Friday, August 24, 2018

தாய்க்கே_தாயான_குழந்தை..!!!

சோழபுரம் எனும் ஊரில் குமார் என்பவர் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் ஒருநாள் தன் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குச் சென்றிருந்தார். கோயில்களைச் சுற்றிப் பார்த்த பின் ஊருக்கு திரும்பும் சமயம், எல்லாப் பேருந்திலும் கூட்ட நெரிசலாக இருந்தது. எந்த பேருந்திலும் இடம் கிடைக்கவில்லை.
அப்போதுதான் சீர்காழி கோயிலில் ஏதோ விசேஷம் என அவர்களுக்குத் தெரிந்தது. அதனால் மறுநாளைக்கு பயணச்சீட்டை நிர்ணயம் செய்தார் குமார். அதன்பின் ஒரு உணவகத்திற்கு வந்து அமர்ந்து யாரேனும் தெரிந்த உறவினர் அந்த ஊரில் இருக்கிறார்களா? அவர்கள் வீட்டில் ஒரு இரவு மட்டும் தங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தார்.
நல்லவேளையாக அந்த ஊரில் குமாரின் நண்பருக்கு கணபதி என்ற உறவினர் இருப்பது நினைவுக்கு வந்தது. அவரைச் சந்தித்து பல ஆண்டுகள் ஆனதால், அவரது இல்லத்தில் தங்க முடிவு செய்து கணபதியின் வீட்டைத் தேடிச் சென்றனர்.
அங்கு கணபதியின் பத்து வயது மகள் கதவைத் திறந்தாள். அவளது பின்னாலேயே கணபதியும் வந்தார். குமாரைப் பார்த்துச் சற்றே யோசித்தார். பின், குமார் தன் நண்பரின் பெயர் சிவாவை கூறியதும் முகமலர்ச்சியுடன் அவர்களை வரவேற்றார். வீட்டின் நடுக்கூடத்தில் மூன்று வயது குழந்தை சாப்பிடத் தெரியாமல் சிந்தியவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
கணபதியின் தந்தை குழந்தையை கவனித்தவாறே அவர்களையும் உபசரித்தார். அதே சமயம் சமையலறையில் பத்து வயது மகள் உணவு தயாரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்தச் சிறுமியின் பொறுப்புணர்ச்சியைக் கண்டு வியந்து போனார் குமார்.
திடீரென வீட்டின் உள்ளே ஏதோ சத்தம் கேட்டது. அந்தச் சிறுமி தன் அப்பாவிடம் ஏதோ பேசினாள். அவரும் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு உள்ளே சென்று வந்தார். குமாருக்கோ ஒன்றும் புரியவில்லை. உள்ளே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள குமாருக்கு ஆவலாக இருந்தது. பின் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.
Image may contain: 2 people
அனைவருக்கும் அந்தச் சிறுமி பரிமாறத் தொடங்கினாள். அப்போது பின் பக்கமிருந்த ஓர் அறையிலிருந்து பெரும் குரல் கேட்டது. அந்தச் சிறுமி தன் தந்தையைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவரும் 'பரவாயில்லை அம்மா. அவளை இங்கேயே அழைத்து வந்து உட்கார வை என்றார். அவளை விட்டு எனக்கென்ன சாப்பாடு வேண்டியிருக்கிறது" என்றவுடன் தயங்கியவாறே சிறுமி உள்ளே சென்று ஒரு பெண்மணியை அழைத்து வந்தாள். அங்கேயே உட்கார வைத்து அந்த பெண்ணிற்கு ஊட்டிவிட்டாள். சாப்பிட அடம் செய்த அந்தப் பெண்மணியை கெஞ்சியும், கொஞ்சியும் உண்ண வைத்தாள் அந்தச் சிறுமி.
இரவு அனைவரும் தூங்கச் சென்றபின் கணபதியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர், எனக்குத் திருமணமாகி பதினைந்து வருடங்களாகின்றன. ஐந்து வருடம் கழித்து மூத்த மகள் பிறந்தாள். சில வருடங்கள் கழித்து மகன் பிறந்தான். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என எண்ணியபோது என் மனைவிக்கு சித்த பிரமை ஏற்பட்டது. நினைத்ததைப் பேசுவாள். சில சமயம் பொருட்களை தூக்கி எறிந்து அடிப்பாள்.
என் மகள்தான் இப்போது அவளுக்கு தாயாக இருந்து கவனித்துக் கொள்கிறாள். மருந்து மாத்திரை எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் வந்திருக்கும்போது ஏதேனும் செய்தால் என்ன செய்வது என்று அவளை அறையில் போட்டுப் பூட்டி விட்டாள் என் மகள். அதுவே என்னால் தாங்க முடியவில்லை என்று கூறினார்.
அவரின் அன்புள்ளத்தை எண்ணி குமார் வியந்து போனார். அப்போது அந்தச் சிறுமி 'அப்பா, தூங்கச் செல்லுங்கள். அம்மா தூங்கியாச்சு" என்று கூறினாள். துன்பத்திலும் புன்னகை முகம் காட்டும் பண்பு, தாயிடம் கொஞ்சவேண்டிய குழந்தை அந்தத் தாய்-கே தாயாக இருந்து ஊட்டி வளர்க்கும் கனிவு, வீட்டிற்கு வந்த விருந்தினரை தந்தை சொல்லாமலேயே உபசரித்த சிறப்பு, தந்தையிடம் தாய் தூங்கிவிட்டாள் எனச் சொன்ன பொறுப்புணர்ச்சி, தந்தையைத் தூங்கச் சொன்ன கடமையுணர்ச்சி இத்தனை பண்புகளையும் ஒருங்கே பெற்ற அந்தச் சிறுமியை குமார் பாராட்டி அந்தச் சிறுமி தெய்வாம்சம் நிறைந்த குழந்தை என்று பூரிப்புடன் பார்த்தார். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...