74 சதவீதம் வரை முதலீடு செய்யலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்தது. அப்போது, தயாநிதி, கலாநிதி ஆகியோர் என்னை மிரட்டினர். ஏர்செல் கம்பெனியை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு விற்குமாறு நிர்பந்தித்தனர். நிர்பந்தம் காரணமாக, ஏர்செல் கம்பெனியை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.


ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த, "மேக்சிஸ்' கம்பெனிக்கு கைமாறியது. ஏர்செல் நிறுவனமாக இருந்தபோது கோரிய லைசென்ஸ், அது மலேசிய நிறுவனத்திற்கு கைமாறிய உடனேயே, 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், "சன் டைரக்ட்' கம்பெனியில் முதலீடு செய்தது.இந்த, "சன் டைரக்ட்', வீடுகளுக்கு நேரடி, "டிவி' ஒளிபரப்பு செய்யும், "டிடிஎச்' நிறுவனம். தயாநிதி சகோதரர் கலாநிதி நடத்தும், "சன் டிவி' குழுமத்தின் ஒரு அங்கம்.டி.டி.எச்., ஒளிபரப்பு முறை அதிக அளவு பிரபலமாகாத நேரம் அது. அப்படியிருந்தும், அந்த நிறுவனத்தில் மலேசிய நிறுவனம் 600 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்தது.இவ்வாறு சிவசங்கரன் கூறியிருந்தார்.


இதை விசாரித்த சி.பி.ஐ., மலேசிய நிறுவனத்திற்காக சிவசங்கரனை தயாநிதி, கலாநிதி சகோதரர்கள் மிரட்டினர் என்பதற்கு பூர்வாங்க ஆதாரம் உள்ளது என்றும், அதற்காக பல கோடி ரூபாய் வேறு வழியில் கைமாறியது என்றும் கண்டுபிடித்தது. அதன் அடிப்படையில், இப்போது இருவர் மீதும் எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.


கலாநிதி, தயாநிதி வீடுகளில் நடந்தது என்ன?


காலை 7.15 மணி
*டில்லி சி.பி.ஐ.,யின் கூடுதல் எஸ்.பி., ரவி காம்பிர் தலைமையில், ஒரு பெண் உட்பட ஏழு அதிகாரிகள், போட் கிளப் முதல் அவென்யூவில் உள்ள தயாநிதி வீட்டு முன், டி.என்.01 டி 3832 டெம்போ டிராவலர் வாகனத்தில் வந்திறங்கினர்.
*வந்ததும், தயாநிதி வீட்டு பெரிய கேட்டை தட்டினர். உள்ளே இருந்து வந்த செக்யூரிட்டியிடம், "கதவை திறங்கள். நாங்கள் சி.பி.ஐ., அதிகாரிகள் வந்திருக்கிறாம்' என்றதும், அந்த காவலாளி, கதவைத் திறக்காமல், "உள்ளே கேட்டுவிட்டு வருகிறேன்' என்று கூறினார்.
*தொடர்ந்து, அதிகாரிகள் இரண்டு முறை கதவைத் தட்டியும் திறக்கப்படாததால், டில்லியில் உள்ள உயர் அதிகாரிகளிடம், சம்பவம் குறித்து விளக்கினார், தலைமை தாங்கி வந்த ஏ.எஸ்.பி., ரவி காம்பிர்.


காலை 7.30 மணி
*அதன் பின், "நாங்கள் சி.பி.ஐ., அதிகாரிகள், உள்ளே விடாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்' என்று, அதிகாரிகள் எச்சரித்தனர். அப்போதும், உள்ளே இருந்து அனுமதி வந்தால் தான், கதவைத் திறப்பதாக காவலாளி கூறியதால், அதிகாரிகள் எரிச்சலடைந்தனர்.


காலை 7.35 மணி
*தயாநிதி வீட்டு வேலைக்கார வாலிபர் அங்கு வர, காவலாளி கதவைத் திறந்த போது, அந்த வாலிபருடன் சி.பி.ஐ., அதிகாரிகள் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்று, ரெய்டை தொடர்ந்தனர்.
*அதே நேரத்தில், மேலும் ஐந்து சி.பி.ஐ., அதிகாரிகள் உள்ளே நுழைந்து, தயாநிதி வீடு வழியாக, கலாநிதி வீட்டிற்குள் சென்று, சோதனையைத் துவக்கினர்.
*தகவலறிந்து, பத்திரிகையாளர்கள் குவியத் துவங்கினர்.


காலை 8.15 மணி
*தயாநிதியின் உதவியாளர் ஒருவர் வீட்டிற்குள் சென்றார்.


காலை 10 மணி
*சன் "டிவி' நிர்வாக அதிகாரி ஆர்.எம்.ரமேஷ், தயாநிதி வீட்டருகே வந்தார்.


காலை 10.25
*முன்னாள் முதல்வரின் நான்காவது மகன் தமிழரசு வந்தார்.
*தொடர்ந்து, ஏழு நிமிடங்கள் உள்ளே இருந்த அதிகாரிகளிடம் பேசிய பின், வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார்.


பகல் 12.20 மணி
*இரண்டு பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்தனர்.


பிற்பகல் 1.25 மணி
*சி.பி.ஐ., அதிகாரிகள் மற்றும் பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள், வீட்டின் மொட்டை மாடி மீதேறி, அங்குள்ள அதி நவீன ரிசீவர் டவர்களை சோதனையிட்டு, 15 நிமிடங்களில் கீழிறங்கி விட்டனர்.


பிற்பகல் 2.52 மணி
*ஒரு பெண் உட்பட, ஏழு அதிகாரிகள் டெம்போ டிராவலர் வாகனத்தில் வெளியேறிச் சென்றனர்.


மாலை 3.45 மணி
*பி.எஸ்.என்.எல்., அதிகாரி, சி.பி.ஐ., அதிகாரிகள் குழுவினர், மீண்டும் வீட்டின் மொட்டை மாடி மீதேறி சோதனையிட்டனர். 10 நிமிடங்கள் சோதனைக்குப் பின் கீழிறங்கினர்.


மாலை 4.07 மணி
*டில்லி பதிவெண் கொண்ட பியட் காரில், சி.பி.ஐ., தடயவியல் நிறுவன அதிகாரி ஒருவர், தயாநிதி வீட்டிற்குள் சென்றார்.


மாலை 4.15 மணி
*தடயவியல் அதிகாரி மற்றும் பி.எஸ்.என்.எல்., அதிகாரி இருவரும் சேர்ந்து, மீண்டும் மொட்டை மாடியில் டவர்களை சோதனையிட்டனர். தொடர்ந்து, 25 நிமிடம், அவற்றை வீடியோ மற்றும் போட்டோ மூலம் பதிவு செய்தனர்.
மாலை 5.20 மணி
*சோதனை முடிந்து, அதிகாரிகள் அனைவரும் வெளியேறினர்.


சுனிதா ரெட்டி வீட்டில்...


காலை 7 மணி
*கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ இதய சிகிச்சை பிரிவு அலுவலகத்திற்கு, ஐந்து பேர் கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள் குழு வந்தது.
*நான்காவது மாடியில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.


7.30 மணி
*சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.


7.45 மணி
*நுங்கம்பாக்கம் சுப்பாராவ் அவென்யூ இரண்டாவது தெருவில் உள்ள சுனிதா ரெட்டி வீட்டிற்குள், அதே ஐந்து பேர் கொண்ட குழு நுழைந்தது.
*வீட்டின் முன், பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.
*வீட்டிலிருந்த சுனிதா ரெட்டி மற்றும் அவரது கணவர் துவாரகநாத்திடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
*அங்கிருந்த ஏர்செல் நிறுவன பங்குகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.


9 மணி
*வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வந்த பணியாளரை நிறுத்தி, நிருபர்கள் விசாரித்தனர். அவர் வாய் திறக்கவில்லை.


11.15 மணி
*விசாரணையை முடித்துக் கொண்டு சி.பி.ஐ., அதிகாரிகள் வெளியேறினர்.
*அவர்களை மறித்து நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றபோது, பதிலளிக்காமல் புன்முறுவலுடன் அதிகாரிகள் காரில் ஏறி சென்றனர்.


சன், "டிவி' அலுவலகத்தில்...


காலை 7.15
*சி.பி.ஐ., அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர், சென்னை எம்.ஆர்.சி., நகரில் உள்ள சன், "டிவி' அலுவலகத்திற்கு, அம்பாசிடர் காரில் வந்தனர்.
*செக்யூரிட்டிகள், அந்த காரை நிறுத்தி, விசாரித்தனர். "சி.பி.ஐ., அதிகாரிகள்' என்றதும், கார் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது. அந்த வளாகத்தில், 11 மாடிகள் கொண்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அதில், 10வது மாடியில், நிர்வாக பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு செல்ல அதிகாரிகள், சிறிது நேரம் காத்திருந்த பின் அனுமதிக்கப்பட்டனர். அப்பிரிவில் உள்ள முக்கிய நிர்வாகிகளிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


பகல் 1 மணி
*சி.பி.ஐ., அதிகாரிகள் மதிய உணவு சாப்பிடக் கூட வெளியே வரவில்லை.
*பத்திரிகை போட்டோகிராபர்கள் மற்றும் "டிவி' கேமராமேன்கள், நிருபர்கள் குவிந்தனர். அந்த வழியாகச் சென்ற பொதுமக்களும் ஆர்வத்துடன் நின்று, சன், "டிவி' அலுவலகத்தில் என்ன சோதனை நடக்கிறது என, விசாரித்தனர்.
*சி.பி.ஐ., அதிகாரிகளின் சோதனை, மாலை 3 மணிக்கு முடிந்ததும், அதிகாரிகள், அம்பாசிடர் காரில் ஏறி பறந்தனர்.


நன்றி காட்டிய செக்யூரிட்டிகள்...
தயாநிதி வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் வந்திருப்பதாகச் சொன்ன பின்பும், அவர்களை அனுமதிப்பதற்கு, உள்ளே இருப்பவர்களின் அனுமதி கேட்டு இழுத்தடித்து, தங்கள் நன்றி விசுவாசத்தை செக்யூரிட்டிகள் அவர்களுக்குக் காட்டினர். அதன் பின், போட்டோ, வீடியோ எடுப்பதை, அவ்வப்போது தடுத்துக் கொண்டே இருந்தனர். "கேட்'டுக்கு மேலே எடுக்க முடியாமல், கீழே தரைக்கும், "கேட்'டுக்கும் இடையில் இருந்த பகுதி வழியாக, கேமராமேன்கள் படம் எடுக்க முயல, அங்கிருந்த செக்யூரிட்டி அடிக்கடி அங்கும் இங்குமாக நடந்து, எடுப்பதைத் தடுத்துக் கொண்டே இருந்தார்.முன்னதாக, ரெய்டு நடக்கும் போது, இருவர் வீட்டின் வெளியிலும் இருந்த செக்யூரிட்டிகள் உள்ளே அழைக்கப்பட்டனர்.


சகஜமாக கலாநிதி
தயாநிதி, கலாநிதி வீட்டில் ரெய்டு நடக்கும் போது, தயாநிதி வீட்டில் இல்லை; டில்லியில் இருந்தார். அதே நேரம் கலாநிதி, மனைவி காவேரியுடன் வீட்டில் இருந்தார்.ரெய்டு முடியும் நேரத்தில், கலாநிதியும் அவர் மனைவி காவேரியும், வீட்டிற்கு வெளியில் வந்து, மேலே அதிகாரிகள் டவர்களை சோதனையிடுவதைப் பார்த்தனர். பின், ஆங்காங்கே பார்த்துவிட்டு, உள்ளே சென்று விட்டனர். அப்போது, கலாநிதி சகஜமாக இருந்தார்.


வந்தார்... சென்றார்...
சி.பி.ஐ., அல்லது லஞ்ச ஒழிப்புப் பிரிவு ரெய்டு நடக்கும் போது, வெளியாட்கள் யாரையும், அந்த இடத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. நேற்று காலை தயாநிதி வீட்டில் ரெய்டு நடக்கும் போது, 10.25 மணிக்கு, முன்னாள் முதல்வரின் நான்காவது மகன் தமிழரசு வந்தார். ஐந்து நிமிடத்தில் உள்ளே அனுமதிக்கப்பட்ட அவர், மாலை ரெய்டு முடிந்து அதிகாரிகள் சென்ற பின், 5.40 மணிக்கு, தமிழரசு அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். காலை அவருடன்," பாதுகாவலர்' போர்வையில் வந்த நால்வர், தயாநிதி வீட்டு கேட்டருகில் நின்று கொண்டு, பத்திரிகை, "டிவி' கேமராமேன்களை அவ்வப்போது எரிச்சலுக்குள்ளாக்கிக் கொண்டே இருந்தனர்.


பிரச்னைக்குரிய மேக்சிஸ் நிறுவனம்:
"மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ்' என்பது, மலேசியாவில் உள்ள பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம். மொபைல் போன், பிராட்பேண்ட், செட்-டாப் பாக்ஸ், இன்டர்நெட் ஆகிய சேவைகளை வழங்குகிறது. இதன் தலைமையகம் கோலாலம்பூரில் உள்ளது. இது 1993ல் தொடங்கப்பட்டது. 3 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 2005ம் ஆண்டின் படி இதன் வருமானம் 9 ஆயிரத்து 555 கோடி ரூபாய்.இந்நிறுவனம் 012 , 017 மற்றும் 0142 ஆகிய போன் எண்களை கொண்டு இயங்குகிறது. இதன் பெருமளவு பங்குகளை மலேசிய தமிழரான அனந்த கிருஷ்ணன் வைத்துள்ளார். 25 சதவீத பங்குகளை சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வைத்துள்ளது. 2010ம் ஆண்டு நிலவரப்படி 1 கோடியே 39 லட்சத்து 50 ஆயிரம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. பசிபிக் - ஆசிய பகுதியில் இந்நிறுவனம் மொபைல் சேவையை வழங்குகிறது. இது தவிர தமிழகம் உள்பட இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வரும் ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளையும் இந்நிறுவனம் வைத்துள்ளது.


7 ஆண்டுகளாக "2ஜி' நடந்து வந்த பாதை
2004 - 2006: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சராக தயாநிதி இருந்தார்.
2007, மே 18: தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
ஆக., 18: டிராய் (மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சந்தை விலை நிர்ணயம் உள்ளிட்ட பரிந்துரைகளை, தொலைத்தொடர்பு அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியது.
ஆக., 28: ராஜா தலைமையிலான மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம், டிராய் பரிந்துரைகளை நிராகரித்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, 2001ல் பின்பற்றப்பட்ட, "முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிப்பது' என்ற நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. 2001ல், 40 லட்சம் மொபைல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். ஆனால், 2007 முதல், 2008 வரையிலான காலத்தில், மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 35 கோடியாக உயர்ந்திருந்தது. இதனால், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட விலையை வசூலித்ததால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தனியார் நிறுவனங்கள் பயனடைந்து, அரசுக்கு வரவேண்டிய வருமானம் வராமல், பெரும் நஷ்டம் ஏற்பட காரணமாக இம்முடிவு அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
2009, அக்., 21: "2ஜி' முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
2010, நவ., 10: மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம், மத்திய நிதி அமைச்சகத்திடம் வழங்கிய அறிக்கையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.
நவ., 11: மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறவில்லை. எனவே, சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை என தெரிவித்தது.
நவ., 14: ராஜா அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா.
டிச., 24: டில்லியில் சி.பி.ஐ., அலுவலகத்தில் ராஜாவிடம் விசாரணை.
2011, பிப்., 2: ராஜா கைது.
பிப்., 17: ராஜா, திகார் சிறையில் அடைப்பு.
பிப்., 24: பல்வா, "கலைஞர் டிவி'க்கு, 200 கோடிக்கு சலுகை காட்டினார் என டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்.
மார்ச் 11: சென்னையில் கனிமொழியிடம் சி.பி.ஐ., விசாரணை.
ஏப்., 2: சி.பி.ஐ., சார்பில் ஸ்பெக்ட்ரம் வழக்கு சம்பந்தமாக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்.
ஏப்., 25: இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. தி.மு.க., எம்.பி., கனிமொழி, "கூட்டுச்சதியாளர்' என சேர்ப்பு.
மே 6: கனிமொழி, கோர்ட்டில் ஆஜர்.
மே 20: கனிமொழி ஜாமின் மனு நிராகரிப்பு. கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைப்பு.,
ஜூன் 8: டில்லி ஐகோர்ட்டில், கனிமொழி ஜாமின் மனு நிராகரிப்பு.
ஜூன் 20: சுப்ரீம் கோர்ட்டில், கனிமொழி ஜாமின் மனு நிராகரிப்பு.
ஜூலை 20: தயாநிதி, சென்னையைச் சேர்ந்த ஏர்செல் நிறுவனத்தை கட்டாயப்படுத்தி மேக்சிஸ் என்ற மலேசிய நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்கு உதவியுள்ளார் என, சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., குற்றச்சாட்டு.
ஜூலை 21: தயாநிதி, அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா.
அக்., 10: தயாநிதி, அவரது சகோதரர் கலாநிதி மற்றும் சன் "டிவி' நிறுவனத்தில் சி.பி.ஐ., சோதனை.


ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன
அன்றாடம் நாம் பயன் படுத்தும் "டிவி', ரேடியோ, மொபைல் போன்கள் ஆகியவை, காற்று மண்டலம் வழியாக, மின்காந்த அலைகளாக பரவி செயல்படுகின்றன. இவை அனைத்தும் வெவ்வேறு அதிர்வெண்களில் (பிரிகியூன்சி) இயங்குகின்றன. இந்த அதிர்வெண்களுக்கு இடையிலான இடைவெளியை அலைக்கற்றை ("ஸ்பெக்ட்ரம்') என்கிறோம்.


மின்காந்த அலைகள்
"ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல்' என்ற பிரிட்டன் விஞ்ஞானி, மின்புலம் மற்றும் காந்த புலம் ஆகியவற்றின் கோட்பாடுகளை ஒருங்கிணைத்தால், "மின்காந்த அலைகள்' உருவாகும் என கண்டறிந்தார். இவை வேறு ஊடகத்தின் உதவி இல்லாமல், திறந்த வெளியில் பயணிக்கும் தன்மை கொண்டவை. நம் கண்ணுக்கு தெரியாத எக்ஸ் கதிர்கள், புறஊதா கதிர்கள் ஆகியவையும் மின்காந்த அலைகளே. மின்காந்த அலைகள், அதிர்வெண், அலைநீளம் (வேவ்லெந்த்) ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது. நாம் காணும் ஒளிக்கதிர்களின் அதிர்வெண் 430லிருந்து 750 டெராஹெர்ட்ஸ் இருக்கும். எப்.எம்., ரேடியோ வருவதற்கு முன் உபயோகத்தில் இருந்த, ஏ.எம்., ரேடியோவின் அதிர்வெண் 520 முதல் 1610 கிலோ ஹெர்ட்ஸ் தான். எப்.எம்., பண்பலை 87.5 முதல் 108 மெகா ஹெர்ட்ஸ் வரை இருக்கும். இதே போல் மொபைல் போன்கள் உபயோகத்திற்கும் அதிர்வெண்கள் ஒதுக்கப்பட்டன. இதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்யேகமான அதிர்வெண்கள் ஒதுக்கப்பட்டன. இந்தியாவில் 900, 1800 மெகாஹெர்ட்ஸ் ஆகிய இரண்டு அதிர்வெண்கள் ஒதுக்கப்பட்டன.


2ஜி
ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., ஆகிய வழிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மொபைல் போன்கள் செயல்படுவது, 2 ஜி (2 generation) என அழைக்கப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் அலைக்கற்றைகளில் அதிர்வெண்ணின் நீளம் 1710 முதல் 1880 மெகா ஹெர்ட்ஸ். இதை 2 ஜி ஸ்பெக்ட்ரம் என்பர். தற்போது 2 ஜியை பின்னுக்கு தள்ளும் வகையில் 3ஜி தொழில்நுட்பம் வந்துவிட்டது. இது 2100 மெகாஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...