ஒரு குளக்கரையில் ஓரு அந்தணர் மான் தோல்மீது அமர்ந்து காயத்திரி மந்திரம் ஜெபம் செய்து கொண்டு இருந்தார்.
ஒரு புலையன் பசுவை வெட்டும் பொருட்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தான்.
அந்தப் புலையன் பசுவைத் தேடிக் கொண்டு வந்தான். அந்த ஜெபம் புரியும் பிராமணனைப் பார்த்து, *“அய்யரே, பசு இந்த வழியாகச் சென்றதா?”* என்று கேட்டான். ஜெபம் செய்து கொண்டிருந்த அந்தணர் இருகரங்களையும் நீட்டி பசு ஓடின வழியைக் காட்டினார்.
அவர் காட்டிய வழியே சென்று புலையன் பசுவைக் கொலை செய்து விட்டான்.
அந்தணர் , புலையன் இருவர் வாழ்வும் முடிந்து இறந்தனர் ! பசுவும் புலையனால் வெட்டப்பட்டு ஏற்கனவே இறந்தது !
அடுத்த பிறவியில் மூவரும் அவரவர் மனம் , வாக்கு செயல்களால் செய்து சேர்த்த வினைகளை அனுபவிக்க வேறு உடலில் பிறவி எடுக்கின்றனர் !
வட நாட்டில் தாழ்ந்த குலத்தில் சாருகர் என்பவர் பிறந்தார். சாருகர் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் உயர்ந்த குணங்களை உடையவராக விளங்கினார்.
அதனால் ஸஜ்ஜன சாருகர் என்று பெயர் பெற்றார். அவர் இளமை யிலிருந்தே உத்தம குணங்களுக்கு உறைவிடமாகத் திகழ்ந்தார்.
அடக்கம்,பொறுமை, சாந்தம், ஈஸ்வர பக்தி ஒழுக்கம், பண்பு முதலிய நற்குணங்களை அணிகலமாக அணிந்த அவர் ஆசார சீலராக இருந்தார்.
அவர் பண்டரி நாதனை உபாசனை புரிந்து வந்தார். பண்டரி நாதா! பண்டரிநாதா! எனக் கூறி அலறுவார்.
“விட்டல், விட்டல்” என்று பஜனை செய்வார். இரவு பகலாக எட்டெழுத்தை ஓதி உள்ளம் உருகுவார். கண்ணீர் பெருக்குவார்.
பண்டரீபுரம் பூலோக வைகுந்தம். ஸஜ்ஜன சாருகருக்கு பண்டரீபுரம் சென்று விட்டல நாதனைச் சேவிக்க வேண்டும் என்ற தாகம் மேலிட்டது.
அந்தக் காலத்தில் ரயில் பஸ் முதலிய வாகன வசதிகள் கிடையா. சாருகர் பஜனை செய்து கொண்டு நடந்து போகிறார்.
பகல் முழுதும் நடப்பார். பொழுது போனதும் எந்த ஊரில் இருக்கிறாரோ அங்கே பிட்சை எடுத்து உண்டு சத்திரங்களில் தங்கி பஜனை செய்வார்.
ஒருநாள் ஒரு நகரத்தில் தங்கினார். இரவில் வேறு இடமின் மையால் ஒரு தனவந்தரின் வீட்டுத் திண்ணயில் அமர்ந்து ஜெபம் செய்து கொண்டி ருந்தார்.
இரவு ஒரு மணி. நகரம் இருள் சூழ்ந்திருந்தது. ஒலியடங்கி இருந்தது. அங்கங்கே நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன.
அவர் தங்கியிருந்த அந்த வீட்டுப் பெண் சிறுநீர் கழிக்க கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.சாருகரைகண்டாள். அவர் மீது மையல் கொண்டாள்.
அவரருகே சென்று, “தாங்கள் பூலோக மன்மதரைப் போல காட்சி தருகிறீரே. தாங்கள் யார்? என்று கேட்டாள்.
“அம்மா, வணக்கம், நான் ஒரு யாத்ரீகன். என் பேர் சாருகன். நான் பண்டரி புரம் போகின்றேன்”இரவு ஆனபடியால் இந்த திண்ணையில் தங்கி காலை விடிந்ததும் பண்டரிபுரம் கிளம்பி விடுவேன், என்றார் !
அந்த பெண்மணி இவரிடம் "என் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்ட உத்தமரே. நீங்கள்தான் என் இதய ராஜா, நான் உங்கள் இதய ராணி இந்த விநாடி முதல் தாங்கள் என் இன்னுயிர்க் கணவர்”என அவரை ஆசையுடன் நெருங்குகிறாள்.
"அம்மா ! இந்த உலகத்தில் கடுகளவு பாவத்தால் வரும் துன்பம் மலை யளவு. நான் மனத்தினாலும் மாதரைத் தீண்டாதவன். பிரம்மச்சாரி.
தாங்கள் உங்களுடைய கணவருடன் வாழ்வது தான் கண்ணியம்.
கற்பு நெறியில் நிற்பதுதான் புண்ணியம்" என கூறினார். அவள் வெறி பிடித்த வளைப் போல ஓடி கொடுவாளை எடுத்து அயர்ந்து தூங்குகின்ற கணவனுடைய தலையை வெட்டித் துண்டித்தாள்.
“என் உயிரினும் இனிய உத்தமரே! என் கணவரைக் கொன்று விட்டேன். இனி நீர்தான் என் கணவர்”—என்று கூறி அவரைக் கட்டித் தழுவ வந்தாள்.
இந்தக் கொடுஞ் செயலைக் கண்டு சாருகர் நடு நடுங்கினார். ஐயோ! கணவரைக் கொன்ற இவள் ஒரு பெண்ணா? பூதமா? பேயா? என்று எண்ணித் திண்ணையை விட்டுக் குதித்து ஓடினார். அந்தப் பெண் அவரைத் தொடர்ந்தாள்.
சாருகரைப் பற்ற முடியவில்லை. நான்கு தெரு கூடுமிடத்தில் நின்று அப்பெண் ஓவென்று கதறி ஓலமிட்டாள். அங்கு உறங்கியிருந்தவர்கள் கூடினார்கள்.
"பெரியோர்களே! இந்தப் பாவி எங்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். நான் சிறு நீர் கழிப்பதற்காக கதவைத் திறந்து வெளியே வந்தேன். என் கணவரை வெட்டி விட்டு என்னைக் கற்பழிக்க என்னைத் துரத்தி வந்தான்" என்று கூறி கதறியழுதாள்.
ஊர்க்காரங்க சாருகரைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தினர். காவலர்கள் அவரைச் சிறையில் அடைத்தார்கள்.
பொழுது விடிந்த பின் அவ்வூர் சிற்றரசன் வழக்கை விசாரித்தான். “எல்லாம் பாண்டு ரங்கன் அறிவான். நான் ஒரு குற்றமும் செய்ய வில்லை" என நடந்ததை உள்ளபடி சொன்னார் சாருகர்..
குற்றம்புரிந்தவன் ஒப்புக்கொள்வானாஎன்று எல்லோரும் சொன்னார்கள்.
சாருகருடைய கரங்களைத் துண்டிக்குமாறு அரசன் ஆணை யிட்டான். சாருகருடைய இரு கரங்களும் துண்டிக்கப் பட்டன.
குற்றம் செய்யாத குணப் பெருங் குன்றான அவர் துடிதுடித்தார். பின்னர் எங்கும் தங்காமல் பண்டரீ புரம் வந்து சேர்ந்தார்.
அன்றிரவில் கோயில் அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், தக்கார்களின் கனவில் பண்டரீ நாதர் தோன்றி, “நமது பரம பக்தனான ஸஜ்ஜன சாருகன் வருகிறான். கோயில் மேளம், குடை, சுருட்டி, பூரண கும்பம் வைத்து உபசரித்து அழைத்து வாருங்கள்” என்று பணித்தருளினார்...
எல்லோரும் வந்து சாருகருக்கு கோவில் பரிவட்டம் கட்டி கனவில் பாண்டுரங்கன் கூறியதைச் சொல்லி பேரன்பு காட்டினர்.
சாருகர் இதனைக் கேட்டு அழுதார்.
பாண்டுரங்கன் திருவுருவம் முன் நின்றார். கைகள் இல்லாமையால் தொழ முடிய வில்லையே என்று கதறினார்.
”தேவ தேவா! உன்னை என்னடி யார் என்று அருள் புரிந்தனையே. அன்று அரசன் என் கரங்களை வெட்டு மாறு ஆணை யிட்டானே. அப்போது இவன் குற்றமற்றவன் என்று அசரீரி யாகவாது ஒரு குரல் கொடுத்து இருக்கலாமே. அன்று என்னைக் கை நழுவவிட்டீரே. இது நியாயமா? இதுதான் உன் கருணையா? இது தருமமா?
நான் இப்பிறவியில் எவருக்கும் எந்தத் தீங்கும் செய்ய வில்லையே. உன்னைக் கையெடுத்துக் கும்பிடக்கூட முடியவில்லையே" என்று சொல்லி அழுதார்.
பாண்டுரங்கன் அசரீரியாக கூறினார் “சாருகா அழாதே. அவரவர் வினைகளை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும்.
முந்தைய பிறவியில் ஒரு நாள் குளக்கரையில் ஓர் அந்தணன் காயத்ரி மந்திரம் ஜெபித்துக் கொண்டு
இருக்கும் போது பசுவை வெட்ட வந்த புலையன் பசு ஒடிப் போன வழியைக் கேட்டவுடன் இரு கரங்களையும் நீட்டி அது போன பக்கத்தைக் காட்டினாய்,
புலையன் அவ்வழியே சென்று பூலோக காம தேனுவாகிய பசுவைக் கொன்று விட்டான்.
போன பிறவியில் நீதான் அந்த காயத்ரி ஜபம் செய்த அந்தணன். பசுவின் கொலைக்குக் காரணமான உனது இரு கரங்களும் வெட்டப்பட்டன.
கொலையுண்ட பசுதான் அப்பெண் (தனவந்தனின் மனைவி)..பசுவைக் கொலை செய்த புலையன்தான், அவளுடைய கணவன்..
ஆகையால் இவை அனைத்தும் முற் பிறப்பில் செய்த தீவினையால் வந்தவை "என்று கூறினார்...
வெட்டப்பட்ட பசு பெண்ணாக பிறந்து முன் ஜன்ம வினை தீர்க்க கணவனாக பிறந்த புலையனை வெட்டி வினையை தீர்த்துக் கொண்டது ! முன் பிறவியில் பசுவை காட்டிக்கொடுத்த நீ இந்த பிறவியில் அந்த பெண்ணாக பிறந்த பசு மூலமாக ஊர் மக்களிடம் ஒன்றுமறியாத அப்பாவியான உன்னை காட்டி கொடுத்தாள் ! ஒன்றுமறியாத பசுவை நீ காட்டிக்கொடுத்தது போல் தான் இதுவும் நடந்துள்ளது !
எனவே என் தர்ம சட்டத்தின் படி அவரவர் வினைகளை மற்றவரிடம் அதை தீர்க்கவே ஏதோ ஒரு உருவத்தில் ஏதோ ஒரு தொடர்பில் பிறப்பு எடுத்து அந்த வினைகளை அனுபவிக் கிறார்கள் ! இது உலக நியதி ! ஆதலால் தான் உலகில் இன்ப , துன்பங்கள் , துரோகங்கள்,வீ்ண்பழிகள், அபவாதங்கள், அவமானங்கள் ஏற்படுகிறது !
*வாழ்க்கை எனும் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்.* அவன் எப்போதும் எதிலும் நமக்கு தீங்கு செய்ய மாட்டான்.
விதிக்குக் கட்டுப் பட்டுத்தான் மனிதன் வாழ வேண்டும். உங்கள்
செயலில் கவனமாக இருங்கள்.
மற்றவை நடக்க வேண்டியவாறு நடந்தே தீரும்.
விதியின் வழியில் தான் பிறவிகள் வரும் !!!!
No comments:
Post a Comment