Monday, October 3, 2016

கர்நாடக அமைச்சர்களின் தூதர் போல உமா பாரதி செயல்பட்டதாக தகவல்

மத்திய அரசின் திடீர், கர்நாடக ஆதரவு முடிவின் பின்னால், மத்திய நீர்வளத்துறை அமைச்சரும், 'கர்நாடக தாய்' என செல்லமாக அழைக்கப்படுபவருமான உமா பாரதி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் விட கர்நாடக அரசு முரண்டுபிடித்து வந்தது. இதனால் சுப்ரீம்கோர்ட் மூலமாக, தமிழக அரசு தண்ணீர் பெற போராடி வந்தது.
அடிக்கடி சுப்ரீம் கோர்ட்டை தமிழகம்-கர்நாடகா நாடுவதால், அதிருப்தியடைந்த சுப்ரீம்கோர்ட், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கர்நாடகா தனது உத்தரவை ஏற்று தண்ணீர் திறக்காமல் இருப்பதை பார்த்து கோபமடைந்த சுப்ரீம் கோர்ட் 3 நாட்களுக்குள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியுமா என மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோதகியிடம் கேட்டது. இதற்கு முகுல் ரோதகியும், முடியும் என கூறிவிட்டார்.
உடனடியாக, அரசியல் நகர்வுகளை ஆரம்பித்தனர் கர்நாடக அரசியல்வாதிகள். மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்தகவுடா உள்ளிட்டோர் மத்திய நீர்வள அமைச்சர் உமா பாரதியை சந்தித்து முறையிட்டனர். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து டெல்லியில் அன்று இரவே ஆலோசனை நடைபெற்றது. அப்போது கர்நாடகாவிற்கு ஆதரவான உமா பாரதி மட்டுமின்றி கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர்.
அந்த பேச்சுவார்த்தையின்போது, கர்நாடக அமைச்சர்களின் தூதர் போல உமா பாரதி செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் கர்நாடகாவில் பாஜகவின் எதிர்காலமே பாழாகிவிடும் என மோடியிடம் கர்நாடக அமைச்சர்கள் முறையிட, அதற்கு உமா பாரதி சப்போர்ட்டாக பேசியுள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா பலமுறை கேட்டுக்கொண்டும் காவிரி பற்றி பேச பிரதமர் மோடி நேரம் ஒதுக்காத நிலையில், அவரை சட்ட விதிமுறைகளை கொண்டே சாய்த்துள்ளனர் உமா பாரதி அன்டு கோ. காவிரி வழக்கு கோர்ட்டில் இருப்பதால் சந்திக்கவில்லை என கூறுகிறீர்கள்.. ஆனால், மேலாண்மை வாரியத்தை 3 நாட்களில் அமைப்பது சாத்தியமற்றதாயிற்றே, அதற்கு மட்டும் எப்படி ஒத்துக்கொள்வது என்பது உமா பாரதி வாதமாக இருந்துள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றாமல் மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதையும் உமா பாரதிதான் எடுத்துக்கூறியதாக தெரிகிறது.
கடந்த வாரம் தமிழகம்-கர்நாடகா நடுவே காவிரி தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அந்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது. பேச்சுவார்த்தைக்கு பிறகு பேட்டியளித்த உமா பாரதி, காவிரி பிரச்சினைக்காக தான் உண்ணா விரதம் இருக்கவும் தயார் என தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டால் இரு மாநிலங்கள் நடுவே எந்த பிரச்சினையும் ஏற்படாது எனும் நிலையில், தேவையில்லாமல் உண்ணா விரதம் குறித்து அவர் பேசியது கர்நாடகாவிற்கு சாதகமான நிலைப்பாடு என அப்போதே தகவல்கள் வெளியாகின.
உமா பாரதி இப்படி கூறிய நிலையில்தான், கடந்த சனிக்கிழமை பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார். இதுவும், மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. கர்நாடகாவில்தான் ஏற்கனவே பாஜக ஆட்சியை பிடித்துள்ளது, இனியும் பிடிக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்துள்ள பாஜக, கர்நாடக பக்கமே சாய்வது என முடிவு செய்துவிட்டது.
இன்று சுப்ரீம்கோர்ட்டில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோதகி தாக்கல் செயத் மனுவில், கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதிகள், தீபக் மிஸ்ரா மற்றும் உதய் லலித் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என அதில் கூறப்பட்டுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா 3 பெஞ்ச் அமர்வில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், 2 நீதிபதிகள் பெஞ்ச் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது என கூறப்பட்டுள்ளது.
கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க கோரிய வழக்கில், இது சட்டசபை விவகாரம் என சுப்ரீம்கோர்ட் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டியுள்ள முகுல் ரோதகி, காவிரி வழக்கிலும் அதையே பின்பற்ற வேண்டும் என கோரியுள்ளார். உமா பாரதியின் ஒத்துழைப்பு, கர்நாடகாவுக்கு மிகுந்த பலனை பெற்றுக்கொடுத்துள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...