Monday, September 26, 2011

அது வேற வாய்...இது நாற வாய்!


ஒருவழியா வழக்கம்போலவே ஐயா மருத்துவர் ராமதாஸ் தி.மு.க கூட்டணியிலேயிருந்து வெளியேறி வீர டயலாக்கா விட்டு காமெடிய ஸ்டார்ட் பண்ணிட்டாரு. அவருக்கு துணையா திருமாவளவனும் பொங்கியெழுந்து ஜிங்ஜாங் போடறத தொடங்கிட்டாரு. என்னவொரு கவலைன்னா இவங்கெல்லாம் தமிழ்நாட்டு ஜனங்க இன்னும் வாயில விரலை வச்சி சப்பிட்டிருப்பாங்கன்னு நெனச்சிக்கிட்டே அரசியல் நடத்துறத எப்போதான் நிறுத்துவாங்களோ தெரியலை.

உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னாடி டாஸ்மாக் கடையெல்லாம் அடிச்சி நொறுக்கிற போராட்டத்தை ஐயா அனொவ்ன்ஸ் பண்ணியிருக்காரு. நல்லவேளை சினிமா தியேட்டரை அடிச்சி நொறுக்குறதுன்னும், பொட்டிய தூக்குற போட்டி வைக்கிறதுன்னும் எந்த போராட்டத்தையும் அறிவிக்கலடா சாமின்னு சினிமாக்காரன்லாம் பெருமூச்சு விட்டுக்கலாம்! ஐயா மருத்துவரே… பண்ணுறத உள்ளாட்சி தேர்தலுக்கு அப்புறம்தான் பண்ணனும்னு எதாவது ரூல்ஸ் இருக்கா? ஏன் தேர்தலுக்கு முன்னாடியே அந்த வீரச்செயலை ஸ்டார்ட் பண்ணிப்பாக்கிற தில்லு இல்லையா உங்ககிட்ட?... எப்படியிருக்கும்?... சாராயமும், கறிச்சோறும் இல்லாம நான் கட்சி நடத்துறேன்னு எவனாவது சொன்னா பச்சப்புள்ளகூட பால்பாட்டில கீழே போட்டுட்டு சிரிக்காது? 21ம் நூற்றாண்டுலயும் மதுவிலக்குன்னு சொல்லி இன்னமும் காமெடி பண்றதுல வடிவேலு, விவேக், சந்தானம்னு எல்லாரும் உங்ககிட்ட லைன் கட்டி பிச்சையெடுக்கலாம்.

சரி இதுதான் இப்படின்னா இன்னைக்கு இன்னொரு பேச்சு பேசியிருக்கீங்க பாருங்க… அடேங்கப்பா அசத்திட்டீங்க போங்க! இலங்கைத் தமிழர்களை காக்க தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற திராவிட கட்சிகள் எல்லாம் எப்பவுமே எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. ஆனா பா.ம.க.தான் இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து போராடுதுன்னு சொல்லியிருக்கீங்க. சூப்பரா சொன்னீங்கய்யா நீங்க… ஆனா எனக்கொரு சின்ன டவுட்டு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி சட்டமன்ற தேர்தல்ல இலங்கைத் தமிழர்களுக்காக போராடாத திராவிடக் கட்சியான தி.மு.க.வோட கூட்டு வச்சிக்கிட்டீங்களே… அது எதுக்குங்கய்யா? தமிழர்களுக்காக போராடாத திராவிடக் கட்சி கூட கூட்டு வச்சீங்கன்னா கூட பரவாயில்ல… ஆனா தமிழர்களை லட்சலட்சமா கொன்னு குவிக்கத் துணையாயிருந்த காங்கிரஸ் கட்சி இருந்த கூட்டணியில சேந்துக்கிட்டீங்களே… அதுக்கு பேருதான் அரசியலுங்களாய்யா?

இன்னக்கி வெக்கமே படாம மறுபடியும் இலங்கைத்தமிழர்… அது இதுன்னு பேசுறீங்களே… தமிழ்நாட்டு மக்கள் என்ன உங்க கட்சிக்காரங்கன்னு நெனச்சிக்கிட்டீங்களா… நீங்க என்ன பண்ணாலும், என்ன பேசுனாலும் ஐயா சொல்றதுதான் சரின்னு சொல்ல? நீங்க நெனச்சா தமிழர்களுக்கு எதிரான கட்சிகள் இருந்த கூட்டணியில சேர்ந்து எலெக்ஷன்ல நிப்பீங்க. அப்புறமா அந்த கூட்டணியிலயிருந்து வெளிய வந்துட்டு அவங்களையே குறை சொல்லுவீங்க. உங்க புள்ளைக்கு பதவி கிடைக்கனும்னா யார்கூட வேணும்னாலும் கூட்டணியை மாத்துறீங்க. அப்போ அற்ப அரசியலுக்காகவும், கட்சியை வளர்க்கவும் நீங்களும் எல்லாரையும் மாதிரி சாதாரண சாக்கடை அரசியல்தான் நடத்துறீங்கன்னு சொல்லலாமா, கூடாதுங்களாய்யா?
பயபுள்ளைக என்ன சொன்னாலும் நம்பாது போலயிருக்கே...!


ஐயா, ரொம்ப நாளா உங்ககிட்ட கேக்கனும்னு ஒரு கேள்வி என் மண்டைக்குள்ளயே குடைஞ்சிட்டு நிக்கிது. கேக்கட்டுங்களா?... இதுவரைக்கும் எத்தனை முறை தி.மு.க.வோட கூட்டணி வைச்சிருக்கோம்?... எத்தனை முறை அ.தி.மு.க.வோட கூட்டணி வைச்சிருக்கோம்?... எத்தனை முறை பல்டி அடிச்சிருக்கோம்னு உங்களுக்கே நினைவுயிருக்குமாய்யா? ‘’அது போன மாசம்… இது இந்த மாசம்’’னு சொல்ற ரேஞ்சுக்கு விட்டா மாசத்துக்கு ஒரு கட்சியோட கூட்டணி வைச்சிப்பீங்க போல?! கலைஞர் ஈழத்தமிழர்களைக் காக்க எதுவும் செய்யலைன்றீங்க. கொஞ்ச நாள் கழிச்சு அவர் கூடவே கூட்டணி வைச்சிக்கிட்டு கலைஞர்தான் தமிழினப் பாதுகாவலர்ன்றீங்க… மறுபடியும் அவர்கிட்டயிருந்து பிரிஞ்சி வந்திட்டு அவரையே குறை சொல்றீங்க… ஒருவேளை இதையெல்லாம் உங்க கிட்ட யாராவது கேட்டா ‘’அது வேற வாய்… இது நாற வாய்’’னு வடிவேல் மாதிரியே பதில் சொல்லுவீங்களோ என்னவோ தெரியலை!

அட நீங்கதான் இப்பிடின்னா… வீரத்திலகம் திருமா இருக்காரு பாருங்க… அவருதாங்க எதிர்காலத்துல உங்களுக்கு சரியான காமெடி போட்டியா இருப்பாரு போல! இலங்கைத்தமிழர்னாரு... பொதுக்கூட்டம்னாரு… மாநாடுன்னாரு… அட பரவாயில்லைய்யா இவருன்னு நெனச்சிக்கிட்டு இருக்கும்போதே காங்கிரஸ் கூட்டணியிலேயே சேந்துக்கிட்டு பாராளுமன்ற தேர்தல்ல நின்னு எம்.பி.யாவும் ஆயிக்கிட்டாரு. எம்.பி. பதவியையும் விடாம கெட்டியா பிடிச்சிக்கிட்டு, காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில இருந்துக்கிட்டே இலங்கைத் தமிழர்களுக்காக போராடுற சீனைப் போட்டுக்கிட்டேயிருக்காரு பாருங்க… அடேங்கப்பா அடுத்த ஆஸ்கார் அநேகமா இவருக்குத்தான் கொடுக்கனும்போல!

நம்பள காமெடி பீஸா ஆக்கிருவாங்க போலயிருக்கே...!


இதுக்கெல்லாம் மேல அண்ணன் திருமா, மருத்துவரய்யா நீங்க என்ன சொன்னாலும் சரி… உடனே அதுக்கு ஜிங்ஜாங் போட்டு பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகளும் இலங்கைத்தமிழர் விஷயத்தில் இணைந்து செயல்படும்னு இன்னமும் பேட்டி குடுத்துட்டேதான் இருக்காரு. அட இன்னமும் வீரத்தோட இன்னைக்கு இன்னொன்னு சொல்லியிருக்காரு பாருங்க… தேவைப்பட்டா இலங்கைத் தமிழர்களுக்காக அவரோட எம்.பி.பதவியையும் ராஜினாமா செய்யத்தயாராம். அப்பிடி ராஜினாமா செய்யுறதா இருந்தா எப்பவோ ராஜபக்சேவை சந்திக்க போன குழுவுல திருமாவும் போயிட்டு வெறுங்கைய வீசிட்டு வந்தாரே… அப்பவே பண்ணியிருக்கனும். அதவிட்டுட்டு இப்பவும் அதைச் சொல்லியே சீன் போட்டு அரசியல் நடத்துறதை அற்பப் புத்தின்றதா… இல்ல என்னன்றது? தி.மு.க.வை துரோகின்னு சொன்னா உங்களையெல்லாம் நம்பிக்கை துரோகின்னு சொல்றதா?

ராமதாஸ் எப்பவோ பல கூட்டணி மாறி மாறி தனக்கு கட்சியும், பதவியும், தன் மகனும்தான் முக்கியம்னு நிரூபிச்சிட்டாரு. ஆனா தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட இயக்கம் ஆரம்பிச்ச திருமாவும் இப்ப இலங்கைத்தமிழர் விஷயங்களில் தடுமாறி தனக்கு கட்சி அரசியல்தான் முக்கியம்னு நிரூபிக்க ஆரம்பிச்சிருக்காரு.

மொத்தத்துல ஒன்னு மட்டும் நல்லா தெரியுது… இலங்கை தமிழர்களும், இடிந்து போன தமிழக தமிழர்களும், தமிழினம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலேயும் தமிழக அரசியல் கட்சிகள் எதையும் நம்பாம தமக்கான போராட்டங்களை தாமே முன்னெடுப்பது மட்டுமே அவர்களின் விடுதலை மற்றும் சமஉரிமைகளை பெறுவதற்கான ஒரே வழியாகும். தமிழக அரசியல்வாதிகளிடம் இல்லாத இனவுணர்வு ஒற்றுமைதான், இன்னைக்கி வரைக்கும் தனித்தமிழீழம் கிடைக்காததுக்கு ஒரு முக்கிய காரணாமாகும். மக்களை மாக்களாக்கும் சாக்கடை அரசியல் ஒழிந்து நாகரீக மற்றும் தன்னலமற்ற சேவை அரசியல் வர தமிழர்கள் நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் காத்திருப்பதோ தெரியவில்லை. அதுவரை இதுபோன்ற காமெடித்தலைவர்களையும், காட்சிகளையும் சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதே நமது எழுதப்படாத தலைவிதியாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...