Wednesday, October 19, 2016

I.Q. - வை வளர்ப்பது எப்படி?

படிப்பதில் கவனச்சிதறல், வகுப்பில் நடத்தும் பாடங்களை சரிவரப் புரிந்து கொள்ளாமை போன்ற பிரச்சினைகளுக்கு ஐ.க்யூ. குறைவுதான் காரணம். குழந்தைகளிடையே ஐ.க்யூ.வை எப்படி வளர்க்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார் மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி.
அகிலா சரியாகப் படிப்பதில்லை. வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் புரிந்து கொள்வதும் இல்லை. எதைப்பற்றியாவது பேசும்போது, கவனம் சிதறி வேறு விஷயங்களில் மனதை அலைபாய விடுகிறாள். அமைதியில்லாமல் துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டே இருக்கிறாள். பள்ளியில் சேர்ந்தாற்போல பத்து நிமிடங்கள்கூட பாடத்தில் கவனம் செலுத்துவதில்லை. மற்ற குழந்தைகளை கிள்ளி வைத்து விடுகிறாள்.”
ஐந்தாவது வகுப்பு படிக்கும் அகிலாவைப் பற்றி அவளுடைய வகுப்பு ஆசிரியை அளித்த புகார்ப் பட்டியல் இது.
பார்ப்பதற்கு சராசரி வளர்ச்சியில் அகிலா இருந்தாலும், இது மன வளர்ச்சி குன்றியதற்கான அறிகுறிகள்தான் என்று ஆசிரியர்கள் கூறினார்கள். அகிலாவிடம் இருக்கும் குறையைக் கண்டறிவதற்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அகிலாவைப் பரிசோதித்த டாக்டர் ஐ.க்யூ. டெஸ்ட் செய்யச் சொன்னார். சோதித்துப் பார்த்தபோது, அகிலாவிற்கு சராசரிக்கும் குறைவான ஐ.க்யூ. மட்டுமே இருப்பது தெரியவந்தது. அவளுக்கு ஆக்குபேஷனல் தெரபி கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அகிலா கதை இருக்கட்டும். ஐ.க்யூ. என்றால் என்ன? இந்த ஐ.க்யூவுக்கும், குழந்தையின் படிப்புக்கும் என்ன தொடர்பு என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி.
“ஐ.க்யூ. (I.Q .) என்பது கூரிய நுண்ணறிவு. நமது மரபியல்படி அதாவது ஜீன்ஸ் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் அறிவு, மூளை அறிவு எனப்படும். கற்பதால் வரும் அறிவு சோதனைக்குட்பட்ட அறிவு எனப்படும். அதைப்போலவே கற்றுக்கொள்வதால் வரும் அறிவு ரெப்ளக்டிவ் அறிவு எனப்படும். முதல் பிரிவைத் தவிர, மற்ற இரண்டு விதமான அறிவையும் வளர்ப்பது சாத்தியமானதே. புதிர்கள், கணக்குகள் ஆகியவற்றுக்கு விடை காண்பது, கற்பனை வளத்தைப் பெருக்குவதற்கான பயிற்சிகள் அளித்தல், காபி போன்ற பானங்களை அருந்துவது, ஐ.க்யூவை தற்காலிகமாக அதிகரிக்கும். ஆழமாக உள்ளிழுத்து மூச்சு விடுவதும் நல்ல பலனைத் தரும். ஐ.க்யூ. 130 உள்ளவர்கள் மேதைகள் என்றும், ஐ.க்யூ. 70-க்கும் குறைவாக இருப்பவர்கள் மக்கு என்றும், ஐ.க்யூ. 29 ஆக இருப்பவர்கள் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில், இரண்டு வயதுக்கும் குறைந்த குழந்தையின் மனநிலையில் இருப்பவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள்” என்கிறார் டாக்டர் ஷாலினி. ஐ.க்யூ. பற்றி அவர் அளித்த விளக்கங்கள் இதோ:
ஐ.க்யூ. குறைபாட்டின் அறிகுறிகளைக் கண்டுபிடிப்பது எப்படி?
அறிவுசார் முன்னேற்றம் அடைய முடியாமல் இருப்பது.
உட்காருதல், தவழுதல், நடை, பேச்சு ஆகிய முக்கிய முன்னேற்றங்கள் காலதாமதப்படும்.
பேச்சு, நடத்தையால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் குழந்தைத்தனமான நடவடிக்கைகளைக் கொண்டு இருப்பார்கள்.
பிரச்சினைகள் ஏற்பட்டால் தீர்வு காணுவதில் சிரமப்படுதல் மற்றும் ஆர்வம் இல்லாமல் இருத்தல்.
குறைவான கற்கும் திறன் மற்றும் சரியாக சிந்திக்க முடியாமல் இருப்பார்கள்.
எந்த விஷயத்தையும் நினைவுபடுத்திப் பார்ப்பதில் சிரமப்படுவார்கள்.
பள்ளிகளின் கல்வி எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் இருப்பார்கள்.
பெற்றோர்கள் சொல்வதைக் குழந்தைகள் கேட்கமாட்டார்கள். பெற்றோர்களின் அடையாளத் திணிப்பை ஏற்றுக் கொண்டால் அவர்களின் தனித்தன்மை போய்விடும் என்று குழந்தைகள் எண்ணுகின்றனர். இது ஓர் ஆளுமைக் குறைபாடாக உருவெடுத்து வாழ்க்கையின் பல தோல்விகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.
ஐ.க்யூ. அளவைக் எப்படி கண்டு பிடிக்கலாம்?
இளங்குழந்தைகளிடம் உள்ள ஐ.க்யூ. திறனை அளக்க பல முறைகள் உள்ளன. இதில், ஆறு முதல் பதினாறு வயதுக் குழந்தைகளின் ஐ.க்யூ.வை அளிக்க வெஸ்ச்லர் இன்டெலிஜென்ஸ் ஸ்கேல் ஃபார் சில்ரன் (The Wechsler Intelligence Scale for Children – WSIC ) என்ற தேர்வு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வெஸ்ச்லர் முறையில் தகவல், வார்த்தைகளை அறியும் திறன், விஷயங்களைக் கிரகித்தல், ஒற்றுமைகளைப் பார்த்து அறிதல், கணிதம், படத்தைப் பூர்த்தி செய்தல், ப்ளாக்குகளை வடிவமைத்தல், பொருள்களை இணைத்தல், படங்களை வரிசைப்படுத்தி குறித்தல் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டு ஐ.க்யூ. அளவு கணக்கிடப்படுகிறது.
குழந்தைகளின் ஐ.க்யூ.வை கண்டுபிடிக்க மனநல மருத்துவரிடம் அழைத்துப் போகலாம். அவர்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ப செயல் விளக்கப் பயிற்சிகள் கொடுப்பார்கள். சின்னச் சின்ன டெஸ்ட் வைத்து அதில் அவர்கள் தேறும் விதத்தில் ஐ.க்யூ.வை கணித்துச் சொல்வார்கள்.
குழந்தைகளுக்கு ஐ.க்யூ. வை வளர்ப்பது எப்படி?
பெற்றோர் ‘உன் வகுப்பில் படிக்கும் பையன் என்னெவெல்லாம் செய்கிறான், நீ தண்டம்’ என்றுகுழந்தையைச் சாடுவது குழந்தையின் தன்னம்பிக்கையை உடைக்கும் முதல் அடியாகும். பின்னால் குழந்தையே ஏதேனும் சாதிக்கலாம் என நினைத்தாலும் ‘என்னால் முடியாது, நான் எதற்கும் லாயக்கில்லாதவன், திறமைகள் அற்றவன்’ என்ற அவநம்பிக்கை அதன் மனதில் தோன்றிவிடுகிறது. இம்மனநிலையைப் போக்கி ‘எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்த பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்.
குழந்தைகளிடத்தில் எதிர்மறையாகப் பேசுவதை முழுமையாக நிறுத்த வேண்டும். கொஞ்சம் கடினமாக உழைத்துப் பயிற்சி செய்தால் வெற்றி பெறுவாய்’ என்று சொல்வது நல்லது.
போட்டிகளில் எப்போதும் முதல் பரிசுக்கே முயற்சி செய்யாமல் மூன்றாம் பரிசுக்கு முதலில் முயற்சி செய்ய கற்றுக் கொடுங்கள். மூன்றாம் பரிசும் முக்கியத்துவம் வாய்ந்ததே என்பதையும், முழுத் தோல்வியை விட மூன்றாம் பரிசு நல்லதே என்பதையும் கூறி குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும்.
தோல்விகளும் வெற்றிகளும் நிகழ்வுகளின் இருவிதப் பரிமாணங்களே என்பதை சற்று விளக்கமாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். முயற்சித்துக்கொண்டு இருப்பதே ஒருவரை திறமைசாலிகளாக மாற்றும் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.
பெற்றோர்களின் கட்டாயங்களுக்காக ஆர்வமில்லாத விஷயங்களிலெல்லாம் முயற்சித்து தோல்வியடையும் குழந்தைகளே அதிக அளவில் தன்னம்பிக்கை இல்லாமல் வளர்கின்றன.
குழந்தைகளிடத்தில் சுதந்திரமாக செயல்படும் ஆற்றலை உருவாக்க வேண்டும். குழந்தையைத் தானாக சாப்பிடுமாறு ஊக்குவிப்பது, தானாக உடையணிந்து கொள்வதை மகிழ்ச்சியுடன் ஆதரிப்பது, சாதனை ஊக்கத்தை குழந்தைகளிடத்தில் வளர்ப்பது போன்றவை பெற்றோரின் கடமைகள். குழந்தைகளுக்கு கழிவறை பயிற்சிகளை இளம் வயதிலேயே கற்பிப்பதும் அவர்களிடத்தில் சுதந்திரமாக செயல்படும் உணர்வைத் தூண்டி வளர்க்கும்.
சற்றே கடினமான ஆனால் நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைய குழந்தைகளை ஊக்கப்படுத்துதல். எக்காரணம் கொண்டும் எதார்த்தத்திற்கு புறம்பான இலக்குகளை நோக்கி குழந்தைகளை ஊக்குவிக்கக்கூடாது.
அ, ஆ, இ, ஈ அல்லது அ, ஆ, இ, ஈ எழுத்துக்களை இரண்டு வயது குழந்தை சொல்ல இயலாத நிலையிலும் தொடர்ந்து அவ்வெழுத்துக்களை கற்று ஒப்பிக்குமாறு ஊக்கப்படுத்தி வரவேண்டும். அக்குழந்தை பல முயற்சிக்குப் பின் முதன்முறையாக எழுத்துக்களை ஒப்பிக்கும்போது கட்டிப்பிடித்தோ, ஓரு முத்தம் கொடுத்தோ அல்லது ஓரு சாக்லேட் கொடுத்தோ மகிழ்ச்சியுடன் ஊக்கப்படுத்தவேண்டும்
தோல்விகளும் கற்றுக் கொள்வதின் ஒரு பரிமாணமே என குழந்தைகளை உணரச் செய்து தோல்விகளை ஏற்றுக்கொள்ளப் பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் மனதில் தோல்வி பயத்தைப் போக்கி வெற்றி அடையவேண்டும் என்னும் ஊக்கத்தினை உருவாக்க வேண்டும்.
முயற்சி திருவினையாக்கும் என்னும் நம்பிக்கையினை குழந்தைகளின் மனதில் விதைக்க வேண்டும்.
குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே அடைத்துவைத்து அவர்களை சோம்பேறியாக்குவதை விட அவர்களுக்கு கற்பனைத் திறனை அதிகரிக்கும் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தலாம்.
இசையை சிறுவயது முதலே கற்கும் குழந்தைகளின் IQ POWER மிகவும் அபாரமாக இருப்பதாக அமெரிக்க ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இசையைக் கற்கும் குட்டிக் குழந்தைகள் தங்களது சிந்தனைகளை பல முனைகளிலும் ஒரு சேர செலுத்துவதால் அவர்களின் அறிவுக்கூர்மை வளர்கிறது.
குழந்தைகளிடம் அதிகமாகப் பேச வேண்டும்.
அதிக சொற்களைப் பேசுதல் மிகவும் நல்லது. பெரியவர்கள் பேசும்போது குழந்தைகளையும் அருகில் இருக்கச் செய்தல் வேண்டும்.
குழந்தைகளுக்கு கற்பிக்கும் போது ஐந்து ’இ’க்களை நினைவில் கொள்ள வேண்டும். ஐந்து ’C ’ க்கள்:-, control, challenge, confidence, curiosity, contextualize ஆகியவைதான்!
கண்டரோல் என்பது எதிலும் கட்டுப்பாடுடன், தானே இருக்கக் குழந்தைகளைப் பழக்குவது.
சேலஞ்ச் என்பது சவாலைச் சமாளிக்க உங்கள் குழந்தையை அழைக்கும் விதமாக சவால் தரும் விஷயங்களை முன் வைப்பது
கான்பிடன்ஸ் என்பது எதிலும் ஒரு நம்பிக்கையை குழந்தையிடம் ஏற்படுத்துவது.
க்யூரியாசிட்டி என்பது எதையும் ஓர் ஆர்வத்துடன் கூர்ந்து ஆராயும் பழக்கத்தை மேற்கொள்ள வைப்பது.
கான்டெக்ஸ்டுவைலஸ் என்பது ஒரு விஷயத்தை நிஜ உலகுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கும் அணுகுமுறையை சொல்லித் தருவது. திரைப்படத்தில் அல்லது தொலைக்காட்சியில் வருவதற்கும் நிஜத்திற்கும் உள்ள சம்பந்தம் போன்றவற்றை சொல்லித் தந்தால் நிஜ உலகின் வாழ்க்கை பற்றிய நல்ல அணுகுமுறை ஏற்படும்.
இறுதியாக ஒர்கிங் மெமரி அல்லது ஷார்ட் டெர்ம் மெமரி எனப்படும் குறுகிய கால நினைவாற்றலில் ஒரு சமயம் ஒருவர் ஏழு விஷயங்களுக்கு மேல் நினைவில் கொள்ளமுடியாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஒரே சமயத்தில் ஏராளமான விஷயங்களைத் திணிக்காமல் அறிவுத் திறனை அளவோடு வளர்ப்பதோடு, சீரான இடைவெளியில் நினைவுத் திறனைக் கூட்டும் பயிற்சியைத் தந்தால் எந்தக் குழந்தையும் நம்பர் ஒன் குழந்தைதான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...