Wednesday, June 29, 2011

அடுத்த கைது யார்?அலறும் தி.மு.க., பிரமுகர்கள்: அதிரடிக்கு தயாராகும் போலீஸ்

கடந்த ஆட்சியின் போது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி கோவையில் நிலம், சொத்து அபகரிப்பு குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் 12 நபர்களின் பட்டியலை தயாரித்துள்ளனர் போலீசார்.இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க., பிரமுகர்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி வரும் போலீசார், விரைவில் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

"தமிழகத்தில் முந்தைய தி.மு.க., ஆட்சியின்போது மாநிலம் முழுவதும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான தனியார் நிலம், சொத்துகள் ஆளுங்கட்சியினரால் பறிக்கப்பட்டதாகவும், அரசியல் ரீதியான நெருக்கடி காரணமாக போலீசார் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை' என்றும், முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, நிலம் அபகரிப்பு குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் உளவு போலீசார் ரகசிய தகவல்களை சேகரித்து அரசுக்கு அனுப்பி வருகின்றனர். கோவையில் பண்ணை வீட்டுமனை திட்டம் துவக்கி, ஸ்ரீசர்மா என்பவரிடம் பண மோசடியில் ஈடுபட்ட "கிரீன் ஹோம் லேண்ட் ஸ்கேப் (பி) லிமிடெட்' நிறுவன அதிபரும், மாவட்ட தி.மு.க., துணைச் செயலாளருமான ஆனந்தனை, மாநகர குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

நில மோசடி வழக்கில் கோவையில் கைதாகியுள்ள முதல் தி.மு.க., பிரமுகர் இவர் என்பதால், "அடுத்தது யார்?' என்ற பீதியில் உள்ளனர் அக்கட்சியினர்.கைது பட்டியலில் 12 பிரமுகர்கள்: கோவை மாநகரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தனியார் நிலம், சொத்து அபகரிப்பு குற்றங்களில் யார், யாரெல்லாம் ஈடுபட்டனர், அவர்களின் பின்னணி என்ன, சம்பந்தப்பட்ட சொத்துகளின் மதிப்பு எவ்வளவு, என்பது தொடர்பான தகவல்களை போலீசார் திரட்டியுள்ளனர்.

இதில், தி.மு.க., பிரமுகர்கள் மற்றும் மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள், தனி நபர்கள் என 12 பேரின் விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அமைச்சரின் ஆதரவாளர் எனக்கூறப்படும் "மீன்கடை' என்ற அடைமொழியை பெயருக்கு முன்னால் வைத்திருக்கும் நபர், கைது பட்டியலில் முதலிடத்தில் உள் ளார். கடந்த தி.மு.க., ஆட்சியின் போது சிங்காநல்லூர் ரயில்வே கேட் அருகிலிருந்த தனியாருக்குச் சொந்தமான ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய நிலத்தை இந்நபரின் தலைமையிலான கும்பல் அபகரித்ததாகவும், அந்நிலத்தின் குத்தகைதாரர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டுக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. அப்போதே இது குறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இக்குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட மேலும் சில புகார்கள் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள மாநகர போலீசார், அடுத்த கைதுக்கான அஸ்திரத்தை கையிலெடுத்துள்ளனர்.

கோவை போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி கூறியதாவது:கோவை மாநகர போலீஸ் எல்லைக்குள் நிலம், சொத்து அபகரிப்பு குற்றங்கள் தொடர்பான சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்திருந்தால், அதுகுறித்து மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிப்பர்; இதுபோன்ற புகார்களை விசாரிக்க, தனி போலீஸ் "டீம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக என்னை சந்தித்து புகார் அளிக்கலாம். அந்த புகார் மனு சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காக மாநகர குற்றப்பிரிவுக்கு பரிந்துரைக்கப்படும். நிலம், சொத்து அபகரிப்பு தொடர்பான புகார்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் விசாரிக்கப்பட மாட்டாது. நிலம், சொத்து பறிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிலர், டெலிபோனில் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கின்றனர். டெலிபோன் தகவலைக் கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.இவ்வாறு, போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.

கவர்னரின் உறவினரா? கோவை நகரில் வில்லங்கமான சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, எதிர்தரப்பு நபர்களை மிரட்டும் வேலையில் மூன்று பேர் கும்பல், கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. அந்நபர்களில் ஒருவர், தன்னை, "கவர்னரின் உறவினர்' எனக்கூறி போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பி வந்துள்ளார். தற்போது, பழைய புகார்கள், வழக்குகள் தொடர்பான ஆவணங்களை தூசு தட்டி எடுத்துள்ள போலீசார், இதுகுறித்தும் தங்களது மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். உத்தரவு வந்ததும், அடுத்தடுத்து கைது நடவடிக்கை பாயும் என்கின்றனர், அதிகாரிகள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...