Monday, June 27, 2011

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது: ஜெயலலிதா பேட்டி

முதல்- அமைச்சர் ஜெயலலிதா, ஒரு தனியார் ஆங்கில சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஜெயலலிதா அளித்த பதில்களும் வருமாறு:-
 
லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது: ஜெயலலிதா பேட்டி
கேள்வி:- லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்பது பற்றி சர்ச்சை நிலவுகிறதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
 
பதில்:- லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்க்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து. பிரதமர் ஏற்கனவே ஊழல் தடுப்பு சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அவரை சி.பி.ஐ. விசாரிக்க முடியும். இந்த நிலையில், லோக்பால் விசாரணை வரம்புக்குள் அவரை சேர்த்தால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி, தன்னை தற்காத்துக்கொள்வதிலேயே அவர் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.
 
அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. இதனால், பிரதமரின் அதிகாரம் வலுவிழந்து விடும். அரசாங்கத்துக்கு நிகராக, நிழல் அரசாங்கம் உருவாக இது வழிவகுத்து விடும். பிரதமர் மீதான குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டால் கூட, அவரது பதவியின் அதிகாரம் வலுவிழந்து விடும். மேலும், இந்த மசோதாவை பயன்படுத்தி, வெளிநாடுகள் இந்தியாவை சீர்குலைக்கும் ஆபத்து உள்ளது.
 
இந்த விஷயத்தில், நான் தனிநபரை ஆதரிக்கும் நோக்கத்தில் இக்கருத்தை சொல்லவில்லை. பிரதமர் பதவி என்ற அமைப்புக்கு ஆதரவாகவே சொல்கிறேன். பிரதமராக இருப்பவர், முழு அதிகாரத்துடன் இல்லாவிட்டால், அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. பிரதமரின் அதிகாரத்தை எதுவும் வலுவிழக்க செய்துவிடக்கூடாது. இருப்பினும், இந்த விவகாரத்தில், இறுதியான லோக்பால் வரைவு மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழக அரசு தனது கருத்தை தெரிவிக்கும்.
 
கேள்வி:- காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக கடந்த ஆண்டு அறிவித்தீர்களே?
 
பதில்:- அது அந்த சமயத்துக்கு மட்டும் தெரிவித்த ஆதரவு. மத்திய அரசில் இருந்து தி.மு.க. வெளியேறினால், மத்திய அரசுக்கு ஆதரவு தருவதாக சொன்னேன். கூட்டணி நிர்ப்பந்தம் காரணமாக, அப்போதைய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறதோ என்ற எண்ணத்தின் அடிப்படையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் அந்த ஆதரவை காங்கிரஸ் ஏற்கவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகுகூட, தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
 
கேள்வி:- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பீர்களா?
 
பதில்:- சோனியாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை. காங்கிரஸ் கட்சி இன்னும் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும்போது, அப்படி செய்வது முறையல்ல.
 
கேள்வி:- காங்கிரசுடன் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா? ராகுல் காந்தி, பிரதமர் ஆக வாய்ப்புள்ளதா?
 
பதில்:- அந்த சூழ்நிலை வரும்போது, அதுபற்றி சொல்கிறேன். மாநில நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்.
 
கேள்வி:- தேசிய அரசியலில் ஈடுபடுவீர்களா?
 
பதில்:- அத்தகைய விருப்பம் ஏதும் இல்லை. ஆனால் எந்த பொறுப்பு கொடுக்கப்பட்டாலும் அதில் திறம்பட செயல்படுவேன். வாழ்க்கையை அது வரும் வகையிலேயே ஏற்றுக்கொள்வேன். அரசியலில் நுழைய வேண்டும் என்றோ, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்றோ நான் ஒருபோதும் எண்ணியது இல்லை. ஆனால் எப்படியோ ஆகிவிட்டேன்.
 
கேள்வி:- உங்கள் லட்சியம் என்ன?
 
பதில்:- இந்தியா, சூப்பர் பவர் ஆக வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதற் கான செயல்திறன் நமக்கு உள்ளது. அதற்காக, வலிமையான, தேசபக்தி கொண்ட தலைவர் நமக்கு வேண்டும்.
 
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...