Monday, May 30, 2011

ரூ.200 கோடி 2ஜி லஞ்சப் பணமே: ம.பு.க.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்ற ஸ்வான் டெலகாம் நிறுவனத்தின் உரிமையாளர் டி.பி.ரியால்டியிடமிருந்து கலைஞர் தொலைக்காட்சியின் கணக்கில் சேர்க்கப்பட்ட ரூ.200 கோடி லஞ்சப் பணமே என்று ம.பு.க. வழக்குரைஞர் வாதிட்டார்.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் கூட்டுச் சதியாளராக குற்றம் சாற்றப்பட்டுள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு பிணைய விடுதலை அளிப்பதை எதிர்த்து மத்திய புலனாய்வுக் கழக வழக்குரைஞர் யு.யு.லலித் இவ்வாறு கூறியுள்ளார்.

கனிமொழிக்கும், கலைஞர் தொலைக்காட்சியின் மேலான் இயக்குநர் சரத் குமார் ஆகியோர் தங்களுக்கு ம.பு.க. சிறப்பு நீதிமன்றம் பிணைய விடுதலை மறுத்துவிட்டதை எதிர்த்து செய்த மேல் முறையீட்டு மனு மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது.

உயர் நீதிமன்ற நீதிபதி அஜித் பாரியோக் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் கனிமொழியின் சார்பாக வாதிட்ட மூத்த வழக்குரைஞர் அல்டாஃப் அகமது, டி.பி.ரியால்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த ரூ.200 கோடி பணம் கடன்தானே தவிர, அதில் ஐயத்திற்கு இடமேதுமில்லை என்று கூறினார்.

“இவ்வழக்குத் தொடர்பான எல்லா ஆவணங்களும் ம.பு.க.விடம் உள்ள நிலையில், எதற்காக எங்களை சிறைபடுத்தி வைக்க வேண்டும்” என்று அல்டாஃப் அகமது வினவினார்.

இதனை எதிர்த்து வாதிட்ட அரசு சிறப்பு பொது வழக்குரைஞர் யு.யு.லலித், லஞ்சமாகப் பெற்ற ரூ.200 கோடியை கடனாகப் பெற்றதாக ஒரு புகைத் திரையை உருவாக்குகின்றனர் என்று கூறினார்.

“இந்த ரூ.200 கோடி பணப் பரிவர்த்தனையில் இரு நிறுவனங்களும் எந்த ஒரு பத்திரத்தையும் உருவாக்கிக்கொள்ளவில்லை. எனவே இது ஊழல் பண பரிவர்த்தனேயே” என்று லலித் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜித் பாரியோக், தீர்ப்பை தள்ளிவைப்பதாக அறிவித்தார்.


கனிமொழி, சரத் குமார் பிணைய விடுதலை: தீர்ப்பு தள்ளிவைப்பு 

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி மேலாண் இயக்குனர் சரத் குமார் ஆகியோரின் பிணைய விடுதலை மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டத்தில் நடந்த முறைகேட்டில் கூட்டுச் சதியாளராக மத்திய புலனாய்வுக் கழகத்தால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழிக்கும், சரத் குமாருக்கும் டெல்லி ம.பு.க. சிறப்பு நீதிமன்றம் பிணைய விடுதலை மறுத்துவிட்டதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இவர்கள் இருவர் சார்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல் முறையீட்டிற்கு ம.பு.க. சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு விசாரணையில் இதுவரை எந்த அளவிற்கு புலனாய்வு செய்யப்பட்டுள்ளது என்பதையும் விளக்கும் அறிக்கையை ம.பு.க. தாக்கல் செய்தது.

இதனை ஆராய்ந்த நீதிபதி பாரியோக், பிணைய விடுதலை மனு மீதான தீர்ப்பை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...