Saturday, May 21, 2011

அழகிரி மற்றும் தி.மு.க. கட்சியினரின் சுருட்டல் விவகாரங்கள் ..!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தி.மு.க.வை இந்தத் தேர்தலில் வீட்டுக்கு அனுப்பியதற்கான காரணிகளில் ஒன்றான அக்கட்சியினர் மற்றும் கலைஞரின் குடும்பத்து உறுப்பினர்கள் சிலரின் அராஜகம் பற்றிய பல செய்திகளை முன்பே நீங்கள் படித்திருப்பீர்கள்..!

முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா, தான் கேட்டும் தனக்கு நிலத்தை விற்க மறுத்த கோபத்தினால் இரவோடு இரவாக வாழைத்தோப்பையும், பண்ணை வீட்டையும் புல்டோசர் வைத்து அழித்தது தமிழ் நாட்டு மக்களால் மறக்க முடியாதது..!

அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சிவபாலன் என்பவரை தனது வீட்டு முன்னால் இருந்த போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய சவுக்கால் தனது சின்ன வீட்டம்மாவுடன் சேர்ந்து அடித்துத் துவைத்த கதையையும் கேட்டு தமிழகமே பதறியதும் இந்த தி.மு.க.வின் பொற்கால ஆட்சியில்தான் நடந்தது..!

அதேபோல் சேலத்து இளவரசர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனான பாரப்பட்டி சுரேஷ்குமார் என்பவர் ஒரு நில விவகாரத்தில் தலையிட்டு தன் பேச்சைக் கேட்கவில்லையே என்கிற ஆவேசத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புசாமி என்பவரின் குடும்பத்தில் 7 பேரை வெட்டிச் சாய்த்ததாக தி.மு.க. ஆட்சியிலேயே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அவரைக் கைது செய்தது. தி.மு.க. நேர்மையாக ஆட்சி செய்திருக்கிறது என்று அவர்கள் சொல்கின்றபோது இந்தக் கைதும் நியாயமானதாகத்தான் இருக்க வேண்டும்..! ஸோ.. இந்தப் படுகொலைகளுக்கு பின்னால் இருந்தது அரசியல் அராஜகங்கள்தான்..!

ஆனாலும் வெகு எளிதாக என்.கே.கே.பி.ராஜா சாட்சிகளே இல்லை என்ற நிலையில், வழக்கில் இருந்து விடுதலையானார். சுரேஷ்குமார் ஜாமீன் கேட்டபோது அரசுத் தரப்பு அதிகம் எதிர்க்காமல் இருக்க.. சுலபத்தில் அவரும் ஜாமீனில் வந்துவிட்டார்..! இதையெல்லாம் பார்த்தும் மக்கள் பயந்துபோய்தான் இருந்தனர். தங்களுக்கொரு  வாய்ப்பு வரும்போது பார்த்துக் கொள்வோமென்று அமைதியாக இருந்தனர். கடைசியில் தங்கள் கோபத்தை வாக்குப் பெட்டியில் காண்பித்துவிட்டனர்..!

இந்தக் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்த இடங்களே இந்த லட்சணத்தில் என்றால் பட்டத்து இளவரசர் ஆட்சி செய்யும் மாமதுரையில் நிலைமை என்ன லட்சணத்தில் இருந்திருக்கும்..?

கடந்த இரண்டு நாட்களாக கூகிள் பஸ்ஸிலும், பேஸ்புக்கிலும் பகிர்ந்து கொண்ட சில சம்பவங்களை சில ஆயிரம் பேர் படித்துத் தெரிந்து கொள்வதற்காக இங்கே பதிவு செய்கிறேன்..!


சம்பவம்-1 :

“..........திடுதிப்பென்று ஒருநாள் மதுரையில் இருந்து போன்.. “அண்னன் அ’னாதான் உங்ககிட்ட பேசச் சொன்னார். நீங்க என்ன பண்றிங்கன்னா.. உடனே ஒரு இருபது லட்ச ரூபாயை மதுரை ஐ.என்.ஜி.வைஸ்யா பேங்க்ல ஃபிக்சட் டெபாசிட் பண்ணிடுங்க.. என்ன புரியுதா?” என்று மிரட்டியது  ஒரு  கைத்தடி...!

ஃபிக்சட் டெபாசிட் மேட்டர் என்னடா விவரம் என விசாரித்தால்.. ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கியின் மதுரை கிளைக்கு ஒரே மாதத்தில் 30 கோடி ரூபாய் டெபாசிட் வாங்கித் தருவதாக அண்ணன் அ’னா உறுதி கூறி, அதற்கான கமிஷன் தொகையாக பல கோடி ரூபாயை முன் கூட்டியே வாங்கிக் கொண்டாராம்! உள்ளூரில் தொழில் செய்யும் எல்லோரையும் அதட்டி - உருட்டி - மிரட்டியே அந்த 30 கோடி ரூபாயை டெபாசிட் பண்ண வைத்தார்கள். கடனை, உடனை வாங்கி ஃபிக்சட் டெபாசிட் செய்தார்கள் அப்பாவிகள்  பலரும்.

அந்த அளவுக்கு அராஜகம் தலைவிரித்து ஆட்டம் ஆடிய மதுரையில் உதிக்காத சூரியன் ஒரு சீட்டைக்கூட பிடிக்காமல் மண்ணைக் கவ்வியது என் போன்ற சொந்தத்  தொழில் செய்பவர்களுக்கெல்லாம் தவுசன்வாலா  பட்டாசு  வெடித்துக்  கொண்டாட வேண்டிய சந்தோஷம்.

தி.மு.க. மீண்டும் ஆறாவது முறையாக ஆட்சிக்கு வரவேண்டும் என அடம் பிடித்துக் குரல் கொடுத்த - ப்ரஃபைல் படத்திலேயே உதயசூரியனைப் போட்டுக் கொண்டு வடம் பிடித்த இணைய நண்பர்களுக்கெல்லாம் அன்போடு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான்யா தெரியும்! இந்த முறையும் அவனுக ஆட்சிக்கு வந்திருந்தானுங்கன்னா தமிழ் நாட்டை அந்த ஆண்டவானால மட்டுமில்லை.. எவனாலயும் காப்பாத்தியிருக்க முடியாது..!”

- இப்படி பாதிக்கப்பட்டவர் சொல்லியிருந்த சில கோடிகள் என்பதை மட்டுமே குறி வைத்து பல உடன்பிறப்புகளும், தி.மு.க. ஆதரவாளர்களும் சிலம்பமெடுத்து ஆடினார்களே ஒழிய.. மதுரை அண்ணன் செய்யச் சொன்ன அந்த பிக்ஸட் டெபாசிட் விஷயத்தை மட்டும் கவனமாக கண்டு கொள்ளாமல் போனார்கள்..!

ஆனால் சம்பவம் நடந்ததென்னவோ உண்மை..! மதுரையில் ஆரம்பித்து தென் தமிழகத்தின் பல மாவட்டங்களும் அழகிரியின் புதிய தொழில் சாம்ராஜ்யத்துக்குள் அடங்கிப் போனது.. அதாவது அடக்கப்பட்டது! 

அண்ணாச்சியிடம் சில பஞ்சாயத்துக்களுக்காக சென்று வந்து கொண்டிருந்த பல தொழிலதிபர்களிடமும் இப்படித்தான் அந்தக் குறிப்பிட்ட வங்கிக்காக பணம் வசூலிக்கப்பட்டது..!’ என்பதை மட்டும் இன்று ஒப்புக்கொள்ளும் இணைய உடன்பிறப்புகள், சும்மா சிவனே என இருக்கும் தொழிலதிபர்களையும் வலியச் சென்று வம்பிழுத்து மாமூல் வசூலித்து வந்த அடிதடியாளர்களைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.   

நான் எந்த தப்புத்தண்டாவும் செய்யவில்லை.. உங்கள் கட்டப் பஞ்சாயத்தும், பாதுகாப்பும், பக்கபலமும் எனக்குத் தேவையில்லை’ என யாரும் சொல்லிவிட்டு, ஒதுங்கிப் போக முடியாது. அந்த ஏரியாவுக்கெல்லாம் தாங்கள்தான் குறுநில மன்னர்களாக எண்ணிக் கொண்டு செயல்பட்ட கரை வேட்டிக்காரர்கள் கேட்டால் கேட்பதைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். 

‘வரி வட்டி கிஸ்தி’ என வீர வசனம் பேசிக்கொண்டிருந்தால் போன் மிரட்டல்களிலேயே உயிரைப் பிடுங்கி விடுவார்கள். இதனைப் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சின்னப் பெட்டிச் செய்தியை மட்டுமே போட்டிருந்தது நக்கீரன். இதுவே சசிகலாவின் ஆட்களாக இருந்திருந்தால் அட்டையில் போட்டிருப்பார்கள்..!  

சம்பவம்-2

“அ..லை யுனிவர்சிடில மூணு மெடிக்கல் காலேஜ் சீட்டை அண்ணன் எனக்கு கொடுத்திருக்காரு.. அந்த வருமானம் எனக்குத்தான். யாராச்சும் உங்களுக்குத் தெரிஞ்ச பார்ட்டியைக் காட்டுங்க.. எனக்கு 18 லட்சம் கொடுத்தா போதும்.. எவ்வளவு வேணும்னாலும் கூட்டி வச்சு நீங்க வாங்கிக்கங்க..” என  என்னையே  ஏஜெண்ட்  ஆக்கப் பார்த்தது.

- இப்படியொரு வாக்குமூலமும் வெளியாகியுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் என்றில்லை.. தமிழகத்தில் இருக்கும் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் ஆளும் கட்சியின் தலைமைக்கென்று சில சீட்டுக்கள் உண்டு. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை கூல் செய்வதற்காகவே இதனைக் கொடுத்துவிடுவார்கள்..! இந்த இடங்களில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மாணவர்களின் பெயரை டிக் செய்து அனுப்பி வைப்பார்கள் சீட்டை பெற்றவர்கள்..! சுகாதாரத் துறை அமைச்சர், முதலமைச்சர், கவர்னர் என்று மூவருக்குமே இந்தப் பிரிவில் சீட்டுக்கள் ஒதுக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே..!


சம்பவம்-3
தென் மாவட்டங்களில் கேபிள் தொழில் செய்துவருபவர்கள் எப்போதுமே குரூப், குரூப்பாகத்தான் இருப்பார்கள். அ.தி.மு.க. ஆதரவாளர்கள், எஸ்.சி.வி. ஆதரவாளர்கள், யார் பக்கமும் சேராதவர்கள், லோக்கல் தாதாக்கள் பக்கம் ஒதுங்கியவர்கள்.. என எப்போதுமே தமிழக காங்கிரஸ்போல நிறைய கோஷ்டிகள் இருக்கும். அந்த கோஷ்டி குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட 'அண்ணன் அண்ட் கோ'வினர் எல்லா ஏரியாக்களிலும் தங்கள் தும்பிக்கையை நுழைத்தார்கள்.  

ஒரு சில ஏரியாக்களில்.. உள்ளூர் கலவரத்தையும் குறிப்பாக எஸ்.சி.வி.யின் ஆதிக்கத்தையும் அடக்குவதற்காக உள்ளூர்க்காரர்களே அண்ணாச்சியின் உதவிக்கு ஓடினார்கள்.

நானிருக்க பயமேன் என நைச்சியமாகவும் – "நாளைல இருந்து நம்ம கண்ட்ரோல் ரூம்ல இருந்துதான் சிக்னல் எடுத்துக்கணும் என்ன புரியுதா..?" என அதட்டி உருட்டியும் களமிறங்கினார்கள். வேறு வழியில்லாமல் அண்ணனிடம் சரண்டனார்கள் கிட்டத்தட்ட ஆறேழு மாவட்டத்தைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர்கள்! அத்தனை பேரும் ஒரே நாள் இரவில் இரண்டாம் நிலை தொழில் செய்பவர்களாக மாறிப் போனார்கள்..! 
முதல் மூன்று மாதங்கள் ஒழுங்காகப் போய்க் கொண்டிருப்பதாக பாவ்லா காட்டிய -னாவின் கேபிள் சாம்ராஜ்யம் 4-வது மாதமே எகிறத் தொடங்கியது. அனைத்து கேபிள்காரர்களும் அநியாய டெபாஸிட் கட்ட வேண்டும் என்ற உத்தரவு பாய்ந்தது. அதே போல அண்ணனின் ஆளுகையின் கீழ் வந்துவிட்ட அத்தனை கேபிள் இணைப்புகளில் செயல்படும் லோக்கல் டிவிக்களுக்கும் அதிரடி ஆப்பு பறந்து வந்தது.

யாராலும் அவர்களை எதிர்க்க முடியவில்லை. மீறியும் செய்ய முடியவில்லை. மீறினால் கேபிள் வயர்கள் வெட்டப்படும். இவர்களை வெளியில் நடமாட முடியாது. போலீஸ் வழக்குகள் பாயும் என்பதெல்லாம் இவர்களுக்கும் தெரியும்.. கேட்டதைக் கொடுத்தார்கள்..! 

என்னடா இவனுக.. இவ்ளோ நல்லவங்களாக இருக்கானுக..!” என்று நினைத்த மதுரைக் கூட்டம், அடுத்தடுத்த மாதத்திலேயே வசூல் தொகையைத் தாறுமாறாகக் கூட்டிக் கொண்டே போனது.
அடுத்தக்கட்டமாக அத்தனை மாவட்டங்களிலும் சிறு தொழில் செய்துவரும் பிசினஸ்மேன்கள் டார்கெட் செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கும் லாபத்தை ஆடிட்டர்கள் போல அச்சு அசலாகக் கணக்குப் போட்டுக்கொண்டு, அவர்கள் முன்னால் கை நீட்டினார்கள். ‘எதிர்காலத்துலயும் நம்ம ஆட்சிதான்.. உங்களுக்கும் உங்க தொழிலுக்கும் நாங்கதானே பாதுகாப்பு கொடுக்கணும்’ என ‘சம்பளமா’க ஆயிரத்தில் இருந்து லட்சம்வரை வசூல் பண்ண ஆரம்பித்தார்கள்.

கொடுக்க மாட்டேன் என அடம் பிடித்து, கோர்ட் – கேஸ் என போக விரும்பும் நபர்களுக்கு அவரவர் குடும்பத்திலேயே கடும் எதிர்ப்பு. "ஆரம்பிச்ச தொழிலை நிறுத்தினா வெளியே இருக்கும் கடனை வசூல் பண்ண முடியாது, ஊருக்குள்ளயும் அவமானமா போயிடும், என்ன எழவையோ அழுதுட்டு நாம பொழைப்பைப் பார்ப்போம்’ என குடும்பத்துக்குள்ளேயே சண்டை நடந்தது, அதனால் உறவு ரீதியாகவும் இழப்புதான் ஏற்பட்டது என புலம்புகிறார் நண்பர் ஒருவர்.

சம்பவம்-4

இது  திருச்சி மண்டல இளவரசர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட மேட்டர்..

திருச்சியில பாழடைஞ்ச நிலையில இருந்த ஒரு ஹோட்டல் பேங்க் ஏலத்துக்கு வந்தது. விஷயம் கேள்விப்பட்ட ஒரு நாமக்கல் பிசினஸ்மேன் ஹோட்டலுக்கு சொந்தக்காரங்களைச் சந்திச்சார்.

ஏலத்துக்குப் போயிடுச்சுன்னா.. சொந்தக்காரங்களுக்கு பெப்பேதான் கிடைக்கும். ஆனால் அவர் அவங்களுக்கும் ஒரு பெரிய தொகையைக் கொடுத்து, பேங்க் கடனையும் அடைச்சு, ஹோட்டலை மீட்டார். ப்ராத்தலுக்கு மட்டுமே புகழ் பெற்றிருந்த அந்த ஹோட்டலை, பல கோடி செலவு செஞ்சு, புதுப்பிச்சார்.

தன்னோட ஹோட்டல் என்றாலும், முந்தைய முதலாளி (அவர் இறந்து போயிருந்தார்) ஆசை ஆசையா கட்டினதுங்குறதுக்காக, அவரோட போட்டாவை அப்படியே ரிசப்ஷன்ல இருக்கட்டும்னு சொல்லிட்டார். அந்த போட்டோவுக்கு தினமும் பூப்போட்டு மரியாதையும் செய்யச் சொன்னார்.

அடுத்த சில வருடங்களில் ஹோட்டலை சூப்பரா மாத்தி, லாபகரமானதாக்கினார். இந்த நேரத்தில் நேருவின் அடிப்பொடிகள் அவரது உடன்பிறப்பு ஒருவரின் தலைமையில் பழைய முதலாளிகளின் வாரிசுகளை அட்டாக் பண்ணி, இன்னும் அக்ரிமெண்ட் ரிஜிஸ்டர் பண்ணப்படலை.. பவர்லதான் இருக்கு அப்படிங்கிறதைக் கண்டு பிடிச்சது.

இப்படி வங்கி ஏலத்துக்கு வர்ற ஹோட்டல்களை - தொழிற்சாலைகளை வாங்கி அதை வருமானத்துக்குரியதா மாத்தி, லாபத்தோட விற்பனை செய்வது நாமக்கல்காரரின் தொழில். பொதுவா இப்படி வாங்கி விற்பவர்கள் ரிஜிஸ்டர் செய்வது கிடையாது, பவர் ஆஃப் அட்டர்னியிலேயே வைத்திருந்து, விற்கும்போது ரிஜிஸ்டர் செய்து கொடுப்பார்கள்.

அந்த ஓட்டையை கரெக்டாக கவ்விக் கொண்ட அமைச்சரின் ஆட்கள் பழைய முதலாளியின் வாரிசுகளை மிரட்டி, பழைய தேதியிட்டு ஸ்டாம்ப் பேப்பரில்  சொத்தை  எழுதி  வாங்கினார்கள்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட நாமக்கல்காரர், போலீஸ்ல ஒரு கம்ப்ளெய்ண்ட் கொடுத்தார். ‘என் ஹோட்டலை அமுக்க - என்னைத் தாக்க திட்டம் போடுறாங்க’ன்னு அவர் எந்த இன்ஸ்பெக்டர்கிட்ட கம்ப்ளெயிண்ட் கொடுத்தாரோ.. அதே இன்ஸ்பெக்டர் தலைமையில அடுத்த நாள் ஒரு கும்பல்  வந்தது  ஹோட்டலுக்கு!

ஹோட்டல் பணியாளர்கள்போல பக்காவாக யூனிஃபார்ம் போட்டிருந்த பலர், நேரா போய் ஹோட்டல் அறை ஒவ்வொன்றின் வாசலில் நின்னுகிட்டாங்க...! அடுத்து இறங்கிய உருட்டுக்கட்டை கும்பல் ரிஷப்ஷனுக்குப் போய், ‘இது எங்க ஓட்டலு.. எழுந்து ஓடிப் போங்கடா’ன்னது. வெளியூர்ல இருந்த நாமக்கல்காரருக்கு போன் போட்டாங்க ஊழியர்கள். ‘பிரச்னை வேணாம்.. அப்படியே விட்டுட்டு வந்துருங்க.. நாம லீகலா பார்த்துக்கலாம்’னு சொல்லிட்டார் அவர்.

மறுநாள்.. அதே போலீஸ் ஸ்டேஷனுக்குப்போய் நடந்ததையெல்லாம் விளக்கமா எழுதி, எனக்கும் எங்க ஊழியர்களுக்கும் பாதுகாப்பு கொடுங்கன்னு புகார் கொடுத்தார்.

அந்த மகாராசன் இன்ஸ்பெக்டர் என்ன செய்தாரென்றால், நாமக்கல்காரர் கொடுத்த இரண்டு(இப்போது + முதலில்) புகார்களையும் தூக்கிக் குப்பைத் தொட்டில போட்டுட்டு, நேருவின் ஆட்கள் தங்கள் சொத்தைப் பாதுகாக்கவும்(?!) உயிருக்கு பாதுகாப்பு கேட்டும் கொடுத்ததா ஒரு கம்ப்ளெயிண்டைத் தூக்கிக்கிட்டு நாமக்கல்காரரையே அரஸ்ட் பண்ணுவேன்னு மிரட்டிட்டாரு .

கோர்ட் - கேஸ்னு நடையா நடந்து சின்னாபின்னமாகிக்கிட்டிருந்தார் நாமக்கல்காரர். திடீர்னு இதே ஸ்டைல்ல அவரோட திருப்பூர் ஹோட்டல் ஒண்ணையும் தூக்கினாங்க. திருப்பூர் ஹோட்டலைத் தூக்கியது கதர்ச் சட்டை ப’னா ஒருத்தரோட மனைவியோட தங்கச்சியோட மகன். அவருக்கு தொழில் ரீதியான பார்ட்னர் நம்ம திருச்சி த’னா! எப்படி இருக்கு பாருங்க இவங்க லிங்க்!?

எல்லா ஆதாரத்தையும் எடுத்துகிட்டு ஒவ்வொரு பத்திரிகையா ஏறி இறங்கினார் சொத்துகளைப் பறி கொடுத்த நாமக்கல்காரர். அதைக் கொடு - இதைக் கொடு - அதுக்கென்ன ஆதாரம் - இதுக்கென்ன ஆதாரம் என்றெல்லாம் சாட்சியை உட்கார வச்சு சடுகுடு ஆடிய பல பத்திரிகையாளர்கள், ‘எதிர்த் தரப்பில் என்ன சொல்கிறார்கள்னு கேட்டுட்டு வர்றோம்னு  சொல்லிட்டு போயே போயிட்டாங்க!

ஒரே ஒரு தினசரி பத்திரிகை மட்டும் தங்களது பத்திரிகையின் முதல் பக்கத்தில் இந்தச் செய்தியைப் போடுறதா சொன்னாங்க.. அச்சுக்கு ஏறும்வரை அவர்களின் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வச்சுட்டு படுக்கப் போன நாமக்கல்காரர் மறுநாள் காலையில் பேப்பரை வாங்கிப் பார்த்தா.. அவர் சம்பந்தப்பட்ட நியூஸையே காணோம்!! பத்திரிகை முதலாளி ஃபாரின்ல இருந்து பேசினார்.. நியூஸைக் கீப்ல வைக்கச் சொன்னார்னாராம்  தற்போதைய எடிட்டர்!!!

கீழ் கோர்ட்ல கேஸ் சிக்கி சீரழிஞ்சு (பாதகமா தீர்ப்பு வரும்ங்குற சூழல்ல 3 தடவை பென்ச்சை - அதாவது நீதிபதியையே மாத்தினாங்கன்னு சொன்னா நம்பவா போறீங்க..? நீதி செத்துடுச்சு எசமான்!) மேல் கோர்ட்டுக்குப் போய் இப்பவும் சும்மா கின்னுன்னு போய்ட்டிருக்கு!

இதற்கிடையில் ஜூ.வி.யில மட்டும் ஒரே ஒரு பக்கத்துக்கு ஸ்ப்ளிட் எடிஷன்ல (அதாவது ஆல் எடிஷன்ல அந்த நியூஸ் வராது, சம்பந்தப்பட்ட ஏரியாவுக்கு மட்டும் ரகசியமா பப்ளிஷ் ஆகும்) நியூஸ் வெளியானது.

இந்த நேரத்துல சென்னைல இருந்து கார்ல ஊருக்குப் போய்க்கிட்டிருந்த நாமக்கல்காரருக்கு ‘திடீர்’ ஆக்சிடண்ட்...! 3 மாசம் படுத்த படுக்கையா கிடந்து, செத்துப் பிழைச்சு எழுந்து வந்து இப்போது வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டு தவம் கிடக்கிறார்.  சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளே திகைச்சுப் போய் இருக்காங்க! விரைவில் தீர்ப்போட வரும்டியோவ் ஆப்பு!

இன்னிக்கு கடைகளில் ஆதாரமா தொங்குது அந்த நாமக்கல்காரர் ஆரம்பிச்சிருக்கும் பத்திரிகை.. பெயர் சூரியக்கதிர்! தன் நியாயத்தை எந்த பத்திரிகையிலும் வெளியிட முடியாத விரக்தியில அவரே இந்த பத்திரிகையை ஆரம்பிச்சிருக்கார்…”

- இந்த விஷயமும் எனக்கு முன்பே தெரியும்..! 'சூரியக்கதிர்' பத்திரிகை தொடர்பான நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒரு பத்திரிகையாளனாக இருக்கின்றபோது புதிய பத்திரிகைகளைத் துவக்குபவர்கள் யார் என்று அதன் பின்னணியைக் கேட்டுத் தெரிந்து கொள்வது எனது வழக்கம். அப்படி கேட்கும்போதுதான் இந்த நாமக்கல்காரரின் ஜாதகமும் எனக்குக் கிடைத்தது. அந்த நாமக்கல்காரரின் பெயர் டாக்டர் கை.கதிர்வேல்.

தன்னுடைய சொத்துக்கள் முறைகேடாக சுருட்டப்பட்டதை எதிர்த்து மீடியாவில்கூட முறையாக வெளியிடப்பட முடியாத அளவுக்கு நாட்டில் ஜனநாயகம் ஓஹோவென்று இருந்ததைக் கண்டவர், அந்தக் கோபத்தில்தான் தானே ஒரு பத்திரிகை ஆரம்பித்தால் என்ன என்று நினைத்துதான் இந்த 'சூரியக்கதிர்' பத்திரிகையைத் துவக்கியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஒரு முன்னணி அரசியல்வியாதியை பகைத்துக் கொண்டு எவனும் வாழ முடியாது என்கிற யதார்த்தத்தை உணர்ந்து கொண்ட கதிர்வேல், 2 மாதங்களுக்கு முன்பாகத்தான் வேறு வழியில்லாமல் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்.

அவர் அ.தி.மு.க.வில் இணைந்த பின்பு வெளிவந்த 'சூரியக்கதிர்' பத்திரிகையின் தலையங்கத்தில்தான் தன்னுடைய ஹோட்டல் நேருவின் அடியாட்களால் அடாவடியாகச் சுருட்டப்பட்டது என்கிற விவரத்தையே வெளியிட்டார். இப்போது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்தாலும், அம்மா ஆட்சி வந்திருப்பதாலும் தனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்..!

சம்பவம்-5

இது கோயம்புத்தூர் கதை.

கோயமுத்தூருக்கு வெளியே நண்பருக்குச் சொந்தமான ஒரு இடம் இருந்திருக்கிறது. ஒரு நாள் அந்த இடத்தை கடந்து சென்ற பொழுது நான்கைந்து பேர் அந்த இடத்தில் அளந்து கொண்டிருந்திருக்கிறார்கள். இவரும் வண்டியை நிப்பாட்டிவிட்டு “என்ன  விஷயம்? இங்க என்ன செய்றீங்க?” என்று கேட்டிருக்கிறார். “அண்ணனிடம் பேசுங்கள்… அவர்தான் அளக்கச் சொன்னார்..” என்று சொல்லியிருக்கிறார்கள்.

“அண்ணன்..” என்றால் யாரென்று புரிந்து கொள்ள முடியாத அப்பாவியான இவர், தன்னுடைய சொந்த அண்ணனுக்கு போன் போட்டுக் கேட்டிருக்கிறார். அவர் “நான் அப்படி யாரையும் அனுப்பவில்லை..” என்று சொல்லியிருக்கிறார். அவர்களிடம் இதை சொன்ன பொழுது அவர்களே அழகிரிக்கு போன் போட்டு கொடுத்திருக்கிறார்கள்.. அவர், “தொழிற்சாலை ஒன்று கட்டலாம்னு  இருக்கேன்.. நீங்க நேரில் வாங்க பேசிக்கலாம்..” என்று சொல்லியிருக்கிறார்.

இவரும் மத்திய மந்திரி ஆச்சேன்னு வேகமா மறுநாள் மதுரைக்கு போய் அண்ணனை அவரது வீட்டில் சந்தித்து பேசியிருக்கிறார். வந்தவரை உட்காரச் சொல்லிவிட்டு “அந்த இடத்தை விட்டுவிடுங்கள். அங்கு நான் தொழிற்சாலை கட்டப் போகிறேன்”னு சொல்லிட்டு வீட்டுக்குள் யாரையோ கூட்டியிருக்கிறார். ஒரு பெண் வந்திருக்கிறார்.. அந்த பெண்ணிடம் “நீ பென்ஸ் கார் கேட்டீல்ல.. இந்த அங்கிள்ட்ட கேளு.. வாங்கி கொடுப்பார்..” என்று சொல்லியிருக்கிறார். அந்தப் பெண்ணும், “எனக்கு சி கிளாஸ் பென்ஸ் வேணும் அங்கிள்.. எப்ப வரும்?” என்று கேட்டிருக்கிறார்.. அப்படி சிரித்து மழுப்பிட்டு கோவைக்கு ஓடி வந்து அவரின் சொந்தங்களிடம் பேசியிருக்கிறார், அவர்கள் கையை விரிக்க வேறு வழியில்லாமல் ஒரு குறைந்த தொகைக்கு அந்த இடம் மதுரை அண்ணனின் கைக்கு மாறியிருக்கிறது..

சம்பவம்-6

கோவையில் பழைய ப்ரூக்-பாண்ட், என்டைஸ், அதன் அருகில் இருக்கும் சிதைந்து போன மில் என்று வரிசையாக பேரம் பேசி வாங்கியது தி.மு.க.வின் வருங்காலத் தலைவரின் குடும்பத்தினராம். 
கோவை கொடிசியா அரங்கிற்கு அருகில் உள்ள பிஎஸ்ஜி குழுமத்தினரின் பல ஏக்கர் ட்ரஸ்ட் நிலத்தை கையகப்படுத்தியதும் அவர்கள்தான்.. இடத்தின் உரிமையாளர்கள் விற்பனைக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றவுடன் 20 ஆண்டு காலமாக நான்-ப்ராபிட் வரிச் சலுகை அனுபவித்து வந்த பல நாயுடுகாரர்களின் ட்ரஸ்ட்களை குறி வைத்து இன்கம்டாக்ஸ் பூச்சாண்டி காட்டிதான் பிடுங்கியிருக்கிறார்கள்.. பீளமேடுக்கு அடுத்துள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை மிரட்டி வாங்க பார்த்து மத்திய மந்திரி தலையிட்ட பின்தான் நிறுத்தினார்கள்.

பல ஆண்டு காலம் யூனியன் தகறாறினால் கோர்டில் முடங்கி கிடந்த ப்ரூக்-பாண்ட் நிலம் திடீரென 2 மாசத்தில் அவுட் - ஆஃப் கோர்ட் செட்டில்மெண்ட்டாகி கைட்-லைன் வேல்யூவில் 10% மட்டுமே கொடுத்து வாங்கியதாக பேச்சு.  
 
இப்போது கட்டப்பட்டிருக்கும் ப்ரூக்-ஃபீல்ட் மால் கட்டட ஏரியா மட்டுமே சுமார் 6 லட்சம் சதுரடி. அவர் வாங்கிய போது அந்த இடத்து கைட்லைன் வேல்யூ மட்டுமே 2500 ரூ / சதுரடி. இப்போது 5000 ரூ. வரை இருக்கலாம்.

ட்ரஸ்ட் சம்பந்தப்பட்ட சொத்துகள் அனைத்தும் அடாவடியாக தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவர்களால் பிடுங்கப்பட்டுள்ளது. சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் அவினாசி ரோடு, திருப்பூர் ரோடு ஆகிய பகுதிகளில் கபளீகரம் செய்யப்பட்டதாக கோவை நண்பர்கள் சொல்கிறார்கள். பீளமேடு ஏர்போர்ட் போகும் வழியில் உள்ள லக்சுரி அப்பார்ட்மெண்ட்ஸும் சுருட்டப்பட்ட இடங்களில் ஒன்றாம்.. இதன் அன்றைய விலையே 50+ கோடி, இப்போது கண்டிப்பாய் 75-80 கோடி இருக்கும்.

சம்பவம்-7

“Thank God the DMK has gone.. I am from salem and i knew two of my fiends has beed abducted by goons of D...MK men and demanded a ransom of 2 lakhs.. Both has paid the same and then they returned them before threatened them of torture if they inform to police.. There are atleast 15 cases pending against one of the secretary. He is not even district level.. ward level, still these people threaten the businessmen and demand money... Undoubtedly the DMK regime has done lot of good things to people, but never ever control the evil elements in the society.. Six murders in a family in salem , and the main accused is the sister's son of the Agriculture minister.. the atrocity has erased all the good work and development work done by the DMK regime.. NO Doubt there is a progress in development work in the state.. unfortunately the development of evil elements has also gone up rapidly and wildly..”

- இப்படி பேஸ்புக்கில் நண்பர் ஒருவர் எழுதியிருந்தார்..!
சம்பவம்-8
சென்னையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் ஒரு மாதத்திற்கு முன்பு கலைஞரின் குடும்பத்துப் பேரன் ஒருவர் பொன்னேரி அருகே 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை ஒரே நாளில் வாங்கினார். பொன்னேரி அருகேயிருந்த ஒரு கல்யாண மண்டபத்தில் காலையில் ஆரம்பித்த பத்திரப் பதிவு, இரவுவரையிலும் நீடித்துள்ளது. பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகளே நேரில் அந்த மண்டபத்துக்கு வந்திருந்து அங்கேயே அனைத்து வேலைகளையும் செய்து நிலங்களைப் பதிவு செய்து கொடுத்துள்ளார்கள். தர மாட்டேன் என்பவர்களை அன்போடு தட்டிக் கொடுத்து, சிலரின் மீது நிலுவையில் இருக்கும் போலீஸ் வழக்குகளைப் பற்றி எடுத்துச் சொல்லி மிரட்டித்தான் பணிய வைத்திருக்கிறார்கள்..!
- இந்தக் கதையை பத்திரிகையில் பணியாற்றும் நண்பரொருவர் நேற்று இரவு என்னிடம் கூறினார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி தற்போது திஹார் ஜெயிலில் தவம் கிடக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, எம்.ஆர்.எஃப். டயர் நிறுவனத்துக்காக தனது பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் அப்பாவி மக்களிடமிருந்து எப்படி சொத்துக்களைப் பறித்தார் என்பது இந்தப் பதிவில் முன்பே எழுதப்பட்டிருந்தது. படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.!

கலைஞர் கருணாநிதி இத்தனை நல்லது செய்தார்.. மக்களுக்காக உழைத்தார்.. அள்ளிக் கொடுத்தார் வள்ளல்தனமாக.. என்பதெல்லாம் இப்போது ஒரு பேச்சே இல்லை.. அவருடைய கட்சிக்காரர்களும், அவர்தம் குடும்பத்தினரும் இந்த நாட்டு மக்களுக்கு இந்த ஐந்தாண்டு காலத்தில் என்ன செய்தார்கள் என்பதைத்தான் ஒரு சிறு துளியாக இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது..!

இன்றும்கூட கட்சிக்காரர்களாலும், தி.மு.க. தலைமையின் குடும்பத்தாராலும் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக புகார் கொடுக்கக்கூட முன் வராமல் இருக்கிறார்கள். இந்தப் புகார்களை எழுப்பியவர்கள்கூட தங்களது பெயர்களை கூற முடியாத நிலைமைதான் இப்போதும் உள்ளது..! நானாக இருந்தாலும் அதைத்தானே செய்வேன். அனைவருக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கின்றதே.. குப்புராஜின் குடும்பத்துக்கு நேர்ந்த கதியைப் பார்த்தே பலரும் ஆடிப் போய்விட்டார்கள்..!

சூரியக்கதிர் பத்திரிகையின் நிறுவனரே தான்தான் அந்தப் பாதிக்கப்பட்டவன் என்பதை தேர்தலுக்கு முன்புவரையிலும் வெளிப்படையாகச் சொல்லவே இல்லை. ஒரு பத்திரிகை நடத்துபவரே இப்படி இருக்கும் சூழலில் மற்ற சாதாரண பொதுமக்களை நினைத்துப் பாருங்கள்..!

இந்தத் தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைக்க வேண்டிய மரியாதைதான் கிடைத்திருக்கிறது. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை..! கலைஞரி்ன் வயதும், அவரது அரசியல் அனுபவமும், 20 மணி நேர உழைப்பும் கடைசியில் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமே செலவானது, பலனளித்தது என்பதுதான் அவர் இப்போதுவரையிலும் உணர்ந்து கொள்ளாத கசப்பான உண்மை..!
இனியாவது புரிந்து கொள்ள முயற்சிக்கட்டும்..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...