Friday, November 25, 2022

இளையராஜாவாக காசியில் இசைத்ததெல்லாம் திருவண்ணாமலை நாதன் .

 காசியில் சரித்திரம் திரும்பியிருக்கின்றது, அதனை வெறும் விழாவாக ஒரு சாதாரண சங்கமாக கடந்து சென்றுவிடமுடியாது

ஆம், பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து, சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு இந்து ராஜ்ய மன்னர்களோடு முடிந்து போன அந்த வரலாறு, சுதந்திர இந்தியாவின் மோடி காலத்தில் மீண்டும் தொடங்கியிருப்பதெல்லாம் பெரும் அதிசயம், உலகில் எங்குமே நடக்காத நடக்க வாய்ப்பில்லாத பெரும் சிலிர்ப்பான விஷயம்
10 ஆண்டுக்கு முன்பு தொலைந்துபோன விஷயங்களை கூட மீட்டெடுக்கமுடியா உலகில், சுமார் ஆயிரம் வருடத்துக்கு முந்தைய கலாச்சார பண்பாடு மீட்டெடுக்கபட்டிருப்பது மெய்சிலிர்க்கும் விஷயம், அந்த காசிநாதன் அருள் இல்லாமல் இது சாத்தியமில்லை
ஆயிரம் ஆண்டுக்கு முன் காசியினை சிதைத்தனர் ஆப்கன் கஜினியின் சுல்தான்கள், அதில் இருந்து ஒவ்வொரு ஆப்கானிய வம்சமாக காசியினை ஆள அங்கு தமிழருக்கும் காசிக்குமான தொடர்புகள் குறைந்தன, ஒரு கட்டத்தில் கடைசி நூல் பிரியில் தொடர்பு இருப்பது போல குமரகுருபரர் காலத்தில் 16ம் நூற்றாண்டில் இருந்தது
வெள்ளையன் காலத்திலும் குழப்பம் கூடிற்றே தவிர குறையவில்லை
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தமிழக இந்துக்களுக்கான மரியாதை காசியில் சுத்தமான இந்து எம்பி இருக்கும்பொழுது நடந்திருக்கின்றது, அதுவும் காசியின் எம்.பி பாரத பிரதமர் எனும் ஆட்சியாளராக இருந்திருக்கும் பொழுது நடந்திருக்கின்றது
இப்படித்தான் ஒரு காலத்தில் தமிழக மன்னர்கள் பக்தர்களை காசிக்கு அனுப்பினார்கள், காசி மன்னனும் பண்டிதர்களும் அவர்களை வரவேற்றுவழிபாடு செய்து கருத்துக்களை பரிமாறி தாங்களும் அறிவு பெற்று தங்கள் பெற்றதை தமிழருக்கும் கொடுத்து அனுப்பினார்கள் என்பது கண்முன் தெரிகின்றது
தமிழன் இப்படி இந்துவாக வாழ்ந்தான், இதுதான் அவன் கலாச்சாரம், இதுதான் அவன் ஆன்மீகம், இதுதான் அவன் தேடிய ஓடிய காட்சி என்பது நன்றாக ஆழமாக தெரிகின்றது
பல்லாயிரம் ஆண்டுகால தொடர்ச்சி இடையில் அறுபட்டு மோடி ஆட்சியில் மீள வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி
இனி வருடாவருடம் காசி சங்கமம் நடக்கும் என மத்திய அரசு அறிவித்திருக்கின்றது, ஒவ்வொரு வருடமும் சென்று பங்குபெற்று காசியும் தரிசித்து காசிக்கும் தமிழகத்துக்குமான தொடர்பை வலுபடுத்த வேண்டியது இந்துக்கள் கடமை
இது அரசியல் அல்ல, இது வாக்கு சேகரிக்கும் திட்டமும் அல்ல. இது முழுக்க கலாச்சாரமும் ஆன்மீகமும் கலந்த முயற்சி, சுமார் ஆயிரம் ஆண்டுகாலம் தன்னை மறந்து தான் வந்தவழியினை மறந்து மாயையில் சிக்கிவிட்ட பரிதாபத்துகுரிய தமிழக இந்துக்களை மீட்டெடுக்கும் முயற்சி
இதனை முறைபடி தமிழக இந்து அறநிலையதுறைதான் செய்திருக்க வேண்டும், இந்து ஆலயங்களை நிர்வகிக்கும் அந்த துறைதான், இந்து ஆலய வருமானங்களையும் தங்கத்தையும் அள்ளி செல்லும் துறைதான் இந்த ஏற்பாடுகளை செய்யவேண்டும்
ஆனால் இதர மதங்களிடம் இருந்து சல்லி காசு பெறாத தமிழ்மாநில அரசாங்கம், அவர்கள் திருபயணம் செல்ல அள்ளி அள்ளி கொடுப்பதும், இந்துக்கள் உள்நாட்டில் திருபயணம் செய்யும்பொழுது கண்டு கொள்ளாமல் இருப்பதும் சோகம்
ஒரு காலத்தில் பிரிட்டிசார் செய்துவைத்த அந்த வஞ்சக ஏற்பாட்டை இன்னும் தமிழக அறநிலையதுறை தொடர்வது சரியல்ல, நியாயபடி அவர்கள்தான் இதனையெல்லாம் ஏற்பாடு செய்திருக்க வேண்டும், ஆனால் அப்படி எதிர்பார்ப்பது பைத்தியகாரதனம்
அவர்கள் செய்யாததை தர்மம் மோடி, தமிழக பாஜக இணைந்து செய்ய வைத்தது. முதல்கட்டமாக மிக அழகான காரியத்தை செய்திருக்கின்றார்கள், உலகமே உற்றுநோக்கும் பாரத பெருமகன் காசியில் தமிழக பெருமை, தமிழ் பெருமை, காசிக்கும் தமிழருக்கும் இடையே உள்ள தொடர்பை உலகுக்கு சொன்னது ஒவ்வொரு தமிழனும் தன்னை மறந்து அவரை வணங்கும் தருணம்
இப்படி ஒரு பிரதமர் 1947களிலே இருந்திருந்தால் தமிழகம் இவ்வளவுக்கு குழப்பம் மிகுந்த மாகாணமாக இருந்திருக்காது, இவ்வளவுக்கு ஆன்மீகத்தை விட்டு விலகியிருக்காது
எது எப்பொழுது நடக்க வேண்டுமோ அது அப்பொழுதுதான் நடக்கும் , விதித்த நேரம்தான் நடக்கும் என்பது போல மோடி வடிவில் தமிழகம் தன் அழிந்துபோன தொடர்பை மீட்டெடுகின்றது
பாரத தலைநகராக டெல்லி உருவானதெல்லாம் பின்னாளிலேதான், உண்மையில் பாரதத்தின் அடையாளமும் ஆன்மீகம் மற்றும் அறிவின் அடையாளமாகவும் காசிதான் விளங்கிற்று
காசியின் பெருமைகளையும் வரலாற்றையும் சிவாஜி தொடரின் பல இடங்களில் பார்த்துவிட்டதால் இங்கு விளக்கி சொல்ல அவசியமில்லை என்றாலும் சில இடங்களை தொட்டு காட்ட வேண்டும்
காசியும் காஞ்சியுமேதான் இந்துஸ்தான அடையாளங்களாக இருந்தன, பிராமண ஸ்லோகங்களில் அதாவது இந்துஸ்தானம் முழுக்க சொல்லபட்ட ஸ்லோகங்களில் காஞ்சி, திருவாரூர், காசி என்றுதான் வரிசை இருந்தது
அதாவது காசி என்பது தமிழர்களின் உரிமையான ஆலயங்களில் ஒன்றாகவே கருதபட்டது
தென்காசி, சிவகாசி என ஆலயம் அமைந்ததும், விஸ்வநாதரின் இன்னொரு பெயரான பிரகதீஸ்வர் பெயரில் ஆலயம் எழும்பியதும் அப்படியே
சிந்துமுதல் காவேரிவரை உள்ள இந்துஸ்தானத்தின் தலமையிடமாக காசிதான் இருந்தது
காசி என்பது ஆன்மீக தலைநகர், இந்துக்களின் ஆன்மா அங்குதான் வாழ்கின்றது, அது ஒரு இடமல்ல அது ஒரு நகரமல்ல அது ஒரு உணர்வு, காலம் காலமாக இந்துக்களிடம் கலந்துவிட் ஒரு உணர்வும் வாழ்வும் மூச்சுமானது
அந்த காசி இந்துக்களை இணைக்கும் புள்ளி, இந்துக்கள் இணைந்தால் இந்தியா இணையும், அப்படித்தான் இந்துஸ்தானம் ஒரே நாடாக ஒரே பலமாக இருந்தது
மோடி சொன்னபடி காசி மணமகன் என்பது புகழ்பெற்ற அடையாளமாக இருந்தது, அதாவது ஒருவன் என்ன படித்தாலும் காசிக்கு சென்றுவருவது அவன் அறிவையும் தரத்தையும் உறுதி செய்வதாக இருந்தது
இது சன்னியாசி, வியாபாரி, கலைஞர்கள், சாஸ்திரிகள் என எல்லோருக்கும் பொதுவானது, சில இளவரசன் கூட இதற்கு தப்பமுடியாது, ராஜராஜ சோழனும் தலைமறைவான காலங்களில் காசிக்கு சென்றுவந்தான் என்பது ஒரு ஆய்வு
அப்படி தமிழகத்தோடு இணைந்திருந்ததும் இந்தியாவினை இணைத்து வைத்ததும் காசி
காசியினை ஒழித்தால் இந்தியா ஒழியும் என்றுதான் ஆயிரம் வருடமாக அதை குறிவைத்து அடித்தார்கள், ஆனாலும் அந்த காசி தன் அடையாளத்தை கொடும் மழையிலும் கடும் காற்றிலும் யார் மூலமாவது காத்து வந்தது, இன்று மோடி அந்த ஜோதியினை எரியவைத்திருக்கின்றார்
முன்பு திருவள்ளுவர் சிலைக்கே சர்ச்சைகள் வந்த வடநாட்டில் மோடி 13 மொழிகளில் திருகுறளை வெளியிடுகின்றார் என்றால் எவ்வளவுக்கு தமிழகத்தை அவர் ஒவ்வொரு இந்தியனிடமும் கொண்டு சேர்க்கின்றார் என்பது விளங்கும்
நல்லபடியாக தொடங்கிவிட்ட்டார்கள் இது இனி வருடா வருடம் தொடர்தல் வேண்டும்
தமிழகத்தில் இருந்து ஒன்பது ஆதீனங்கள் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி, இந்த மடங்களும் ஆதீனங்களும்தான் இங்கு இந்துமதத்தை காத்தன, இங்கு தமிழை காத்தன, ஓலை சுவடிகளும் இன்னும் பலவும் அவர்களாலே காக்கபட்டது
மடங்கள்தான் காசிக்கும் தமிழகத்துக்குமான தொடர்பை காத்தன, வளர்த்தன, பேணின. அவைதான் அந்த சாலையினை அமைத்தும் பராமரித்தது
இந்த மடங்களை முடக்கி வைத்து பிரிட்டிசார் செய்த தந்திரமே இன்றும் திராவிட கும்பலால் பின்பற்றபடுகின்றது, அது தகர்க்கபட தொடங்கியிருக்கின்றது
காசியில் வருங்காலத்தில் காசிக்கும் தமிழகத்துமான எல்லா தொடர்புகளும் மீட்டு நிறுத்தபட்டபின் இதர தலங்களான மதுரா, கயிலாயம், கயா, அயோத்தி, பிரைக்யா என எல்லா பண்டைய ஸ்தலங்களுக்கும் உள்ள தொடர்புகள் வருடா வருடம் காசியிலே அலசபட வேண்டும்
அத்தோடு தமிழக பாஜகவும் தமிழக பக்தர்களும், தமிழக இந்துக்களை காசிக்கு அழைத்து சென்றது போல காசியில் இருந்தும் வடமாநிலத்தில் இருந்தும் இந்து பக்தர்களை யோகி போன்றவர்கள் தமிழக ராமேஸ்வரத்துகும் கன்னியாகுமரிக்கும் அழைத்துவந்து அவர்களுக்கும் தமிழகத்துக்குமான தொடர்பை சொல்ல வேண்டும்
காஞ்சி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, கன்னியாகுமரி என எல்லா இடமும் யோகியும் வட இந்திய பக்தர்களும் சாஸ்திரிகளும், சன்னியாசிகளும் வந்து ஒரு மத ஒற்றுமையும் கலாச்சார மீட்டெடுப்பும் செய்தல் வேண்டும்
இந்த சங்கமங்கள் இந்தியா முழுக்க நடந்து கொண்டே இருக்க வேண்டும், தமிழன் எப்படி முன்பு இந்துவாக இந்துஸ்தானம் முழுக்க கலந்தானோ, எப்படி அப்பகுதி மக்கள் தமிழர்களோடு இந்துக்களாக கலந்து வளர்ந்தார்களோ அந்நிலை திரும்புதல் வேண்டும்
அப்பொழுது மொழி தாண்டி, இனம் தாண்டி, இந்தியன் இந்து எனும் உணர்வு மேலோங்கும், பெருவாரி இந்துக்கள் இருக்கும் நாட்டில் இவ்வொற்றுமை அவசியமே
இந்த ஒற்றுமையினை சங்கரர் செய்தார், இன்னும் பலர் செய்தார்கள், எம்மான் பாரதி இம்மாதிரியான முயற்சிக்குத்தான் பாடுபட்டார்
அந்த பாரதியின் கனவை பெருமகன் மோடி நேற்று நனவாக்கியிருக்கின்றார் அது இன்னும் வளர்ந்து பரவி தமிழகத்தை செழிக்க வைக்கட்டும்
தமிழக இந்து அறநிலையதுறை இந்த மாபெரும் சங்கமத்தை ஒரு மாதிரியான கண்கொண்டு பார்ப்பதும், தமிழக முதல்வர் அரசியலுக்காக அமைதி காப்பதும் சரியல்ல. இது இந்துஸ்தான கலாச்சார பண்பாடு எனும் வகையில் இதையெல்லாம் அவர்கள் ஊக்குவிக்க வேண்டும், இந்து ஆலயங்களுக்கான நிர்வாகம் அவர்கள் என்பதால் கூடுதல் கடமை அவர்களுக்கு உண்டு
ஆனால் கடமையில் இருந்து பொறுப்பில் இருந்து அவர்கள் தவறுகின்றார்கள்,இதற்கான பலனை ஒருநாள் காண்பார்கள்
காசியில் தமிழக இந்துக்களும், ஆதீனங்களும் கூடியிருந்த அந்த நேரம் தமிழக "இசை சித்தர்" இளையராஜா பாடிய பாடல், அந்த திருநீலகண்ட யாழ்பாணரை நினைவு கூர்ந்தது
மதுரையிலும் இன்னும் பல இடங்களிலும் சம்பந்தரின் பாடல்களை அந்த திருநீலகண்ட யாழ்பாணார் உருக்கமாக பாடினார் என்பது நாயன்மார் வரலாறு, அவரின் யாழை மதுரை ஆலயத்தின் குளிர்ந்த தரையில் வைக்கும் பொழுது சிவனே" யாழ் கெடாது பார்த்துகொள்" என குரல் கொடுத்ததாக அவரின் வரலாறு சொல்லும்
அந்த திருநீலகண்ட நாயனார் காசிநாதனை எப்படி உருக்கமாக பாடினாரோ, அந்த பாடலை "ஓம் சிவோகம்" என இளையராஜா ஆர்மோனியம் தொட்டு பாடினாரோ அப்பொழுது உணரமுடிந்தது
கம்யூனிஸ்டுகளிடமும் கிறிஸ்தவர்களிடமும் வளர்ந்த ராசையா எனும் கிராமத்தான், எம்.பி இந்து இளையராஜாவாக காசியில் இசைத்ததெல்லாம் திருவண்ணாமலை நாதன் அவரை அணைத்து கொண்டான் என்பதற்கான சாட்சி
சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன் நடந்த வரலாறு திரும்ப ஆரம்ப புள்ளி வைக்கபட்டிருக்கின்றது, இந்த விதையினை பெருமரமாக வளர்க்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இந்துவுக்கும் உண்டு, வருடாவருடம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்துக்கள் சென்று இந்த தொடர்பை வலுபடுத்தி வட இந்தியாவின் எல்லா தலங்களுக்கும் தங்களுக்குமான பந்தத்தை மீளபுதுபித்தல் வேண்டும்
அது கடமை அல்ல, உரிமை. நம் முன்னோர்கள் ஒரு காலத்தில் உரிமையாக சென்று வணங்கி நிலைநாட்டிய நம் உரிமை
அந்த உரிமையினை மீள எடுத்தல் வேண்டும்
அப்படியே வடநாட்டவர்கள் நம் மதுரைக்கும், ராமேஸ்வரத்துக்கும், கன்னியாகுமரிக்கும் வந்து வணங்கவும் அவர்களின் முன்னோர்களுக்கு இங்கு கிடைத்த மரியாதையும் உரிமையும் நாமும் கொடுத்து தேசியத்தை வளர்த்தல் வேண்டும்
தமிழ் என்பது வெறும் மொழி அல்ல, அது இந்துக்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் உருவாக்க வந்த தொடர்பு சாதனம், அதன் ஒவ்வொரு அசைவிலும் இந்துக்களின் பண்பாடும் ஆன்மீகமும் அந்த ஸ்தலங்களின் தொடர்புமே நிலைத்து நிற்கும்
அந்த தெய்வீக மொழியினை செம்மொழி என கடக்கமுடியாது, அது சிவமொழி அந்த சிவமொழி பெருமையினைத்தான் மோடியும் சொன்னார், யோகியும் சொன்னார்
மோடி என்பவர் காலம் கொடுத்த கொடை, தமிழகத்தை அந்த காலம் கொடுத்த ஞானமகன் கைதொட்டு மீட்டுகொண்டிருக்கின்றார்
ஆயிரம் ஆண்டுக்கு பின் காசியில் ஒரு யாகத்தை தொடங்கியிருக்கின்றார் மோடி , அந்த அக்னியினை நேற்று ஏற்றியிருக்கின்றார்
"அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்"
வெட்டி அடிக்குது மின்னல்
கடல் வீரத் திரைகொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம்
கூ கூவென்று விண்ணை குடையுது காற்று.
சட்ட் சட சட்ட் சட டட்டா
சட்ட் சட சட்ட் சட டட்டா
என்று தாளங்கள் கொட்டி கணைக்குது வானம்;
தாளம்கொட்டி கணைக்குது வானம்"
ஆம், பெரும் ஆன்மீக மழை கொட்ட்டும், ஞான ஆறு பெருகி ஆடட்டும், காய்ந்து போன தமிழகத்தில் இந்துமதமும் ஞானமும் பெருகி விளையட்டும், தமிழகம் தன் பழம் பொற்காலத்தை மீட்டெடுக்கட்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...