Friday, June 17, 2011

பத்திரிக்கையாளர் சந்திப்பு; 'கடுகடு' கருணாநிதி!

முன்னாள் முதல்வரும்  திமுக தலைவருமான மு.கருணாநிதி ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல ஒரு பத்திரிக்கையாளரும் கூட. அவரை நிருபர்கள் சந்திக்கும் போது, எடக்கு மடக்காக கேள்வி கேட்டாலும் எதுகை மோனையோடு, சரளமான நகைச்சுவை இழையோட பதிலளிப்பவர் கருணாநிதி. அப்படிப்பட்டவரை தேர்தல்  தோல்வி- கனிமொழி கைது மட்டுமன்றி, தேர்தல் படுதோல்விக்கு  திமுகவே காரணம் என்று சக தோழமை கட்சியான காங்கிரஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டும் போக்கு ஆகியவை பெரிய அளவில் அவரது  மனநிலையில் பாதிப்பை உண்டாக்கியுள்ளன என்பதை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் 10 -11 -2011 நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் முடிந்ததும், தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி உணர்த்துகிறது. கேள்வி கேட்ட நிருபர்களுக்கு பதில் என்ற பெயரில் பதில் தாக்குதல் தொடுத்துள்ளார் கலைஞர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
 
கேள்வி: திருவாரூரில் நீங்கள் பேசும்போது கனிமொழி மீது போடப்பட்டுள்ள வழக்கு மத்திய அரசால் போடப்பட்ட வழக்கு என்பதைப் போலச் சொன்னீர்கள். இன்றைய உங்கள் தீர்மானத்தில் அதை ஏன் குறிப்பிடவில்லை?.
 
பதில்:திருவாரூரில் நான் என்ன பேசினேன் என்பதை திரித்துச் சொல்லாமல், முறையாக, ஒழுங்காக, உண்மையாக, சத்தியமாகக் கேளுங்கள்.
கேள்வி: 'கூடா நட்பு' என்று சொன்னீர்களே, அது யாரைப் பற்றி?.
 
பதில்: உங்களில் [நிருபர்களில்] ஒருசிலரோடு இருக்கின்ற நட்பாகக் கூட இருக்கலாம் அல்லவா?
கேள்வி: எக்காரணம் கொண்டும் காங்கிரசுடன் உங்கள் கூட்டணியில் சிக்கல் இல்லை, பிரச்சினை இல்லை என்று கூறுவீர்களா?
 
பதில்: நிச்சயமாகச் சொல்வேன். காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது விரோதத்தை உண்டாக்க வேண்டும், பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு திட்டமிட்டு ஒரு சிலர் முடிவு செய்து அதை இங்கே வந்து கேள்வியாகக் கேட்கிறீர்கள். அப்படித் தானே?
கேள்வி:ஜூலை மாதத்தில் நீங்கள் கூட்டுகின்ற பொதுக்குழுவில் தி.மு.க. காங்கிரஸ் கட்சியோடு கொண்டுள்ள உறவு தொடருமா? தொடராதா? என்ற முடிவினை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?
 
பதில்:நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்பது உங்கள் கேள்வியிலேயே தெரிகிறது.
கேள்வி:காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வமான பத்திரிகை ஒன்றில் 2&ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று எழுதியிருக்கிறார்களே?
 
பதில்:ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை பூதாகரமாக சில சுயநலவாதிகள், சில பொறாமைக்காரர்கள் ஊதிவிட்ட காரணத்தால், அதை எடுத்து வைத்துக்கொண்டு அந்தப் பத்திரிகையிலே எழுதியிருப்பார்கள்.
கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சினை இந்தத் தோல்விக்குக் காரணமா இல்லையா?
 
பதில்:இல்லை. தி.மு.க. தோல்விக்கு முக்கியமான காரணம் ஒரு சில 'பார்ப்பனர்களின்' முயற்சிதான்.
கேள்வி:பா.ஜ.க.வுடன் நீங்கள் செல்லப்போவதாக டெல்லியில் சொல்கிறார்களே, அதற்கு ஒரு முயற்சி நடைபெறுவதாகவும் கூறுகிறார்களே?
 
பதில்:அதைப்பற்றித்தான் உண்ணாவிரதம் இருக்கின்ற ராம்தேவ் சாமியாரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று கூடச் சொல்வீர்கள்.
கேள்வி:அடுத்து வரவிருக்கும் சி.பி.ஐ. மூன்றாவது குற்றப் பத்திரிகையிலே தயாநிதிமாறன் பெயர் இடம் பெறப்போவதாகச் செய்தி வந்திருக்கிறதே?
 
பதில்: நீங்கள் [நிருபர்கள்] முயற்சி செய்தால் அது நடக்கலாம். ஆனால் உண்மையா அல்லவா என்பதை சி.பி.ஐ. தான் சொல்ல வேண்டும். சி.பி.ஐ. இதை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம் என்று சொல்லியிருக்கிறது.
கேள்வி:ஸ்பெக்ட்ரம் பிரச்சினையிலே நீங்கள் ராசாவை ஆதரித்த அளவிற்கு தயாநிதிமாறனை ஆதரித்துக் கூறவில்லையே, அவரே பதில் சொல்வார் என்று சொல்லியிருக்கிறீர்களே?.
 
பதில்: நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை, தயாநிதி மாறனே சொல்வார் என்ற அந்த எண்ணத்தோடு நான் பதில் சொன்னேனே தவிர, நீங்கள் கலகமூட்டுவதைப்போல தயாநிதி மாறனை நான் ஆதரிக்காமல் இல்லை.
கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் கடந்த காலத்தில் நீங்கள் சரியாகச் செயல்படவில்லை என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறாரே?
 
பதில்:நான் அவருக்கெல்லாம்  பதில் சொல்ல மாட்டேன்.
கேள்வி:இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலே உங்கள் சுய மரியாதை காப்பாற்றப்படுகிறது என்று நினைக்கிறீர்களா?
 
பதில்:எங்கள் சுயமரியாதையைப் பற்றி தெருவிலே போகிறவர்கள் எல்லாம் சொல்ல முடியாது. சுயமரியாதையைப் பற்றி எனக்குத் தெரியும்.
கேள்வி: 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எந்த விதத்திலும் உங்களுக்கு உதவி செய்யவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?
 
பதில்: அப்படிப்பட்ட வருத்தம் எனக்குக் கிடையாது. எனக்கு வருத்தம் வரவேண்டுமென்று நீங்கள் தான் படாதபாடுபடுகிறீர்கள்.
கேள்வி:டெல்லிக்கு எப்போது போகிறீர்கள்?
 
பதில்:போகும்போது சொல்லிக் கொண்டு போகிறேன்.
கேள்வி:உயர்நீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் மறுத்து விட்டார்களே?
 
பதில்:உயர்நீதி மன்றத்தில் இதைப்பற்றி கேட்கிறீர்களே, இன்றைக்கு சென்னை உயர்நீதி மன்றத்திலே சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக ஜெயலலிதா அரசிற்கு எதிராகத் தீர்ப்பு கூறியிருக்கிறார்களே அதைப்பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்று யாராவது நினைத்தீர்களா? அந்தத் தமிழ் ரத்தம் யாருக்காவது ஓடுகிறதா?
கேள்வி:உங்கள் தீர்மானத்தில் சி.பி.ஐ.யை கண்டித்திருக்கிறீர்கள். சி.பி.ஐ. பிரதமரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதனால் பிரதமரையே தாங்கள் கண்டித்ததாக எடுத்துக் கொள்ளலாமா?.
 
பதில்:நீங்கள் அப்படித் தான் எழுதுவீர்கள். உங்கள் சுதந்திரம் அது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மேற்கண்ட பதில்கள், ஆட்சி மாற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்த  பத்திரிக்கையாளர்கள் மீது அவருக்கு கோபம் இன்னும் தீரவில்லை போலும்.
பத்திரிக்கையாளர்களும் அவரை விடுவதாக இல்லை. பரிதாபம் தான் போங்கள். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...